Followers

Thursday, November 3, 2022

நகரத்தாரும் இராமாயணமும்

              ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்தில் நடந்ததைப் பிற்காலத்தில் எழுதினால் அது புராணம். இதிகாசம் என்பது நடக்கும் பொழுதே எழுதப்படும் சரித்திரமாகும். இராமாயணமும் மகாபாரதமும் இராமரும், பஞ்சபாண்டவர்களும் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட சரித்திரங்கள். 


இரண்டுமே அண்ணன் தம்பி ஒற்றுமையைக் குறிப்பன. இராமாயணம் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழ்ந்ததை உடன்பாடாக (Positive) வர்ணிக்கிறது. மகாபாரதம் எதிர்மறையாக (Negative) வர்ணிக்கிறது.

வடமொழியில் 24,000 சுலோகங்களில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கி.பி 9ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் வாழ்ந்த கம்பர், திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரவால் தமிழில் 12,000 பாடல்களாக பாடி அருளினார்.

இராமாயணம் படிப்பதாலும் கேட்பதாலும் நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அறத்தின் ஆணிவேராக திகழும் இராம பிரான் வரலாறு நம்மை என்றும் வாழ்விக்கும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வரிகள் வற்றாத இன்பத்தில் ஆழ்விக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சைவத்தையும், தமிழையும் போற்றி வளர்த்து வருபவர்கள் என்பதை நாடு நன்கறியும். அதே நேரத்தில் ஆழமான சைவப்பற்றுடைய நகரத்தார்கள் பிற சமய வெறுப்பாளர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தான் நகரத்தார்கள் இடையே வைணவத்தின் தாக்கம் ஊடாடியிருக்கிறது. தாம் வாழும் ஊர்தோறும் நகரச் சிவன் கோயில்களைக் கட்டிய நகரத்தார்களுள் சிலர் தத்தமது ஊர்களில் பெருமாள் கோயில்களைக் கட்டியும், நிருவகித்தும் வருகிறார்கள்.

"செல்வத்து பயனே ஈதல்" என்னும் புறநானூற்று வரிக்கேற்ப, தாம் ஈட்டிய செல்வத்தின் ஒரு பெரும் பகுதியை இறைவன் திருப்பணிகளுக்கும் சமுதாய அறப்பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்புரவு நோக்கம் கொண்டவர்களாகத் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்கள் நகரத்தார்கள். அந்த வகையில் சிதிலமடைந்திருந்த எத்தனையோ திருக்கோயில்களை, பாடல்பெற்ற திருத்தலங்களை சீர்திருத்தியுள்ளனர். அதில் வைணவத் திருத்தலங்களும் அடங்கும்.

தில்லையில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் சிதைந்து இடிந்துவிழும் நிலைமையில் இருந்தபோது சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பழுதுபார்க்கப் படாமல் இருந்தது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவ்விரு தரத்தாரையும் அமைதியான முறையில் உடன்படச் செய்து தானே முன்னின்று தமது பெரும் பொருட்செலவில் செம்மையான முறையில் திருப்பணி செய்தார்.

சைவர்களுக்கு கோயில் என்றால் சிதம்பரம், அதுபோல் வைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம். அத்திருத்தலத்தில் அரியக்குடி சித.சா மற்றும் சித.அ குடும்பத்தினர் ஒரு அன்னச்சத்திரம் கட்டி கி.பி1860ஆம் ஆண்டு முதல் இன்று வரை இடைவிடாது நாள்தோறும் அன்னம் பாலித்து வருகின்றனர். "மாசி கருடசேவை காசி சென்றாலும் கிடைக்காது" என்பர், அப்படிப்பட்ட திருவரங்க நம்பெருமாளின் மாசி மாத கருடசேவை நடக்கும் மண்டபமும் மேற்படி குடும்பத்தார் திருப்பணியே.

