Followers

Wednesday, July 17, 2019

காசியில் பாரதி வாழ்ந்த வீடு

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்த வீடு.


"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே! இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே!"என்றார் பாரதி. 

இதன் மூலம் அவர் கங்கையையும் காசியையும் எந்த அளவு நேசித்துள்ளார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


காசியில் மொத்தம் 64 காட்கள்(ghat) உள்ளன. காட் என்றால் படித்துறை.
அதில் "ஹனுமன் காட்"ல் அதிகளவு  பிராமணர்கள் வசிக்கிறார்கள். ஒருகாலத்தில் இங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண குடும்பங்கள் இருந்துள்ளனர் தற்போது குறைந்து விட்டனர். இவர்களெல்லாம்  ஐந்து தலை முறைக்கு முன்னர் தமிழகத்திலிருந்து காசிக்கு வந்து குடியேறியவர்கள்.

"ஹனுமன் காட்"ல் உள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக "சிவ மடம்" என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழமையான வீடு ஒன்று உள்ளது இந்த வீட்டில் தான் பாரதி தனது 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903)வாழ்ந்தார்.

1898ம் ஆண்டு பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.





காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். பாரதியின் சமஸ்கிருத உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு  வியந்தார்கள்.
கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். இந்த சமயத்தில் தான் பாரதி மீசை வளர்த்து கோட்,தலைப்பாகை அணிந்து தன்னையே மாற்றிக்கொண்டார்.

இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

 தற்போது இந்த வீட்டில் உள்ளவர் பாரதியின் அத்தை பேரன்  KV.கிருஷ்ணன் 93 வயதுடைய இவர் காசி தமிழ் சங்க பிரசிடென்டாக உள்ளார் மற்றும் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழிலும் இந்தியிலும் இசையிலும் புலமை.

பாரதி இங்கு இருந்த போது இவர் பிறக்கவேயில்லை,பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். பின்பு காசி மக்கள் மற்றும் அரசாங்க உதவியுடன் பாரதிக்கு இதே "ஹனுமன் காட்"ல் உள்ள தன் சொந்த நிலத்தில் சிலை அமைக்கவும் செய்தார்.

பின்னர் பாரதியார் சிலையை பராமரிக்கும் பொறுப்பை "ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்"தாரிடம் ஒப்படைத்துள்ளார்.

-Kailash  PL

Tuesday, July 16, 2019

புகார் நகரத்துப் பெருவணிகன்.


'குமரிக்கண்டமா சுமேரியமா?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய பா.பிரபாகரனின் "புகார் நகரத்துப் பெருவணிகன்"நாவல் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதையை விவரிக்கிறது.
இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல மக்களே இதில் பிரதானம் குறிப்பாக இது ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தன வணிகர்களின் கதை.

சோழ நாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் எனும் புகார் நகரை மையமாக கொண்டு கதை நகர்கிறது.

இது ஒரு கற்பனை கதை என்றபோதும் தகவல் களஞ்சியமாக திகழ்கிறது.

இதோ அதில் சில தகவல்கள்.

⚫அந்த காலத்திலேயே சோழ நாட்டில் சுங்க சாவடிகள்(Toll gate) இருந்துள்ளன.வணிகர்கள் ஏற்றி செல்லும் பொருட்களுக்கு தகுந்தாற்போல் வரி கட்ட வேண்டும். ரசீது ஓலை சுவடிகளில் வழங்கப்பட்டும்.

⚫சோழ நாட்டில்
•செப்பு காசு
•காணம்(வெள்ளியால் செய்ய பட்டது)
•கழஞ்சு(தங்கத்தால் செய்ய பட்டது)
என மூன்று விதமான நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

⚫அன்று இருந்த மது வகைகள்.
•கள்
•காடி
இவைகள் ஏழை எளிய மக்களுக்கு.

•வடிகள்
•தேறல்
இவைகள் உயர் குடியியினருக்கு.

