Followers

Sunday, July 25, 2021

'கா.செ வேதாந்த மடம்'


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ளது இந்த கா.செ வேதாந்த மடம். 'காளையார் கோவில் செல்லப்ப சுவாமிகள் வேதாந்த மடம்' என்பது முழுப்பெயர்.

கோவிலூர் மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ இராமசாமி ஞானதேசிக சுவாமிகளின் சீடரும், தஞ்சை பால்சாமி மடம், மதுரை குட்டைய சுவாமிகள் மடம் ஆகியவற்றின் மடாதிபதியாக இருந்தவருமான 'ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள்' அவர்களை தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள், பாண்டி பதினான்கு தலங்களுள் ஒன்றும், தமது குடும்பத்தினரால் திருப்பணி செய்யப்பெற்று வரும் கோவிலுமான காளையார்கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.

கி.பி.1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் காளையார்கோவில் ஆனைமடு தெப்பக்குளம் சீர்திருத்தப் பெற்று அதன் நடுவே அழகிய நீராழி மண்டபம் ஒன்று புதிதாய் கட்டப்பெற்றது. அது சமயம் தெப்பக்குளத்தின் தென் கரையில், மேலும் சில நாட்டுக்கோட்டை நகரத்தார் மெய்யன்பர்களுடன் இணைந்து மாபெரும் வேதாந்த மடத்தை உருவாக்கினார்கள். இம்மடம் வேதாந்தப்பாடம் கற்பிப்பதற்காகவே நிறுவப்பெற்றதாகும். இவ்வேதாந்த மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள் இருந்து வேதாந்தப்பாடம் கற்பித்து வந்தார்கள். இந்த மடம் அழகிய தோற்றப் பொலிவுடன் அளவில் மிகப்பெரிய மடமாக செட்டிநாட்டு கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.


தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் துறவு பூண்டு ஸ்ரீமத் அருணாசல சுவாமிகள் என்று திருநாமம் பெற்று இம்மடத்திலேயே இருந்து வேதாந்தத்தில் ஆழ்ந்து மாணவர்களுக்கு வேதாந்த பாடங்களை கற்பித்து வந்தார்கள். இவர்கள் 'ஜமீன்தார் சுவாமிகள்' என்றும் அழைக்கப்பெற்றார்கள். பின்னர் இம்மடத்தின் மடாதிபதியாக அருளாட்சி செய்து கி.பி.1938இல் முக்தியடைந்தார்கள். இவர்களுக்கு இம்மடத்தினுள்ளேயே அதிட்டானம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

    ஜமீீீன்தார் சுவாமிகள்

கா.செ. வேதாந்த மடத்தின் மடாதிபதியாக இருந்தவர்கள் பட்டியல்:

●ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள் 

●ஸ்ரீமத் உலகம் பட்டி இலக்குண சுவாமிகள் 

●ஸ்ரீமத் நாட்டரசன் கோட்டை மெய்யப்ப சுவாமிகள் 

●ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் 

●ஸ்ரீமத் ஜமீன்தார் அருணாச்சல சுவாமிகள் 

●ஸ்ரீமத் தேனிப்பட்டி அருணாச்சல சுவாமிகள்

●ஸ்ரீலஸ்ரீ அரு.இராமநாத ஞானதேசிக சுவாமிகள் 
(இவர்கள் கோவிலூர் மடாலயத்தின் பத்தாவது மடாதிபதியாக இருந்தவர்கள், இவர்கள் காலத்தில் 'க.செ. வேதாந்த மடம்' கோவிலூர் மடாலயத்தின் நேரடிப் பார்வையில் இருந்தது)

●ஸ்ரீமத் சிவாநந்த சுவாமிகள் 

●ஸ்ரீமத் நாராயண சுவாமிகள்

நாராயண சுவாமிகள் முக்தியடைந்த பின், 2003முதல் 'கா.செ வேதாந்த மடம்' கோவிலூர் மடாதிபதியின்  நேரடிப் பார்வையில் இருந்துவருகிறது.

அன்பன் 
பழ.கைலாஷ்

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...