மேலும் தென்திருப்பதி எனப் போற்றப்படும் அரியக்குடிப் பெருமாள் கோயிலை நகரத்தார்கள் கட்டியதும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற காஞ்சி நிலாத்திங்கள் துண்டம், திருமெய்யம், திருக்கோட்டியூர், திருவில்லிபுத்தூர், திருக்கண்ணபுரம், அழகர்கோவில், கூடலழகர் கோவில் என பல வைணவத் திருத்தலங்களுக்கு நகரத்தார் செய்திருக்கும் திருப்பணிகளும் இராம பிரான் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில் செய்திருக்கும் திருப்பணிகளும் நினைக்கத்தக்கது.

நகரத்தார்கள் சோழ தேசம் விட்டு பாண்டிய தேசம் வந்தடைந்து முதன் முதலில் குடியேறிய ஊர் "இளையாத்தக்குடி" என்று வரலாற்று நூல்கள் செப்புகின்றன. இளையாத்தக்குடி நகரக் கோயில் அருகே கழனிவாசற்குடியார் வகுப்பினருக்கு தனியாக ஒரு பெருமாள் கோயில் உள்ளது மேலும் இளையாத்தக்குடியில் ஓட்டைப் பெருமாள் கோயில் என்னும் சிதைந்துபோன வைணவக்கோயில் ஒன்றும் உள்ளது. இவை ஆதியிலிருந்தே நகரத்தாருக்கும் வைணவத்திற்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது. இரணியூரிலும் நகரக்கோயிலின் அருகே நகரத்தார் நிர்வாகத்தில் பெருமாள் கோயில் உள்ளது. தேவகோட்டையில் பி.எஸ்.எஸ்.சாத்தப்ப செட்டியார் தம் வீட்டின் தோட்டத்திலேயே ஒரு பெருமாள் கோயிலை அமைத்து அதனருகே பூசகர்களுக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்.

நகரத்தார்களிடையே இருக்கும் இந்த வைணவத் தாக்கத்தின் மற்றொரு மிக முக்கியமான வெளிப்பாடாக அமைவது "இராமாயணம் படித்தல்" என்னும் பழக்கமாகும். 

இராமபிரானுடைய வரலாற்றை எளிய உரை நடையும், இடையிடையே நாட்டுப்பாடல் அமைப்பில் பாடல்களும், ஆங்காங்கே கம்பராமாயணச் செய்யுள்களும் கலந்த தமிழில் எழுதிவைத்த ஓலைச் சுவடிகள், செட்டிநாட்டில் பல குடும்பங்களில் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வீட்டின் திண்ணை, மேல் பட்டாலை அல்லது சாமி அறை ஆகிய இவற்றுள் ஒரு இடத்தில் இராமர் பட்டாபிசேக படத்தை வைத்து, அதன் முன், மக்கள் கூடியிருக்கும் அவையில் இந்த ஓலைச்சுவடி, குடும்பத்தினர் ஒருவரால் அல்லது ஆசிரியர் ஒருவரால் படிக்கப்படும். இவ்வாறு முதல் தேதி தொடங்கி முப்பது நாட்கள் படிப்பதும் உண்டு. அல்லது ஒரு வாரமோ பதினைந்து நாட்களோ படிப்பதும் உண்டு. 


இவ்வாறு படிக்கும் குடும்பத்திற்குக் குழந்தைச் செல்வமும் பிற நலங்களும் பெருகும் என்ற நம்பிக்கை நகரத்தார்களிடையே நிலவுகிறது. கால மாற்றத்திற்கேற்ப சிலர் பழைய ஓலைச்சுவடிகளை காகிதங்களில் கையெழுத்துப் படியாகவும், அச்சுப் புத்தகங்களாகவும் மாற்றிவிட்டனர். இந்த இராமாயணம் புத்தக வடிவில் இருந்தாலும் இன்றும் 'ஏடு' என்றே வழங்கப் பெறுகிறது. 

