Followers

Tuesday, December 23, 2025

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

 பழ.கைலாஷ்


19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். தமக்கு இன்னும் முருகன் அருள் செய்யவில்லையே என்று கோபம் வந்து விட்டால் எழுதிய பாடல்களை கிழித்து ஆற்றில் விட்டுவிடுவாராம். நீரில் மட்டுமின்றி நெருப்பிலும் இடுவாராம். பாடி எழுதாமல் போன பாடல்களும் பல. இப்படி எழுதாது போனவை, நீரில்விட்டவை, நெருப்பிலிட்டவை போக இதுவரை நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் சுமார் 50,000 என திருவாமாத்தூர் கௌமார சபையினர் கணக்கு வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றுள் சுமார் 30,000 பாடல்கள் அச்சில் ஏறி உள்ளன. இன்னும் பல சுவடிகளிலேயே உள்ளன.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

இவர் வள்ளலார், ஆறுமுகநாவலர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வன்றொண்டர் நாராயணன் செட்டியார் ஆகியோரின் சமகாலத்தவர்.

திருநெல்வேலி நகரில் சைவ வேளாளர் மரபில் செந்நிநாயகம் பிள்ளை - பேச்சிமுத்து அம்மாள் இணையரின் மகனாக பிறந்தவர். இயற்பெயர் சங்கரலிங்கம். வண்ணப்பாடல் பாடுவதில் வல்லவர் என்பதால் "வண்ணச்சரபம்" என்றும், கையில் தண்டத்தைக் கொண்டிருந்ததால் "தண்டபாணி சுவாமிகள்" என்றும் அழைக்கப்பட்டார். மேலும் இவருக்கு முருகதாசர், ஓயாமாரி, திருப்புகழ் சுவாமிகள் என இன்னும் பல பட்டப்பெயர்கள் உண்டு. 

அறு சமையக் கடவுளையும் சமமாக துதி செய்பவர். உடல் முழுதும் திருநீறு பூசி, இரு தோள்பட்டைகளில் திருநாமம் தரித்து, கழுத்தில் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பார்.

இவர் செட்டிநாட்டுக்கு வந்து தங்கியிருந்து பல தலங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இதற்கு ஆதார நூல்களாக இருப்பவை, தண்டபாணி சுவாமிகளே தம் வரலாற்றை செய்யுளாக பாடிய "குருபரதத்துவம்" என்னும் நூல். அதில் 'நாட்டுக்கோட்டை சருக்கம்' எனும் பகுதியில் அவர் செட்டிநாட்டுக்கு வந்து நிகழ்த்திய அற்புதங்களை பதிவு செய்துள்ளார்.

பின்னர் தண்டபாணி சுவாமிகளின் மகன் தி.மு.செந்நிநாயகம் சுவாமிகள் பாடிய "தண்டபாணி விஜயம்" என்னும் செய்யுளிலும், "தண்டபாணீயம்" என்னும் உரைநடை நூலிலும் தண்டபாணி சுவாமிகளின் பேரன் தி.செ.முருகதாச சுவாமிகள் எழுதிய "தண்டபாணி சுவாமிகள் வரலாறு" என்னும் நூலிலும் செட்டிநாட்டு விஜயம் குறித்த தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

இவர் தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஈழம் முதலிய பல பகுதிகளுக்குச் சென்று பல திருத்தலங்களில் பற்பல பாடல்களை பாடி இருக்கிறார். செல்லாத தலம் இல்லை பாடாத கடவுள் இல்லை என்று கூட நாம் கூறலாம். 

ஒருமுறை பழனி சென்றிருக்கையில் முருகனை தரிசித்து விட்டு அடிவாரத்தில் சில காலம் தங்கியிருந்தார். ஒருநாள் முருகன் இவர் கனவில் செட்டியார் வடிவில் தோன்றி "நம் இனத்தவரிடம் செல்க" என்றார். அடுத்த நாளே அங்கிருந்து புறப்பட்டு மதுரை, இராமநாதபுரம் சென்று செட்டிநாட்டில் நகரத்தார் அதிகம் வசிக்கும் தேவகோட்டை நகர் வந்தடைந்தார். 

தேவகோட்டையில் வேதாந்தம் கருப்பன் செட்டியாரின் தனித் தவச்சாலையில் தங்கி இருந்தார். அவர் சுவாமிகளை தேவகோட்டை நகரத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

தேவகோட்டை பெரும்புலவர் வன்றொண்டர் நாராயணன் செட்டியார் சுவாமிகளுடன் நன்கு பழகி வந்தார். அப்போது "காற்றே பஞ்சாயிருக்கும் காண்" என வெண்பா ஈற்றடி கூறி மேலே மூன்று வரிகளை சேத்து பாடச் சொன்னார்.

"கடுஒழுகும் வாய்க்கினிய காசினியிற் றேர்ந்து

கொடுபருக்க ஒட்டாது கொண்டு - நெடுநாளா

மாற்றே(வு) உறங்குகின்ற மாசுணத்தோல் மெத்தைக்கு

காற்றேபஞ் சாயிருக்கும் காண்."

என சுவாமிகள் பாட வன்றொண்டர் மனம் மகிழ்ந்தார்.

சுவாமிகளிடம் தேவகோட்டை மேலவிட்டு விர.லெ.சிதம்பரம் செட்டியார் தமக்கு ஆண் மகப்பேறு வேண்டினார். "எனக்கு ஊரில் இப்பொழுது உள்ள கடனை நீ அடைத்தால், முருகனிடம் உனக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டுகிறேன்" என்றார் சுவாமிகள். திருநெல்வேலியில் கிணறு தோண்டுவதற்காக சுவாமிகள் கடன் வாங்கி இருந்தார், அக்கடனை அடைக்க அலைந்து திரிந்ததை அவரே தம் பாடல்களில் பதிவு செய்திருக்கிறார். அந்த கடன் ஆயிரம் ரூபாயை சிதம்பரம் செட்டியார் அடைத்தார். ஆகையால் செட்டியாருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தேவகோட்டை நகரச்சிவன் கோயில் பாலதண்டாயுதபாணி மீது பிள்ளைத்தமிழ், அந்தாதி, 36 திருப்புகழ் பாடல்கள் மற்றும் தண்டபாணி பதிகம் உள்ளிட்டவை பாடி ஆண்டவனின் அருள் செட்டியாருக்கு கிட்டும் படி வேண்டினர். ஆண்டவன் திருவருளால் அடுத்த ஆண்டே சிதம்பரம் செட்டியாருக்கு ஆண் பிள்ளை பிறந்தது.

