Followers

Thursday, November 3, 2022

நகரத்தாரும் இராமாயணமும்

              ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்தில் நடந்ததைப் பிற்காலத்தில் எழுதினால் அது புராணம். இதிகாசம் என்பது நடக்கும் பொழுதே எழுதப்படும் சரித்திரமாகும். இராமாயணமும் மகாபாரதமும் இராமரும், பஞ்சபாண்டவர்களும் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட சரித்திரங்கள். 


இரண்டுமே அண்ணன் தம்பி ஒற்றுமையைக் குறிப்பன. இராமாயணம் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக வாழ்ந்ததை உடன்பாடாக (Positive) வர்ணிக்கிறது. மகாபாரதம் எதிர்மறையாக (Negative) வர்ணிக்கிறது.

வடமொழியில் 24,000 சுலோகங்களில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கி.பி 9ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் வாழ்ந்த கம்பர், திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரவால் தமிழில் 12,000 பாடல்களாக பாடி அருளினார்.

இராமாயணம் படிப்பதாலும் கேட்பதாலும் நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அறத்தின் ஆணிவேராக திகழும் இராம பிரான் வரலாறு நம்மை என்றும் வாழ்விக்கும், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வரிகள் வற்றாத இன்பத்தில் ஆழ்விக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சைவத்தையும், தமிழையும் போற்றி வளர்த்து வருபவர்கள் என்பதை நாடு நன்கறியும். அதே நேரத்தில் ஆழமான சைவப்பற்றுடைய நகரத்தார்கள் பிற சமய வெறுப்பாளர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தான் நகரத்தார்கள் இடையே வைணவத்தின் தாக்கம் ஊடாடியிருக்கிறது. தாம் வாழும் ஊர்தோறும் நகரச் சிவன் கோயில்களைக் கட்டிய நகரத்தார்களுள் சிலர் தத்தமது ஊர்களில் பெருமாள் கோயில்களைக் கட்டியும், நிருவகித்தும் வருகிறார்கள்.

"செல்வத்து பயனே ஈதல்" என்னும் புறநானூற்று வரிக்கேற்ப, தாம் ஈட்டிய செல்வத்தின் ஒரு பெரும் பகுதியை இறைவன் திருப்பணிகளுக்கும் சமுதாய அறப்பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்புரவு நோக்கம் கொண்டவர்களாகத் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர்கள் நகரத்தார்கள். அந்த வகையில் சிதிலமடைந்திருந்த எத்தனையோ திருக்கோயில்களை, பாடல்பெற்ற திருத்தலங்களை சீர்திருத்தியுள்ளனர். அதில் வைணவத் திருத்தலங்களும் அடங்கும்.

தில்லையில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் சிதைந்து இடிந்துவிழும் நிலைமையில் இருந்தபோது சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பழுதுபார்க்கப் படாமல் இருந்தது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவ்விரு தரத்தாரையும் அமைதியான முறையில் உடன்படச் செய்து தானே முன்னின்று தமது பெரும் பொருட்செலவில் செம்மையான முறையில் திருப்பணி செய்தார்.

சைவர்களுக்கு கோயில் என்றால் சிதம்பரம், அதுபோல் வைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம். அத்திருத்தலத்தில் அரியக்குடி சித.சா மற்றும் சித.அ குடும்பத்தினர் ஒரு அன்னச்சத்திரம் கட்டி கி.பி1860ஆம் ஆண்டு முதல் இன்று வரை இடைவிடாது நாள்தோறும் அன்னம் பாலித்து வருகின்றனர். "மாசி கருடசேவை காசி சென்றாலும் கிடைக்காது" என்பர், அப்படிப்பட்ட திருவரங்க நம்பெருமாளின் மாசி மாத கருடசேவை நடக்கும் மண்டபமும் மேற்படி குடும்பத்தார் திருப்பணியே.

மேலும் தென்திருப்பதி எனப் போற்றப்படும் அரியக்குடிப் பெருமாள் கோயிலை நகரத்தார்கள் கட்டியதும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற காஞ்சி நிலாத்திங்கள் துண்டம், திருமெய்யம், திருக்கோட்டியூர், திருவில்லிபுத்தூர், திருக்கண்ணபுரம், அழகர்கோவில், கூடலழகர் கோவில் என பல வைணவத் திருத்தலங்களுக்கு நகரத்தார் செய்திருக்கும் திருப்பணிகளும் இராம பிரான் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில் செய்திருக்கும் திருப்பணிகளும் நினைக்கத்தக்கது.

நகரத்தார்கள் சோழ தேசம் விட்டு பாண்டிய தேசம் வந்தடைந்து முதன் முதலில் குடியேறிய ஊர் "இளையாத்தக்குடி" என்று வரலாற்று நூல்கள் செப்புகின்றன. இளையாத்தக்குடி நகரக் கோயில் அருகே கழனிவாசற்குடியார் வகுப்பினருக்கு தனியாக ஒரு பெருமாள் கோயில் உள்ளது மேலும் இளையாத்தக்குடியில் ஓட்டைப் பெருமாள் கோயில் என்னும் சிதைந்துபோன வைணவக்கோயில் ஒன்றும் உள்ளது. இவை ஆதியிலிருந்தே நகரத்தாருக்கும் வைணவத்திற்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது. இரணியூரிலும் நகரக்கோயிலின் அருகே நகரத்தார் நிர்வாகத்தில் பெருமாள் கோயில் உள்ளது. தேவகோட்டையில் பி.எஸ்.எஸ்.சாத்தப்ப செட்டியார் தம் வீட்டின் தோட்டத்திலேயே ஒரு பெருமாள் கோயிலை அமைத்து அதனருகே பூசகர்களுக்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்.

நகரத்தார்களிடையே இருக்கும் இந்த வைணவத் தாக்கத்தின் மற்றொரு மிக முக்கியமான வெளிப்பாடாக அமைவது "இராமாயணம் படித்தல்" என்னும் பழக்கமாகும். 

இராமபிரானுடைய வரலாற்றை எளிய உரை நடையும், இடையிடையே நாட்டுப்பாடல் அமைப்பில் பாடல்களும், ஆங்காங்கே கம்பராமாயணச் செய்யுள்களும் கலந்த தமிழில் எழுதிவைத்த ஓலைச் சுவடிகள், செட்டிநாட்டில் பல குடும்பங்களில் புனிதமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், வீட்டின் திண்ணை, மேல் பட்டாலை அல்லது சாமி அறை ஆகிய இவற்றுள் ஒரு இடத்தில் இராமர் பட்டாபிசேக படத்தை வைத்து, அதன் முன், மக்கள் கூடியிருக்கும் அவையில் இந்த ஓலைச்சுவடி, குடும்பத்தினர் ஒருவரால் அல்லது ஆசிரியர் ஒருவரால் படிக்கப்படும். இவ்வாறு முதல் தேதி தொடங்கி முப்பது நாட்கள் படிப்பதும் உண்டு. அல்லது ஒரு வாரமோ பதினைந்து நாட்களோ படிப்பதும் உண்டு. 


இவ்வாறு படிக்கும் குடும்பத்திற்குக் குழந்தைச் செல்வமும் பிற நலங்களும் பெருகும் என்ற நம்பிக்கை நகரத்தார்களிடையே நிலவுகிறது. கால மாற்றத்திற்கேற்ப சிலர் பழைய ஓலைச்சுவடிகளை காகிதங்களில் கையெழுத்துப் படியாகவும், அச்சுப் புத்தகங்களாகவும் மாற்றிவிட்டனர். இந்த இராமாயணம் புத்தக வடிவில் இருந்தாலும் இன்றும் 'ஏடு' என்றே வழங்கப் பெறுகிறது. 