நகரத்தார்கள் தங்கள் படைப்பு வீடுகளில் படைப்புக்குரிய பேழையை எவ்வாறு புனிதமாகப் பாதுகாத்து வைத்திருப்பரோ அவ்வாறே இந்த இராமாயண ஏடும் புனிதமாக இராமாயணம் படிப்போர் வீடுகளில் பாதுகாக்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதியோ, முதல் சனிக்கிழமையோ 'ஏடு எடுப்பது' என்பது ஒரு புனிதச் சடங்கு போலவே நிகழ்த்தப்படுகிறது. ஏடு எடுத்த நாளிலிருந்து, படித்து முடித்து, ஏடு மீண்டும் வைக்கப்படும் வரை இராமாயணம் படிக்கும் வீட்டைச் சேர்ந்தவர்கள் துர்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. 

இராமாயணம் படிக்கும் நாட்களில் தொடக்க நாள், சீதை திருமணம் படிக்கப்படும் நாள், இராமன் அயோத்தி திரும்பும் வழியில் பரத்துவாசர் ஆசிரமத்தில் விருந்துண்ணும் நிகழ்ச்சி படிக்கப்படும் நாள், நிறைவாக இராமன் முடி சூட்டிக் கொள்ளுதல் (பட்டாபிசேகம்) படிக்கப்படும் நாள் ஆகிய நான்கு நாட்களும் மிகச் சிறப்புடைய நாட்களாக கருதப்படுகின்றது. இந்நாட்களில் வீடு விழாக்கோலம் கொள்ளும். 

குடும்பப் பெரியவர் இல்லாமல், அறிஞர் ஒருவர் இராமாயணம் படிப்பாரேயானால், நிறைவாக பட்டாபிசேகம் படிக்கப்படும் நாளில், அவருக்கு அக்குடும்பத்தினரால் சிறப்புச் செய்யப்படும்.

இப்பழக்கம் நகரத்தார் ஊர்கள் அனைத்திலும் சில பல குடும்பத்தினரால் தத்தமது இல்லங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. சில ஊர்களில் நகரத்தார் பொதுச் செலவில் பெருமாள் கோயிலிலோ அல்லது வேறு பொது இடத்திலோ நடைபெறுகிறது.

எவ்வளவு காலமாக "இராமாயணம் படித்தல்" நிகழ்ந்து வருகிறது என திட்டமாகக் கூற இயலவில்லை. ஆயினும் கோனாப்பட்டில் மு.கி குடும்பத்தார் எட்டாவது தலைமுறையாக இன்றும் தங்கள் வீட்டில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர் மற்றும் நற்சாந்துபட்டியில் சாமியாடிச் செட்டியார் குடும்பத்தார் தங்கள் வீட்டில் கி.பி.1843 முதல் இன்று வரை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர் என்பது ஆதாரத்துடன் கூடிய உண்மை.

கோனாபட்டை சேர்ந்த மு.கிருஷ்ணப்பச் செட்டியார் என்பவர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்தின் பொருட்டு பாய்மரக் கப்பலில் வெளிதேசம் சென்று திரும்புகையில் நடுக் கடலில் பெரும் புயலில் சிக்கிக்கொண்டார், கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது, என்ன செய்வதென்று அறியாதிருந்தபோது, அவர் மட்டும் "ராம,ராம,ராம.." என இரண்டெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஓதிக்கொண்டிருந்தார், 

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்"

என்னும் கம்பனின் கவிக்கேற்ப "ராம" என்னும் இரண்டெழுத்து மந்திரத்தின் உயர்ந்த பலனால், நடுக் கடலில் திடீரென எங்கிருந்தோ வந்த வானரம் ஒன்று பாய்மரத்தின் ஒருபக்க கயிற்றை பிடித்து இழுக்க மற்றொரு பக்க கயிற்றை செட்டியார் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மூன்று நாட்கள் அக்கயிற்றை விடாது பிடித்துக்கொண்டு கரை ஒதுங்கினார். 