மேலும் நகரச்சிவன் கோயிலில் எழுந்தருளும் சுந்தரேஸ்வரர் மீது ஒரு பதிகமும், மீனாட்சி அம்மை மீது ஒரு கவியும் பாடியுள்ளார்.

ஒரு நாள் சுவாமிகள் ஒரு பிராமணர் வீட்டில் உணவு அருந்தி விட்டு, திண்ணையில் ஓய்வு எடுத்த சமயம், அடுத்த திண்ணையில் வன்றொண்டரின் மாணவர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் அருணகிரிநாதர் பாடலை ஒரு சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். "நான் இச்சிறுவனுக்கு இப்பாடலை சொல்லிக் கொடுக்கலாமா?" என்று சுவாமிகள் கேட்க, "நீங்கள் யார்?" என்று ஐயர் கேட்டார். "நான் திருநெல்வேலிக்காரன்" என்றார். "அப்படியா தாராளமாக நீங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கலாம், உங்களுக்கு தண்டபாணி சுவாமிகளை தெரியுமா? அவர் நலமா?" என்று அன்புடன் ஐயர் கேட்டார். அதற்கு சுவாமிகள் "அடியேனை உலகத்தார் அப்படி கூறுவர்" என்றார். அதைக் கேட்டதும் ஐயர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து அன்று முதல் சுவாமிகளின் மாணவராக சேர்ந்தது வண்ணம் பாடும் திறன் கற்றார்.

தேவகோட்டை அருகே கோட்டூரில் தேவார பாடல் வைப்புதலமான அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு சுவாமிகள் சென்றிருந்தபோது, ஒரு அன்பர் இன்முகத்தோடு நல்உணவு பரிமாறியதை தனிப்பாடல் ஒன்றில் பாடியுள்ளார்.

"கோட்டூரில் சைவன்முகம் கோணாமற் கூடத்தில்

ஈட்டுதென்னை ஓலைஇலை கொணர்ந்து - போட்டெனக்குச்

சோறும் இலைக்கறியும் சுண்டைக்கா யும்பருப்புச்

சாறுமிட்டுப் பெற்றான் தவம்"

இன்றும் கோட்டூரில் வருடம் தோறும் சிவராத்திரியை ஒட்டி தேவகோட்டை திண்ணப்ப செட்டியார் வகையார் அளிக்கும் அன்னதானம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தண்டபாணி சுவாமிகள் குன்றக்குடிக்கு சென்று சண்முகநாத பெருமானை தரிசித்து ஆறு வகுப்புகளும் வண்ணமும் பாடி அரங்கேற்றினார். இதை அறிந்த காரைக்குடி நகரத்தார் சுவாமிகளை காரைக்குடிக்கு அழைத்துவந்து 500ரூபாய் கொடுத்து சிறப்பு செய்தார்கள். இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. செட்டியாரை போன்ற தோற்றத்தில் வந்த முருகப் பெருமான் வண்ணச்சரபரிடம் சற்று நேரம் பேசி இருந்துவிட்டு மறைந்துள்ளார். இந்நிகழ்ச்சியை சுவாமிகள் "காரைநகர்ச் செட்டியுருக் காட்டினானே" என்ற பதிகத்தில் பாடியுள்ளார். மேலும் சில நாட்கள் காரைக்குடியில் தங்கி இருந்த போது காரைக்குடி நகரச்சிவன் கோயிலில் எழுந்தருளும் சுந்தரேஸ்வரர் மீது ஒரு பதிகமும், சுப்பிரமணியர் மீது 36 திருப்புகழ் பாடல்களும் பாடியுள்ளார்.

அரிமழம் நகரச்சிவன் கோயிலில் எழுந்தருளும் சுந்தரேஸ்வரர் மீது ஒரு பதிகமும், முருகன் மீது வெண்பாவும், திருப்புகழும் பாடியுள்ளார்.

கானாடுகாத்தான் அருகே பெரியகோயில் என்று அழைக்கப்பெறும் சௌந்தரநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளும் சிவன் மீது வெண்பாவும், பதிகமும், முருகன் மீது திருப்புகழும் பாடியுள்ளார்.

கோவிலூரில் உள்ள விநாயகர் மீது "கழனிநகர் கணபதி பதிகம்" பாடியுள்ளார். செம்பொன்மாரி முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

எப்போதும் நகரத்தார் புலவர்களையும் தமிழுக்கு தொண்டாற்றுபவர்களையும் ஆதரிப்பது வழக்கம். வண்ணச்சரபரையும் ஆதரித்து உள்ளனர்.


நமது செட்டிநாடு டிசெம்பர் 2025.




Thursday, November 20, 2025

செட்டிநாட்டில் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் பாகம் -2

- பழ.கைலாஷ்



கவனர் பென்ட்லாண்ட் 


காரைக்குடி:

1916 செப்டெம்பர் 20ஆம் தேதி காலை 07:30 மணியளவில் காரைக்குடி வந்தடைந்தார் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட். காரைக்குடி யூனியன் மெம்பர்களாலும் நகரத்தாராலும் வரவேற்கப்பெற்று அ.மு.க.முத்தையா செட்டியார், க.வெ.சித.கரு.கருப்பன் செட்டியார் ஆகியோரால் மாலை அணிவிக்கப்பட்டது. இரண்டு உபச்சார பத்திரங்கள் வாசித்து அளிக்கப்பட்டன.

