Followers

Wednesday, May 26, 2021

பாடுவார் பாடல் தொகுப்பு


" வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பிரான்மலையாம்

தெள்ளார் புனல்வைகை தெற்காகும் - ஒள்ளியசீர்

எட்டிக் கடற்கிழக்காம் இஃதன்றோ நாட்டரசன்சேர் 

செட்டிநாட் டெல்லையெனச் செப்பு".

என்ற பாடலின் மூலம் செட்டிநாட்டு எல்லைக்கு வரையறை வகுத்தவர்  'பாடுவார் முத்தப்பர்'. 


பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டிலே திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் 'கீழச்சிவல்பட்டி'யில் கி.பி.1750ஆம் ஆண்டு அழகப்ப செட்டியார் - லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் 'முத்தப்பர்'. இவர் இயல்பாகவே தமிழில் கவிதை பாடும் ஆற்றலுடையவராகவும், பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். 

இவரது வாக்குப் பலித்து நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் பல. அவற்றுள், குன்றக்குடியில் மழைவேண்டி பாட்டுப் பாடி மழைபொழிய செய்ததும், மழை நிற்கப் பாட்டுப் பாடி மழையை நிறுத்த செய்ததும், நெடுமரம் மலையரசி அம்மன் கோவிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலிலும் மழை வேண்டி பாடி மழைபொழிய செய்ததும், "காட்டுக் கருப்பா மழை காட்டு" என்று பாடி மழைபொழிய செய்ததும், துண்டான ஆட்டின் தலையை பாட்டுப்பாடி ஒட்ட வைத்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி வேலுக் கவிராயர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார் முத்துபாலுத் தேவர், செவ்வூர் அழகுப் புலவர், இராங்கியம் முத்து வீரப்பப்பிள்ளை, சிவகங்கை முத்தழகுப்பிள்ளை ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் இவருக்கு 'பாடுவார்' என்று பட்டம் அளித்து அகம் மகிழ்ந்தனர். அன்று முதல் இவர் 'பாடுவார் முத்தப்பர்' என்று எல்லோராலும் அழைக்கப்பெற்றார்.

கோவிலூர் ஆண்டவர் மீதும், துழாவூர் ஆதீனகர்த்தர் மீதும், பாதரக்குடி மடாதிபதி மீதும் குரு வணக்கத் தோத்திரங்கள் பாடியுள்ளார். 

பள்ளத்தூர் மனமகிழ்ந்துகண்ட விநாயகர் மீதும், மேகநோய் தீர்க்க கொங்கரத்தி நடுவாற்று மருதம்பிள்ளையார் மீதும் பதிகம் பாடியுள்ளார். 

நேமம் கோவிலில் உறையும் இறைவன் செயங்கொண்ட சோழீசர் மீது நூறு பாடல்கள் கொண்ட 'செயங்கொண்டார் சதகம்' என்ற நூலைப் பாடியுள்ளார். இந்நூல் நூறு வரலாற்று கதைகளையும் அவைகளுக்குரிய பழமொழிகளையும் பாங்குடன் விளக்குகிறது. மேலும் 'செயங்கொண்டார் வணக்க மாலை'யும் பாடியுள்ளார்.

"காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி

வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு

அன்றைக்கு வந்தஎங்கள் அம்மா! இலக்குமியே! 

என்றைக்கும் நீங்கா திரு!" 

எனத் 'திருமகள் அருள் வேட்டல் மாலை' பாடி வேள்வணிகராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லங்களில் இலக்குமியை நிரந்த வாசம் செய்யவைத்தவர் இவரே!

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை 'திருமுகவிலாசம்', 'நகர வாழ்த்து' ஆகிய நூல்களில் பாடியுள்ளார். மேலும் 'செட்டிமார் வரலாறு' என்றொரு நூல் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது ஆனால் அந்நூல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

இவரை வரவேற்று மகிழ்ந்தவர்களை வாயார வாழ்த்துவதும், வரவேற்க மறந்தவர்களை வசை பாடுவதும் இவர் தமிழின் தனித்தன்மையாக உள்ளது.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாடு முழுவதும் அம்மை நோய் பரவி மக்களை வாட்டி வதைத்தபோது, உச்சினி மாகாளி மீது 108 வரிகள் கொண்ட 'உச்சினி மாகாளியம்மன் கும்மி'ப்பாட்டை பாடி அம்மை நோய் நீங்க செய்துள்ளார். மேகநோய் நீங்க கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் மீது தோத்திரம் பாடியுள்ளார். 