ஊர் திரும்பியதும் "உன்னை காப்பாற்றியது அந்த அனுமன் தான், இராமனின் ஆணைக்கிணங்க இராமனின் சீடனான அனுமன் தான் உன்னை காத்து அருளியுள்ளான். இராமபிரானின் பூரண அருளை பெற்ற நீ, உமது இல்லத்தில் இராமாயணம் படித்துவர அனைத்து நலமும் செல்வமும் பெருகும்" என்று ஊர்ப் பெரியவர்கள் கூற. அன்று தொடங்கி கிருஷ்ணப்பச் செட்டியார், தமது வீட்டில் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வரலானார். தாம் புதிதாக கட்டிவந்த வீட்டை நான்கு பங்குகளாக பிரித்து தமது மூன்று புதல்வர்களுக்கு தலா ஒரு பங்கும், இராமபிரானுக்கு ஒரு பங்குமாக வைத்து கட்டிமுடித்தார்.

இன்றும் அந்த வீட்டில் அம்மூன்று புதல்வர்களின் வழிமுறையினர் - எட்டாவது தலைமுறையினர் தொடா்ந்து வருடம்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர், இதில் சர்வ மக்களும் கலந்துகொண்டு இராமனின் பரிபூரண அருளை பெற்று வருகின்றனர். இவர்கள் வீடு "இராமாயணகார வீடு" என்று அழைக்கப்படுகிறது, இவ்வீட்டில் உள்ள இராம ஆவதார சிற்பங்கள் வனப்புமிக்கவை.


நாட்டரசன்கோட்டையில் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் சுப.இராமன் செட்டியார் என்றொரு இராம பக்தர் வாழ்ந்து வந்தார், அவரின் இராம பக்திக்கு சான்றாக அவர் கட்டிய வீட்டின் முகப்பு நிலையின் கருட பகவான் சிற்பமும், திண்ணையில் திருமாலின் திரு அவதார சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.

இராமன் செட்டியார் தமது வீட்டில் வருடத்தின் 365நாட்களும் வைணவப் பெரியோர்களை கொண்டு தமிழ் மற்றும் வடமொழியில் இராம மந்திரங்களும் இராமாயணமும் படித்துவந்துள்ளார்.ஒருநாள் திருக்கோட்டியூரிலிருந்து வந்த ஐயங்கார் ஒருவர், கம்பராமாயணத்தில் கங்கைப் படலத்தில் வரும் கீழ்கண்ட பாடலை பாடினார் 

"வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ! இவன் வடிவென்பதோர்
     அழியா அழகு உடையான்"

இப்பாடலில் இராமனின் அழகை வருணிக்கும் கம்பன், ஒரு கட்டத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் "ஐயோ!, இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்" என்று முடிக்கிறார்.

இப்பாடலை கேட்டு வியந்த இராமன் செட்டியார், ஐயங்காரை மீண்டும் ஒருமுறை பாடச்சொன்னார், அவர் மீண்டும் பாடினார். "இராமன் என்ன அவ்வளவு அழகானவனா?" என்று கேட்டு மீண்டும் ஒருமுறை பாடச்சொன்னார். செட்டியார் மீண்டும் மீண்டும் கேட்க ஐயங்கார் மீ்ண்டும் மீண்டும் பாடினார், இறுதியாக கோபமுற்ற ஐயங்கார் "நீங்கள் எ‌வ்வளவு முறை இந்த பாடலைக் கேட்டாலும் இராமனின் அழகை உங்களால் அனுபவிக்க இயலாது, இராமனின் சிலையை வடித்து ஒரு கோயில் கட்டி, பிரதிட்டை செய்து வழிபட்டால் தான் நீங்கள் அவனின் பேரழகை அனுபவிக்க முடியும்" என்றார்.