நகரத்தார்கள் தங்கள் படைப்பு வீடுகளில் படைப்புக்குரிய பேழையை எவ்வாறு புனிதமாகப் பாதுகாத்து வைத்திருப்பரோ அவ்வாறே இந்த இராமாயண ஏடும் புனிதமாக இராமாயணம் படிப்போர் வீடுகளில் பாதுகாக்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதியோ, முதல் சனிக்கிழமையோ 'ஏடு எடுப்பது' என்பது ஒரு புனிதச் சடங்கு போலவே நிகழ்த்தப்படுகிறது. ஏடு எடுத்த நாளிலிருந்து, படித்து முடித்து, ஏடு மீண்டும் வைக்கப்படும் வரை இராமாயணம் படிக்கும் வீட்டைச் சேர்ந்தவர்கள் துர்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. 

இராமாயணம் படிக்கும் நாட்களில் தொடக்க நாள், சீதை திருமணம் படிக்கப்படும் நாள், இராமன் அயோத்தி திரும்பும் வழியில் பரத்துவாசர் ஆசிரமத்தில் விருந்துண்ணும் நிகழ்ச்சி படிக்கப்படும் நாள், நிறைவாக இராமன் முடி சூட்டிக் கொள்ளுதல் (பட்டாபிசேகம்) படிக்கப்படும் நாள் ஆகிய நான்கு நாட்களும் மிகச் சிறப்புடைய நாட்களாக கருதப்படுகின்றது. இந்நாட்களில் வீடு விழாக்கோலம் கொள்ளும். 

குடும்பப் பெரியவர் இல்லாமல், அறிஞர் ஒருவர் இராமாயணம் படிப்பாரேயானால், நிறைவாக பட்டாபிசேகம் படிக்கப்படும் நாளில், அவருக்கு அக்குடும்பத்தினரால் சிறப்புச் செய்யப்படும்.

இப்பழக்கம் நகரத்தார் ஊர்கள் அனைத்திலும் சில பல குடும்பத்தினரால் தத்தமது இல்லங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. சில ஊர்களில் நகரத்தார் பொதுச் செலவில் பெருமாள் கோயிலிலோ அல்லது வேறு பொது இடத்திலோ நடைபெறுகிறது.

எவ்வளவு காலமாக "இராமாயணம் படித்தல்" நிகழ்ந்து வருகிறது என திட்டமாகக் கூற இயலவில்லை. ஆயினும் கோனாப்பட்டில் மு.கி குடும்பத்தார் எட்டாவது தலைமுறையாக இன்றும் தங்கள் வீட்டில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர் மற்றும் நற்சாந்துபட்டியில் சாமியாடிச் செட்டியார் குடும்பத்தார் தங்கள் வீட்டில் கி.பி.1843 முதல் இன்று வரை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர் என்பது ஆதாரத்துடன் கூடிய உண்மை.

கோனாபட்டை சேர்ந்த மு.கிருஷ்ணப்பச் செட்டியார் என்பவர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்தின் பொருட்டு பாய்மரக் கப்பலில் வெளிதேசம் சென்று திரும்புகையில் நடுக் கடலில் பெரும் புயலில் சிக்கிக்கொண்டார், கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது, என்ன செய்வதென்று அறியாதிருந்தபோது, அவர் மட்டும் "ராம,ராம,ராம.." என இரண்டெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஓதிக்கொண்டிருந்தார், 

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்"

என்னும் கம்பனின் கவிக்கேற்ப "ராம" என்னும் இரண்டெழுத்து மந்திரத்தின் உயர்ந்த பலனால், நடுக் கடலில் திடீரென எங்கிருந்தோ வந்த வானரம் ஒன்று பாய்மரத்தின் ஒருபக்க கயிற்றை பிடித்து இழுக்க மற்றொரு பக்க கயிற்றை செட்டியார் கெட்டியாக பிடித்துக்கொண்டார். மூன்று நாட்கள் அக்கயிற்றை விடாது பிடித்துக்கொண்டு கரை ஒதுங்கினார். 

ஊர் திரும்பியதும் "உன்னை காப்பாற்றியது அந்த அனுமன் தான், இராமனின் ஆணைக்கிணங்க இராமனின் சீடனான அனுமன் தான் உன்னை காத்து அருளியுள்ளான். இராமபிரானின் பூரண அருளை பெற்ற நீ, உமது இல்லத்தில் இராமாயணம் படித்துவர அனைத்து நலமும் செல்வமும் பெருகும்" என்று ஊர்ப் பெரியவர்கள் கூற. அன்று தொடங்கி கிருஷ்ணப்பச் செட்டியார், தமது வீட்டில் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வரலானார். தாம் புதிதாக கட்டிவந்த வீட்டை நான்கு பங்குகளாக பிரித்து தமது மூன்று புதல்வர்களுக்கு தலா ஒரு பங்கும், இராமபிரானுக்கு ஒரு பங்குமாக வைத்து கட்டிமுடித்தார்.

இன்றும் அந்த வீட்டில் அம்மூன்று புதல்வர்களின் வழிமுறையினர் - எட்டாவது தலைமுறையினர் தொடா்ந்து வருடம்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர், இதில் சர்வ மக்களும் கலந்துகொண்டு இராமனின் பரிபூரண அருளை பெற்று வருகின்றனர். இவர்கள் வீடு "இராமாயணகார வீடு" என்று அழைக்கப்படுகிறது, இவ்வீட்டில் உள்ள இராம ஆவதார சிற்பங்கள் வனப்புமிக்கவை.


நாட்டரசன்கோட்டையில் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் சுப.இராமன் செட்டியார் என்றொரு இராம பக்தர் வாழ்ந்து வந்தார், அவரின் இராம பக்திக்கு சான்றாக அவர் கட்டிய வீட்டின் முகப்பு நிலையின் கருட பகவான் சிற்பமும், திண்ணையில் திருமாலின் திரு அவதார சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.

இராமன் செட்டியார் தமது வீட்டில் வருடத்தின் 365நாட்களும் வைணவப் பெரியோர்களை கொண்டு தமிழ் மற்றும் வடமொழியில் இராம மந்திரங்களும் இராமாயணமும் படித்துவந்துள்ளார்.ஒருநாள் திருக்கோட்டியூரிலிருந்து வந்த ஐயங்கார் ஒருவர், கம்பராமாயணத்தில் கங்கைப் படலத்தில் வரும் கீழ்கண்ட பாடலை பாடினார் 

"வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ! இவன் வடிவென்பதோர்
     அழியா அழகு உடையான்"

இப்பாடலில் இராமனின் அழகை வருணிக்கும் கம்பன், ஒரு கட்டத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் "ஐயோ!, இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்" என்று முடிக்கிறார்.

இப்பாடலை கேட்டு வியந்த இராமன் செட்டியார், ஐயங்காரை மீண்டும் ஒருமுறை பாடச்சொன்னார், அவர் மீண்டும் பாடினார். "இராமன் என்ன அவ்வளவு அழகானவனா?" என்று கேட்டு மீண்டும் ஒருமுறை பாடச்சொன்னார். செட்டியார் மீண்டும் மீண்டும் கேட்க ஐயங்கார் மீ்ண்டும் மீண்டும் பாடினார், இறுதியாக கோபமுற்ற ஐயங்கார் "நீங்கள் எ‌வ்வளவு முறை இந்த பாடலைக் கேட்டாலும் இராமனின் அழகை உங்களால் அனுபவிக்க இயலாது, இராமனின் சிலையை வடித்து ஒரு கோயில் கட்டி, பிரதிட்டை செய்து வழிபட்டால் தான் நீங்கள் அவனின் பேரழகை அனுபவிக்க முடியும்" என்றார்.

