Followers

Monday, October 4, 2021

பாரதியின் கடிதம்


1901ஆம் ஆண்டு பாரதி காசியிலிருந்து தன் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம்.

ஓம்

ஸ்ரீகாசி 
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன் 
சி. சுப்பிரமணிய பாரதி

Source: "பாரதியின் கடிதங்கள்" நூல் - ரா.அ.பத்மநாபன்.

தஞ்சையில் நகரத்தார் கல்வெட்டு:




                        தஞ்சைப் பெரிய கோவில் விநாயகப் பெருமானை வணங்கி நின்றான் ராஜராஜன். இதுபோன்ற சதுர்த்தித்திருநாளாக இருந்திருக்கக் கூடும். விநாயகருக்கு வாழைப்பழ நிவேதனம் நடந்துகொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னனுக்கு ஏதோ தோன்றியது. பிள்ளையாருக்குப் படைக்க நாளொன்றுக்கு எவ்வளவு வாழைப்பழம் தேவை என்று கேட்டான்.

ஒரு நாளுக்கு 150 பழங்கள் என்றார் குருக்கள். அப்படியானால் வருடத்திற்கு (360 நாள்) 54000 பழங்கள் என்று கணக்கிட்டான். உடனே அருகிலுள்ள அதிகாரிகளை அழைத்து தரமான வாழைப்பழங்களின் விலை என்ன என்று கேட்டான். ஒரு காசுக்கு 1200 பழம் என்றனர். ஆக, வருடத்திற்கு 45 காசுகள் செலவாகும்.

அப்படி ஒவ்வொரு வருடமும் 45 காசுகள் செலவு செய்ய முதலீடு எவ்வளவு செய்ய வேண்டும்?  பெரிய கோவில் வங்கி அதிகாரி ஒரு காசுக்கு அரைக்கால் காசு (1/8) வட்டி என்று தெரிவித்தார். அப்படியானால் 360 காசுகள் முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு 45 காசுகள் கிடைக்கும் அல்லவா. ஆகவே தன் பங்குக்கு 360 காசுகளை ராஜராஜன் வழங்கினான். அதை தஞ்சை வணிகர்களுக்கு கடனாக வழங்கவும் உத்தரவிட்டான். ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்படி நாளொன்றுக்கு 150 பழங்கள் விநாயகருக்கு நிவேதனம் செய்வதாக நகரத்தார் ஒப்புக்கொண்டனர். அதைக் கல்வெட்டாக அங்கேயே பொறித்தும் வைத்தான் ராஜராஜப் பெருவேந்தன்.

தகவல்: anchor.fm/krishnan8
Courtesy: Viswanathan Arunachalam

அண்ணல் அரையாடைக்கு வயது நூறு - காரைக்குடியின் தனிச் சிறப்பு.



அண்ணல் காந்தியடிகள் மேலாடையைத் துறந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவாகின்றன. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் காலை மதுரையில் அரையாடை அணிந்த காந்திஜி, முதன் முறையாக செட்டிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இரவு காரைக்குடியில் தங்கினார். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை இக்கட்டுரையில் காண்போம். 

மதுரை வருகை
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், நாடெங்கிலும் ஒத்துழையாமை குறித்து மக்களிடம் பரப்புரை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1921 செப்டம்பர் 21 அன்று பிற்பகல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தார். கதர் மற்றும் சுதேசி இயக்கம் மக்களிடம் வலுப்பெறவும், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கவும் அவர் மேற்கொண்ட இந்தியச் சுற்றுப் பயணத்தில் ஒரு பகுதியாக இவ்வருகை அமைந்திருந்தது. 

அன்று மாலை காந்திஜி, மதுரையில் வயல்களில் வேலை செய்யும் ஏழை விவசாயிகளையும் ஆடைகளை நெய்யும் ஏழை நெசவாளிகளையும் பார்த்தார். உணவும் உடையும் தருபவர்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால் அவர்கள் உடுத்துவதற்குப் போதிய உடை இல்லை. கோவணம் அணிந்து வேலை செய்யும் அவர்களின் வறுமையை நினைத்து வருந்தினார். 

அன்று இரவு மதுரையில் தனது ஆதரவாளரும் குஜராத் தொழிலதிபருமான ராம்ஜி கல்யாண்ஜியின் விருந்தினராக, மேலமாசி வீதியில் அவருக்குச் சொந்தமான இல்லத்தில் மாடி அறையில் தங்கினார். மறுநாள் செட்டிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவு முழுவதும் அன்று பகலில் தாம் கண்ட மக்களையே நினைத்துக் கொண்டிருந்தார். 

அரையாடை பூண்டார்
அடுத்த நாள், செப்டம்பர் 22ஆம் தேதி, அதிகாலை மதுரையில் இருந்து செட்டிநாட்டிற்கு புறப்படும்போது மகாத்மா மேற்கொண்ட முக்கியத்துவமிக்க ஆடை மாற்றம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டையில்லாமல் அரையாடை புனைந்து வெளியில் அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது அன்று தான். 

இளமையில் காந்திக்கு எல்லோரையும் போல் ஆடம்பர உடை உடுப்பதில் ஆர்வம் இருந்தது. இங்கிலாந்திலிருந்தபோது மேற்க்கத்திய உடைகளை அணிந்தார். இதற்காகப் பெரும் பணமும் செலவிட்டார். ஆனால் காலப்போக்கில் அவர் உடையில் மாறுதல் ஏற்பட்டது. ஆடம்பர உடைகளை விட்டொழித்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அங்குள்ள ஏழை இந்தியக் கூலிகளைப் போலவே உடை உடுத்தினார். இந்தியா திரும்பிய பின் கத்தியவார் நாட்டு மக்களைப் போல கதராலான சட்டை, நீளமான தலைப்பாகை, வேட்டி உடுத்தினார். 1921ஆம் ஆண்டு மதுரையில் செப்டெம்பர் 22ஆம் நாள் அரையாடைக்கு மாறினார், அதாவது ஒரு துண்டும், இடையில் முழங்காலளவு ஒரு வேட்டியும் உடுத்தினார். அரையாடைக்கு மாறிய பின் மதுரையில் காந்தியை தனியாக ஒரு புகைப்படம் எடுத்தனர். 

முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக் கொள்வதை ஒரு தற்காலிகமான முடிவாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் பின்னர் அதுவே நிலைத்து விட்டது. அவர் மறையும் வரை இது மாறவே இல்லை. இவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவை காந்திஜி மதுரையம்பதியில் வந்து மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே கூட முன்கூட்டி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது என்று திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் உள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம் படிப்படியாக நாளொரு வண்ணமாக, வளர்ந்து மதுரையம்பதியில் முழுமை அடைந்திருக்கிறது. 

ஒரு வியப்பு என்னவென்றால் இந்தப் புரட்சிகரமான செயலை ஒரு செய்தியாக அந்தக் காலத்துப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. 