இதை சவாலாக ஏற்றுக்கொண்ட செட்டியார் சிற்பியை அழைத்து இராமனின் சிலையை செதுக்கச் சொன்னார். இது ஒருபுறமிருக்க உள்ளூரில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உரிய வேங்கடேசப்பெருமாள் கோயில் மிகுந்த சிதிலமடைந்திருந்தது. இதை கண்டு வறுத்தமடைந்த செட்டியார், கோயிலை புனரமைக்க தொடங்கினார், திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்கவிருந்த போது, சிவகங்கை சமஸ்தான பிரதிநிதிகளிடம் இருந்து ஒரு செய்தி வந்தது "கோயிலிலிருந்த பழைய பெருமாள் சிலையை மாற்றி இராமர் சிலையை வைக்கக்கூடாது" என்று அதில் எழுதியிருந்தது. நீதிமன்றத்திற்கு சென்றார் செட்டியார், நீதிபதியும் பழைய பெருமாள் சிலையை மாற்றக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினார். எல்லாம் அவன் செயல் இறைவனின் விருப்பம் அதுவாயின் அப்படியே நடக்கட்டும் என்று இராமன் சிலையை பிரதிட்டை செய்யாமல், புதிதாக எழுப்பிய கற்கோயிலில் வேங்கடேசப்பெருமாளுக்கு கி.பி 1899-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார் இராமன் செட்டியார். பின்னர் அவரின் வம்சாவளியினர் ஒரு புதிய மனையில் கோயிலை எழுப்பி அங்கு இராமன் சிலையை பிரதிட்டை செய்து கல்யாணராமர் என்று திருப்பெயரிட்டு கும்பாபிஷேகம் செய்தனர். மேற்படி பழைய கோயில் சீர் செய்யப்பெற்றதற்கும் புதியதோர் கோயில் அமைக்கப்பெற்றதற்கும் கம்பன் இயற்றிய ஒரு பாடல் தான் காரணம் என்றால் அது மிகையல்ல!

மற்றொரு உண்மைச் சம்பவம், திருமலை சமூத்திரம் என்னும் நற்சாந்துபட்டியில் வசித்துவந்த சாமியாடி செட்டியார் என்கிற ஆண்டியப்ப செட்டியாரின் இரண்டாவது குமாரரான சின்னக்கருப்பஞ் செட்டியார், திருமால் மீது மிகுந்த பக்தி உடையவராய் திகழ்ந்தவர், இவர் காவிரியில் தீர்த்தமாட சென்ற போது, நீரில் மிதந்து வந்த ஓலைச்சுவடிகளை கண்டு அவற்றை எடுத்து தம் வேட்டியில் கட்டிக்கொண்டு ஊர் திரும்பினார். கோவில்பட்டியை சேர்ந்த அய்யாச்சாமி என்பவரை வரவழைத்து சுவடிகளை காட்டினார், அவர் இவை இராமாயண சுவடிகள் என்பதை உறுதிசெய்தார். பின்னர் அவர் மூலமாக இவற்றை புதிய ஏட்டில் படியெடுக்கச் செய்து, கி.பி.1843 ஆம் ஆண்டு முதல் தமது இல்லத்தில் வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வரலானார் சின்னக்கருப்பன் செட்டியார். இச்செய்தியை நாம் அந்தச் சுவடியிலுள்ள அடிகண்ட பாடலால் அறிந்துகொள்ளலாம்.

"செல்வனாம் தொட்டியச் சின்னானூராளியை
நல் மனதாகப் போற்றும் நமது ஆண்டியப்பவேள்
சொல் மறவாத புத்ரன் சுமுகனுக்கய்யாச்சாமி
கல்விசேர் புகழும் சின்னக்கருப்பனுக் கெழுதினேனே"
சோபகிருது ௵ அற்பிசி ௴ 7௳ (1843)