இதை சவாலாக ஏற்றுக்கொண்ட செட்டியார் சிற்பியை அழைத்து இராமனின் சிலையை செதுக்கச் சொன்னார். இது ஒருபுறமிருக்க உள்ளூரில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உரிய வேங்கடேசப்பெருமாள் கோயில் மிகுந்த சிதிலமடைந்திருந்தது. இதை கண்டு வறுத்தமடைந்த செட்டியார், கோயிலை புனரமைக்க தொடங்கினார், திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்கவிருந்த போது, சிவகங்கை சமஸ்தான பிரதிநிதிகளிடம் இருந்து ஒரு செய்தி வந்தது "கோயிலிலிருந்த பழைய பெருமாள் சிலையை மாற்றி இராமர் சிலையை வைக்கக்கூடாது" என்று அதில் எழுதியிருந்தது. நீதிமன்றத்திற்கு சென்றார் செட்டியார், நீதிபதியும் பழைய பெருமாள் சிலையை மாற்றக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினார். எல்லாம் அவன் செயல் இறைவனின் விருப்பம் அதுவாயின் அப்படியே நடக்கட்டும் என்று இராமன் சிலையை பிரதிட்டை செய்யாமல், புதிதாக எழுப்பிய கற்கோயிலில் வேங்கடேசப்பெருமாளுக்கு கி.பி 1899-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார் இராமன் செட்டியார். பின்னர் அவரின் வம்சாவளியினர் ஒரு புதிய மனையில் கோயிலை எழுப்பி அங்கு இராமன் சிலையை பிரதிட்டை செய்து கல்யாணராமர் என்று திருப்பெயரிட்டு கும்பாபிஷேகம் செய்தனர். மேற்படி பழைய கோயில் சீர் செய்யப்பெற்றதற்கும் புதியதோர் கோயில் அமைக்கப்பெற்றதற்கும் கம்பன் இயற்றிய ஒரு பாடல் தான் காரணம் என்றால் அது மிகையல்ல!

மற்றொரு உண்மைச் சம்பவம், திருமலை சமூத்திரம் என்னும் நற்சாந்துபட்டியில் வசித்துவந்த சாமியாடி செட்டியார் என்கிற ஆண்டியப்ப செட்டியாரின் இரண்டாவது குமாரரான சின்னக்கருப்பஞ் செட்டியார், திருமால் மீது மிகுந்த பக்தி உடையவராய் திகழ்ந்தவர், இவர் காவிரியில் தீர்த்தமாட சென்ற போது, நீரில் மிதந்து வந்த ஓலைச்சுவடிகளை கண்டு அவற்றை எடுத்து தம் வேட்டியில் கட்டிக்கொண்டு ஊர் திரும்பினார். கோவில்பட்டியை சேர்ந்த அய்யாச்சாமி என்பவரை வரவழைத்து சுவடிகளை காட்டினார், அவர் இவை இராமாயண சுவடிகள் என்பதை உறுதிசெய்தார். பின்னர் அவர் மூலமாக இவற்றை புதிய ஏட்டில் படியெடுக்கச் செய்து, கி.பி.1843 ஆம் ஆண்டு முதல் தமது இல்லத்தில் வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வரலானார் சின்னக்கருப்பன் செட்டியார். இச்செய்தியை நாம் அந்தச் சுவடியிலுள்ள அடிகண்ட பாடலால் அறிந்துகொள்ளலாம்.

"செல்வனாம் தொட்டியச் சின்னானூராளியை
நல் மனதாகப் போற்றும் நமது ஆண்டியப்பவேள்
சொல் மறவாத புத்ரன் சுமுகனுக்கய்யாச்சாமி
கல்விசேர் புகழும் சின்னக்கருப்பனுக் கெழுதினேனே"
சோபகிருது ௵ அற்பிசி ௴ 7௳ (1843)

இவ்வாறு இராமாயணம் படித்துவரும் காலத்தில் சின்னக்கருப்பஞ் செட்டியார் வாழ்ந்த வீட்டில் எதிர்பாராத விதமாக கூரையில் தீப்பிடித்தது, வீடே தீக்கிரையான போது இராமாயண ஓலைச்சுவடிகள் மட்டும் எவ்வித சிதைவும் ஏற்படாமல் இருந்தன. நூற்றெண்பது ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த ஓலைச்சுவடிகள் பத்திரமாக காக்கப்பட்டு வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப நூல்ளாக மாற்றப்பட்டு அவர் தம் வழிமுறையினர்களால் தொடர்ந்து இன்றுவரை வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படிக்கப்பட்டு வருகிறது. அதே ஊரில் உள்ள கம்பன் செட்டி குடும்பத்தார் சாமியாடி செட்டியார் குடும்பத்தாரிடம் இருந்த ஓலைச்சுவடிகளை படியெடுத்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக வருடந்தோறும் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்து வருகின்றனர்.

நெற்குப்பை ந.பழ குடும்பத்தார் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கொழும்பிலிருந்து கொண்டுவந்த அடர் நீல வண்ண இராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்து அதன் முன் வருடாவருடம் புரட்டாசி மாதம் இராமாயணம் படித்துவருகின்றனர்.

இது போல் செட்டிநாடு முழுவதிலுமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தத்தமது வீடுகளில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இராமாயணம் படித்து வருகின்றனர். எண்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இராமாயணம் படித்து வருகின்றனர். (பட்டியலின் நீளம் கருதி இங்கு வெளியிடவில்லை) 

கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்கள், தம் இல்லத்தில், தாம் சிறுவனாக இருக்கும் பொழுது, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், இராமாயணம் படிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றமையே, தமது கம்பராமாயண ஆர்வத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். உலகிலுள்ள கம்பன் கழகங்கள் அத்தனைக்கும் தாய் கழகமான "காரைக்குடி கம்பன் கழகம்" கி.பி.1939ஆம் ஆண்டு கம்பனடிப்பொடியால் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை கம்பராமாயணத்தைப் பரவலாக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து வருகிறது.


மேலும் செட்டிநாட்டவர் பலர் தாங்கள் வாழும் ஊர்களிலும்,வெளிதேசங்களிலும் இராமாயணம் படித்து வருகின்றனர்.

"யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" என்றாற்போல, இராமாயணம் படிப்பதன் மூலமும், கேட்பதன் மூலமும் எல்லோரும் நலம் பெற்று வாழவேண்டும் என்ற தர்ம சிந்தனையுடன் நகரத்தார்கள் இராமாயணம் படித்துவருகின்றனர்.

- பழ.கைலாஷ்.

Friday, August 5, 2022

இந்தியாவின் முதல் கொடி



இந்தியாவின் முதல் தேசியக் கொடி எது? "தாயின் மணிக்கொடி பாரீர்!" என்று பாரதி பாடியது தீர்க்க தரிசனமா? அல்லது அப்போது இந்தியாவுக்கு ஏதும் கொடி இருந்ததா?

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய மக்கள் மனதில் எழுந்த சுதேச எழுச்சியால் தேசியக் கொடிக்கான தேவை உருவானது. சுவாமி விவேகானந்தரின் முதன்மை சிஷ்யையான சகோதரி நிவேதிதா தான் இந்தியாவுக்கான முதல் தேசியக் கொடியை உருவாக்கியவர்.


மார்கரெட் எலிசபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) என்ற இயற்பெயரைக் கொண்ட சகோதரி நிவேதிதா அயர்லாந்தில் 1867-ஆம் ஆண்டு பிறந்தார். நோபிள் ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்துவிட்டது. தந்தை சாமுவேல் கிறித்துவ மதகுருவாக இருந்தார். ஆரம்பத்தில் கிறித்துவ மதத்தின் மீது பிடிப்புக் கொண்டிருந்த நோபிள், இளமைப் பருவத்தில் புத்த மதக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு காட்டினார். கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து சில காலம் பணியாற்றிய பின் புதிய கல்வி முறையை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டி ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்த நேரம் 1895-ஆம் ஆண்டு, இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க நோபிளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சம்பவம்தான் நோபிள் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்டு அவர்பால் அவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1898-ஆம் ஆண்டு ஜனவ‌ரி மாதம் கல்கத்தா வருகிறார் நோபிள். இந்து சமயத்தின் பிரம்மச்சரிய தீட்சையை ஏற்கும்போது நோபிளுக்கு "நிவேதிதா" என்ற பெயரை சூட்டுகிறார் விவேகானந்தர். இதன் பொருள் "அர்ப்பணிப்பு". இந்து சமய தீட்சை பெற்ற முதல் மேற்கத்திய பெண் இவரே.