அரை ஆடை புனைந்த பின் காலை 7மணிக்கு சௌராஷ்டிரீயர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்திலிருந்து நேராக காந்திஜியும் அவர் குழுவினரும் காலை 9மணிக்கு செட்டிநாட்டிற்கு புறப்பட்டனர். 


செட்டிநாடு நோக்கி
செட்டிநாடு நல்ல செல்வச் செழிப்புடன் இருந்த காலம் அது. காந்திஜியின் வருகையை முன்னிட்டு செட்டிநாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கு சில இடங்களில் காந்திஜியின் காரைச் சில விநாடிகள் நிறுத்தி அவர் மீது மலர்களைச் சொரிந்து அதன் மூலம் தங்கள் அன்பையும் சொரிந்து வழி அனுப்பி வைத்தனர் மக்கள். செட்டி நாடே எழுச்சி பெற்றதன் அறிகுறி இவையெல்லாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். 

கானாடுகாத்தான்
செட்டிநாட்டில் காந்தி காலடி பட்ட முதல் ஊர் பலவான்குடி. பலவான்குடியில் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, நல்ல நடு மதிய நேரத்தில் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார். அங்கு உணவு அருந்தி விட்டு, ஓர் அழகான பந்தலின் கீழ் ஐயாயிரம் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்ததைக் கண்டு ஆனந்தத்துடன் உரையாற்றினார். பல சங்கங்களின் சார்பாக ஏராளமாக வரவேற்புக்களும் பணமுடிப்புக்களும் வழங்கப் பெற்றன. "வெளிநாட்டுச் சாமான்களையெல்லாம் விலக்க வேண்டும்" என்று அங்கு அறிவுரை கூறிவிட்டு, பள்ளத்தூர், வேலங்குடி வழியாகக் கோட்டையூருக்குப் சென்றார். அங்கும், ஒரு விசாலமான பந்தலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

காரைக்குடி
இவைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, காரைக்குடிக்கு காந்திஜி வந்து சேர்ந்தபோது இரவு 7 மணி, அந்நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தும் தலைவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நிலக்கிழார்கள் ஆகியோர் அவருக்கு வரவேற்பளிப்பதற்காக அங்கு வந்திருந்தனர்.

புதுக்கோட்டையே காரைக்குடியில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களின் சார்பாக அண்ணலிடம் வரவேற்புரைகளும் பணமுடிப்புகளும் அளிக்கப்பெற்றன. 

காரைக்குடிக்கு காந்திஜி வந்திருந்தபோது திருக்குறளைப் பற்றிய பேச்சு இடையே வந்தது, அப்போது காந்திஜி, "திருக்குறளைப் பற்றி எனக்குத் தெரியும். திருவள்ளுவர் மிகப் பெரிய ஆசிரியர்" என்று கூறியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

காரைக்குடியில் காந்திஜி வரவேற்பு ஏற்பாடுகளில் பெரும் பங்கு கொண்டவர் காந்தி மெய்யப்பச் செட்டியார். இவர் காந்திஜி மீது மிகுந்த பக்தி கொண்டவராதலால், இவரை காந்தி மெய்யப்பர் என்று எல்லோரும் அழைத்தார்கள். 

காரைக்குடியைச் சேர்ந்த பெண்கள் பலர் அண்ணலைச் சந்தித்து வரவேற்புரையும் பணமுடிப்பும் அளித்தார்கள். இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவரால் மேடைக்குச் செல்ல முடியவில்லை. ஆகையால்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அப்பெருங்கூட்டத்தில் ஒரு ஓரத்தில் தம் காரில் இருந்து கொண்டே பேசினார். இந்து மதாபிமான சங்கம் ஒரு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தது. காரைக்குடியைச் சேர்ந்த எட்டு அமைப்புக்களின் சார்பாகப் பண முடிப்புக்களும் எட்டு வரவேற்புரைகளும் அளிக்கப்பெற்றன. பின்னர் இரவு 8மணிக்கு காந்திஜி, தேவகோட்டைக்கு புறப்பட்டார். 

தேவகோட்டை
தேவகோட்டை செல்லும் வழியில் அமராவதிபுதூரில் சில நிமிடங்கள் காரை நிறுத்தி வரவேற்புரையைப் பெற்றுக் கொண்டு சென்றார். இன்று இரவு எ‌வ்வளவு நேரமானாலும் காந்திஜியை கண்டுவிட வேண்டும் என பலர் தேவகோட்டையில் காத்திருந்தனர். தேவகோட்டை சென்றவுடன் நேரடியாகப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  தனவைசிய சபையினர் சார்பாகவும் சுவாமி விவேகானந்தர் சங்கத்தின் சார்பாகவும் வரவேற்புரைகள் அளிக்கப்பெற்றன. இதில் ஒரு வரவேற்புரை தங்கத் தட்டிலேயே பொரிக்கப் பெற்றிருந்தது.  மேலும் காந்திஜியிடம் ஏராளமான பண முடிப்புகள் அளிக்கப்பட்டது. 

பொது கூட்டத்தில் பேசிய காந்திஜி, "தேவகோட்டையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குதிரை இருப்பது போல, ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இராட்டை இருக்க வேண்டும் மற்றும் என்னைப்போன்று நீங்களும் எளிய கதர் ஆடைகள் அணிந்தால், இந்தியாவில் மட்டுமல்லாமல் இரங்கூனிலும் மற்ற இடங்களிலும் உங்களுடைய தொழில் வெகு சிறப்பாக நடைபெறும். ஆந்திராவில் உள்ளவர்களைப் போன்றே இங்குள்ள ஆண்களும். கல்வைத்த மோதிரங்களும் கடுக்கண்களும் அணிவதில் ஆசையுள்ளவர்களாய் இருப்பதைக் காணுகிறேன், அவைகளைத் சுதந்திர போராட்ட நிதிக்கு கொடுத்து விட்டு நீங்கள் எளிமையாக வாழ்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று பேசினார். 

இரவு காரைக்குடியில் உறக்கம்
நள்ளிரவு மீண்டும் காரைக்குடி திரும்பினார். முதன் முதலில் அரையாடை உடுத்திய பின் அண்ணல் காந்தி உறங்கிய ஊர் என்பதால் காரைக்குடி சிறப்புற்றது.

அன்பன்
பழ.கைலாஷ்
22/09/2021

Thursday, September 16, 2021

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்


    பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்

மிழகம் எத்தனையோ அறிஞர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும் ஈன்றெடுத்திருக்கிறது. இந்த வரிசையிலே முதன்மையாக வைத்து எண்ணத்தக்கவர்களுள் ஒருவர் "மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்". 

இப்பெருந்தகையாளரை நாடு நன்கறியும். ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச் சிறப்பு இவருக்கு மட்டுமே உரியது. 