1913ஆம் ஆண்டு முத்த.வெ.வெள்ளையன் செட்டியாரால் தொடங்கப்பெற்ற "ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்தியாசாலை"-க்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க திவான்பகதூர் ஆ.வி.பழ.சிதம்பரம் செட்டியாரால் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக கவர்னர் காரைக்குடி நகரச்சிவன் கோயிலின் தென்கரையில் போடப்பட்டிருந்த அலங்காரக் கொட்டகைக்கு சென்றார்.


பள்ளி முதல்வர் ஜி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் வரவேற்புரை வாசித்தார். ஆ.வி.ப.முரு.மு.முருகப்ப செட்டியார், அ.வீர.ராம.சொக்கலிங்கம் செட்டியார், சா.லெ.செட்டியப்ப செட்டியார், வெ.மு.லெ.லெட்சுமணன் செட்டியார், வயி.வீர.இராமசாமி செட்டியார், வெ.பெரி.சா.சாமிநாதன் செட்டியார், இராம.வீர.மு.வீரப்ப செட்டியார், மெ.யெ.மெ.ஆவிச்சி செட்டியார் உள்ளிட்ட நகரத்தார் பலர் கவர்னருக்கு மாலை அணிவித்து அறிமுகமாகிக் கொண்டார்கள். மேலும் அலங்காரக் கொட்டகையில் இராமநாதபுரம் மன்னர், சிவகங்கை மன்னர், பாப்பநாட்டு ஜமீன்தார், பூண்டி வாண்டையார் என பல பெரும்புள்ளிகள் இருந்தனர்.

கவர்னர் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய உடன் ஆ.வி.பழ.சிதம்பரம் செட்டியார் புத்திரரும் மேற்படி பள்ளி மாணவருமான நடேசனால் பூச்செண்டு கொடுக்கப்பட்டு மாணவர் அனைவராலும் வாழ்த்து பாடப்பட்டது.

பின்னர் இந்த பள்ளி அருகே மெ.செ.மெ.மெ.சொக்கலிங்கம் செட்டியாரால் கட்டப்பெறும் பெண்கள் பாடசாலை கட்டிட வளாகத்துக்கு சென்றார்.

மெ.செ.செ.முத்துராமன் செட்டியார் கவர்னரை வரவேற்று மாலை அணிவித்தார். மெ.செ.மெ.மெ. சொக்கலிங்கம் செட்டியாரால் வரவேற்புரை வாசிக்கப்பட்டது. 

மெ.செ.சொக்கலிங்கம் செட்டியார், மெ.ப.சு.காசிச்செட்டியார், மெ.செ.அ.வெ.அண்ணாமலை செட்டியார், மெ.செ.சா.மு.சிதம்பரம் செட்டியார், அ.ரெங்கசாமி ஐயங்கார் ஆகியோர் கவர்னருக்கு மாலை அணிவித்து அறிமுகமாகிக் கொண்டார்கள்.

கட்டிடத்திற்கு கவர்னர் அடிக்கல் நாட்டிய உடன் போர்டு பெண்கள் பாடசாலை மாணவி சா.இராம.அரு. பொற்கொடியாள் பூச்செண்டு கொடுக்க சகமாணவிகளால் வாழ்த்து பாடப்பட்டது.

காரைக்குடி நகரத்தாரால் மெட்ராஸ் மருத்துவமனைக் கப்பலுக்காக கவர்னரிடம் 15,000ரூபாய் நிதி கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு கவர்னருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் அனைத்தும் தங்க ஜரிகை மாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


கோட்டையூர்:

காரைக்குடியிலிருந்து கோட்டையூர் சென்றார். நகரத்தார் சார்பிலும் கண்டனூர் யூனியன் பஞ்சாயத்தார் சார்பிலும் இரண்டு உபச்சார பத்திரங்கள் வாசிக்கப்பட்டது. அதில் "இலங்கையில் குவாரண்டைன் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் மற்றும் அறந்தாங்கியிலிருந்து காரைக்குடிக்கு இரும்புப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கவர்னர் "இலங்கை குவாரண்டைன் குறித்து அந்த அரசாங்கத்திடம் நான் பேசி வருகிறேன் கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமநாதபுரம் இரும்புப்பாதை போடும்போது இங்கேயும் இரும்புப்பாதை போடப்படும்" எனக்கூறினார்.

பின்னர் நகரத்தார் சார்பில் போர்நிதிக்கு 15,000ரூபாய் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. 


பள்ளத்தூர்:

கோட்டையூரிலியிருந்து பள்ளத்தூர் சென்றார். நகரத்தார் சார்பில் வரவேற்று உபச்சார பத்திரம் வாசிக்கப்பெற்றது. அதில் "வருமான வரியை பொருத்தவரை மெட்ராஸ் மாகாணத்திலேயே இந்த ஜில்லாவில் தான் அதிக வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நகரத்தார்கள் பழைய வழக்கப்படி பனைஓலைகளில் கணக்கு எழுதி வருவதால், ஆங்கில அரசு அலுவலர் அல்லாத, இந்த கணக்குகளை சரி பார்க்கத்தெரிந்த ஒரு பெரியவரை கௌரவ பொறுப்பில் நியமிக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கவர்னர் "அரசு அலுவலர் அல்லாத ஒருவரை கணக்கு பரிசோதகராக நியமிப்பது குறித்து ஏற்கனவே நமது அரசாங்கத்தால் ஆலோசிக்கப்பட்டு கைவிடப்பட்டது. சென்ற ஆண்டு செட்டிநாட்டு கணக்கு முறைகளை நன்கு பழகிய மூன்று அரசு அலுவலர்களை நியமித்துள்ளோம். இவர்களின் செயல்பாடுகளை பார்த்து அது சரிபட்டுவருமானால் தொடர்ந்து அரசு அலுவலர் நியமிக்கப்படுவார்கள் இல்லையென்றால் ஆலோசிக்கப்படும்" என்று கவர்னர் கூறினார்.