நிவேதிதா இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் கல்கத்தாவை பிளேக் நோய் கடுமையாகத் தாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துக் கிடந்தனர். அப்போது வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ தாதியாக சேவை செய்தார்.

1898-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கல்கத்தாவில் பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார் நிவேதிதா. அப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்ததுடன், ஓவியம் வரைதல், மண்பொம்மைகள் செய்தல், துணி தைத்தல் முதலானவற்றையும் சொல்லித் தந்தார் நிவேதிதா. அதன்பின் சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தந்தார். சுதந்திரப் போராட்டம் உச்சம் பெறாத காலத்திலேயே 'வந்தே மாதரம்' பாடலை தனது பள்ளியில் பாடச் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுவாமி விவேகானந்தருடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளி வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார். நியூயார்க் நகரத்தில் "இராமகிருஷ்ண தொண்டர் சங்கம்" என்ற அமைப்பைத் தொடங்கி இந்தியாவின் பெருமையைப் பரப்ப உதவினார்.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து 1901-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடர்ந்தார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து ஆழ்ந்து அறிந்துகொண்டு, அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் நூல்கள் எழுதினார்.

கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட நிவேதிதாவுக்கு 1902-ஆம் ஆண்டு பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவுதான் அது. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார்.

சுவாமி விவேகானந்தருக்குப் பிறகு அரவிந்தருடன் நட்பானார். அதோடு, இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கினார். வங்காளத்தின் புரட்சிகர இயக்கங்கள் சிலவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். லண்டன் பத்திரிகைகள், நிவேதிதாவை  'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது சுதந்திரப் போராட்ட நிலைப்பட்டால் கோபம் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, கோபத்தால் இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்கிவிடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தால் அதில் இருந்து விலகினார்.

1904-ஆம் ஆண்டு, ஒரு நாள் ஜெகதீஸ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் நிவேதிதா புத்தகயாவுக்கு முதன்முதலாக சென்றிருந்தார், அங்கே வஜ்ராயுத சின்னத்தை காண்கிறார். அது அவர் மனதை கவர்ந்துவிடுகிறது. தொடர்ந்து வஜ்ராயுதத்தை பற்றி தேடித்தெரிந்து கொள்கிறார். புத்தமத நம்பிக்கையின்படி வஜ்ரா என்பது புத்தரின் அடையாளம் மேலும் இந்து மதத்தில் வஜ்ரா இந்திரனின் ஆயுதமாகவும், வலிமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றதை புரிந்துகொள்கிறார் நிவேதிதா. 

1905-ஆம் ஆண்டு, சதுர வடிவில் சிவப்பு பின்னணியில் மஞ்சள் நிறத்தில் விளிம்பில் 108 ஜோதிகளுடன் மையத்தில் வஜ்ராயுத சின்னமும் வங்க மொழியில் "வந்தே மாதரம்" என்ற சொல்லுடன் தனது மாணவிகளை கொண்டு ஒரு கொடியை உருவாக்குகிறார். இதில் சிவப்பு சுதந்திர போராட்டத்தையும் மஞ்சள் வெற்றியையும் வஜ்ராயுத சின்னம் இந்தியாவின் ஆன்மீக மரபையும் உருவகப்படுத்துவதாக நிவேதிதா குறிப்பிடுகிறார். இதுவே இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தேசியக் கொடி.

1905-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காசியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதி, காசியிலிருந்து திரும்பும் போது கல்கத்தா சென்று சகோதரி நிவேதிதாவை சந்திக்கிறார். அப்போது நிவேதிதா, “ஏன் உங்கள் மனைவியை அழைத்து வர வில்லை?" எனப் பாரதியைப் பார்த்து கேட்கிறார்.  "காசியில் நடந்தது காங்கிரஸ் மாநாடு அதில் பெண்கள் கலந்துகொள்வதால் என்ன பலன் மேலும் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது" என்கிறார். “உங்கள் மனைவிக்கு சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?" எனும் தொனியில் கேள்வி கேட்கிறார் நிவேதிதா. அது பாரதியை உலுக்கியது, அதுவரை அவர் கொண்டிருந்த பெண் விடுதலை குறித்த சிந்தனையை முழுதாக மாற்றி அமைத்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக்கொண்டார் பாரதி. அவருக்கு குரு வணக்க பாடலும் இயற்றினார். 


1908-ஆம் ஆண்டு பாரதி வெளியிட்ட  "ஸ்வதேச கீதங்கள்" நூலில் நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார். பின்னர் 1909-ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்" நூலின் இரண்டாம் பாகமான "ஜன்ம பூமி" நூலில் "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதி நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்.

இந்த "ஜன்ம பூமி" நூலில் இடம்பெற்ற பாடல் தான் "மாதாவின் துவஜம்" எனும் பாரத நாட்டுக் கொடியை புகழ்ந்து பாடும் பாடல்கள்.

அதில்,
"தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!"
என்று பாரதி பாடிப்பரப்பியது சகோதரி நிவேதிதாவின் கொடியைத்தான்!

"ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!"
அதாவது, நிமிந்து உயர்ந்து நிற்கின்ற ஒரு கொடிக்கம்பம் அதன் மேல் "வந்தே மாதரம்" என்று அழகாக பொறிக்கப்பட்டு விளங்குகின்ற சிவந்த பட்டுத் துணியாலான கொடியொன்று பிரகாசமாக பறப்பதை பாரீர்.

"இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?"
அதாவது, அக்கொடியின் ஒரு பகுதியில் இந்திரனது வச்சிராயுதச் சின்னமும் மற்றொரு பகுதியில் எங்கள் நண்பர்களான இஸ்லாமியர்களின் பிறை வடிவமும் இருக்கும். மையத்தில் "வந்தே மாதரம்" என்னும் மந்திரம் இருக்கும். அந்தக் கொடியின் மகிமையை வரையறுத்துச் சொல்லிட ஆற்றல் உடையவனோ நான்?

"மாதாவின் துவஜ"த்தில் மொத்தம் பத்து பாடல்கள் அதில் மேற்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் நோக்கினாலே நமக்கு புரியும், சிவப்பு நிற பட்டுக்கொடி அதில் வந்தே மாதரம் என்னும் சொல், இந்திரனின் வஜ்ராயுத சின்னம் என இவை குறிப்பது நிவேதிதாவின் கொடியைத்தான். வஜ்ராயுத சின்னத்தின் மேற் பகுதியும் கீழ் பகுதியும் பார்ப்பதற்கு பிறை போல் அரை வட்டமாக உள்ளதால் இதை இஸ்லாமியர்களின் பிறை வடிவம் என்று வர்ணிக்கிறார் பாரதி.

1906-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் இக்கொடி பார்வைக்கு வைக்கப்பட்டது. ஜெகதீஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்தக் கொடியை ஆதரித்தபோதிலும் இது மக்கள் மனதை கவரத்தவறிவிட்டது.

1911-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று டார்ஜிலிங்கில் தனது 44-வது வயதில் உயிர்நீத்தார் சகோதரி நிவேதிதா. தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்து அக்டோபர் 7-ஆம் நாள் தனது சொத்துகளையும், படைப்புகளையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்தார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்து கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று எத்தனையோ கலைஞர்களை, வீரர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கிடச் செய்து, இந்தியாவுக்கென முதல் கொடியை உருவாக்கிய சகோதரி நிவேதிதாவை நமது சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டில் போற்றி வணங்குவோம். 