"இவர் பட்டம் பெறப் பிறந்தவரல்லர்; பட்டம் வழங்கப் பிறந்தவர்" என்பார் சோமலெ. 

"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் 'பண்டிதமணி' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்று கூறி மு.கதிரேசச் செட்டியாருக்கு "பண்டிதமணி" என்னும் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர். 

தமிழகத்தில் பொதுவாக "பண்டிதமணி" என்னும் பெயர் இவரையே குறிக்கும்.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்!" என உலக ஒருமைப்பாட்டைப் பாடிய புலவர் பெருந்தகை கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றை நாட்டின் தலைநகராம் மகிபாலன்பட்டியில் கி.பி.1881ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் முத்துக்கருப்பன் செட்டியார் - சிகப்பி ஆச்சியின் மகிமைமிகு பாலனாய் உதித்தார் கதிரேசச் செட்டியார். இவரது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார், அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. 

அக்காலத்தில் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதிலேதான் நாட்டுக்கோட்டை நகரத்தார் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, பட்டப்படிப்பில் நாட்டமில்லை. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது. 

இதைப் பற்றி பண்டிதமணி, "யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன!' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது" என்கிறார். 

இதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருக்க, தந்தை இறந்த செய்தி கேட்டு தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். குடும்பப் பொறுப்பை ஏற்கிறார். ஆனால் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மென்மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார். 

ஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். 

தொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணி. சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரஙகளைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான "சொக்கலிங்க ஐயா"வை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார். 

இதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார். 

பண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார். 

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ.பழ.சா.பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை' நிறுவப்பட்டது. 

இவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினர். 

சொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு செய்தல் எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். 

வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி இவர். மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கௌடிலீயம் என்னும் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருள் நூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 

மேலு‌ம் இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். 

வித்துவான் வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் தொகுத்து வைக்கப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் திருக்கோயில் திருப்பணிகள் பட்டியல் 1953ஆம் ஆண்டு மேயர் ஆர்.இராமநாதன் செட்டியாரின் உதவியால் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியாரால் சீரிய முறையில் திருத்தி விளக்கி "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 

திருவாசகம், திருச்சதகம், நீத்தல்விண்ணப்பம், திருவெம்பாவைப் பகுதிகட்கு இவர் எழுதிய திருப்பு 'கதிர்மணி விளக்கம்' உரை நூல்கள் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் இவரின் கொடையாகும். 

சைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட பண்டிதமணி, பலவான்குடியில் மணிவாசகச் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். 

பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு "மகாமகோபாத்தியாய" என்ற பட்டத்தை வழங்கியது. உ.வே.சாமிநாதையருக்கு பிறகு இப்பட்டத்தை பெற்றவர் இவரே. 

மேலும் சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு பட்டங்களை தமிழுலகம் அவருக்கு அளித்து சிறப்பித்தது. 

தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்ட பண்டிதமணி கி.பி 1953ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் அமரரானார். 

மகிபாலன்பட்டியில் நினைவு மண்டபம் அமைத்தும், அவரின் நூல்களை நாட்டுடைமையாக்கியும் தமிழக அரசு அவருக்கு சிறப்புசெய்துள்ளது. 


அன்பன்
பழ.கைலாஷ் 


[உதவிய நூல் "பண்டிதமணி" - சோமலெ, இன்பநிலையம்]

Sunday, August 8, 2021

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை.

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' மாநாடு நடந்தது. அதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கி 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அன்று இரவு காந்தி, பட்டேல், நேரு மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்திய தேசமே கொந்தளித்தது. இதற்கு பிறகே விடுதலை போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியதால் இது 'ஆகஸ்ட் புரட்சி' என்றும் அழைக்கப்பட்டது.

எங்கு நோக்கினும் கடையடைப்பு, ஊர்வலம், கண்டனக் கூட்டம்! "வெள்ளையனே வெளியேறு"  என்ற முழக்கம் இமயம் முதல் குமரி வரை எதிரொலித்தது!

தமிழக மக்களும் இந்த போராட்டத்தில் எந்த தயக்கமும் இன்றி கலந்துகொண்டனர். வரலாற்று புகழ்மிக்க இந்த ஆகஸ்ட் புரட்சியில் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை பகுதி மக்களும் வீரம் கொண்டு முனைந்து நின்றனர். தேச பக்தியின் உறைவிடமாக திகழ்ந்தது தேவகோட்டை.

தேவகோட்டை மற்றும் காரைக்குடி அடங்கிய செட்டிநாட்டு பகுதியில் தேசபக்தர்களான 'தமிழ் கடல்'இராய.சொ., 'சீர்திருத்த செம்மல்' சொ.முருகப்பா., 'கம்பனடிப்பொடி' சா.கணேசன்., காந்தி மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.அருணாசலம்., சின்ன அண்ணாமலை., அமராவதிபுதூர் பிச்சப்பா சுப்பிரமணியம்., பாகனேரி ஆர்.வி.சாமிநாதன்., வேலாயுதம் செட்டியார்., 'இராட்டிண புலவர்'என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்ட ஆசிரியர் முருகன் ஆகியோர் மக்கள் மத்தியில் தேசபக்தியை உரமிட்டு வளர்த்து வந்தனர்.



அன்று ஆகஸ்ட் 9, காலை தேவகோட்டையில் தேசபக்தர்களால் உருவாக்கப்பட்ட 'சரஸ்வதி வாசக சாலை'யில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை நாளிதழ்களில் படித்த இளைஞர்கள் கொந்தளித்தெழுந்தனர். தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவரான எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்காரும் செயலாளரான கே.ஆர்.எஸ்.முத்துவும் கலந்தாலோசித்து சில அவசர முடிவுகளை எடுத்து உடனடியாக செயலில் இறங்கினர். 

சின்ன அண்ணாமலை, பி.ஆர்.இராமசாமி, ஆர்ச் அண்ணாமலை, காந்தி நாராயணன் செட்டியார், டைரி அருணாசலம், தொண்டர் முத்தையா ஆகியோரோடு இளைஞர்கள் பலர் வீதியில் இறங்கி காந்தி, பட்டேல், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்திகளை முழங்கினர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கேட்ட மக்கள் வருந்தினர், கோபம் கொண்டனர். பிரிட்டிஷ் அரசை கண்டித்து சின்ன அண்ணாமலை தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஐம்பது பேருடன் தொடங்கிய ஊர்வலம் சில தெருக்களை கடக்கும் முன் ஐநூறு பேராக உருவெடுத்தது.

மாலை நான்கு மணிக்கு தேவகோட்டை ஆர்ச் பகுதியில் தொடங்கிய மற்றோரு கண்டன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணிக்கு ஜவஹர் மைதானத்தை அடைந்தது ஊர்வலம். அங்கு நடந்த கூட்டத்திற்கு அழ.சுப.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தேவகோட்டையை சேர்ந்தவர்களுள் இவரே நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.

