Followers

Saturday, November 23, 2019

தனவைசிய ஊழியன்

காரைக்குடியில் 1920ல் சொ.முருகப்பரால் "தனவைசிய ஊழியன்" எனும் வாரப்பத்திரிகை தொடங்கப்பட்டது.
சொ.முருகப்பர்

 பின்னர் 1930ல் "ஊழியன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 'தமிழ் கடல்'இராய.சொ அவர்களால் நடத்தப்பட்டு வந்தது.



 1934ல் பத்திரிகையின் துணை ஆசிரியராக சில மாதங்கள் புதுமைப்பித்தன் பணியாற்றினார்.
புதுமைப்பித்தன் 


ஊழியனில் புதுமைப்பித்தன் எழுதிய முதல் சிறுகதை "தெரு விளக்கு" என்ற தலைப்பில் 24.08.1934ல் வெளியானது. (85ஆண்டுகளுக்கு முன்பு)



"தெரு விளக்கு" 


தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.

தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.

இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.

நிற்கும் கல் - உடம்பு சிறிது சாய்ந்துவிட்டது. சிரத்தில் இருந்த கண்ணாடிச் சில் ஒரு பக்கம் உடைந்துவிட்டது. அந்தச் சிறுவன் விளையாட்டாகக் கல்லை எறிந்தபொழுது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா?

காற்று அடித்தால் உயிரை ஒரேயடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த் துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே!

கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்தக் காற்றிற்கு நன்றி இருக்கிறதா?

போய்விட்டது! பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்?

அது காற்றிற்குத் தெரியுமா?

இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம்! அதை எடுத்துவிட வேண்டுமாம்!

அதற்கு ஒரு தோழன் - ஒரு கிழவன்.

ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும். இதில் என்ன அதிசியம்!

விளக்கிற்குக் கிழவன்.

கிழவனுக்கு விளக்கு.

விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவனுக்குத் தெரியாது.

அவனுக்கு எப்படித் தெரியும்.

அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா?

வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா?

தெருவிளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மன நிம்மதியை அளித்தது.

அன்று சாயங்காலம் வந்தான்.

வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.

இருள்! இருள்!!

பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!

அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய், அர்த்த மற்றதாய் இருந்தது.

உடைந்த தெரு விளக்குத்தான்! அனால், கொஞ்சமாவது அவனைத் தேற்றிவந்ததே!

மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.

இப்பொழுது ஒரு புது விளக்கு!

மின்சார விளக்கு!

அதன் கிழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றிக் கவலை என்ன?

ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்!

அதற்கென்ன?

எங்கும், எப்பொழுதும் அப்படித்தான்.

பழையன கழியும், புதியன வரும்.

இது உலக இயற்கையாம்!

- புதுமைப்பித்தன்
(24.08.1934-ஊழியன்- காரைக்குடி)

Kailash PL

Tuesday, November 12, 2019

காரைக்குடியில் பாரதி


பிங்கள ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்தாறாம் நாளன்று (10.09.1917) செட்டிநாட்டின் சீர்திருத்தத் தந்தை எனப் பாராட்டப் பெறும் சொ.முருகப்பா முன் நிற்க, அவருக்குத் துணையாக 'தமிழ் கடல்'ராய.சொக்கலிங்கனார், கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பலரது துணையுடன் காரைக்குடி திருவாசக மடத்தில் இந்துமதாபிமான சங்கமானது தொடங்கப்பட்டது.

திருவாசக மடம் காரைக்குடி 


திருவாசக மடம் காரைக்குடி 

 நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

'கம்பநாடர்'இதழின் ஆசிரியரான மோ.வே.கோவிந்தராச ஐயங்காரை கொண்டு இளைஞர்களுக்கு திருக்குறள் மற்றும் கம்பராமாயண வகுப்புகளை இச்சங்கத்தினர் நடத்தினர்.

தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 1918ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது, அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்துக்குக்கு உ.வே.சா., வ.உ.சி., திரு.வி.க., வ.வே.சு.ஐயர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி ரா.பி.சேதுப்பிள்ளை, எனப்பலர் வந்திருக்கின்றனர். இந்தச் சங்கத்திற்கு வாராத தமிழறிஞரே இல்லை எனலாம்.

இத்தகு பெருமைக்குரிய இந்துமதாபிமான சங்கத்திற்கு 1919ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகைபுரிந்தார்.

கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்கிறார் இதனை ஏற்று பாரதி கானாடுகாத்தான் வருகிறார் வரும் வழியில் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் கலந்துகொண்டு இச்சங்கத்தினை வாழ்த்தி சில பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல், பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்குக் கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு படங்கள் இங்கு எடுக்கப்பெற்றவையாகும்.