அன்பன்
பழ.கைலாஷ்.
05/08/2022


Monday, October 4, 2021

பாரதியின் கடிதம்


1901ஆம் ஆண்டு பாரதி காசியிலிருந்து தன் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம்.

ஓம்

ஸ்ரீகாசி 
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன் 
சி. சுப்பிரமணிய பாரதி

Source: "பாரதியின் கடிதங்கள்" நூல் - ரா.அ.பத்மநாபன்.

தஞ்சையில் நகரத்தார் கல்வெட்டு:




                        தஞ்சைப் பெரிய கோவில் விநாயகப் பெருமானை வணங்கி நின்றான் ராஜராஜன். இதுபோன்ற சதுர்த்தித்திருநாளாக இருந்திருக்கக் கூடும். விநாயகருக்கு வாழைப்பழ நிவேதனம் நடந்துகொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னனுக்கு ஏதோ தோன்றியது. பிள்ளையாருக்குப் படைக்க நாளொன்றுக்கு எவ்வளவு வாழைப்பழம் தேவை என்று கேட்டான்.

ஒரு நாளுக்கு 150 பழங்கள் என்றார் குருக்கள். அப்படியானால் வருடத்திற்கு (360 நாள்) 54000 பழங்கள் என்று கணக்கிட்டான். உடனே அருகிலுள்ள அதிகாரிகளை அழைத்து தரமான வாழைப்பழங்களின் விலை என்ன என்று கேட்டான். ஒரு காசுக்கு 1200 பழம் என்றனர். ஆக, வருடத்திற்கு 45 காசுகள் செலவாகும்.

அப்படி ஒவ்வொரு வருடமும் 45 காசுகள் செலவு செய்ய முதலீடு எவ்வளவு செய்ய வேண்டும்?  பெரிய கோவில் வங்கி அதிகாரி ஒரு காசுக்கு அரைக்கால் காசு (1/8) வட்டி என்று தெரிவித்தார். அப்படியானால் 360 காசுகள் முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு 45 காசுகள் கிடைக்கும் அல்லவா. ஆகவே தன் பங்குக்கு 360 காசுகளை ராஜராஜன் வழங்கினான். அதை தஞ்சை வணிகர்களுக்கு கடனாக வழங்கவும் உத்தரவிட்டான். ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்படி நாளொன்றுக்கு 150 பழங்கள் விநாயகருக்கு நிவேதனம் செய்வதாக நகரத்தார் ஒப்புக்கொண்டனர். அதைக் கல்வெட்டாக அங்கேயே பொறித்தும் வைத்தான் ராஜராஜப் பெருவேந்தன்.

தகவல்: anchor.fm/krishnan8
Courtesy: Viswanathan Arunachalam

அண்ணல் அரையாடைக்கு வயது நூறு - காரைக்குடியின் தனிச் சிறப்பு.



அண்ணல் காந்தியடிகள் மேலாடையைத் துறந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவாகின்றன. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் காலை மதுரையில் அரையாடை அணிந்த காந்திஜி, முதன் முறையாக செட்டிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இரவு காரைக்குடியில் தங்கினார். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை இக்கட்டுரையில் காண்போம். 

மதுரை வருகை
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், நாடெங்கிலும் ஒத்துழையாமை குறித்து மக்களிடம் பரப்புரை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1921 செப்டம்பர் 21 அன்று பிற்பகல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தார். கதர் மற்றும் சுதேசி இயக்கம் மக்களிடம் வலுப்பெறவும், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கவும் அவர் மேற்கொண்ட இந்தியச் சுற்றுப் பயணத்தில் ஒரு பகுதியாக இவ்வருகை அமைந்திருந்தது. 

அன்று மாலை காந்திஜி, மதுரையில் வயல்களில் வேலை செய்யும் ஏழை விவசாயிகளையும் ஆடைகளை நெய்யும் ஏழை நெசவாளிகளையும் பார்த்தார். உணவும் உடையும் தருபவர்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால் அவர்கள் உடுத்துவதற்குப் போதிய உடை இல்லை. கோவணம் அணிந்து வேலை செய்யும் அவர்களின் வறுமையை நினைத்து வருந்தினார். 

அன்று இரவு மதுரையில் தனது ஆதரவாளரும் குஜராத் தொழிலதிபருமான ராம்ஜி கல்யாண்ஜியின் விருந்தினராக, மேலமாசி வீதியில் அவருக்குச் சொந்தமான இல்லத்தில் மாடி அறையில் தங்கினார். மறுநாள் செட்டிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவு முழுவதும் அன்று பகலில் தாம் கண்ட மக்களையே நினைத்துக் கொண்டிருந்தார். 

அரையாடை பூண்டார்
அடுத்த நாள், செப்டம்பர் 22ஆம் தேதி, அதிகாலை மதுரையில் இருந்து செட்டிநாட்டிற்கு புறப்படும்போது மகாத்மா மேற்கொண்ட முக்கியத்துவமிக்க ஆடை மாற்றம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டையில்லாமல் அரையாடை புனைந்து வெளியில் அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது அன்று தான். 

இளமையில் காந்திக்கு எல்லோரையும் போல் ஆடம்பர உடை உடுப்பதில் ஆர்வம் இருந்தது. இங்கிலாந்திலிருந்தபோது மேற்க்கத்திய உடைகளை அணிந்தார். இதற்காகப் பெரும் பணமும் செலவிட்டார். ஆனால் காலப்போக்கில் அவர் உடையில் மாறுதல் ஏற்பட்டது. ஆடம்பர உடைகளை விட்டொழித்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அங்குள்ள ஏழை இந்தியக் கூலிகளைப் போலவே உடை உடுத்தினார். இந்தியா திரும்பிய பின் கத்தியவார் நாட்டு மக்களைப் போல கதராலான சட்டை, நீளமான தலைப்பாகை, வேட்டி உடுத்தினார். 1921ஆம் ஆண்டு மதுரையில் செப்டெம்பர் 22ஆம் நாள் அரையாடைக்கு மாறினார், அதாவது ஒரு துண்டும், இடையில் முழங்காலளவு ஒரு வேட்டியும் உடுத்தினார். அரையாடைக்கு மாறிய பின் மதுரையில் காந்தியை தனியாக ஒரு புகைப்படம் எடுத்தனர். 

முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக் கொள்வதை ஒரு தற்காலிகமான முடிவாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் பின்னர் அதுவே நிலைத்து விட்டது. அவர் மறையும் வரை இது மாறவே இல்லை. இவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவை காந்திஜி மதுரையம்பதியில் வந்து மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே கூட முன்கூட்டி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது என்று திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் உள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம் படிப்படியாக நாளொரு வண்ணமாக, வளர்ந்து மதுரையம்பதியில் முழுமை அடைந்திருக்கிறது. 

ஒரு வியப்பு என்னவென்றால் இந்தப் புரட்சிகரமான செயலை ஒரு செய்தியாக அந்தக் காலத்துப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. 

அரை ஆடை புனைந்த பின் காலை 7மணிக்கு சௌராஷ்டிரீயர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்திலிருந்து நேராக காந்திஜியும் அவர் குழுவினரும் காலை 9மணிக்கு செட்டிநாட்டிற்கு புறப்பட்டனர். 


செட்டிநாடு நோக்கி
செட்டிநாடு நல்ல செல்வச் செழிப்புடன் இருந்த காலம் அது. காந்திஜியின் வருகையை முன்னிட்டு செட்டிநாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கு சில இடங்களில் காந்திஜியின் காரைச் சில விநாடிகள் நிறுத்தி அவர் மீது மலர்களைச் சொரிந்து அதன் மூலம் தங்கள் அன்பையும் சொரிந்து வழி அனுப்பி வைத்தனர் மக்கள். செட்டி நாடே எழுச்சி பெற்றதன் அறிகுறி இவையெல்லாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். 