குன்றக்குடி முருகன் மீதும், பழநியாண்டவர் மீதும், புதுக்கோட்டை பிரகதாம்பாள் மீதும், பாகனேரி புல்வநாயகி அம்மன் மீதும், இராங்கியம் அங்காள பரமேஸ்வரி மீதும் பதிகம் பாடியுள்ளார். வைணவ கடவுளான வேங்கடாசலபதி மீதும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தனது குலதெய்வமான இராங்கியம் கருப்பர் மீது 'திருத்தாண்டகம்', 'குதிரையடி விருத்தம்' மற்றும் பல பாடல்கள் பாடியுள்ளார். 

தமிழ் எனும் தெய்வசத்திபெற்ற வீரிய மொழியால் தான் சீரிய பேரருட்திறம் இருந்தது என்பதைப் பாடுவார் முத்தப்பர் பாடல்கள் காலகாலத்திற்கும் உணர்த்துவன.

இவர் பாடிய 'செயங்கொண்டார் சதகம்' முதன் முதலில் கி.பி.1890 வாக்கில் கீழச்சிவல்பட்டி ஆ.பெ.அரு.பழநியப்ப செட்டியார் மற்றும் அரு.அ.சிமு.சின்னமுத்தப்ப செட்டியார் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கி.பி. 1900 வாக்கில் 'திருமுகவிலாசம்' தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 1954ஆம் ஆண்டு பி.அளகாபுரி இராம.மு.க.மு.நாராயணன் செட்டியாரால் முத்தப்பரின் தனிப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பி.அளகாபுரி இளங்கோவன் பாடுவார் முத்தப்பர் வரலாறு முதலிய சில நூல்களை இயற்றியுள்ளார். பின்னர் நீண்ட கால இடைவெளிகளில் சிலர் முத்தப்பரின் பாடல்களை மறு பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பாடுவார் முத்தப்பரின் பாடல்கள் அனைத்தும் அடங்கிய பதிப்பு ஒன்று இல்லாததால், தமிழ் கூறும் நல்லோர் மத்தியில் இருந்துவந்த ஏக்கத்தை தீர்க்கும் முகமாக இளைய தமிழ்க்கடல் தேவகோட்டை இராமநாதன் அவர்களால் 'வேள்வணிகர் வரலாறு' எனும் நூல் படைக்கப்பட்டுள்ளது. இதில் பாடுவார் முத்தப்பர் பாடிய பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது.


பள்ளிப்பருவம் முதல் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவை பேச்சாலும் வெண்கலக்குரலாலும் கேட்போர் மனதில் இடம்பிடித்து, பல பரிசுகளை பெற்றவர் தேவகோட்டை இராமநாதன். சன் தொலைக்காட்சியின் 'அரட்டை அரங்கம்', 'அசத்தப்போவது யாரு?'., ராஜ் தொலைக்காட்சியின் 'சிரிப்போம் சிந்திப்போம்', 'அகடவிகடன்'., விஜய் தொலைக்காட்சியின் 'கலக்கப்போவது யாரு?', 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நாவாற்றலால் உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று 'அசத்தல் மன்னன்' எனும் பட்டம் பெற்றவர். 

1997 முதல் தற்போது வரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றி உலகப் புகழ்பெற்று, 2018ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 'இளைய தமிழ்க்கடல்' என்ற பட்டம் பெற்றார். மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பங்காற்றியுள்ளார். காசி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாக்களில் வர்ணனையாற்றி வர்ணனை வேந்தராகவும் திகழ்கிறார்.


இவர் கல்லூரி மாணவனாகப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற போது "பாடுவார் முத்தப்பர் நாவன்மைப் பேச்சுப்போட்டி"யில் முதல் பரிசாக வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதுவே பாடுவார் முத்தப்பர் பாடல் தொகுப்பு உருவாகுவதற்கு அடிநாதமாய் அமைந்துள்ளது.