பின் கானாடுகாத்தானில் வை.சு.சண்முகம் செட்டியார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். 'இன்பமாளிகை' என்று பெயரிடப்பட்ட அந்த வீட்டில் பின்னாளில் மகாத்மா காந்தி கானாடுகாத்தான் வந்திருந்த போது தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியை மனைவி செல்லம்மாள் மற்றும் குழந்தைகளுடன் இன்பமாளிகையிலேயே தங்கிக்கொள்ளுமாரு வேண்டினார் வை.சு.சண்முகம் செட்டியார். இதை பெரும் விருப்பத்துடன் பாரதி ஏற்றுக்கொள்ள, செல்லம்மாள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர கடையதிற்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் செல்லம்மாள் வரவில்லை. ஒருவேளை செல்லம்மாள் கானாடுகாத்தான் வந்திருந்தால் வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

செல்லம்மாள் வராததால் கடையம் திரும்பினார் பாரதி.
கானாடுகாத்தானில் இருந்த போது "செட்டி மக்கள் குலவிளக்கு" என்ற தலைப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தாரை புகழ்ந்து சில பாடல்கள் பாடியுள்ளார்.

பின்னர் பாரதி 1920ல் ஒரு முறை காரைக்குடிக்கும் கானாடுகாத்தானுக்கும் வந்துசென்றுள்ளார்.




இந்து மதாபிமான சங்கம் 1952லிருந்து காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

Kailash PL

Saturday, November 9, 2019

பெருமை மிகு காரைக்குடி



ன்றிலிருந்து சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் அதாவது 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வருகை புரிந்திருந்தார்.

இன்று(09.11.2019) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காரைக்குடிக்கு வந்ததின் நூற்றாண்டு நிறைவு நாள்.

 பாரதியார் தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படங்கள் காரைக்குடியில் எடுக்கப்பட்டது.



அதில் ஒன்று காரைக்குடி இந்துமதாபிமான சங்க குழுவினர்கள் அ.மு.க.மு.க.ரெங்கநாதன் செட்டியார், இராய.சொக்கலிங்கம், சொ.முருகப்பர், கி.நாராயணன் செட்டியார், மு.நடராஜன் உடன்
சுப்பிரமணிய பாரதியார் இருக்கும் புகைப்படம். பின்னாளில் ஒரு பத்திரிகை பேட்டியில் இராய.சொ கூறுகையில் "பாரதியைப் படம் பிடிக்க விரும்பினோம். எதற்கும் அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே மனம் வந்ததால்தான் படம் பிடிக்க ஒப்புக் கொண்டார். வேண்டிய எல்லாம் தயார் செய்யப்பெற்றன. பாரதியாரை உட்காரவைத்தோம். ஒரு தடிக் கம்பைத் தூக்கிக் கையிலே தலைக்குமேலே கம்பு தோன்றும்படி நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்பிடிப்பவருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ சொல்லியும் பாரதி கேட்கவில்லை பிறகு அப்படியே எடுக்கச் செய்தோம்''.



மற்றொன்று பாரதியாரின் மிக புகழ் பெற்ற புகைப்படமான கருப்பு கோட் அணிந்து தலைப்பாகையுடன் கையில் கோல் கொண்டு நாற்காலியில் வீற்றிருக்கும் அவரின் அழகிய புகைப்படம். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து பலநூறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது பல சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

-Kailash PL

Tuesday, November 5, 2019

காந்தி நாவன்னா


"தேவகோட்டை காந்தி நாவன்னா" என்று அழைக்கப்பட்ட SV.L.RM.நாராயணன் செட்டியார் ஒரு பழுத்த காந்தியவாதி.

மூன்றாவது முறையாக மகாத்மா காந்தி அவர்கள் 1934ல் தேவகோட்டை வந்தபோது தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் சுதந்திர போராட்ட நிதிக்காக காந்திஜியிடம்  நாவன்னா ரொக்கமாக 2600 உரூபாய் வழங்கினார். தேவகோட்டை கார்ப்பரேஷன் ரோட்டில்(EB ROAD) உள்ள தன் தோட்டத்திற்கு காந்திஜியை அழைத்து சென்றார்.
அங்கே நாவன்னாவின் மகளுக்கு சாவித்திரி என்று பெயர் சூட்டி புகைப்படத்தின் பின் சாவித்திரி என்று தன் கையால் தமிழில் எழுதி கொடுத்தார் காந்தி. பெயர் சூட்டியதற்காக நாவன்னாவின் மனைவி சிவகாமி ஆச்சி வெள்ளி தட்டையும் ஒரு பவுனையும் அளித்து மரியாதை தெரிவித்தார். 