ஆகஸ்ட் ஒன்பதை தொடர்ந்து அடுத்த சில தினங்கள் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக பொது கூட்டங்கள் நடத்தப்பட்டது. அக்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக இருந்த சின்ன அண்ணாமலை மற்றும் கே.ஆர்.எஸ்.முத்து அனல்பறக்க உரையாற்றினர். கே.ஆர்.எஸ்.முத்து ஒரு கால் ஊனமுற்றவர், ஆனால் தம் நாவாற்றலால் மக்கள் மண ஊனத்தை அகற்றி விடுதலை வேட்கையை ஊன்ற செய்தவர்.

அதிர்ந்து போன பிரிட்டிஷ் அரசு சின்ன அண்ணாமலை., எஸ்.இராமநாதன்., டி.ஆர்.அருணாச்சலம்., பி.ஆர்.இராமசாமி., கே.ஆர்.எஸ்.முத்து ஆகிய ஐவரையும் கைது செய்ய ஆகஸ்ட் 15ஆம் தேதி 'கைது வாரண்ட்' பிறப்பித்தது. கைது வாரண்ட் பிறப்பித்ததை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐவரும் காரைக்குடியில் ஒரு வீட்டில் தலைமறைவாகினர்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் தலைமறைவாக இருந்த வீட்டை விட்டு கிளம்பி பக்கத்து தெருவில் உள்ள ஐக்கிய இளைஞர் சங்கத்திற்கு சென்று பத்திரிகை படித்து விட்டு வருவதாக சின்ன அண்ணாமலையும் எஸ்.இராமநாதனும் சென்றனர்.

அவர்கள் இருவரையும் மப்டி-யில் இருந்து கவனித்துக் கொண்டுயிருந்த குருசாமி நாயுடு மற்றும் காந்திமதிநாத பிள்ளை ஆகிய காவலர்கள் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் இரண்டு லாரிகளில் பறந்து வந்த போலீஸார் சங்க கட்டிடத்தை சுற்றி வளைத்தனர் சின்ன அண்ணாமலையையும் எஸ்.இராமநாதனையும் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தனர். அன்றிரவே கே.ஆர்.எஸ்.முத்து தலைமையில் நான்கு இளைஞர்கள் தேவகோட்டை சப் கோர்ட் முன் மறியலில் ஈடுபட தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அடுத்த நாள் அதாவது அந்த கொடூர சம்பவம் நடந்தேறிய நாள், ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் அரு.சிற்சபேசன், சித.பெரி.சிதம்பரம், சௌ.சே.இராமநாதன், ஆர்ச் அண்ணாமலை ஆகிய நான்கு இளைஞர்கள் 'சரஸ்வதி வாசக சாலை'யிலிருந்து வீரநடைப்போட்டு, நெற்றியில் வீரத்திலகத்துடன், வந்தே மாதரம்! வந்தே மாதரம்! என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு 'கோர்ட்' நோக்கி நடந்தனர்.

தேவகோட்டை 'ஆர்ச்' அருகே இருந்த 'சப் கோர்ட்' வாசலை அடைந்ததும் "ஆங்கிலேயரின் அநீதியை நிலைநாட்டும் நீதி மன்றங்களை பொதுமக்களும், வழக்கறிஞர்களும் ஊழியர்களும் புறக்கணிக்க வேண்டும்" என்று முழங்கினர்.

சுற்றி கூடி நின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து கோஷம் போட தொடங்கினர். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த குருசாமி நாயுடுவும் காந்திமதிநாத பிள்ளையும் மக்களிடையே மாட்டிக் கொண்டனர். காட்டிக் கொடுத்த இருவரையும் மக்கள் அடித்து நொறுக்கினர். அதிலிருந்து தப்பிச்சென்ற காந்திமதிநாத பிள்ளை கோர்ட் பகுதியிலிருந்து ஒன்றரை மயில் தொலைவிலுள்ள திண்ணஞ் செட்டி ஊருணி தென்கரையில் இருந்த தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சென்று "கோர்ட் முன் பெரிய கலவரம் நடந்து கொண்டு இருப்பதாகவும், குருசாமி நாயுடுவை மக்கள் அடித்து கொன்று விட்டதாகவும்" சொன்னான்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீராச்சாமி ஐயரும் சப் இன்ஸ்பெக்டர் கமருதீனும் மாஜிஸ்திரேட் 'வாக்கர்'-ஐ சந்தித்து நடந்ததை கூறி ஸ்டேஷனில் இருந்த மொத்த பன்னிரெண்டு போலீசாரையும் கூட்டிக் கொண்டு 'ஆர்சு' பகுதிக்கு வந்தனர். உண்மையில் குருசாமி நாயுடு கொல்லப்படவில்லை, போலீஸ்காரர்களை கண்ட மக்கள் மேலும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

தேவகோட்டை தாலுகா மாஜிஸ்திரேட் 'வாக்கர்' என்கிற ஆங்கிலேய கொடூரன், என்ன? ஏது? என்று எதுவும் விசாரிக்காமல் அனைவரையும் சுட உத்தரவிட்டான். அவனின் உத்தரவுப்படி பன்னிரெண்டு போலீசாரும் நிரபராதிகளான மக்களை சுட தொடங்கினர். முதலில் 'வி.தர்மராஜன்' என்பவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார், பலர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இச்சமயத்தில் மேலும் கோபம் கொண்ட தேச பக்தர்கள் புதிதாக ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பளிங்கு மாளிகையான 'தேவகோட்டை சப் கோர்ட்'-ஐ தீயிட்டு எரித்தனர். அரசாங்கம் நடத்திவந்த பேருந்து நிறுவனமான 'சிம்சன் கம்பேனி' பேருந்துகளையும் எரித்தனர்.

குண்டடிப்பட்ட ஒருவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுக் கொண்டிருந்தார் இதை பார்த்த பதினெட்டு வயதுகூட நிரம்பாத இளைஞன் கிருஷ்ணன் தண்ணீர் எடுக்க சென்றான்.

தண்ணீர் எடுக்க சென்ற அந்த இளைஞனையும் சுட்டு வீழ்த்தினர் கொடூர குணம் படைத்த போலீசார்.

துப்பாக்கி குண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது, நிலைமை மோசமானதை கவனித்த போலீசின் கையாளான மோட்டர் மெக்கானிக் ஒருவன் குறுக்கு பாதையில் காரைக்குடிக்கு ஓடிச் சென்று காரைக்குடி நகர் காவல் நிலையத்தில் நடந்ததை தெரிவித்தான். உடனே காரைக்குடி போலீசார், அங்கு தயாராக இருந்த மலபார் போலீசார் நாற்பது பேரை இரண்டு லாரிகளில் ஏற்றி தேவகோட்டைக்கு அனுப்பிவைத்தனர்.