பள்ளத்தூர் நகரத்தார் சார்பில் போர்நிதிக்கு 6000ரூபாய் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் உ.அ.உ.க.இராமநாதன் செட்டியாரால் 1500ரூபாய் மருத்துவமனைக் கப்பலுக்காக கொடுக்கப்பட்டது.


கானாடுகாத்தான்:

காலை 10 மணி அளவில் கானாடுகாத்தான் சென்றடைந்தார் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் நகரத்தாரால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்தியன் வங்கி நிறுவனர் திவான்பகதூர் இராமசாமி செட்டியாரால் உபச்சார பத்திரம் ஒன்று வாசிக்கப்பெற்றது. அதில் "இனி வரும் கவர்னர்கள் தங்கள் பயணத்தில் செட்டிநாட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நகரத்தாரில் ஒருவருக்கு எப்போதும் சட்டசபையில் ஒரு இடம் தர வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பின்னர் கவர்னர், ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மாளிகையில் மத்திய விருந்து உண்டு ஓய்வெடுத்தார். அந்த மாளிகை அப்போது தான் புதிதாக கட்டப்பட்டிருந்தது. அந்த மாளிகையில் தங்கிய முதல் கவர்னர் இவர் தான். பின்னர் லார்ட் வெல்லிங்டன், லார்ட் கோஷென், லார்ட் ஆர்ச்சிபால்ட் நை உள்ளிட்ட கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் அந்த மாளிகையில் தங்கியுள்ளார்கள்.

மாலை 03:30 மணிக்கு கானாடுகாத்தானில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் நிதி உதவியில் கட்டப்பெறும் "லேடி பென்ட்லாண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை"க்கு அடிக்கல் நாட்டினார். நம் நாட்டு மருத்துவத்தில் அதிக நன்மைகள் இருந்த போதிலும், மேநாட்டு நவீன வைத்திய முறைகள் விரைவில் குணப்படுத்தக்கூடியதாக இருப்பதாலும் பிரசவத்திற்கு ஏற்றதாக இருப்பதாலும் இந்த மருத்துவமனையை தாம் நிறுவ முன் வந்திருப்பதாக அண்ணாமலை செட்டியார் கூறினார்.


லேடி பென்ட்லாண்ட் மருத்துவமனை, கானாடுகாத்தான்


மாலை 05:00 மணிக்கு C.V.CT.கருப்பன் செட்டியாரால் கட்டப்பெறும் "மீனாட்சி பெண்கள் பாடசாலை"க்கு அடிக்கல் நாட்டினார். 

கானாடுகாத்தான் அருகே பெரியகோயில் என்று அழைக்கப்பெறும் சௌந்தரநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலுக்கு சென்று சுற்றிப் பார்த்தார், மேலும் நகைகள் மற்றும் வாகனங்களையும் பார்த்தார். இந்தக்கோயில் ஆதியில் பாண்டிய மன்னனால் கட்டப்பெற்று காலப்போக்கில் சிதலமடைந்தபின் கானாடுகாத்தான் மற்றும் நேமத்தம்பட்டி நகரத்தார்களால் அழகிய வடிவமைப்புடன் மீண்டும் கட்டப்பட்டது. 

கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் இந்து மதத்தின் மீதும், இந்திய கலாச்சாரத்தின் மீதும், கோயில் கட்டிடக்கலை மீதும் அதீத ஆர்வம் கொண்டவர். ஆகையால் அவர் இதை சுற்றிப்பார்த்ததில் வியப்பு ஏதுமில்லை. 

பின்னர் கோயில் அருகே நடத்தப்பட்ட தோட்டக் கச்சேரிக்கு சென்றார் அங்கு ரம்மியமான ஊரணி கரையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அங்கு நகரத்தார் சார்பில் திவான்பகதூர் இராமசாமி செட்டியாரால் மருத்துவமனைக் கப்பலுக்காக 10,000ரூபாய் கொடுக்கப்பட்டது.

அந்த ஊரணியில் மிதந்து கொண்டிருந்த தெப்பத்தை கண்டு மகிழ்ந்தார். 

இரவு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மாளிகைக்கு திரும்பினார். மருத்துவமனை கப்பலுக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 15,000 ரூபாய்க்கான காசோலை கொடுத்தார். பிறகு ஆங்கில முறைப்படி கவர்னருக்கு விருந்து நடைபெற்றது. மாளிகையின் மேல்தலத்திலிருந்து வான வேடிக்கைகளை கண்டுகளித்தார். அங்கேயே இரவு தங்கினார். அடுத்த நாள் காலை 06:30 மணியளவில் கானாடுகாத்தானை விட்டுபுறப்பட்டார்.


கோவிலூர்:

கானாடுகாத்தானிலிருந்து மதுரை நோக்கி செல்லும் வழியில் காலையில் கோவிலூரில் சிறிது நேரம் இளைப்பாறினார். அங்கு நகரத்தாரால் கட்டப்பட்டிருக்கும் அற்புத சித்திர வேலைப்பாடுகள் உடைய கொற்றவாளீஸ்வரர் கோவிலை சுற்றிப் பார்த்தார். கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகளால் போர் நிதிக்காக கவர்னரிடம் 50 பவுன் தங்கம் கொடுக்கப்பட்டது. 

மூன்று நாள் செட்டிநாட்டு பயண ஞாபகார்த்தத்துடன் கோவிலூரிலிருந்து புறப்பட்டார். காலை 11 மணிக்கு மதுரை சென்று, அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊட்டி மாளிகைக்கு சென்றடைந்தார்.