கானாடுகாத்தான்
செட்டிநாட்டில் காந்தி காலடி பட்ட முதல் ஊர் பலவான்குடி. பலவான்குடியில் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, நல்ல நடு மதிய நேரத்தில் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார். அங்கு உணவு அருந்தி விட்டு, ஓர் அழகான பந்தலின் கீழ் ஐயாயிரம் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்ததைக் கண்டு ஆனந்தத்துடன் உரையாற்றினார். பல சங்கங்களின் சார்பாக ஏராளமாக வரவேற்புக்களும் பணமுடிப்புக்களும் வழங்கப் பெற்றன. "வெளிநாட்டுச் சாமான்களையெல்லாம் விலக்க வேண்டும்" என்று அங்கு அறிவுரை கூறிவிட்டு, பள்ளத்தூர், வேலங்குடி வழியாகக் கோட்டையூருக்குப் சென்றார். அங்கும், ஒரு விசாலமான பந்தலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

காரைக்குடி
இவைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, காரைக்குடிக்கு காந்திஜி வந்து சேர்ந்தபோது இரவு 7 மணி, அந்நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தும் தலைவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நிலக்கிழார்கள் ஆகியோர் அவருக்கு வரவேற்பளிப்பதற்காக அங்கு வந்திருந்தனர்.

புதுக்கோட்டையே காரைக்குடியில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களின் சார்பாக அண்ணலிடம் வரவேற்புரைகளும் பணமுடிப்புகளும் அளிக்கப்பெற்றன. 

காரைக்குடிக்கு காந்திஜி வந்திருந்தபோது திருக்குறளைப் பற்றிய பேச்சு இடையே வந்தது, அப்போது காந்திஜி, "திருக்குறளைப் பற்றி எனக்குத் தெரியும். திருவள்ளுவர் மிகப் பெரிய ஆசிரியர்" என்று கூறியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

காரைக்குடியில் காந்திஜி வரவேற்பு ஏற்பாடுகளில் பெரும் பங்கு கொண்டவர் காந்தி மெய்யப்பச் செட்டியார். இவர் காந்திஜி மீது மிகுந்த பக்தி கொண்டவராதலால், இவரை காந்தி மெய்யப்பர் என்று எல்லோரும் அழைத்தார்கள். 

காரைக்குடியைச் சேர்ந்த பெண்கள் பலர் அண்ணலைச் சந்தித்து வரவேற்புரையும் பணமுடிப்பும் அளித்தார்கள். இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவரால் மேடைக்குச் செல்ல முடியவில்லை. ஆகையால்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அப்பெருங்கூட்டத்தில் ஒரு ஓரத்தில் தம் காரில் இருந்து கொண்டே பேசினார். இந்து மதாபிமான சங்கம் ஒரு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தது. காரைக்குடியைச் சேர்ந்த எட்டு அமைப்புக்களின் சார்பாகப் பண முடிப்புக்களும் எட்டு வரவேற்புரைகளும் அளிக்கப்பெற்றன. பின்னர் இரவு 8மணிக்கு காந்திஜி, தேவகோட்டைக்கு புறப்பட்டார். 

தேவகோட்டை
தேவகோட்டை செல்லும் வழியில் அமராவதிபுதூரில் சில நிமிடங்கள் காரை நிறுத்தி வரவேற்புரையைப் பெற்றுக் கொண்டு சென்றார். இன்று இரவு எ‌வ்வளவு நேரமானாலும் காந்திஜியை கண்டுவிட வேண்டும் என பலர் தேவகோட்டையில் காத்திருந்தனர். தேவகோட்டை சென்றவுடன் நேரடியாகப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  தனவைசிய சபையினர் சார்பாகவும் சுவாமி விவேகானந்தர் சங்கத்தின் சார்பாகவும் வரவேற்புரைகள் அளிக்கப்பெற்றன. இதில் ஒரு வரவேற்புரை தங்கத் தட்டிலேயே பொரிக்கப் பெற்றிருந்தது.  மேலும் காந்திஜியிடம் ஏராளமான பண முடிப்புகள் அளிக்கப்பட்டது. 

பொது கூட்டத்தில் பேசிய காந்திஜி, "தேவகோட்டையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குதிரை இருப்பது போல, ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இராட்டை இருக்க வேண்டும் மற்றும் என்னைப்போன்று நீங்களும் எளிய கதர் ஆடைகள் அணிந்தால், இந்தியாவில் மட்டுமல்லாமல் இரங்கூனிலும் மற்ற இடங்களிலும் உங்களுடைய தொழில் வெகு சிறப்பாக நடைபெறும். ஆந்திராவில் உள்ளவர்களைப் போன்றே இங்குள்ள ஆண்களும். கல்வைத்த மோதிரங்களும் கடுக்கண்களும் அணிவதில் ஆசையுள்ளவர்களாய் இருப்பதைக் காணுகிறேன், அவைகளைத் சுதந்திர போராட்ட நிதிக்கு கொடுத்து விட்டு நீங்கள் எளிமையாக வாழ்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று பேசினார். 

இரவு காரைக்குடியில் உறக்கம்
நள்ளிரவு மீண்டும் காரைக்குடி திரும்பினார். முதன் முதலில் அரையாடை உடுத்திய பின் அண்ணல் காந்தி உறங்கிய ஊர் என்பதால் காரைக்குடி சிறப்புற்றது.

அன்பன்
பழ.கைலாஷ்
22/09/2021

Thursday, September 16, 2021

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்


    பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்

மிழகம் எத்தனையோ அறிஞர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும் ஈன்றெடுத்திருக்கிறது. இந்த வரிசையிலே முதன்மையாக வைத்து எண்ணத்தக்கவர்களுள் ஒருவர் "மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்". 

இப்பெருந்தகையாளரை நாடு நன்கறியும். ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச் சிறப்பு இவருக்கு மட்டுமே உரியது. 

"இவர் பட்டம் பெறப் பிறந்தவரல்லர்; பட்டம் வழங்கப் பிறந்தவர்" என்பார் சோமலெ. 

"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் 'பண்டிதமணி' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்று கூறி மு.கதிரேசச் செட்டியாருக்கு "பண்டிதமணி" என்னும் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர். 

தமிழகத்தில் பொதுவாக "பண்டிதமணி" என்னும் பெயர் இவரையே குறிக்கும்.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்!" என உலக ஒருமைப்பாட்டைப் பாடிய புலவர் பெருந்தகை கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றை நாட்டின் தலைநகராம் மகிபாலன்பட்டியில் கி.பி.1881ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் முத்துக்கருப்பன் செட்டியார் - சிகப்பி ஆச்சியின் மகிமைமிகு பாலனாய் உதித்தார் கதிரேசச் செட்டியார். இவரது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார், அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. 

அக்காலத்தில் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதிலேதான் நாட்டுக்கோட்டை நகரத்தார் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, பட்டப்படிப்பில் நாட்டமில்லை. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது. 

இதைப் பற்றி பண்டிதமணி, "யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன!' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது" என்கிறார். 

இதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருக்க, தந்தை இறந்த செய்தி கேட்டு தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். குடும்பப் பொறுப்பை ஏற்கிறார். ஆனால் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மென்மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார். 

ஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். 

தொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணி. சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரஙகளைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான "சொக்கலிங்க ஐயா"வை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார். 

இதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார். 

பண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார். 

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ.பழ.சா.பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை' நிறுவப்பட்டது. 

இவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினர். 

சொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு செய்தல் எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். 

வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி இவர். மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கௌடிலீயம் என்னும் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருள் நூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 

மேலு‌ம் இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். 

வித்துவான் வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் தொகுத்து வைக்கப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் திருக்கோயில் திருப்பணிகள் பட்டியல் 1953ஆம் ஆண்டு மேயர் ஆர்.இராமநாதன் செட்டியாரின் உதவியால் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியாரால் சீரிய முறையில் திருத்தி விளக்கி "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 

திருவாசகம், திருச்சதகம், நீத்தல்விண்ணப்பம், திருவெம்பாவைப் பகுதிகட்கு இவர் எழுதிய திருப்பு 'கதிர்மணி விளக்கம்' உரை நூல்கள் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் இவரின் கொடையாகும். 

சைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட பண்டிதமணி, பலவான்குடியில் மணிவாசகச் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். 

பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு "மகாமகோபாத்தியாய" என்ற பட்டத்தை வழங்கியது. உ.வே.சாமிநாதையருக்கு பிறகு இப்பட்டத்தை பெற்றவர் இவரே. 

மேலும் சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு பட்டங்களை தமிழுலகம் அவருக்கு அளித்து சிறப்பித்தது. 

தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்ட பண்டிதமணி கி.பி 1953ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் அமரரானார். 

மகிபாலன்பட்டியில் நினைவு மண்டபம் அமைத்தும், அவரின் நூல்களை நாட்டுடைமையாக்கியும் தமிழக அரசு அவருக்கு சிறப்புசெய்துள்ளது. 


அன்பன்
பழ.கைலாஷ் 


[உதவிய நூல் "பண்டிதமணி" - சோமலெ, இன்பநிலையம்]

Sunday, August 8, 2021

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை.

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' மாநாடு நடந்தது. அதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கி 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அன்று இரவு காந்தி, பட்டேல், நேரு மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்திய தேசமே கொந்தளித்தது. இதற்கு பிறகே விடுதலை போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியதால் இது 'ஆகஸ்ட் புரட்சி' என்றும் அழைக்கப்பட்டது.

எங்கு நோக்கினும் கடையடைப்பு, ஊர்வலம், கண்டனக் கூட்டம்! "வெள்ளையனே வெளியேறு"  என்ற முழக்கம் இமயம் முதல் குமரி வரை எதிரொலித்தது!

தமிழக மக்களும் இந்த போராட்டத்தில் எந்த தயக்கமும் இன்றி கலந்துகொண்டனர். வரலாற்று புகழ்மிக்க இந்த ஆகஸ்ட் புரட்சியில் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை பகுதி மக்களும் வீரம் கொண்டு முனைந்து நின்றனர். தேச பக்தியின் உறைவிடமாக திகழ்ந்தது தேவகோட்டை.

தேவகோட்டை மற்றும் காரைக்குடி அடங்கிய செட்டிநாட்டு பகுதியில் தேசபக்தர்களான 'தமிழ் கடல்'இராய.சொ., 'சீர்திருத்த செம்மல்' சொ.முருகப்பா., 'கம்பனடிப்பொடி' சா.கணேசன்., காந்தி மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.அருணாசலம்., சின்ன அண்ணாமலை., அமராவதிபுதூர் பிச்சப்பா சுப்பிரமணியம்., பாகனேரி ஆர்.வி.சாமிநாதன்., வேலாயுதம் செட்டியார்., 'இராட்டிண புலவர்'என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்ட ஆசிரியர் முருகன் ஆகியோர் மக்கள் மத்தியில் தேசபக்தியை உரமிட்டு வளர்த்து வந்தனர்.



அன்று ஆகஸ்ட் 9, காலை தேவகோட்டையில் தேசபக்தர்களால் உருவாக்கப்பட்ட 'சரஸ்வதி வாசக சாலை'யில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை நாளிதழ்களில் படித்த இளைஞர்கள் கொந்தளித்தெழுந்தனர். தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவரான எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்காரும் செயலாளரான கே.ஆர்.எஸ்.முத்துவும் கலந்தாலோசித்து சில அவசர முடிவுகளை எடுத்து உடனடியாக செயலில் இறங்கினர். 

சின்ன அண்ணாமலை, பி.ஆர்.இராமசாமி, ஆர்ச் அண்ணாமலை, காந்தி நாராயணன் செட்டியார், டைரி அருணாசலம், தொண்டர் முத்தையா ஆகியோரோடு இளைஞர்கள் பலர் வீதியில் இறங்கி காந்தி, பட்டேல், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்திகளை முழங்கினர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கேட்ட மக்கள் வருந்தினர், கோபம் கொண்டனர். பிரிட்டிஷ் அரசை கண்டித்து சின்ன அண்ணாமலை தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஐம்பது பேருடன் தொடங்கிய ஊர்வலம் சில தெருக்களை கடக்கும் முன் ஐநூறு பேராக உருவெடுத்தது.

மாலை நான்கு மணிக்கு தேவகோட்டை ஆர்ச் பகுதியில் தொடங்கிய மற்றோரு கண்டன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணிக்கு ஜவஹர் மைதானத்தை அடைந்தது ஊர்வலம். அங்கு நடந்த கூட்டத்திற்கு அழ.சுப.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தேவகோட்டையை சேர்ந்தவர்களுள் இவரே நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.

ஆகஸ்ட் ஒன்பதை தொடர்ந்து அடுத்த சில தினங்கள் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக பொது கூட்டங்கள் நடத்தப்பட்டது. அக்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக இருந்த சின்ன அண்ணாமலை மற்றும் கே.ஆர்.எஸ்.முத்து அனல்பறக்க உரையாற்றினர். கே.ஆர்.எஸ்.முத்து ஒரு கால் ஊனமுற்றவர், ஆனால் தம் நாவாற்றலால் மக்கள் மண ஊனத்தை அகற்றி விடுதலை வேட்கையை ஊன்ற செய்தவர்.

அதிர்ந்து போன பிரிட்டிஷ் அரசு சின்ன அண்ணாமலை., எஸ்.இராமநாதன்., டி.ஆர்.அருணாச்சலம்., பி.ஆர்.இராமசாமி., கே.ஆர்.எஸ்.முத்து ஆகிய ஐவரையும் கைது செய்ய ஆகஸ்ட் 15ஆம் தேதி 'கைது வாரண்ட்' பிறப்பித்தது. கைது வாரண்ட் பிறப்பித்ததை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐவரும் காரைக்குடியில் ஒரு வீட்டில் தலைமறைவாகினர்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் தலைமறைவாக இருந்த வீட்டை விட்டு கிளம்பி பக்கத்து தெருவில் உள்ள ஐக்கிய இளைஞர் சங்கத்திற்கு சென்று பத்திரிகை படித்து விட்டு வருவதாக சின்ன அண்ணாமலையும் எஸ்.இராமநாதனும் சென்றனர்.

அவர்கள் இருவரையும் மப்டி-யில் இருந்து கவனித்துக் கொண்டுயிருந்த குருசாமி நாயுடு மற்றும் காந்திமதிநாத பிள்ளை ஆகிய காவலர்கள் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் இரண்டு லாரிகளில் பறந்து வந்த போலீஸார் சங்க கட்டிடத்தை சுற்றி வளைத்தனர் சின்ன அண்ணாமலையையும் எஸ்.இராமநாதனையும் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தனர். அன்றிரவே கே.ஆர்.எஸ்.முத்து தலைமையில் நான்கு இளைஞர்கள் தேவகோட்டை சப் கோர்ட் முன் மறியலில் ஈடுபட தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அடுத்த நாள் அதாவது அந்த கொடூர சம்பவம் நடந்தேறிய நாள், ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் அரு.சிற்சபேசன், சித.பெரி.சிதம்பரம், சௌ.சே.இராமநாதன், ஆர்ச் அண்ணாமலை ஆகிய நான்கு இளைஞர்கள் 'சரஸ்வதி வாசக சாலை'யிலிருந்து வீரநடைப்போட்டு, நெற்றியில் வீரத்திலகத்துடன், வந்தே மாதரம்! வந்தே மாதரம்! என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு 'கோர்ட்' நோக்கி நடந்தனர்.