இவ்வாறு இராமாயணம் படித்துவரும் காலத்தில் சின்னக்கருப்பஞ் செட்டியார் வாழ்ந்த வீட்டில் எதிர்பாராத விதமாக கூரையில் தீப்பிடித்தது, வீடே தீக்கிரையான போது இராமாயண ஓலைச்சுவடிகள் மட்டும் எவ்வித சிதைவும் ஏற்படாமல் இருந்தன. நூற்றெண்பது ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த ஓலைச்சுவடிகள் பத்திரமாக காக்கப்பட்டு வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப நூல்ளாக மாற்றப்பட்டு அவர் தம் வழிமுறையினர்களால் தொடர்ந்து இன்றுவரை வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படிக்கப்பட்டு வருகிறது. அதே ஊரில் உள்ள கம்பன் செட்டி குடும்பத்தார் சாமியாடி செட்டியார் குடும்பத்தாரிடம் இருந்த ஓலைச்சுவடிகளை படியெடுத்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர்.

நெற்குப்பை ந.பழ குடும்பத்தார் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கொழும்பிலிருந்து கொண்டுவந்த அடர் நீல வண்ண இராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்து அதன் முன் வருடாவருடம் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்துவருகின்றனர்.

இது போல் செட்டிநாடு முழுவதிலுமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தத்தமது வீடுகளில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இராமாயணம் படித்து வருகின்றனர். எண்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இராமாயணம் படித்து வருகின்றனர். (பட்டியலின் நீளம் கருதி இங்கு வெளியிடவில்லை) 

கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள், தம் இல்லத்தில், தாம் சிறுவனாக இருக்கும் பொழுது, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், இராமாயணம் படிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றமையே, தமது கம்பராமாயண ஆர்வத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். உலகிலுள்ள கம்பன் கழகங்கள் அத்தனைக்கும் தாய் கழகமான "காரைக்குடி கம்பன் கழகம்" கி.பி.1939ஆம் ஆண்டு கம்பனடிப்பொடியால் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை கம்பராமாயணத்தைப் பரவலாக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து வருகிறது.


மேலும் செட்டிநாட்டவர் பலர் தாங்கள் வாழும் ஊர்களிலும்,வெளிதேசங்களிலும் இராமாயணம் படித்து வருகின்றனர்.

"யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" என்றாற்போல, இராமாயணம் படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் எல்லோரும் நலம் பெற்று வாழவேண்டும் என்ற தர்ம சிந்தனையுடன் நகரத்தார்கள் இராமாயணம் படித்துவருகின்றனர்.

- பழ.கைலாஷ்.

Friday, August 5, 2022

இந்தியாவின் முதல் கொடி



இந்தியாவின் முதல் தேசியக் கொடி எது? "தாயின் மணிக்கொடி பாரீர்!" என்று பாரதி பாடியது தீர்க்க தரிசனமா? அல்லது அப்போது இந்தியாவுக்கு ஏதும் கொடி இருந்ததா?

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய மக்கள் மனதில் எழுந்த சுதேச எழுச்சியால் தேசியக் கொடிக்கான தேவை உருவானது. சுவாமி விவேகானந்தரின் முதன்மை சிஷ்யையான சகோதரி நிவேதிதா தான் இந்தியாவுக்கான முதல் தேசியக் கொடியை உருவாக்கியவர்.


மார்கரெட் எலிசபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) என்ற இயற்பெயரைக் கொண்ட சகோதரி நிவேதிதா அயர்லாந்தில் 1867-ஆம் ஆண்டு பிறந்தார். நோபிள் ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்துவிட்டது. தந்தை சாமுவேல் கிறித்துவ மதகுருவாக இருந்தார். ஆரம்பத்தில் கிறித்துவ மதத்தின் மீது பிடிப்புக் கொண்டிருந்த நோபிள், இளமைப் பருவத்தில் புத்த மதக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு காட்டினார். கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து சில காலம் பணியாற்றிய பின் புதிய கல்வி முறையை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டி ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்த நேரம் 1895-ஆம் ஆண்டு, இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க நோபிளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சம்பவம்தான் நோபிள் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்டு அவர்பால் அவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1898-ஆம் ஆண்டு ஜனவ‌ரி மாதம் கல்கத்தா வருகிறார் நோபிள். இந்து சமயத்தின் பிரம்மச்சரிய தீட்சையை ஏற்கும்போது நோபிளுக்கு "நிவேதிதா" என்ற பெயரை சூட்டுகிறார் விவேகானந்தர். இதன் பொருள் "அர்ப்பணிப்பு". இந்து சமய தீட்சை பெற்ற முதல் மேற்கத்திய பெண் இவரே.