---முற்று---


நமது செட்டிநாடு நவம்பர் 2025





Thursday, October 16, 2025

செட்டிநாட்டில் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட்

- பழ.கைலாஷ் -


மெட்ராஸ் மாகாணத்தின் புகழ்பெற்ற ஆளுநர்களுள் ஒருவர் லார்ட் பென்ட்லாண்ட். இவர் 1912 முதல் 1919 வரை மெட்ராஸ் ஆளுநராக இருந்தார். மெட்ராஸ் மாகாண வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். புகழ்பெற்ற பாம்பன் ரயில் பாலத்தை 1914ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இவர் ஆளுநராக இருந்த காலம் முதலாம் உலகப் போர் நடந்துவந்த காலம். இவர் "மெட்ராஸ் போர் நிதி"(Madras War Fund) என்ற கட்டளையை நிறுவி பலரிடம் நிதி திரட்டி, "மெட்ராஸ்" என்கிற பெயரில் ஒரு மருத்துவமனைக் கப்பலை(Hospital Ship) உருவாக்கினார். இந்தக் கப்பலில் சுமார் 300 படுக்கைகள், அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே கருவிகள், மருந்தகம் என அனைத்து வசதிகளும் இருந்தன. இது போரில் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களுக்கு உதவியது.

கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட்

நாட்டுக்கோட்டை நகரத்தார், பொதுவாக சமூகத்தின் மீது பெரும் அக்கறை கொண்டவர்கள். பொது நலனுக்காக பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவது, குளம் வெட்டுவது, சாலை போடுவது போன்ற பல்வேறு அறப்பணிகள் செய்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் முதலாம் உலகப் போரில் காயமடைந்த வீரர்களை காப்பதற்காக "மெட்ராஸ் போர் நிதி"க்கும் வாரி வழங்கியுள்ளார்கள். பிற்காலத்தில் மகாத்மா காந்தி செட்டிநாடு வந்த பொழுது சுதந்திரப் போராட்ட நிதிக்கும் நகரத்தார் பெருவாரியாக உதவியுள்ளார்கள் இதை காந்தி "யங் இந்தியா" இதழில் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ராஸ் மருத்துவமனைக் கப்பலை

மெட்ராஸ் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் போர் நிதி திரட்டுவதற்காக 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செட்டிநாட்டுக்கு வருகை தந்துள்ளார். செட்டிநாட்டுக்கு வந்த முதல் கவர்னர் இவரே. அவரின் செட்டிநாட்டுப் பயணத்தை இக்கட்டுரையில் எழுதியுள்ளேன். இதற்கான சான்றாதாரங்கள் லேடி பென்ட்லாண்ட் தன் கணவர் பற்றி எழுதிய நூலிலும், அன்றைய "தி ஹிந்து" ஆங்கில நாளிதழிலும், தேவகோட்டையில் இருந்து வெளிவந்த "வைசிய மித்திரன்" வார இதழிலும் உள்ளன. அவற்றை கொண்டு இக்கட்டுரையை தொகுத்துள்ளேன்.


ஊட்டி:

1916 செப்டம்பர் 17ஆம் தேதி மாலை கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட் தனது உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஊட்டியிலிருந்து தனி ரயில் மூலம் புறப்பட்டு மறுநாள் காலை மதுரை வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மோட்டார் காரில் செட்டிநாட்டுக்கு புறப்பட்டார். 


திருப்பத்தூர்:

செப்டம்பர் 18ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9:30மணி அளவில் திருப்பத்தூர் வந்தடைந்தார். திருப்பத்தூரில் போடப்பட்டிருந்த மேடையில் குன்றக்குடி ஆதீனகர்த்தர் அண்ணாமலை தேசிக சுவாமிகள் ஒரு வெள்ளித் தட்டில் 1500ரூ வைத்து போர் நிதிக்கு கொடுத்தார். பின்னர் மேலவட்டகை நகரத்தார்கள் சார்பில் கரு.முத்து.தியாகராஜன் செட்டியாரால் ஒரு உபச்சார பத்திரம் வாசிக்கப்பெற்று வெள்ளிப்பெட்டியில் 21,000ரூ வைத்து கொடுக்கப்பட்டது. உபச்சார பத்திரம் என்பது மதிப்புமிக்க நபருக்கு, ஒரு குழுவினர் தங்கள் மரியாதை மற்றும் கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் சமர்ப்பிக்கும் கடிதம். திருப்பத்தூரில் வாசிக்கப்பட்ட உபச்சார பத்திரத்தில், "நகரத்தார் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து பின் பாண்டிய நாட்டுக்கு வந்த கதையும், தற்போது செய்துவரும் கோயில் திருப்பணிகள் மற்றும் சமூகப்பணிகள் குறித்த செய்திகளும், இலங்கையில் குவாரண்டைன்(Quarantine) விதிகளால் தாங்கள் சந்திக்கும் கஷ்டம் குறித்தும், கிராமங்களில் சூதாட்டத்தை தடுப்பதற்கான சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்றும், நகரத்தாரில் ஒருவருக்கு எப்போதும் சட்டசபையில் ஒரு இடம் தர வேண்டும்" என்று கவர்னரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு பதிலளித்த கவர்னர், "நகரத்தார் சரித்திரம் மற்றும் தற்பொழுது நீங்கள் செய்து வரும் சமூகப்பணிகள் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. இலங்கை குவாரண்டைன் குறித்து அந்த அரசாங்கத்திடம் நான் பேசி வருகிறேன் கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும். சூதாட்டத்தை தடுப்பதற்கு ஜில்லா மாஜிஸ்திரேட் தக்க ஏற்பாடு செய்வார். நகரத்தாரில் ஒருவர் எப்போதும் சட்டசபையில் இருப்பார் என்று நான் கூற இயலாது, இருப்பினும் தற்போது உள்ளவர்களைப் போன்று ஆற்றலுடையவர்கள் நகரத்தாரில் இருக்கும் வரை அவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடும்".