தேவகோட்டை 'ஆர்ச்' அருகே இருந்த 'சப் கோர்ட்' வாசலை அடைந்ததும் "ஆங்கிலேயரின் அநீதியை நிலைநாட்டும் நீதி மன்றங்களை பொதுமக்களும், வழக்கறிஞர்களும் ஊழியர்களும் புறக்கணிக்க வேண்டும்" என்று முழங்கினர்.

சுற்றி கூடி நின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து கோஷம் போட தொடங்கினர். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த குருசாமி நாயுடுவும் காந்திமதிநாத பிள்ளையும் மக்களிடையே மாட்டிக் கொண்டனர். காட்டிக் கொடுத்த இருவரையும் மக்கள் அடித்து நொறுக்கினர். அதிலிருந்து தப்பிச்சென்ற காந்திமதிநாத பிள்ளை கோர்ட் பகுதியிலிருந்து ஒன்றரை மயில் தொலைவிலுள்ள திண்ணஞ் செட்டி ஊருணி தென்கரையில் இருந்த தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சென்று "கோர்ட் முன் பெரிய கலவரம் நடந்து கொண்டு இருப்பதாகவும், குருசாமி நாயுடுவை மக்கள் அடித்து கொன்று விட்டதாகவும்" சொன்னான்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீராச்சாமி ஐயரும் சப் இன்ஸ்பெக்டர் கமருதீனும் மாஜிஸ்திரேட் 'வாக்கர்'-ஐ சந்தித்து நடந்ததை கூறி ஸ்டேஷனில் இருந்த மொத்த பன்னிரெண்டு போலீசாரையும் கூட்டிக் கொண்டு 'ஆர்சு' பகுதிக்கு வந்தனர். உண்மையில் குருசாமி நாயுடு கொல்லப்படவில்லை, போலீஸ்காரர்களை கண்ட மக்கள் மேலும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

தேவகோட்டை தாலுகா மாஜிஸ்திரேட் 'வாக்கர்' என்கிற ஆங்கிலேய கொடூரன், என்ன? ஏது? என்று எதுவும் விசாரிக்காமல் அனைவரையும் சுட உத்தரவிட்டான். அவனின் உத்தரவுப்படி பன்னிரெண்டு போலீசாரும் நிரபராதிகளான மக்களை சுட தொடங்கினர். முதலில் 'வி.தர்மராஜன்' என்பவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார், பலர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இச்சமயத்தில் மேலும் கோபம் கொண்ட தேச பக்தர்கள் புதிதாக ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பளிங்கு மாளிகையான 'தேவகோட்டை சப் கோர்ட்'-ஐ தீயிட்டு எரித்தனர். அரசாங்கம் நடத்திவந்த பேருந்து நிறுவனமான 'சிம்சன் கம்பேனி' பேருந்துகளையும் எரித்தனர்.

குண்டடிப்பட்ட ஒருவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுக் கொண்டிருந்தார் இதை பார்த்த பதினெட்டு வயதுகூட நிரம்பாத இளைஞன் கிருஷ்ணன் தண்ணீர் எடுக்க சென்றான்.

தண்ணீர் எடுக்க சென்ற அந்த இளைஞனையும் சுட்டு வீழ்த்தினர் கொடூர குணம் படைத்த போலீசார்.

துப்பாக்கி குண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது, நிலைமை மோசமானதை கவனித்த போலீசின் கையாளான மோட்டர் மெக்கானிக் ஒருவன் குறுக்கு பாதையில் காரைக்குடிக்கு ஓடிச் சென்று காரைக்குடி நகர் காவல் நிலையத்தில் நடந்ததை தெரிவித்தான். உடனே காரைக்குடி போலீசார், அங்கு தயாராக இருந்த மலபார் போலீசார் நாற்பது பேரை இரண்டு லாரிகளில் ஏற்றி தேவகோட்டைக்கு அனுப்பிவைத்தனர்.

கலவரமும் துப்பாக்கிச் சூடும் நடந்த 'ஆர்ச்' பகுதி தேவகோட்டையின் நுழைவில் இருந்ததால், ஊரில் நுழைந்ததும் மலபார் போலீசார் கண்மண் தெரியாமல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தினர். திடீரென்று புதிய போலீஸ் படை வந்ததையும் கண்மண் தெரியாமல் சுடுவதையும் கண்ட பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து, சிதறி ஓடத்தொடங்கினர்.

ஆங்கிலேயரின் இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் அந்த இடத்திலேயே பிணமாயினர்! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கீழே சாய்ந்தனர்.

போலீசார் சாலையில் கிடந்த ஐம்பது பிணங்களில் ஆறை மட்டும் தூக்கி தங்கள் பஸ்சின் மேற்பகுதியில் போட்டனர். மேலும் சுமார் ஐம்பது பேரைக் கைது செய்து லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.

தேவகோட்டை நகரம் அன்றிரவு சுடுகாடு போலத் தோன்றியது. ஆர்ச் பகுதியில் எங்கு நோக்கினும் ரத்தமும் பிணங்களும் படுகாயமுற்றோர்களும் கிடந்ததால் போர்க்களம் போல் காட்சியளித்தது.

மலபார் போலீசாரால் சுடப்பட்டு மாண்ட 50 பேரில் உடனடியாக அடையாளம் காணப்பட்டவர்கள்; 1.வி.தருமராஜன், 2.கிருஷ்ணன், 3.மணிவண்ணன், 4.பால்க்கார நடேசன்,  5.சாவல்கட்டு,  6.மணியன்.

மறுநாள், ஆகஸ்ட் 18ஆம் தேதி மேலும் பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை வட்டாரத்தில் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தி போராட்டம் நடத்திய தீவிரவாதிகளாக  டி.ஆர்.அருணாச்சலம், ஆர்ச் அண்ணாமலை, அள.சுப.திருநாவுக்கரசு, முகுந்தராஜ ஐயங்கார், கே.எம்.வல்லத்தரசு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேவகோட்டை நகரில் 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தியது, பொதுக்கூட்டம் நடத்தியது, சப் கோர்ட் முன்னால் மறியல் செய்தது, கலவரம் புரிந்து கோர்ட் நடவடிக்கைகளை தடுத்தது, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோர்ட் கட்டிடத்தையும் அங்கிருந்த கோர்ட் சாமான்களையும் ஆவணங்களையும் எரித்தது, போலீசாரை தாக்கியது ஆட்சிக்கு எதிராக சதி செய்தது முதலிய குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 120 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. 'தேவகோட்டை கலவர வழக்கு' என்று அழைக்கப்பட்ட அதில் 73 பேரு‌க்கு 2 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தேவகோட்டையில் நடந்த இந்த ஆகஸ்ட் புரட்சி அத்தோடு நிற்கவில்லை! திருவாடானை, தொண்டி, திருவேகம்பத்தூர், முப்பையூர் ஆகிய ஊர்களிலும் வெடித்து பரவியது.

இந்த ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டையில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளில் நினைவாக, போராட்டம் நடந்த ஆர்ச் பகுதியில் நாட்டின் விடுதலைக்கு பின் நினைவுத் தூண் நிறுவப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அதற்கு 'தியாகிகள் பூங்கா' என்றும் பூங்கா அமைந்துள்ள சாலைக்கு 'தியாகிகள் சாலை' என்றும் பெயரிடப்பட்டது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூறுவோம். ஜெய் ஹிந்த்! 


அன்பன், 
பழ.கைலாஷ்


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...