⚫சோழ நாட்டில் வழங்கப்படும் பட்டங்கள்

•எட்டி
•காவிதி
என்பவை வணிகர்களுக்கு.

•கிழார்
•கிழான்
என்பவை புலவர்களுக்கு.

•ஏனாதி
•மாராயன்
என்பவை வீரர்களுக்கு.

•குவளை
•தாமரை
என்பவை கலைஞர்களுக்கு.

•தலைக்கோல் பட்டம்
அனைத்திலும் சிறந்த நபருக்கு வழங்கபடும்.

⚫வெளிநாடுகளில் வணிகம் செய்பவன் நாய்கன் என்றும் அதே பெரும் வணிகம் செய்பவன் மாநாய்கன் என்று அழைப்பது வழக்கம்.
உள்நாட்டில் வணிகம் செய்பவன் சாந்தன் என அழைக்கப்படுவான் .
பொதுவில் செட்டியார் எனப்படுவார்கள் இது எட்டி எனும் பட்டத்தில் இருந்து செட்டி என மருவியதாகும்.
50க்கும் மேற்பட்ட கலங்கள்(கப்பல்கள்) உடையவன் நாய்கன். அதே 100க்கும் மேற்பட்ட கலங்கள் உடையவன் மாநாய்கன்.

⚫தெப்பம் பரிசல் புனை ஓடம் படகு நாவாய் பஃறி என 23 வகை கலங்கள் உள்ளன
•பஃறி என்பது ஒரு பாய் மரமுள்ள கலம் இதில் கரையோரம் மட்டுமே பயணம் செய்யலாம்.
•நாவாய் என்பது நான்கும் அதற்கு மேற்பட்ட பாய் மரமுள்ள கலம் இதில் நடுக்கடலில் பயணம் மேற்கொள்ளலாம்.

மற்றும் கப்பல்கள் எப்படி கட்டப்படுகின்றன? எப்படி மீன்களை பார்த்து திசைகளை கண்டனர்? எப்படி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்? எந்த எந்த நாட்டினரிடையே தமிழர் வணிகம் செய்தனர்? கடாரம் எப்படி இருக்கும்? சீனம் எப்படி இருக்கும்? என பல அறிய தகவல்களை நமக்களிக்கிறது இந்த புத்தகம்.

- Kailash PL

என் இனிய இயந்திரா


சுஜாதா வின் ஆக சிறந்த  படைப்புகளில் ஒன்று.

1985ல் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை இது.

இயக்குனர் ஷங்கர் எந்நிரன் படம் எடுக்க அடிப்படையாக இருந்த கதை.

கதை சுருக்கம் :

கி.பி 2022 இல் இந்தியா ஜீவா எனும் சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் உள்ளது. தேசத்தில் எங்கும்  லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கையும் கிடையாது . அனைவருக்கும் ஒரு நம்பர் ஒதுக்கபட்டுயிருக்கும் வெளியில் பெயருக்கு பதிலாக நம்பரை பயன் படுத்தவேண்டும்.

இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான்.  ஜீவாவிடமிருந்து இந்த நாட்டை மீட்க புறப்படும் ரவி, மனோ எனும் இரு புரட்சிக்காரர்களுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைந்து கொள்ளும் நிலா நிலாவுக்கு நண்பனாக மாறும் ரவியின் இயந்திர நாய் இவர்களை சுற்றியே கதை நகர்கிறது.

இந்தக் கதையில் முக்கியமான பாத்திரமான ஜீனோ எனும் இயந்திர நாய் மெல்ல மெல்ல தன் அறிவை விருத்தி செய்வதுடன் மனிதர்களைப் போல சிந்திக்கவும் தொடங்குகின்றது. ஆரம்பத்தில் பயம், இரக்கம், பாசம் போன்ற உணர்வுகளை அறியாதிருந்த நாய் மெல்ல மெல்ல அனைத்து மனித இயல்புகளையும் பெறத் தொடங்குகின்றது.