பின்னர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு மதிய உணவு அருந்தி மாலை 3:30மணிக்கு திருப்பத்தூரை விட்டு புறப்பட்டார்.


மானகிரி:

திருப்பத்தூரிலிருந்து தேவகோட்டை செல்லும் வழியில் மானகிரியில் லெ.அரு.அருணாச்சலம் செட்டியாரால் கவர்னருக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பெற்றது.


அமராவதிபுதூர்:

மாலை அமராவதிபுதூரில் சிறிது நேரம் கவர்னர் தங்கி இருந்தார். வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் ஒரு உபச்சார பத்திரம் வாசிக்கப்பட்டது. அதில் வயிநாகரம் குடும்பத்தார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல திருத்தலங்களில் செய்திருக்கும் திருப்பணிகளை கூறி, அமராவதிபுதூரில் தபால் இன்ஷூரன்ஸ் வசதி ஏற்படுத்தி தரும்படியும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, திருமயம், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், காரைக்குடி, அமராவதிபுதூர், தேவகோட்டை, காளையார்கோவில் வழியாக சிவகங்கை வரைக்கும் ரயில் பாதை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவர்னர், "வயிநாகரம் திருப்பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி, தபால் இன்ஷூரன்ஸ் பற்றி ஆலோசிக்கப்படும், தற்போது நிதி பற்றாக்குறை இருப்பதால் ரயில் பாதை அமைக்க முடியாது, யுத்தம் முடிந்த பிறகு ரயில் பாதை அமைத்து தரப்படும்" என்றார்.


கவர்னர் விஜயத்தின் ஞாபகார்த்தமாக உசிலாவடி ஊரணியிலிருந்து அமராவதிபுதூர் செல்லும் சாலைக்கு லார்ட் பென்ட்லாண்ட் சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.


தேவகோட்டை:

மாலை 5:30மணிக்கு தேவகோட்டை சிலம்பணி வந்தடைந்தார். ஜமீன்தார் அழ.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார், யூனியன் சேர்மன் சி.சுந்தரம் ஐயர் மற்றும் நகரத்தார் பலர் மாலை அணிவித்து வரவேற்றனர். பேண்ட்வாத்தியங்கள், மேளத்தாளங்கள், குடை, கொடி, ஆளவட்டம் முதலிய எடுபிடிகளுடன் யானை முன் செல்ல கவர்னர் பரிவாரங்களுடன் மோட்டார் வாகனத்தில் மெதுவாக நகரை சுற்றி வந்து நகரச்சிவன்கோயில் எதிரே போடப்பட்டிருந்த அலங்கார பந்தலை அடைந்தார். வழி நெடுக மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்து மக்கள் கவர்னரை காண வந்திருந்தனர். விஸ்தாரமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் நகரத்தார் பலர் கூடியிருந்தனர், தேவகோட்டை நகரத்தார் சார்பில் ராவ்பகதூர் பெரி.சோமசுந்தரம் செட்டியாரால் உபச்சார பத்திரம் வாசிக்க பெற்று மெட்ராஸ் மருத்துவமனைக்கப்பல் செலவுக்காக ஒரு வெள்ளிப்பெட்டியில் 23,000 ரூபாய்க்கான உண்டியல் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. அந்த உபச்சார பத்திரத்தில் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைக்கப்பட்டது, நகரத்தார் சமூகத்தில் ஒருவருக்கு விலங்கு மாட்டப்பட்டால் அவர் ஜாதியை விட்டு நீக்கி வைக்கப்படுவார் என்னும் கொள்கை வெகு நாட்களாக இருந்து வருவதால், நகரத்தாரில் குற்றவாளிகளாக கருதப்படுபவர் நீதிமன்ற முடிவு தெரியும் வரை விலங்கு போடாதிருக்கும்படி ஒரு உத்தரவு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த கவர்னர், "இவ்வாறு ஒரு ஜாதிக்காக எல்லோருக்கும் பொதுவான சட்டத்தில் விளக்கு ஏற்படுத்த முடியாது ஆகையால் நகரத்தார் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டு விலங்கு போட்டவர்களை ஜாதியை விட்டு நீக்காத படி செய்து கொள்வது அவசியமானது" என்று கூறினார்.


மேலும் யூனியன் பிரதிநிதிகளின் சார்பாக சி. சுந்தரம் ஐயர் ஒரு உபச்சார பத்திரம் வாசித்தார் அதில் "தேவகோட்டையில் சகல மக்களும் பயில ஒரு ஹை ஸ்கூல் வேண்டும், ஸ்கூல் கட்ட தேவையான நிதியில் ஒரு பாதியை ஜமீன்தார் தருவதாகவும், மீதியை பெரி.சோமசுந்தரம் செட்டியார் உள்ளிட்ட நகரத்தார் சிலர் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்கள், இதற்கு அரசு அனுமதி தர வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது ஆகையால் குழாய் மூலம் குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும், அதற்குத் தேவையான தொகையில் ஒரு பாதியை நகரத்தார்கள் தருவதாகவும் , மீதி தொகைக்கு யூனியன் கூடுதலாக வரி வசூலிக்க அனுமதி தர வேண்டும். இந்த ஊருக்கு ஒரு முனிசிப்கோர்ட் வேண்டும். இந்த ஊருக்கு வருவதற்கு நல்ல சாலை வசதியும் புதிய ரயில் பாதை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்." என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர், "ஸ்கூல் கட்ட நகரத்தார்களே நிதி தருவதானால் கலெக்டருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், குடிநீர் குழாய் விஷயத்தில் தற்பொழுது உள்ள சட்டப்படி யூனியனால் அதிக வரி விதிக்க முடியாது இருப்பினும் விரைவில் நல்ல வழி ஏற்படும் என நம்புகிறேன்.