கலவரமும் துப்பாக்கிச் சூடும் நடந்த 'ஆர்ச்' பகுதி தேவகோட்டையின் நுழைவில் இருந்ததால், ஊரில் நுழைந்ததும் மலபார் போலீசார் கண்மண் தெரியாமல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தினர். திடீரென்று புதிய போலீஸ் படை வந்ததையும் கண்மண் தெரியாமல் சுடுவதையும் கண்ட பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து, சிதறி ஓடத்தொடங்கினர்.

ஆங்கிலேயரின் இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் அந்த இடத்திலேயே பிணமாயினர்! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கீழே சாய்ந்தனர்.

போலீசார் சாலையில் கிடந்த ஐம்பது பிணங்களில் ஆறை மட்டும் தூக்கி தங்கள் பஸ்சின் மேற்பகுதியில் போட்டனர். மேலும் சுமார் ஐம்பது பேரைக் கைது செய்து லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.

தேவகோட்டை நகரம் அன்றிரவு சுடுகாடு போலத் தோன்றியது. ஆர்ச் பகுதியில் எங்கு நோக்கினும் ரத்தமும் பிணங்களும் படுகாயமுற்றோர்களும் கிடந்ததால் போர்க்களம் போல் காட்சியளித்தது.

மலபார் போலீசாரால் சுடப்பட்டு மாண்ட 50 பேரில் உடனடியாக அடையாளம் காணப்பட்டவர்கள்; 1.வி.தருமராஜன், 2.கிருஷ்ணன், 3.மணிவண்ணன், 4.பால்க்கார நடேசன்,  5.சாவல்கட்டு,  6.மணியன்.

மறுநாள், ஆகஸ்ட் 18ஆம் தேதி மேலும் பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை வட்டாரத்தில் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தி போராட்டம் நடத்திய தீவிரவாதிகளாக  டி.ஆர்.அருணாச்சலம், ஆர்ச் அண்ணாமலை, அள.சுப.திருநாவுக்கரசு, முகுந்தராஜ ஐயங்கார், கே.எம்.வல்லத்தரசு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேவகோட்டை நகரில் 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தியது, பொதுக்கூட்டம் நடத்தியது, சப் கோர்ட் முன்னால் மறியல் செய்தது, கலவரம் புரிந்து கோர்ட் நடவடிக்கைகளை தடுத்தது, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோர்ட் கட்டிடத்தையும் அங்கிருந்த கோர்ட் சாமான்களையும் ஆவணங்களையும் எரித்தது, போலீசாரை தாக்கியது ஆட்சிக்கு எதிராக சதி செய்தது முதலிய குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 120 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. 'தேவகோட்டை கலவர வழக்கு' என்று அழைக்கப்பட்ட அதில் 73 பேரு‌க்கு 2 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தேவகோட்டையில் நடந்த இந்த ஆகஸ்ட் புரட்சி அத்தோடு நிற்கவில்லை! திருவாடானை, தொண்டி, திருவேகம்பத்தூர், முப்பையூர் ஆகிய ஊர்களிலும் வெடித்து பரவியது.

இந்த ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டையில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளில் நினைவாக, போராட்டம் நடந்த ஆர்ச் பகுதியில் நாட்டின் விடுதலைக்கு பின் நினைவுத் தூண் நிறுவப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அதற்கு 'தியாகிகள் பூங்கா' என்றும் பூங்கா அமைந்துள்ள சாலைக்கு 'தியாகிகள் சாலை' என்றும் பெயரிடப்பட்டது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூறுவோம். ஜெய் ஹிந்த்! 


அன்பன், 
பழ.கைலாஷ்


Sunday, July 25, 2021

'கா.செ வேதாந்த மடம்'


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ளது இந்த கா.செ வேதாந்த மடம். 'காளையார் கோவில் செல்லப்ப சுவாமிகள் வேதாந்த மடம்' என்பது முழுப்பெயர்.

கோவிலூர் மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ இராமசாமி ஞானதேசிக சுவாமிகளின் சீடரும், தஞ்சை பால்சாமி மடம், மதுரை குட்டைய சுவாமிகள் மடம் ஆகியவற்றின் மடாதிபதியாக இருந்தவருமான 'ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள்' அவர்களை தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள், பாண்டி பதினான்கு தலங்களுள் ஒன்றும், தமது குடும்பத்தினரால் திருப்பணி செய்யப்பெற்று வரும் கோவிலுமான காளையார்கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.

கி.பி.1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் காளையார்கோவில் ஆனைமடு தெப்பக்குளம் சீர்திருத்தப் பெற்று அதன் நடுவே அழகிய நீராழி மண்டபம் ஒன்று புதிதாய் கட்டப்பெற்றது. அது சமயம் தெப்பக்குளத்தின் தென் கரையில், மேலும் சில நாட்டுக்கோட்டை நகரத்தார் மெய்யன்பர்களுடன் இணைந்து மாபெரும் வேதாந்த மடத்தை உருவாக்கினார்கள். இம்மடம் வேதாந்தப்பாடம் கற்பிப்பதற்காகவே நிறுவப்பெற்றதாகும். இவ்வேதாந்த மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள் இருந்து வேதாந்தப்பாடம் கற்பித்து வந்தார்கள். இந்த மடம் அழகிய தோற்றப் பொலிவுடன் அளவில் மிகப்பெரிய மடமாக செட்டிநாட்டு கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.


தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் துறவு பூண்டு ஸ்ரீமத் அருணாசல சுவாமிகள் என்று திருநாமம் பெற்று இம்மடத்திலேயே இருந்து வேதாந்தத்தில் ஆழ்ந்து மாணவர்களுக்கு வேதாந்த பாடங்களை கற்பித்து வந்தார்கள். இவர்கள் 'ஜமீன்தார் சுவாமிகள்' என்றும் அழைக்கப்பெற்றார்கள். பின்னர் இம்மடத்தின் மடாதிபதியாக அருளாட்சி செய்து கி.பி.1938இல் முக்தியடைந்தார்கள். இவர்களுக்கு இம்மடத்தினுள்ளேயே அதிட்டானம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

    ஜமீீீன்தார் சுவாமிகள்

கா.செ. வேதாந்த மடத்தின் மடாதிபதியாக இருந்தவர்கள் பட்டியல்:

●ஸ்ரீமத் செல்லப்ப சுவாமிகள் 

●ஸ்ரீமத் உலகம் பட்டி இலக்குண சுவாமிகள் 

●ஸ்ரீமத் நாட்டரசன் கோட்டை மெய்யப்ப சுவாமிகள் 

●ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் 

●ஸ்ரீமத் ஜமீன்தார் அருணாச்சல சுவாமிகள் 

●ஸ்ரீமத் தேனிப்பட்டி அருணாச்சல சுவாமிகள்

●ஸ்ரீலஸ்ரீ அரு.இராமநாத ஞானதேசிக சுவாமிகள் 
(இவர்கள் கோவிலூர் மடாலயத்தின் பத்தாவது மடாதிபதியாக இருந்தவர்கள், இவர்கள் காலத்தில் 'க.செ. வேதாந்த மடம்' கோவிலூர் மடாலயத்தின் நேரடிப் பார்வையில் இருந்தது)

●ஸ்ரீமத் சிவாநந்த சுவாமிகள் 

●ஸ்ரீமத் நாராயண சுவாமிகள்

நாராயண சுவாமிகள் முக்தியடைந்த பின், 2003முதல் 'கா.செ வேதாந்த மடம்' கோவிலூர் மடாதிபதியின்  நேரடிப் பார்வையில் இருந்துவருகிறது.