பின்பு சிபியை நிலா கண்டு பிடித்தாலா ஜீவா என்ன ஆனார்
புரட்சி என்ன ஆனது என்று  ஏகப்பட்ட திருப்பங்களுடன் சென்று கதை நிறைவடைகிறது.

(பாகம் இரண்டு தனியாக உள்ளது அதன் பெயர் "மீண்டும் ஜீனோ")
*****************

அப்போதே (1985ல்) சுஜாதா  வீடியோ கால், வீ வீ திரை, ஹோலோ பிம்பம், பறக்கும் தட்டு இன்னும் பல அறிவியல் சாதனங்களை பற்றி யோசித்து கதையில் எழுதியுள்ளார்.
ஜனத்தொகை 125 கோடி என்கிறார்  இது கிட்ட தட்ட நம் தற்போதைய ஜனத்தொகையை குறிக்கிறது.

வருங்கால அறிவியல் பற்றி துள்ளியமாக கணித்துள்ளார்.

 2022 வருவதற்குள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது வாசிக்க வேண்டிய நாவல் இது.

- Kailash PL

Monday, July 15, 2019

மறந்து போன தமிழ்


குறிப்பாக குளிர் காலங்களில் என் அப்பத்தா சொல்லும் வாக்கியம் இது
"வளவுல படுக்காத அப்பச்சி வாட காத்தடிக்கும் அறைக்குள்ள போய் ஒறங்கு"



இந்த வாட காத்துக்கு(வாடை காற்றுக்கு)என்ன அர்த்தமென்று அப்பதெரியாது.
இன்று ஒரு புத்தகத்தின் மூலம் இதன் அர்த்தம் விளங்கியது.

அதாவது
இரவு நேரத்தில்
வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் வாடை. இது குளுமையாக இருக்கும்.

அதேபோல்
மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கச்சான்.

கிழக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் கொண்டல்.

தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் சோழகம்.

இதே மாலை நேரத்தில்
தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் தென்றல் இது மென்மையாக இருக்கும். இதை தான் இளையராஜா " தென்றல் வந்து தீண்டும் போது......" என பாடினாரோ என்னமோ.

வாடை, கச்சான், கொண்டல், சோழகம்,
இந்த வார்த்தைகளெல்லாம் பண்டைய காலங்களில் கடலோடிகளும் தன வணிகர்களும் கப்பலில் செல்லும் போது காற்றை குறிக்க பயன்படுத்திய தமிழ்  வார்த்தைகள் ஆகும்.


- Kailash PL

Sunday, July 14, 2019

சம்போ... சம்போ... சம்போ மகாதேவா...

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து  இரவு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சம்போ காட்சி.






ஒவ்வொரு நாளும் இரண்டு முறை ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு  செல்கிறது.


" பஞ்சாப் மெயில் தவறினாலும் நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை " என்பது காசி பழமொழி.

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் 

காசி விஸ்வநாதர் 

சம்போ என்றால் என்ன?

 சம்போ என்பது சமஸ்கிருத சொல் இதன் அர்த்தம் சிவபெருமானைக் குறிக்கும்.

காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது.
அவை உஷத்கால பூஜை, உச்சிகால பூஜை, அர்த்தசாம பூஜை.
அதற்கான அத்தனை பூஜை பொருட்கள், அபிஷேக பொருட்கள், அலங்கார பொருட்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு முறை எடுத்து செல்லப்படுகிறது. இது வரை ஒரு நாள் கூட தவறியதில்லை. எமர்ஜென்சி காலத்தில் கூட தவறியதில்லை.

காலை 10.30க்கும் இரவு 9.30க்கும் சத்திரத்தில் இருந்து முறைப்படி எடுத்து செல்லப்படுகிறது. குளிர் காலங்களில் காலை மாலை நேரங்கள் (30min) மாறும்.