பாடுவார் முத்தப்பர் பாடல்களின் பழைய பதிப்புகள் அத்தனையும் அரிதின் முயன்று திரட்டி, அவர் பாடிய ஆலயங்களுக்கு நேரில் சென்று அவரின் பாடல்களை பாடி, இதுவரை பதிப்பில் வராத பாடல்களையும் தேடித் திரட்டி இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். மேலும் பாடுவார் குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாடல்களையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

தேனூர் வரகவி வே.செ.சொக்கலிங்கனார், முருகனடியார்கள் 78 பேரைத் தொகுத்துச் 'சேய்த்தொண்டர் புராணம்' எனும் நூலை இயற்றியுள்ளார். அதில் ஒருவராக பாடுவார் முத்தப்பரை இணைத்து "முத்தப்பர்க்கு அடியேன்!" என்ற வரிகளால் 'முத்தப்ப நாயனார் புராணம்' பாடியுள்ளார். அதையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

'வேள்வணிகர் வரலாறு' எனும் இந்நூல் பாடுவார் முத்தப்பர் பாடல்களின் கலைக்களஞ்சியமாக திகழ்கிறது. 

இந்நூல் வெளிவரப் பேருதவி செய்த மேலைச்சிவபுரி 'தொழில்மாமணி' கரு.செல்லராமு செட்டியார் - இராஜாமணி ஆச்சி அவர்களின் 70ஆம் ஆண்டு பீமரத சாந்தி விழாவில் 22.11.2017இல் முதல் பதிப்பு மலர்ந்தது. 

அரும்பாடுபட்டு பாடுவார் முத்தப்பர் பாடல்களை திரட்டி நூலாக வெளியிட்டிருக்கும் தேவகோட்டை இராமநாதன் அவர்களின் பணி காலந்தோறும் பாராட்டத்தக்கது.

வாழிய தமிழ்!
வாழிய பாடுவார் முத்தப்பர் புகழ்!

அன்பன் 
பழ.கைலாஷ்

பாடுவார் முத்தப்பர் கட்டிய கோயில்


18ஆம் நூற்றாண்டில் அருட்கவியாய் வாழ்ந்த 'பாடுவார் முத்தப்பர்' சிறந்த வணிகராகவும் திகழ்ந்து பொருளீட்டி பல அறப்பணிகள் செய்து வந்துள்ளார். இளையாற்றங்குடி அருகேயுள்ள  சேவினிப்பட்டி எனும் ஊரில் மக்களின் தாகம் தீர்க்க குடிதண்ணீர் குளம் ஒன்றை வெட்டி, அதன் மேல்கரையில் கருங்கற்களைக் கொண்டு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கோவிலினுள் பாடுவார் முத்தப்பருக்கு சிலை உள்ளது. கோவில் இருக்கும் சாலை 'பாடுவார் முத்தப்பர் சாலை' என்றும் குளம் 'செட்டியா(ர்) ஊருணி' என்றும் அழைக்கப்படுகிறது. 

பாடுவார் முத்தப்பர் பாடிய விநாயகர் துதி:

" காட்டுவழி போனாலும் கள்ளர்பய மானாலும் 

கேட்டுவழிக் காலகனார் கிட்டிலும் -  நாட்டமுடன் 

நம்பிக்கை யாக நமக்கு வினாயகனின் 

தும்பிக்கை உண்டே துணை".

புகைப்படங்கள்: சேவினிப்பட்டியில் (சிவகங்கை மாவட்டம்) 'பாடுவார் முத்தப்பர்' கட்டிய பிள்ளையார் கோவில் மற்றும் ஊருணி.

Sunday, May 16, 2021

பெய்யனப் பெய்யும் மழை!


"ல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது ஔவை கூற்று. "நடக்காத ஒன்று நடந்தால் மழைபெய்யும்" என்றும் "அத்திபூத்தால் ஆறு பெருகிவிடும்" என்றும் "புண்ணியவான் பெய்யென்றால் மழை பெய்யும்" என்றும் சொற்றொடர்கள் நம்மிடையே வழங்கப் பெருகின்றன. மழை பற்றிய விஞ்ஞானக் கருத்துக்கள் வேறாக இருப்பினும் மக்களின் நல்லெண்ணத்திற்கும் செயலுக்கும் ஏற்றபடியே மழை பெய்யும் என்பது நம் முன்னோர்கள் கருத்து.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் 'பாடுவார் முத்தப்பர்'.


பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டில் திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் 'கீழச்சிவல்பட்டி'யில் கி.பி1750ஆம் ஆண்டு தனவணிக குலத்தில் அழகப்ப செட்டியார் - லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றினார் முத்தப்பர். இயல்பாகவே தமிழ்க்கவிதை பாடும் ஆற்றலுடையவராய் விளங்கினார். கவிபாடும் ஆற்றலோடு, பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். எனவே இவறை அனைவரும் 'பாடுவார் முத்தப்பர்' என்று அழைத்தனர்.


இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார், செவ்வூர் அழகுப் புலவர் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார்.


பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள் குன்றக்குடி சண்முகநாதருக்கு ஒரு வெள்ளி மயில் வாகனம் செய்து வைத்தார். நல்லதொரு நாளில் குன்றக்குடியில் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவிழா அன்று முருகப்பெருமான் புது வெள்ளி மயில் வாகனத்தில் ஏறி பவனி வந்தார். முன்வரிசையில் முத்தப்பரும் சேனாபதியடிகளும் சென்று கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக மழையில்லாமல் ஊர் வறட்சியடைந்திருந்த காலம் அது.

சேனாபதியடிகள் கேட்டார் "முத்தப்பா! நீண்ட நெடுங்காலமாக மழையே இல்லாமல் நாடு வறண்டு கிடக்கிறது, நாட்டு மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நீ தான் உன் பாடலால், இறையருளால் மழை பொழிய செய்ய வேண்டும்".

"நான் பாடுகிறேன் இறையருளால் மழை பொழியும்" என்றார் முத்தப்பர்.

பின்னர் தெற்கு ரத வீதிக்கு சென்றதும் சுவாமியை கீழே இறக்கி வைத்தார்கள்.

"பாடு" என்று சேனாபதியடிகள் கூற முத்தப்பர் பாடினார்;

"அள்ளிநிதி யங்கொடுக்கும் புலன்வயற்சே

          னாபதிஎன் ஐயன் குன்றை

வள்ளிமண வாளனுக்கு வெள்ளிமயில்

          செய்துவைத்த மகிமை பாரீர்!

வெள்ளியறி யாமல்மழை பெய்கிறதே

          என்றமொழி மெய்தான்; வெள்ளிப்

புள்ளிமயி லேறிமுரு கன்பவனி

          வரக்கண்டு பொழிந்த வாறே!"

பாட்டு முடியவில்லை. அதற்குள்ளாக மழை 'சோ'வென்று கொட்டத் தொடங்கியது. நெடு நேரமாகியும் நிற்கவில்லை. மனமகிழ்ந்த சேனாபதியடிகள் "போதும்! முத்தப்பா போதும்! குன்றக்குடி கழனிகள் செழிக்க தேவையான அளவு நீர் நிரம்பிவிட்டது" என்றார்.

மழைபொழிய பாடிய வள்ளல் மழையை நிறுத்தவும் பாடினார்;

"வந்து மழைபொழியும் வானேவெஞ் சூர்தடிந்த

கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்

நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல; மாற்றிவிடு!

கீர்த்திவரும்; நாட்டன்மொழி கேள்."

பாட்டும் நின்றது! மழையும் நின்றது!

குன்றக்குடியில் மழை பொழியவும் நிற்கவும் பாடிய முத்தப்பர் "ஏழை எளியோர்களின் குடி ஈடேறும் படிக்கு" என்ற தன் வாக்குப்படி பலமுறை மழை பொழிய பாட்டு பாடி மழைபொழிய செய்து மக்களின் உழைப்புக்குப் பலன் கிடைக்கச் செய்திருக்கிறார். நெடுமரம் மலையரசி கோயிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலிலும் மழை வேண்டி முத்தப்பர் பாடியுள்ளார்.

குன்றக்குடியில் முத்தப்பர் மழை வேண்டி பாடியதின் நினைவாக அங்கே அவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

அன்பன்
பழ.கைலாஷ்

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...