சிவில் கோர்ட் அமைக்க யோசனை இருக்கிறது, இது குறித்து ஜில்லா நீதிபதியிடம் நீங்கள் எழுதி கேட்டுக் கொள்ளுங்கள். போக்குவரத்து வசதி, ரயில் பாதை வசதி எல்லாம் யுத்தம் முடிந்த பிறகு கவனிக்கப்படும்." என்று கூறினார். பின்னர் நகரத்தார் ஒவ்வொருவராக கவர்னரிடம் அறிமுகமாகி கொண்டனர். இரவு "சொர்ணவல்லி விலாஸ்"-ல் தங்கினார். கவர்னரின் வருகைக்காகவே இந்த சொர்ணவல்லி விலாஸ் என்னும் பிரம்மாண்ட மாளிகை தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கட்டப்பட்டிருந்தது.

சொர்ணவல்லி விலாஸ்

மறுநாள் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8மணிக்கு பெரி.சோமசுந்தரம் செட்டியாரால் கட்டப்பெறும் "லேடி பென்ட்லாண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை"க்கு வெள்ளிக்கரண்டியால் கவர்னர் அடிக்கல் நாட்டினார். மருத்துவமனை குறித்து சோமசுந்தரம் செட்டியார் கவர்னரிடம் எடுத்துக் கூறுகையில் "சுற்றி 50மைல் தொலைவில் எங்குமே பெண்களுக்கு என பிரத்தியேக மருத்துவமனை இல்லை, இந்த மருத்துவமனை தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் வசதிபடைத்த பெண்கள் என அனைவருக்கும் உதவிகரமாக இருக்கப்போகிறது. நல்ல சிறந்த ஆங்கில பெண் மருத்துவச்சி அதிக சம்பளம் கொடுத்து வரவழைக்கப்பட உள்ளார். இதற்கான நிர்வாக செலவை நகரத்தாரே ஏற்றுகொள்வார்கள். கவர்னரின் மனைவி லேடி பென்ட்லாண்ட் இந்திய பெண்கள் மேல் காட்டும் அபிப்பிராயத்தின் காரணமாக இந்த மருத்துவமனைக்கு அவர்களின் பெயர் சூட்டப்படும்" என்றார். கவர்னர் பேசுகையில், இந்த ஜில்லாவிலேயே இது போன்ற ஒரு பெண்கள் நல மருத்துவமனை இல்லை என்று அந்தக்குறையை நீக்கிய பெரி.சோமசுந்தரம் செட்டியாரை வெகுவாக பாராட்டி பேசினார். (இந்த மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு 1919ஆம் வருடம் திறக்கப்பட்டு நீண்ட காலம் தேவகோட்டையில் செயல்பட்டுவந்தது.)

லேடி பென்ட்லாண்ட் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை

அடிக்கல் நாட்டிய பிறகு கவர்னர் இங்கிருந்து புறப்பட்டு "சத்திரம் சோமசுந்தரம் செட்டியார்" வீட்டுக்கு சென்றார். வாசலில் வந்து வெள்ளி பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சோமசுந்தரம் செட்டியார், கவர்னரை தனது அழகிய மாளிகை போன்ற வீட்டுக்குள் அழைத்து சென்று சுற்றி காட்டினார். கவர்னர் வீட்டின் உள்வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூப்பந்தலின் கீழ் அமர்ந்து செட்டியாரின் வியாபாரம் குறித்தும் புதல்வர்கள் குறித்தும் பரிவுடன் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் செட்டியார் மருத்துவமனைக்கப்பலுக்காக 7000 ரூபாய் உண்டியலை வெல்வெட்டுப் பையில் வைத்து கொடுத்தார், மேலும் யுத்த நிதிக்காக 10,000 இறாத்தல்(Ib) அரிசி கொடுப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு நகரச்சிவன் கோயில் அருகே உள்ள கீழவீட்டுக்கு சென்று சித.முருகப்ப செட்டியாரை சந்தித்து விட்டு மீண்டும் சொர்ணவல்லி விலாஸ் வந்தடைந்தார். மத்திய விருந்துக்கு பின் நகரத்தார் சிலருடன் வியாபாரம் தொடர்பான ஆலோசனைகளை நடத்தினார். 


மாலை 4 மணிக்கு ராவ்பகதூர் பெரி.சோமசுந்தரம் செட்டியாரின் அழைப்பை ஏற்று கள்ளிக்கோட்டையார் வீட்டுக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு, தேவகோட்டை - கண்டதேவி சாலையில் ஜமீன்தாரால் கட்டப்பெறும் கால்நடை மருத்துவமனைக்கு வெள்ளிக்கரண்டியால் அடிக்கல் நாட்டினார். ஜமீன்தாரின் சகோதரர் சொக்கலிங்கம் செட்டியார் மருத்துவமனை குறித்து கவர்னரிடம் எடுத்துரைத்தார். கவர்னர் பேசுகையில், ஜமீன்தார் குடும்பத்தார் வாயில்லாப் பிராணிகள் மீது காட்டும் உருக்கம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது போல் ஜில்லாவில் பல இடங்களில் மருத்துவமனை உருவாக வேண்டும் என்று கூறினார்.

கால்நடை மருத்துவமனை கல்வெட்டு

பிறகு மாலை 5:30மணிக்கு கவர்னர், வைசியசிவானந்த சபையால் நடத்தப்பெற்ற தோட்டக் கச்சேரிக்கு சென்றார். சபையின் தலைவர் இராம.மெ.சித.வைரவன் செட்டியார் தங்கமாலை அணிவித்து வரவேற்றார். வைசிய மித்திரன் பெண்கள் பாடசாலை மாணவிகள் இராஜ வாழ்த்து பாடினர். உள்ளூர் சங்கீத வித்வான் பிர்மஸ்ரீ சங்கர ஐயர் ஹார்மோனியத்தில் ஆங்கில மெட்டு பாடல்கள் வாசித்தார். மாணவிகள் நடனமாடினர். பின்னர் கோலாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம், பூசாரியாட்டம் ஆகியவற்றை கண்டு கொண்டே சிற்றுண்டி அருந்தினார். (இந்த நேரத்தில் கவர்னருடன் குழுப்புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் குறித்த செய்திகள் மட்டுமே உள்ளன தவிர புகைப்படம் கிடைக்கவில்லை.)