அதிகாலை உஷத்காலப் பூஜைக்கு தேவையான பொருட்கள் இரவே காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

உச்சிகாலப் பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்:
வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுபத்தி, சூடம், அத்தர், பழுப்பு சர்க்கரை, திருநீறு, சந்தனம், வில்வம், அறுகம்புல், பூமாலை, பால், தயிர், பஞ்சாமிர்தம், பிரயாகை தீர்த்தம், மங்கள அட்சதை கொண்டு செல்லப்படுகிறது.

சம்போவுக்கு தயாராக இருக்கும் பொருட்கள்.

சம்போவுக்காக சந்தனம் அரைக்கும் காட்சி.

அர்த்தசாம பூஜைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள்
 மேற்கண்ட பொருட்களுடன் சவ்வாது, பட்டு, ஆபரணம், பால் அண்டா, பூக்கூடை, ஆரத்தி பொருட்கள் (வெள்ளி சாமான்கள்) அனைத்தும்  கொண்டு செல்லப்படுகிறது .

சம்போ  வீடியோ காட்சிகள்
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து சம்போ செல்லும் காட்சி.




- Kailash PL



Saturday, July 13, 2019

காசி வரலாற்றுப் பார்வை

காசி


காசி நகரம் இராமாயண, மஹாபாரத காலத்திற்கு முன்பிருந்தே மிகவும் புகழ் பெற்றிருந்த நகரம். ‘ஆனந்த வனம்’ என்ற பெயரும் இப்புராதன நகருக்கு உண்டு சிவன் மிகவும் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் என்பதால் இப்பெயர். ‘அவிமுக்தம்’என்ற பெயரும் உண்டு நிச்சயமாக முக்தியைத் தரும்  ஸ்தலம் இது.
வாராண், அஸ்ஸி என்னும் இரு நதிகளும் இங்கு வந்து கங்கையுடன் கலப்பதால் ‘வாரணாசி’என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
இது சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிலிங்கங்களுள் ஒன்றாகும்.


வரலாறு;


காசி விஸ்வநாதர் கோவில் பல முறை மொகலாய அரசர்களால் இடிக்கப்பட்டு பின்பு இந்து அரசர்களால் பல முறை கட்டப்பட்டுள்ளது. கி.பி 1669ல் அக்பரின் கொள்ளு பேரன் அவுரங்கசீப்பால் விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது மற்றும் இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் 'ஜிஸியா' என்ற வரி விதித்தார். அவுரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
 தற்போது உள்ள விஸ்வநாதர் கோவில் கி.பி 1777ம் ஆண்டு இந்தூர் ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி தற்போதும் இருக்கிறது. மசூதி இருக்கும் இடம் தற்போது உள்ள விஸ்வநாதர் கோவிலுக்கு நேர் பின்புறம் உள்ளது. இங்கு தான் ஆதி விஸ்வநாதர் சன்னதி இருந்ததாகக் கூறப்படுகிறது இதற்கு ஆதாரமாக ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நந்தி ஒன்று மசூதியை பார்த்து உள்ளது. விஸ்வநாதர் கோவிலை சேர்ந்த  சிருங்கர் மண்டப சுவற்றில் மேல் மசூதி கட்டப்பட்டிருப்பது தற்போதும் கண்கூடாக  தெரிகிறது.


காசி விஸ்வநாதர் கோவில்:



தசாஸ்வேமேத் படித்துறையில் இருந்து   ஒரு குறுகிய தெரு  காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்கிறது. கோவிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது.
கி.பி 1813 முதல் காசி விஸ்வநாதருக்கு நாள் தோறும் மூன்று முறை பூஜை நடக்கிறது இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் அன்று முதல் இன்று வரை நகரத்தாரால் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் இருந்து நாள் தோறும் அனுப்பப்படுகிறது இது சம்போ எனப்படுகிறது.




கி.பி 1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து தங்கக் கோபுரத்தை அமைத்தார். கி.பி 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர் கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது அதற்கான கவசம் அண்மையில் நகரத்தாரால் அமைக்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள அத்தனை கதவுகளும் நகரத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது "ஓம் நமச்சிவாய" எனவும் 'ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம்' எனவும் தமிழில் எழுதி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.