அன்பன் 
பழ.கைலாஷ்

Wednesday, May 26, 2021

பாடுவார் பாடல் தொகுப்பு


" வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பிரான்மலையாம்

தெள்ளார் புனல்வைகை தெற்காகும் - ஒள்ளியசீர்

எட்டிக் கடற்கிழக்காம் இஃதன்றோ நாட்டரசன்சேர் 

செட்டிநாட் டெல்லையெனச் செப்பு".

என்ற பாடலின் மூலம் செட்டிநாட்டு எல்லைக்கு வரையறை வகுத்தவர்  'பாடுவார் முத்தப்பர்'. 


பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டிலே திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் 'கீழச்சிவல்பட்டி'யில் கி.பி.1750ஆம் ஆண்டு அழகப்ப செட்டியார் - லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் 'முத்தப்பர்'. இவர் இயல்பாகவே தமிழில் கவிதை பாடும் ஆற்றலுடையவராகவும், பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். 

இவரது வாக்குப் பலித்து நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் பல. அவற்றுள், குன்றக்குடியில் மழைவேண்டி பாட்டுப் பாடி மழைபொழிய செய்ததும், மழை நிற்கப் பாட்டுப் பாடி மழையை நிறுத்த செய்ததும், நெடுமரம் மலையரசி அம்மன் கோவிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலிலும் மழை வேண்டி பாடி மழைபொழிய செய்ததும், "காட்டுக் கருப்பா மழை காட்டு" என்று பாடி மழைபொழிய செய்ததும், துண்டான ஆட்டின் தலையை பாட்டுப்பாடி ஒட்ட வைத்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி வேலுக் கவிராயர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார் முத்துபாலுத் தேவர், செவ்வூர் அழகுப் புலவர், இராங்கியம் முத்து வீரப்பப்பிள்ளை, சிவகங்கை முத்தழகுப்பிள்ளை ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் இவருக்கு 'பாடுவார்' என்று பட்டம் அளித்து அகம் மகிழ்ந்தனர். அன்று முதல் இவர் 'பாடுவார் முத்தப்பர்' என்று எல்லோராலும் அழைக்கப்பெற்றார்.

கோவிலூர் ஆண்டவர் மீதும், துழாவூர் ஆதீனகர்த்தர் மீதும், பாதரக்குடி மடாதிபதி மீதும் குரு வணக்கத் தோத்திரங்கள் பாடியுள்ளார். 

பள்ளத்தூர் மனமகிழ்ந்துகண்ட விநாயகர் மீதும், மேகநோய் தீர்க்க கொங்கரத்தி நடுவாற்று மருதம்பிள்ளையார் மீதும் பதிகம் பாடியுள்ளார். 

நேமம் கோவிலில் உறையும் இறைவன் செயங்கொண்ட சோழீசர் மீது நூறு பாடல்கள் கொண்ட 'செயங்கொண்டார் சதகம்' என்ற நூலைப் பாடியுள்ளார். இந்நூல் நூறு வரலாற்று கதைகளையும் அவைகளுக்குரிய பழமொழிகளையும் பாங்குடன் விளக்குகிறது. மேலும் 'செயங்கொண்டார் வணக்க மாலை'யும் பாடியுள்ளார்.

"காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி

வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு

அன்றைக்கு வந்தஎங்கள் அம்மா! இலக்குமியே! 

என்றைக்கும் நீங்கா திரு!" 

எனத் 'திருமகள் அருள் வேட்டல் மாலை' பாடி வேள்வணிகராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லங்களில் இலக்குமியை நிரந்த வாசம் செய்யவைத்தவர் இவரே!

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை 'திருமுகவிலாசம்', 'நகர வாழ்த்து' ஆகிய நூல்களில் பாடியுள்ளார். மேலும் 'செட்டிமார் வரலாறு' என்றொரு நூல் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது ஆனால் அந்நூல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

இவரை வரவேற்று மகிழ்ந்தவர்களை வாயார வாழ்த்துவதும், வரவேற்க மறந்தவர்களை வசை பாடுவதும் இவர் தமிழின் தனித்தன்மையாக உள்ளது.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாடு முழுவதும் அம்மை நோய் பரவி மக்களை வாட்டி வதைத்தபோது, உச்சினி மாகாளி மீது 108 வரிகள் கொண்ட 'உச்சினி மாகாளியம்மன் கும்மி'ப்பாட்டை பாடி அம்மை நோய் நீங்க செய்துள்ளார். மேகநோய் நீங்க கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் மீது தோத்திரம் பாடியுள்ளார். 

குன்றக்குடி முருகன் மீதும், பழநியாண்டவர் மீதும், புதுக்கோட்டை பிரகதாம்பாள் மீதும், பாகனேரி புல்வநாயகி அம்மன் மீதும், இராங்கியம் அங்காள பரமேஸ்வரி மீதும் பதிகம் பாடியுள்ளார். வைணவ கடவுளான வேங்கடாசலபதி மீதும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

தனது குலதெய்வமான இராங்கியம் கருப்பர் மீது 'திருத்தாண்டகம்', 'குதிரையடி விருத்தம்' மற்றும் பல பாடல்கள் பாடியுள்ளார். 

தமிழ் எனும் தெய்வசத்திபெற்ற வீரிய மொழியால் தான் சீரிய பேரருட்திறம் இருந்தது என்பதைப் பாடுவார் முத்தப்பர் பாடல்கள் காலகாலத்திற்கும் உணர்த்துவன.

