Followers

Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Monday, October 4, 2021

பாரதியின் கடிதம்


1901ஆம் ஆண்டு பாரதி காசியிலிருந்து தன் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம்.

ஓம்

ஸ்ரீகாசி 
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன் 
சி. சுப்பிரமணிய பாரதி

Source: "பாரதியின் கடிதங்கள்" நூல் - ரா.அ.பத்மநாபன்.

Monday, June 29, 2020

பாரதி கடிதம்

1919இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு.சண்முகனாருக்கு எழுதிய கடிதம்.


Sunday, May 10, 2020

காந்திப் பசு

காந்திப் பசு

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
(மகாத்மா காந்தியின் இளம் தோற்றம் )



தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மேன்மையை உணர்ந்த, "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் பத்திரிகை வாயிலாக காந்தியை வெகுவாகப் பாராட்டி வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டத்துக்காக நிதி வசூல் செய்து, தாமே ஐந்து ரூபாய் போட்டு, பணத்தைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் பாரதி.

1909இல் காந்தி தென் ஆப்பிரிக்க இந்தியர் சார்பில் லண்டனுக்கு தூது சென்று திரும்பிய சமயம் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் காந்தியை கைது செய்தது.

இதைப் பற்றி பாரதி "இந்தியா" பத்திரிகையில் 1909இல் டிசம்பர் மாதம் ஒரு சித்திரம் மூலமாகவும் சித்திர விளக்கம் மூலமாகவும் தம் கருத்தை தெரிவித்துள்ளார்.

1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'இந்தியா' பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.


அந்த சித்திரத்தின் கீழுள்ள குறிப்பானது "ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய் பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன்மையை அறியாமல் சிறையிலடைத்தார்கள்"

பத்திரிகையின் உள்ளே உள்ள சித்திர விளக்கமானது: "முற்காலத்தில் நடந்ததாக இந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக் குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால் புலியைப் பார்த்து, 'ஹே பிரபு! இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்துவிட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்போழுதே போய் பால் கொடுத்துவிட்டுவந்து உமக்கு இரையாகிவிடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது.

'புலி நெடுநேரம் யோசித்து அதனுடைய ஸத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, 'போய் காரியமான உடனே வந்துவிடு' என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்து, 'என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டுவர உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன், என்னைப் புசியும்' என்றது.

இதை கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீசகதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனைவிட்டது.

இப்பசுவை போல் நடந்துகொண்ட நமது காந்தி பிரபுவைத் தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா?

ஒன்றும் தெரியாத புலிகூட நம் இந்துஸ்தானத்தில் தாயினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலியை பார்க்கிலும் கொடுமையாக,(தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக் கலிகாலத்தில்தான் காணலாம்".

இந்திய தலைவர்கள் பலர் காந்தியை அறியாதிருந்த காலத்தில்,1909இல் பாரதி இந்த சித்திரத்தையும் விளக்கத்தையும் வெளியிட்டதுதான் ஆச்சரியம்.

பிற்காலத்தில் மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்!... புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்!"(மகாத்மா காந்தி பஞ்சகம்) என்று பாடிப்புகழ்ந்தார் பாரதி.

-Kailash PL


Tuesday, November 12, 2019

காரைக்குடியில் பாரதி


பிங்கள ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்தாறாம் நாளன்று (10.09.1917) செட்டிநாட்டின் சீர்திருத்தத் தந்தை எனப் பாராட்டப் பெறும் சொ.முருகப்பா முன் நிற்க, அவருக்குத் துணையாக 'தமிழ் கடல்'ராய.சொக்கலிங்கனார், கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பலரது துணையுடன் காரைக்குடி திருவாசக மடத்தில் இந்துமதாபிமான சங்கமானது தொடங்கப்பட்டது.

திருவாசக மடம் காரைக்குடி 


திருவாசக மடம் காரைக்குடி 

 நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

'கம்பநாடர்'இதழின் ஆசிரியரான மோ.வே.கோவிந்தராச ஐயங்காரை கொண்டு இளைஞர்களுக்கு திருக்குறள் மற்றும் கம்பராமாயண வகுப்புகளை இச்சங்கத்தினர் நடத்தினர்.

தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 1918ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது, அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்துக்குக்கு உ.வே.சா., வ.உ.சி., திரு.வி.க., வ.வே.சு.ஐயர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி ரா.பி.சேதுப்பிள்ளை, எனப்பலர் வந்திருக்கின்றனர். இந்தச் சங்கத்திற்கு வாராத தமிழறிஞரே இல்லை எனலாம்.

இத்தகு பெருமைக்குரிய இந்துமதாபிமான சங்கத்திற்கு 1919ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகைபுரிந்தார்.

கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்கிறார் இதனை ஏற்று பாரதி கானாடுகாத்தான் வருகிறார் வரும் வழியில் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் கலந்துகொண்டு இச்சங்கத்தினை வாழ்த்தி சில பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல், பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்குக் கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு படங்கள் இங்கு எடுக்கப்பெற்றவையாகும்.