தாயார் சன்னதி:


விஸ்வநாதர் கோவிலுக்கு உள்ளேயே அன்னபூரணிக்கு தனி சன்னதி உள்ளது இதற்கான வெள்ளி கதவுகள் நகரத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் அன்னபூரணியும்  விசாலாட்சியும் ஒன்றாகவே மக்களால் கருதப்பட்டு வந்தனர் பின்னர் காசி விசாலாட்சிக்கு தனி கோவில் நகரத்தாரால் கட்டப்பட்டது.

கங்கை ஆர்த்தி;


கங்கை ஆற்றின் கரையில்(தசாஸ்வேமேத் படித்துறையில்) தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர்.

கும்பாபிஷேகம்

239 ஆண்டுகளுக்குப் பின்னர் நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு குடமுழுக்கு சூலை 5 2018இல் நடைபெற்றது.

-Kailash PL 

( 31.12.2018 அன்று எழுதப்பட்டது)

சிலைத் திருடன்

சிலைத் திருடன்

"THE IDOL THIEF"எனும் ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம். 


நூல் ஆசிரியர் எஸ்.விஜய் குமார் 
இவர் விருத்தாசலத்தில் பிறந்தவர். சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார்.  2007 முதல் www.poetryinstone.in எனும் இணையத்தில் இந்திய சிலைகளை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார்.  பல்வேறு சிலைத் திருடர்கள் கைதுக்கும் சிலைகள் மீட்புக்கும் இவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.   

சிலைத் திருடன் :

இது பத்தோடு பதினொன்றாக படிக்க வேண்டிய நூல் அல்ல தமிழர்கள் அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.

நம்மில் எத்தனை பேருக்கு சுத்தமல்லி, ஸ்ரீ புரந்தான்,பழவுர், காமராசவல்லி போன்ற ஊர்களில் உள்ள கோவில்களை தெரியும்? முதலில் இந்த ஊர்கள் எங்கே இருக்குனு நமக்கு தெரியுமா? அப்புறம் எப்படி கோவில்களை தெரியும்!!!

இந்தியாவிலேயே அதிகமான சிலை திருட்டு நடப்பது நம் தமிழகத்தில் தான். அதுவும் சோழர்கால வெண்கலச் சிலைகளுக்கு உலகம் முழுவதும் கிராக்கி அதிகம்.

மேலே குறிப்பிட்ட ஊர்களை போல்  குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் தான் அதிக அளவில் திருட்டு நடக்கிறது.

இந்தியாவில் 1972ல் இயற்றப்பட்ட சட்ட படி,
1972க்கு பின் எந்த ஒரு நூறு வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த சிலைகளையும் கலைபொருட்களையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. அப்படி 1972க்கு பின் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் சென்றிருந்தால் அவைகளை எந்தவொரு இழப்பீடும் இல்லாமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

ஒருபுறம் இப்படியிருக்க..

சிலைகள் எப்படி திருடப்படுகிறது?
யார் திருடுவது?
எப்படி கடத்தபடுகிறது?
அது எப்படி விற்கப்படுகிறது?

சிலைகளை எப்படி மீட்டனர்?
சட்டம் சொல்வது என்ன?
திருடியவர்கள் கைது செய்யப்பட்டார்களா?
போன்ற கேள்விகளுக்கு இந்த நூல் விளக்கமளிக்கிறது.

உலகில் மிக பெரிய சிலை திருடர்களின் ஒருவனான சுபாஷ் கபூர் எப்படி சிலை திருட ஆரம்பித்தான் முதல் எப்படி அகப்பட்டான் என்பது வரை அவனை பற்றியும் சிலை திருட்டை பற்றியும் பாமரனுக்கும் புரியும் படி எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் வியாபாரி சுபாஷ் கபூரிலிருந்து காரைக்குடியிலிருக்கும் வியாபாரி தினகரன் வரை எப்படி பிசினஸ் லிங்க் இருக்கும் என்பதை மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறார்.