இவர் பாடிய 'செயங்கொண்டார் சதகம்' முதன் முதலில் கி.பி.1890 வாக்கில் கீழச்சிவல்பட்டி ஆ.பெ.அரு.பழநியப்ப செட்டியார் மற்றும் அரு.அ.சிமு.சின்னமுத்தப்ப செட்டியார் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கி.பி. 1900 வாக்கில் 'திருமுகவிலாசம்' தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 1954ஆம் ஆண்டு பி.அளகாபுரி இராம.மு.க.மு.நாராயணன் செட்டியாரால் முத்தப்பரின் தனிப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பி.அளகாபுரி இளங்கோவன் பாடுவார் முத்தப்பர் வரலாறு முதலிய சில நூல்களை இயற்றியுள்ளார். பின்னர் நீண்ட கால இடைவெளிகளில் சிலர் முத்தப்பரின் பாடல்களை மறு பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பாடுவார் முத்தப்பரின் பாடல்கள் அனைத்தும் அடங்கிய பதிப்பு ஒன்று இல்லாததால், தமிழ் கூறும் நல்லோர் மத்தியில் இருந்துவந்த ஏக்கத்தை தீர்க்கும் முகமாக இளைய தமிழ்க்கடல் தேவகோட்டை இராமநாதன் அவர்களால் 'வேள்வணிகர் வரலாறு' எனும் நூல் படைக்கப்பட்டுள்ளது. இதில் பாடுவார் முத்தப்பர் பாடிய பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது.


பள்ளிப்பருவம் முதல் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவை பேச்சாலும் வெண்கலக்குரலாலும் கேட்போர் மனதில் இடம்பிடித்து, பல பரிசுகளை பெற்றவர் தேவகோட்டை இராமநாதன். சன் தொலைக்காட்சியின் 'அரட்டை அரங்கம்', 'அசத்தப்போவது யாரு?'., ராஜ் தொலைக்காட்சியின் 'சிரிப்போம் சிந்திப்போம்', 'அகடவிகடன்'., விஜய் தொலைக்காட்சியின் 'கலக்கப்போவது யாரு?', 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நாவாற்றலால் உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று 'அசத்தல் மன்னன்' எனும் பட்டம் பெற்றவர். 

1997 முதல் தற்போது வரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றி உலகப் புகழ்பெற்று, 2018ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 'இளைய தமிழ்க்கடல்' என்ற பட்டம் பெற்றார். மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பங்காற்றியுள்ளார். காசி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாக்களில் வர்ணனையாற்றி வர்ணனை வேந்தராகவும் திகழ்கிறார்.


இவர் கல்லூரி மாணவனாகப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற போது "பாடுவார் முத்தப்பர் நாவன்மைப் பேச்சுப்போட்டி"யில் முதல் பரிசாக வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதுவே பாடுவார் முத்தப்பர் பாடல் தொகுப்பு உருவாகுவதற்கு அடிநாதமாய் அமைந்துள்ளது.

பாடுவார் முத்தப்பர் பாடல்களின் பழைய பதிப்புகள் அத்தனையும் அரிதின் முயன்று திரட்டி, அவர் பாடிய ஆலயங்களுக்கு நேரில் சென்று அவரின் பாடல்களை பாடி, இதுவரை பதிப்பில் வராத பாடல்களையும் தேடித் திரட்டி இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். மேலும் பாடுவார் குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாடல்களையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

தேனூர் வரகவி வே.செ.சொக்கலிங்கனார், முருகனடியார்கள் 78 பேரைத் தொகுத்துச் 'சேய்த்தொண்டர் புராணம்' எனும் நூலை இயற்றியுள்ளார். அதில் ஒருவராக பாடுவார் முத்தப்பரை இணைத்து "முத்தப்பர்க்கு அடியேன்!" என்ற வரிகளால் 'முத்தப்ப நாயனார் புராணம்' பாடியுள்ளார். அதையும் இந்நூலில் இணைத்துள்ளார்.

'வேள்வணிகர் வரலாறு' எனும் இந்நூல் பாடுவார் முத்தப்பர் பாடல்களின் கலைக்களஞ்சியமாக திகழ்கிறது. 

இந்நூல் வெளிவரப் பேருதவி செய்த மேலைச்சிவபுரி 'தொழில்மாமணி' கரு.செல்லராமு செட்டியார் - இராஜாமணி ஆச்சி அவர்களின் 70ஆம் ஆண்டு பீமரத சாந்தி விழாவில் 22.11.2017இல் முதல் பதிப்பு மலர்ந்தது. 

அரும்பாடுபட்டு பாடுவார் முத்தப்பர் பாடல்களை திரட்டி நூலாக வெளியிட்டிருக்கும் தேவகோட்டை இராமநாதன் அவர்களின் பணி காலந்தோறும் பாராட்டத்தக்கது.

வாழிய தமிழ்!
வாழிய பாடுவார் முத்தப்பர் புகழ்!

அன்பன் 
பழ.கைலாஷ்

பாடுவார் முத்தப்பர் கட்டிய கோயில்


18ஆம் நூற்றாண்டில் அருட்கவியாய் வாழ்ந்த 'பாடுவார் முத்தப்பர்' சிறந்த வணிகராகவும் திகழ்ந்து பொருளீட்டி பல அறப்பணிகள் செய்து வந்துள்ளார். இளையாற்றங்குடி அருகேயுள்ள  சேவினிப்பட்டி எனும் ஊரில் மக்களின் தாகம் தீர்க்க குடிதண்ணீர் குளம் ஒன்றை வெட்டி, அதன் மேல்கரையில் கருங்கற்களைக் கொண்டு பிள்ளையார் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். கோவிலினுள் பாடுவார் முத்தப்பருக்கு சிலை உள்ளது. கோவில் இருக்கும் சாலை 'பாடுவார் முத்தப்பர் சாலை' என்றும் குளம் 'செட்டியா(ர்) ஊருணி' என்றும் அழைக்கப்படுகிறது. 

பாடுவார் முத்தப்பர் பாடிய விநாயகர் துதி:

" காட்டுவழி போனாலும் கள்ளர்பய மானாலும் 

கேட்டுவழிக் காலகனார் கிட்டிலும் -  நாட்டமுடன் 

நம்பிக்கை யாக நமக்கு வினாயகனின் 

தும்பிக்கை உண்டே துணை".

புகைப்படங்கள்: சேவினிப்பட்டியில் (சிவகங்கை மாவட்டம்) 'பாடுவார் முத்தப்பர்' கட்டிய பிள்ளையார் கோவில் மற்றும் ஊருணி.

Sunday, May 16, 2021

பெய்யனப் பெய்யும் மழை!


"ல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது ஔவை கூற்று. "நடக்காத ஒன்று நடந்தால் மழைபெய்யும்" என்றும் "அத்திபூத்தால் ஆறு பெருகிவிடும்" என்றும் "புண்ணியவான் பெய்யென்றால் மழை பெய்யும்" என்றும் சொற்றொடர்கள் நம்மிடையே வழங்கப் பெருகின்றன. மழை பற்றிய விஞ்ஞானக் கருத்துக்கள் வேறாக இருப்பினும் மக்களின் நல்லெண்ணத்திற்கும் செயலுக்கும் ஏற்றபடியே மழை பெய்யும் என்பது நம் முன்னோர்கள் கருத்து.

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றி, வரகவியாய் வாழ்ந்து, தனிப்பாடல் இலக்கியத்தில் தனித்ததோர் இடம் பெற்றவர் 'பாடுவார் முத்தப்பர்'.