பின் கானாடுகாத்தானில் வை.சு.சண்முகம் செட்டியார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். 'இன்பமாளிகை' என்று பெயரிடப்பட்ட அந்த வீட்டில் பின்னாளில் மகாத்மா காந்தி கானாடுகாத்தான் வந்திருந்த போது தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியை மனைவி செல்லம்மாள் மற்றும் குழந்தைகளுடன் இன்பமாளிகையிலேயே தங்கிக்கொள்ளுமாரு வேண்டினார் வை.சு.சண்முகம் செட்டியார். இதை பெரும் விருப்பத்துடன் பாரதி ஏற்றுக்கொள்ள, செல்லம்மாள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர கடையதிற்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் செல்லம்மாள் வரவில்லை. ஒருவேளை செல்லம்மாள் கானாடுகாத்தான் வந்திருந்தால் வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

செல்லம்மாள் வராததால் கடையம் திரும்பினார் பாரதி.
கானாடுகாத்தானில் இருந்த போது "செட்டி மக்கள் குலவிளக்கு" என்ற தலைப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தாரை புகழ்ந்து சில பாடல்கள் பாடியுள்ளார்.

பின்னர் பாரதி 1920ல் ஒரு முறை காரைக்குடிக்கும் கானாடுகாத்தானுக்கும் வந்துசென்றுள்ளார்.




இந்து மதாபிமான சங்கம் 1952லிருந்து காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

Kailash PL

Friday, November 8, 2019

பெருமை மிகு காரைக்குடி



ன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வருகை புரிந்திருந்தார்.

இன்று(09.11.2019) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வந்ததின் நூற்றாண்டு நிறைவு நாள்.

 பாரதியார் தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படங்கள் காரைக்குடியில் எடுக்கப்பட்டது.



அதில் ஒன்று காரைக்குடி இந்துமதாபிமான சங்க குழுவினர்கள் அ.மு.க.மு.க.ரெங்கநாதன் செட்டியார், இராய.சொக்கலிங்கம், சொ.முருகப்பர், கி.நாராயணன் செட்டியார், மு.நடராஜன் உடன்
சுப்பிரமணிய பாரதியார் இருக்கும் புகைப்படம். பின்னாளில் ஒரு பத்திரிகை பேட்டியில் இராய.சொ கூறுகையில் "பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்ததால்தான் படம் பிடிக்க ஒப்புக் கொண்டார். வேண்டிய எல்லாம் தயார் செய்யப்பெற்றன. பாரதியாரை உட்காரவைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தூக்கிக் கையிலே தலைக்குமேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்பிடிப்பவருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லியும் பாரதி கேட்கவில்லை பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்''.



மற்றொன்று பாரதியாரின் மிக புகழ் பெற்ற புகைப்படமான கருப்பு கோட் அணிந்து தலைப்பாகையுடன் கையில் கோல் கொண்டு நாற்காலியில் வீற்றிருக்கும் அவரின் அழகிய புகைப்படம். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து பலநூறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது பல சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-Kailash PL

Wednesday, July 17, 2019

காசியில் பாரதி வாழ்ந்த வீடு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்த வீடு.


"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே! இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே!"என்றார் பாரதி. 

இதன் மூலம் அவர் கங்கையையும் காசியையும் எந்த அளவு நேசித்துள்ளார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


காசியில் மொத்தம் 64 காட்கள்(ghat) உள்ளன. காட் என்றால் படித்துறை.
அதில் "ஹனுமன் காட்"ல் அதிகளவு  பிராமணர்கள் வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண குடும்பங்கள் இருந்துள்ளனர் தற்போது குறைந்து விட்டனர். இவர்களெல்லாம்  ஐந்து தலை முறைக்கு முன்னர் தமிழகத்திலிருந்து காசிக்கு வந்து குடியேறியவர்கள்.

"ஹனுமன் காட்"ல் உள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக "சிவ மடம்" என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழமையான வீடு ஒன்று உள்ளது இந்த வீட்டில் தான் பாரதி தனது 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903)வாழ்ந்தார்.

1898ம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.





காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். பாரதியின் சமஸ்கிருத உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு  வியந்தார்கள்.
கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். இந்த சமயத்தில் தான் பாரதி மீசை வளர்த்து கோட்,தலைப்பாகை அணிந்து தன்னையே மாற்றிக்கொண்டார்.

இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

 தற்போது இந்த வீட்டில் உள்ளவர் பாரதியின் அத்தை பேரன்  KV.கிருஷ்ணன் 93 வயதுடைய இவர் காசி தமிழ் சங்க பிரசிடென்டாக உள்ளார் மற்றும் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழிலும் இந்தியிலும் இசையிலும் புலமை.

பாரதி இங்கு இருந்த போது இவர் பிறக்கவேயில்லை,பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். பின்பு காசி மக்கள் மற்றும் அரசாங்க உதவியுடன் பாரதிக்கு இதே "ஹனுமன் காட்"ல் உள்ள தன் சொந்த நிலத்தில் சிலை அமைக்கவும் செய்தார்.

பின்னர் பாரதியார் சிலையை பராமரிக்கும் பொறுப்பை "ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்"தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

-Kailash  PL

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...