1972லிருந்து 2001வரை 17 சிலைகள் தான் வெளிநாடுகளிருந்து மீட்கபட்டுள்ளது. 2001லிருந்து 2013 வரை எதுவுமே மீட்கப்படவில்லை. ஆனால் வருடத்திற்கு சுமார் ஆயிரம் சிலைகள் காணாமல்போகின்றன அப்படியானால் ஒரு நாளைக்கு மூன்று சிலைகள் காணாமல்போகின்றன. 2013லிருந்து 2018வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது இதில் பெரும் பங்கு இந்த சிலைத் திருடன் நூல் ஆசிரியர்  எஸ்.விஜய்குமாரையே சேரும்.

அதுவும் வரலாற்று திருப்பமாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது.

●கடந்த 2014 செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி இந்தியா வருகையில் புது தில்லியில் இந்திய பிரதமர் மோதியிடம் தமிழகத்தில் திருடுபோன இரண்டு சிலைகளை ஒப்படைத்தார் அதில் ஒன்று அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தன் எனும் ஊரில் கடந்த 2006ல் திருடப்பட்ட நடராஜர் சிலை (வெண்கலச் சிலை). மற்றொன்று விருத்தாசலம் அர்த்தநாதீஸ்வரர் சிலை (கற் சிலை).

●கடந்த 2016 ஜூன் மாதம் பிரதமர் மோதி அமெரிக்க பயணம் சென்றபோது அமெரிக்கா 8 சிலைகளை முதற் கட்டமாக பிரதமர் மோதியிடம் கொடுத்தது.
பின்னர் இந்த சிலைகள் அதைத்தும் தமிழகம் வந்து சேர்ந்தது.

சில புத்தகம் புள்ளிவிவரங்களுடன் இருக்கும் ஆனால் சுவாரசியமாக இருக்காது. சில புத்தகம் சுவாரசியமாக இருக்கும் ஆனால் புள்ளிவிவரங்கள் இருக்காது. இந்த புத்தகத்தில் இரண்டுக்குமே பஞ்சம் கிடையாது மிக அருமையான புத்தகம்.

இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து பேரிடமாவது இதை பற்றி பேசவேண்டும் அப்போதுதான் சிலை திருட்டு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும்.

-Kailash PL

சிவகெங்கைச் சீமை


(05.11.2018 அன்று எழுதப்பட்டது)

நேற்று தான் மருது சகோதரர்களின் வரலாற்றுப் படமான சிவகெங்கைச் சீமை படம் பார்த்தேன். சிவகங்கை மண்ணை சேர்ந்த அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. படம் வெளிவந்து 59 வருடங்களுக்கு பிறகு இப்போ ஒரு ரிவீவ் (review).

கண்ணதாசனே திரைக்கதை,வசனம், பாடல் வரிகள் எழுதி தயாரித்த சிவகெங்கைச் சீமை படம் 1959ல் வெளியாகியுள்ளது. கே. சங்கர் இயக்கியுள்ளார். பிளாக் அன்ட் ஒய்ட் படம் தான்.இது வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் ஒரு முன்மாதிரி படம்.

சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, டம்மி தங்க வைர நகைகள், அந்தபுரம், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள் என்ற பிம்பமே எப்போதுமிருக்கிறது. ஏன் இக்காலத்தில் வெளியான பாகுபலி படமே அப்படி தானே?

அந்த வகையில் சிவகங்கை சீமை முன்னோடியான படம். இதில் தான் முதன்முறையாக மன்னர்கள் வேஷ்டி அணிந்து மேல்துண்டுடன் இருக்கிறார்கள். பகட்டான ஜிகினா ஆடைகள் கிடையாது. சின்னமருது, பெரியமருது இருவரையும் பற்றிய படம். அது போலவே படத்தில் வரும் பெண்களும் கண்டாங்கி சேலைகள் கட்டி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

அன்றைய சிவகங்கை சீமை என்பது தெக்கூர்,ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள் தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்ததால் அவர் சிவகங்கை சீமையின் வரலாற்றினை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். திரைப்படத்தில் வரைபடம் காட்டப்படுகிறது அதை பார்த்தால் நன்றாகவே புரியும்.