பாண்டிய நாட்டிலே தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் செட்டிநாட்டில் திருமதுரைச் சிவல்பட்டி என்று புகழப்படும் 'கீழச்சிவல்பட்டி'யில் கி.பி1750ஆம் ஆண்டு தனவணிக குலத்தில் அழகப்ப செட்டியார் - லெட்சுமி ஆச்சியின் மகனாக கருவிலேயே திருஉடையவராகத் தோன்றினார் முத்தப்பர். இயல்பாகவே தமிழ்க்கவிதை பாடும் ஆற்றலுடையவராய் விளங்கினார். கவிபாடும் ஆற்றலோடு, பாடும் வாக்குப் பலிக்கும் இறை அருளுடையவராகவும் திகழ்ந்தார். எனவே இவறை அனைவரும் 'பாடுவார் முத்தப்பர்' என்று அழைத்தனர்.


இவர் தனது சமகாலத்தவர்களான மதிலைப்பட்டி கவிராயர், கோவிலூர் ஆண்டவர் சீர்வளர்சீர் முக்திராமலிங்க ஞானதேசிக சுவாமிகள், பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள், கல்லாப்பேட்டை ஜமீன்தார், செவ்வூர் அழகுப் புலவர் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார்.


பாதரக்குடி மடாதிபதி சேனாபதியடிகள் குன்றக்குடி சண்முகநாதருக்கு ஒரு வெள்ளி மயில் வாகனம் செய்து வைத்தார். நல்லதொரு நாளில் குன்றக்குடியில் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருவிழா அன்று முருகப்பெருமான் புது வெள்ளி மயில் வாகனத்தில் ஏறி பவனி வந்தார். முன்வரிசையில் முத்தப்பரும் சேனாபதியடிகளும் சென்று கொண்டிருந்தனர். நீண்ட நாட்களாக மழையில்லாமல் ஊர் வறட்சியடைந்திருந்த காலம் அது.

சேனாபதியடிகள் கேட்டார் "முத்தப்பா! நீண்ட நெடுங்காலமாக மழையே இல்லாமல் நாடு வறண்டு கிடக்கிறது, நாட்டு மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். நீ தான் உன் பாடலால், இறையருளால் மழை பொழிய செய்ய வேண்டும்".

"நான் பாடுகிறேன் இறையருளால் மழை பொழியும்" என்றார் முத்தப்பர்.

பின்னர் தெற்கு ரத வீதிக்கு சென்றதும் சுவாமியை கீழே இறக்கி வைத்தார்கள்.

"பாடு" என்று சேனாபதியடிகள் கூற முத்தப்பர் பாடினார்;

"அள்ளிநிதி யங்கொடுக்கும் புலன்வயற்சே

          னாபதிஎன் ஐயன் குன்றை

வள்ளிமண வாளனுக்கு வெள்ளிமயில்

          செய்துவைத்த மகிமை பாரீர்!

வெள்ளியறி யாமல்மழை பெய்கிறதே

          என்றமொழி மெய்தான்; வெள்ளிப்

புள்ளிமயி லேறிமுரு கன்பவனி

          வரக்கண்டு பொழிந்த வாறே!"

பாட்டு முடியவில்லை. அதற்குள்ளாக மழை 'சோ'வென்று கொட்டத் தொடங்கியது. நெடு நேரமாகியும் நிற்கவில்லை. மனமகிழ்ந்த சேனாபதியடிகள் "போதும்! முத்தப்பா போதும்! குன்றக்குடி கழனிகள் செழிக்க தேவையான அளவு நீர் நிரம்பிவிட்டது" என்றார்.

மழைபொழிய பாடிய வள்ளல் மழையை நிறுத்தவும் பாடினார்;

"வந்து மழைபொழியும் வானேவெஞ் சூர்தடிந்த

கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்

நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல; மாற்றிவிடு!

கீர்த்திவரும்; நாட்டன்மொழி கேள்."

பாட்டும் நின்றது! மழையும் நின்றது!

குன்றக்குடியில் மழை பொழியவும் நிற்கவும் பாடிய முத்தப்பர் "ஏழை எளியோர்களின் குடி ஈடேறும் படிக்கு" என்ற தன் வாக்குப்படி பலமுறை மழை பொழிய பாட்டு பாடி மழைபொழிய செய்து மக்களின் உழைப்புக்குப் பலன் கிடைக்கச் செய்திருக்கிறார். நெடுமரம் மலையரசி கோயிலிலும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலிலும் மழை வேண்டி முத்தப்பர் பாடியுள்ளார்.

குன்றக்குடியில் முத்தப்பர் மழை வேண்டி பாடியதின் நினைவாக அங்கே அவருக்கு ஒரு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

அன்பன்
பழ.கைலாஷ்

Saturday, April 17, 2021

சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம்.

சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம், அமராவதிபுதூர், சிவகங்கை மாவட்டம் 

1937ஆம் ஆண்டு காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இருக்கும் சுப்பிரமணியன் செட்டியார் குருகுலத்தாரால் வெளியிடப்பட்ட சிறிய கையேடு.

அக்காலத்தில் இப்படி ஒரு சட்டமா?


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,   தேவகோட்டை யூனியன் ஆபிசில் 1911ஆம் ஆண்டு பழ.ப.பிச்சப்ப செட்டியார் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள 'குழந்தை வேலன் செட்டி தெரு'வில் 30 அடி நீளத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உரிய இடத்தில் 31நாட்களுக்கு கட்டிட சாமான்களை வீதியில் போட்டு எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். "கட்டிட சாமான்களை வீதியில்ப்போட்டு எடுத்துக்கொள்வதற்கு லைசென்சு" என்ற தலைப்பில் தேவகோட்டை யூனியன் ஆபிஸ் அக்கிராசனாதிபதி (தலைவர்) சில நிபந்தனைகளுடன் 26/07/1911அன்று உரிமம் வழங்கியுள்ளார். அதாவது மக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கட்டிட சாமான்களை தெருவில் போட்டுக் கொள்ளளாம், இரவில் மக்கள் நடமாட போதுமான வெளிச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை தவறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது என்பது அனைவரையும் வியப்படைய செய்கிறது.

110 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட உரிமம்.

Friday, February 26, 2021

பிள்ளையார்பட்டி

அரிய புகைப்படம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை!
- கவியரசு கண்ணதாசன்

புகைப்பட உதவி: மதுரைக்காரன் கார்த்திகேயன்

இராமர் பட்டாபிஷேக சிற்பம்

செட்டிநாட்டு தச்சர்களின் நுணுக்கமான வேளை பாடுகளுடனுள்ள இராமர் பட்டாபிஷேக மரச்சிற்பம் .

இடம்: விரையாச்சிலை, புதுக்கோட்டை மாவட்டம்.

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...