காந்தி நாவன்னா வீடு
தேவகோட்டை 
           


மகாத்மாகாந்தி அவர்கள் 1937ல் மத்திய பிரதேசத்திலிருந்து தேவகோட்டையிலுள்ள காந்தி நாவன்னாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் தமிழில் காந்தி என கையொப்பமிட்டுள்ளார். (தற்போது இந்த கடிதம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளது)

காந்தி நாவன்னா தன் விரல்களாலே எலுமிச்சை பலத்தை வெட்டி எல்லோரையும் ஆச்சரிய பட வைப்பாராம்.
சட்டை அணியாமல் வெண்தாடியுடன் இருப்பவர் காந்தி நாவன்னா.

ஆட்டு பால் மற்றும் கடலை மட்டுமே சாப்பிட்டு சட்டை அணியாமல் சாகும்வரை காந்தியவாதியாக வாழ்ந்தவர் நாவன்னா என்பது குறிப்பிடத்தக்கது. 1978 பிப்ரவரி 27ல் மறைந்தார்.


Kailash PL

தேவகோட்டையில் காந்தி

தேவகோட்டையில் காந்தி 

தேவகோட்டை நகர சிவன் கோவில் புகைப்படம்.

1927ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மாலை தேவகோட்டை நகர சிவன் கோவிலுக்கு மகாத்மா காந்திஜி அவரது மனைவி கஸ்தூரிபாயுடன் வருகைதந்திருந்தார். சிவன் 
கோவில் எதிரே உள்ள ஊரணி கரையில்(தற்போது கந்தசஷ்டி விழா நடக்கும் இடம்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். உடன் காந்தி மெய்யப்பச்செட்டியார் இருந்தார், காந்தியவாதியான இவர் செட்டிநாட்டில் காந்திஜி சென்ற ஊர்களுக்கு காந்திஜியுடனேயே பயணம் செய்தவர்.

பொதுகூட்டத்தில் தேவகோட்டை இளைய ஜமீன்தாரான அள.அரு.இராம.வெ.சோமநாதன் செட்டியார் நகரத்தார் சார்பாக காந்திஜியிடம் ஒரு பணமுடிப்பை அளித்தார். சுவர்ண மூர்த்தி பெண்கள் பள்ளி மாணவிகளின் சார்பாக ஒரு பணமுடிப்பு அளிக்கப்பட்டது. வேந்தன்பட்டி சொக்கலிங்கம் செட்டியார் பஞ்சை எவ்வாறு உயர் ரக நூலாக நூற்க முடியும் என்பதை காட்டும் வகையில் ஒரு பொருட்காட்சி அமைத்திருந்தார் மேலும் அவர் உற்பத்தி செய்திருந்த மெல்லிய அழகான நூலைக்கொண்டு நெய்யப்பெற்ற கதர் துணியை காந்திஜியிடம் வழங்கினார். 

மேடையில் பேசிய காந்திஜி வங்காளத்தில் உள்ள சட்டர்ஜி ஒருவர் தான் கிட்டத்தட்ட இதைபோன்ற மெல்லிய துணியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யக்கூடியவர் என்று பாராட்டி பேசினார் பின்பு இந்த துணியை 1000 ரூபாய்க்கு மேல் கேட்டால் ஏலத்தில் விற்க போவதாகவும் இல்லையேல் இதை அகில பாரத சர்க்கா சங்கத்தின் பொருட்காட்சியில் வைக்கப்போவதாக கூறினார். துணியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.(இதே துணியை அடுத்த நாள் காரைக்குடி கூட்டத்தில் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்) 
இறுதியாக சீனிவாச ஐயங்கார் தானே நூற்று நெய்த ஒரு துண்டை காந்திஜியிடம் வழங்கினார். 

பொதுக்கூட்டம் முடிந்ததும் காந்திஜி அவரது மனைவியுடன் காரைக்குடி திரும்பினார். 1927ல் செட்டிநாட்டில் காந்திஜி இருந்த நான்கு நாட்களிலும் பயணம் செய்துவிட்டு இரவு காரைக்குடியில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மகாத்மா காந்திஜி மூன்று முறை தேவகோட்டை வந்துள்ளார்.

முதல் முறையாக 1921ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் வந்திருந்தார்.
இரண்டாவது முறை தன் மனைவியுடன் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்திருந்தார்.
மூன்றாவது முறை 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்திருந்தார்.

-Kailash PL

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...