மருது சகோதர்களை பற்றிய பாடல்களையும் கூட கண்ணதாசன் சிறப்பாக தனது படத்தில் எழுதியிருக்கிறார். படத்தில் வரும் வெல்ஷ் துரை ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். துபாஷி தான் அதை மொழிபெயர்த்து சொல்கிறார். கோட்டைகள், வீடு யாவும் அந்த நிலப்பகுதியின் யதார்த்தமான கட்டிடங்களாக உள்ளது. சாப்பிடுவது கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிடுகிறார்கள் மேஜைகள் பயன்படுத்தவில்லை அந்த அளவுக்கு யதார்த்தமாக எடுத்துள்ளார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறை கதைக்கு சற்றும் தொடர்பில்லாமல் திராவிடநாடு பற்றி பாடும் பாடல். இவை தவிர்க்கப் பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க கூடும்.

கதை சுருக்கம்:


கட்டபொம்மனை பிடித்து வெள்யையர்கள் தூக்கிலிட்டதால் அவரது தம்பியான ஊமைத்துரை சிவகங்கை சீமையில் அடைக்கலமாகிறார். பெரிய மருதுவிற்கு தெரியாமல் சின்னமருது ஊமைத்துரைக்கு அடைக்கலம் தருகிறார். அது வெள்ளையர்களுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மருது சகோதர்களிடம் வெள்ளையர்கள் ஊமைத்துரையை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நம்பிவந்தவரை காட்டி கொடுப்பது நட்பல்ல என்று வெள்ளையர்களை மருது சகோதரர்கள் எதிர்க்கிறார்கள்.

வெள்ளையர்களுக்கும் மருது பாண்டியருக்கும் போர் ஆரம்பமானது. 2000 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
இறுதியில் வெல்ஷ் துரை மருது குடும்பத்தினரை சிறை பிடிக்கிறான். மருது சகோதரர்கள் இருவரும் திருப்பத்தூரில் வெல்ஷ் துரையால் தூக்கிலிட படுகிறார்கள். பெரிய மருதுவின் கடைசி ஆசை படி அவரின் தலையை துண்டித்து காளையார் கோவில் முன்பாக வைக்கிறார்கள். மருது குடும்பத்தில் எவரையும் விட்டுவைக்காமல் பழிதீர்த்தது கும்பினி அரசு (வெள்ளையர்கள்).
●●●●●●●●●●●●●

வீரபாண்டிய கட்டபொம்மனும் சிவகங்கை சீமையும் ஒரே நேரத்தில்(1959ல்) தயாரிக்க பட்டிருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கும் சிவகெங்கைச் சீமை படத்திற்கும் இடையே தேவையற்ற மோதல்கள், சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

கண்ணதாசனே இதை பற்றி தனது சுயசரிதையான வனவாசம் நூலில் சொல்கிறார் தான் செய்த ஒரே தவறு இந்த படத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு முன்பாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு இது வெளியாகி இருந்தால் ஊமைத்துரையின் காரணமாக மருது சகோதரர்கள் உயிர்விடும் போது பார்வையாளர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். ஆனால் தன் படம் முன்னாடியே வெளியானது தோல்விக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

வெற்றி தோல்வியை தாண்டி சிவகங்கை சீமை படம் பல்வேறு வரலாற்று பதிவுகளை சொல்கிறது. குறிப்பாக வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற சூழல் மருதுபாண்டியர்களுக்கு எப்படி உருவாகிறது என்பதை படம் அழகாக சித்தரிக்கிறது.


- Kailash PL 

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...