நிவேதிதா இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் கல்கத்தாவை பிளேக் நோய் கடுமையாகத் தாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துக் கிடந்தனர். அப்போது வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ தாதியாக சேவை செய்தார்.

1898-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார் நிவேதிதா. அப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்ததுடன், ஓவியம் வரைதல், மண்பொம்மைகள் செய்தல், துணி தைத்தல் முதலானவற்றையும் சொல்லித் தந்தார் நிவேதிதா. அதன்பின் சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தந்தார். சுதந்திரப் போராட்டம் உச்சம் பெறாத காலத்திலேயே 'வந்தே மாதரம்' பாடலை தனது பள்ளியில் பாடச் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுவாமி விவேகானந்தருடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளி வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார். நியூயார்க் நகரத்தில் "இராமகிருஷ்ண தொண்டர் சங்கம்" என்ற அமைப்பைத் தொடங்கி இந்தியாவின் பெருமையைப் பரப்ப உதவினார்.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து 1901-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடர்ந்தார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து ஆழ்ந்து அறிந்துகொண்டு, அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் நூல்கள் எழுதினார்.

கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட நிவேதிதாவுக்கு 1902-ஆம் ஆண்டு பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவுதான் அது. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார்.

சுவாமி விவேகானந்தருக்குப் பிறகு அரவிந்தருடன் நட்பானார். அதோடு, இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கினார். வங்காளத்தின் புரட்சிகர இயக்கங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். லண்டன் பத்திரிகைகள், நிவேதிதாவை  'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது சுதந்திரப் போராட்ட நிலைப்பட்டால் கோபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, கோபத்தால் இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்கிவிடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தால் அதில் இருந்து விலகினார்.

1904-ஆம் ஆண்டு, ஒரு நாள் ஜெகதீஸ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் நிவேதிதா புத்தகயாவுக்கு முதன்முதலாக சென்றிருந்தார், அங்கே வஜ்ராயுத சின்னத்தை காண்கிறார். அது அவர் மனதை கவர்ந்துவிடுகிறது. தொடர்ந்து வஜ்ராயுதத்தை பற்றி தேடித்தெரிந்து கொள்கிறார். புத்தமத நம்பிக்கையின்படி வஜ்ரா என்பது புத்தரின் அடையாளம் மேலும் இந்து மதத்தில் வஜ்ரா இந்திரனின் ஆயுதமாகவும், வலிமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றதை புரிந்துகொள்கிறார் நிவேதிதா. 

1905-ஆம் ஆண்டு, சதுர வடிவில் சிவப்பு பின்னணியில் மஞ்சள் நிறத்தில் விளிம்பில் 108 ஜோதிகளுடன் மையத்தில் வஜ்ராயுத சின்னமும் வங்க மொழியில் "வந்தே மாதரம்" என்ற சொல்லுடன் தனது மாணவிகளை கொண்டு ஒரு கொடியை உருவாக்குகிறார். இதில் சிவப்பு சுதந்திர போராட்டத்தையும் மஞ்சள் வெற்றியையும் வஜ்ராயுத சின்னம் இந்தியாவின் ஆன்மீக மரபையும் உருவகப்படுத்துவதாக நிவேதிதா குறிப்பிடுகிறார். இதுவே இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேசியக் கொடி.

1905-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதி, காசியிலிருந்து திரும்பும் போது கல்கத்தா சென்று சகோதரி நிவேதிதாவை சந்திக்கிறார். அப்போது நிவேதிதா, “ஏன் உங்கள் மனைவியை அழைத்து வர வில்லை?" எனப் பாரதியைப் பார்த்து கேட்கிறார்.  "காசியில் நடந்தது காங்கிரஸ் மாநாடு அதில் பெண்கள் கலந்துகொள்வதால் என்ன பலன் மேலும் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது" என்கிறார். “உங்கள் மனைவிக்கு சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?" எனும் தொனியில் கேள்வி கேட்கிறார் நிவேதிதா. அது பாரதியை உலுக்கியது, அதுவரை அவர் கொண்டிருந்த பெண் விடுதலை குறித்த சிந்தனையை முழுதாக மாற்றி அமைத்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக்கொண்டார் பாரதி. அவருக்கு குரு வணக்க பாடலும் இயற்றினார். 


1908-ஆம் ஆண்டு பாரதி வெளியிட்ட  "ஸ்வதேச கீதங்கள்" நூலில் நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார். பின்னர் 1909-ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்" நூலின் இரண்டாம் பாகமான "ஜன்ம பூமி" நூலில் "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதி நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.

இந்த "ஜன்ம பூமி" நூலில் இடம்பெற்ற பாடல் தான் "மாதாவின் துவஜம்" எனும் பாரத நாட்டுக் கொடியை புகழ்ந்து பாடும் பாடல்கள்.

அதில்,
"தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!"
என்று பாரதி பாடிப்பரப்பியது சகோதரி நிவேதிதாவின் கொடியைத்தான்!

"ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!"
அதாவது, நிமிந்து உயர்ந்து நிற்கின்ற ஒரு கொடிக்கம்பம் அதன் மேல் "வந்தே மாதரம்" என்று அழகாக பொறிக்கப்பட்டு விளங்குகின்ற சிவந்த பட்டுத் துணியாலான கொடியொன்று பிரகாசமாக பறப்பதை பாரீர்.

"இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?"
அதாவது, அக்கொடியின் ஒரு பகுதியில் இந்திரனது வச்சிராயுதச் சின்னமும் மற்றொரு பகுதியில் எங்கள் நண்பர்களான இஸ்லாமியர்களின் பிறை வடிவமும் இருக்கும். மையத்தில் "வந்தே மாதரம்" என்னும் மந்திரம் இருக்கும். அந்தக் கொடியின் மகிமையை வரையறுத்துச் சொல்லிட ஆற்றல் உடையவனோ நான்?

"மாதாவின் துவஜ"த்தில் மொத்தம் பத்து பாடல்கள் அதில் மேற்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் நோக்கினாலே நமக்கு புரியும், சிவப்பு நிற பட்டுக்கொடி அதில் வந்தே மாதரம் என்னும் சொல், இந்திரனின் வஜ்ராயுத சின்னம் என இவை குறிப்பது நிவேதிதாவின் கொடியைத்தான். வஜ்ராயுத சின்னத்தின் மேற் பகுதியும் கீழ் பகுதியும் பார்ப்பதற்கு பிறை போல் அரை வட்டமாக உள்ளதால் இதை இஸ்லாமியர்களின் பிறை வடிவம் என்று வர்ணிக்கிறார் பாரதி.

1906-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இக்கொடி பார்வைக்கு வைக்கப்பட்டது. ஜெகதீஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்தக் கொடியை ஆதரித்தபோதிலும் இது மக்கள் மனதை கவரத்தவறிவிட்டது.

1911-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று டார்ஜிலிங்கில் தனது 44-வது வயதில் உயிர்நீத்தார் சகோதரி நிவேதிதா. தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்து அக்டோபர் 7-ஆம் நாள் தனது சொத்துகளையும், படைப்புகளையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்தார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்து கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று எத்தனையோ கலைஞர்களை, வீரர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கிடச் செய்து, இந்தியாவுக்கென முதல் கொடியை உருவாக்கிய சகோதரி நிவேதிதாவை நமது சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டில் போற்றி வணங்குவோம். 

அன்பன்
பழ.கைலாஷ்.
05/08/2022


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...