மாலை 6:30 மணிக்கு ஜமீன்தாரின் பழைய வீட்டுக்குச்சென்று சேது சமஸ்தான சங்கீத வித்வான் பிர்மஸ்ரீ சேதுராம ஐயரின் சங்கீத கச்சேரியை கண்டு களித்தார். அன்று ஒரே நாளில் தேவகோட்டை நகரத்தார் பலர் போர் நிதிக்காக 46,000ரூபாய் அளித்திருந்தார்கள்.


இரவு 7:30மணிக்கு ஜமீன்தாரின் புதிய பங்களாவான சொர்ணவல்லி விலாஸுக்கு சென்று இரவு விருந்து அருந்தி, வானவேடிக்கைகளை கண்டு களித்துவிட்டு மீண்டும் இரவு அங்கேயே தங்கினார். அன்று(19/09/1916) இரவு அவர் எழுதிய கடிதத்தில் "இன்று காலை முதல் இரவு 11 மணி வரை பட்டாசுகள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இசையுடன் மகிழ்ச்சியாக தேவகோட்டையை சுற்றி வந்தோம், இது எனக்கு கிலாஸ்கோவிற்கு அருகேயுள்ள லென்சி நகரை(ஸ்காட்லாந்து) வெகுவாக நினைவுபடுத்துகிறது. இன்று மட்டும் போர் நிதிக்காக 46,000 ரூபாய் கிடைத்துள்ளது இது உண்மையிலேயே மிக மிக பெரிய தொகை." 


மறுநாள் காலை மனோகரமான ஞாபகார்த்தத்துடன் தேவகோட்டையை விட்டு புறப்பட்டார் கவர்னர் லார்ட் பென்ட்லாண்ட்.


- தொடரும்...


நமது செட்டிநாடு October 2025





Thursday, September 25, 2025

இராமேஸ்வரத்தில் தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணி

-பழ.கைலாஷ் -


அழ.அரு.இராமசாமி செட்டியார் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். இராமநாதபுரம் ஜமீன் நீதிமன்ற நிர்வாகத்தில் இருந்தபோது, மைனர் பாஸ்கரசேதுபதிக்கு தேவையான பொழுதெல்லாம் பண உதவி செய்துள்ளார். சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் வரை 1880கள் வாக்கில் கடன் கொடுத்திருக்கிறார். 

அழ.அரு.இராமசாமி செட்டியார்


பாஸ்கர சேதுபதி மேஜரானபோது அவருடைய உறவினர் ஒருவர், "பாஸ்கர சேதுபதி பெரிய செலவாளி, தேவகோட்டை இராமசாமி செட்டியாரிடம் பல லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். எனவே அவரிடம் ராஜியத்தை ஒப்படைக்கக்கூடாது" என்று தடை உத்தரவு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்தவழக்கில் செட்டியார் சாட்சியாக விசாரிக்கப்பட்ட பொழுது, “ராஜாவை உபசரிப்பது எங்கள் கடமை. அவரை என்றும் உபசரித்து வருவோம் நாங்கள் அவருக்குக் கடன் எதுவும் கொடுக்கவில்லை" என்று கூறியதோடு அதற்கு ஆதாரமாக தம்முடைய கணக்குப் புத்தகங்களையும் நீதி மன்றத்தில் காட்டினார், அதில் பாஸ்கர சேதுபதியிடம் கொடுத்த தொகைகள் மன்னரது பெயரில் பற்று வைக்கப்படாமல், "இராம தனது பற்று" என்று இராமசாமி செட்டியார் பெயரிலேயே பற்று வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் மனு த‌ள்ளுபடி செய்யப்பட்டது. பாஸ்கர சேதுபதியிடமே ராஜியம் ஒப்படைக்கப்பட்டது.


ராஜியம் கிடைக்க காரணமாக இருந்த தேவகோட்டை அழ.அரு.இராமசாமி செட்டியாருக்கு தேவகோட்டையை சுற்றியுள்ள 22 1/2 கிராமங்களை வழங்கி "தேவகோட்டை ஜமீன்" என்கிற அந்தஸ்த்தை வழங்கினார் மன்னர் பாஸ்கர சேதுபதி.

லெட்சுமி விலாஸ்
(தேவகோட்டை ஜமீன்தார் மாளிகை)


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். உப்பூர், இராமேஸ்வரம், உத்திரகோசமங்கை, காளையார்கோயில், ஆவுடையார்கோயில், பெரியநயினார்கோயில், திருப்பாண்டிக்கொடுமுடி, வைகல், மதுரை, திருப்பரங்குன்றம், தேவகோட்டை, காரைக்குடி மற்றும் கோவிலூர் என தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணி செய்திருக்கும் தலங்கள் ஏராளம்.


தேவகோட்டையின் முதல் ஜமீன்தாரான அழ.அரு.இராமசாமி செட்டியாரால் 1890களில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டது. அவருக்கு பின் அவரின் நான்கு மகன்கள் அருணாச்சலம் செட்டியார், சொக்கையா செட்டியார், வெள்ளையன் செட்டியார், நாரயணன் செட்டியார் ஆகியோரால் தொடர்ந்து திருப்பணிகள் செய்ப்பட்டுள்ளன.


இராமேஸ்வரம் கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணி மிக விரிவானது. இவர்களால் கோயிலின் பெரும் பகுதி சீர்திருத்தப்பட்டுள்ளது, இராமநாதசுவாமி சன்னிதியை சுற்றி பழுதடைந்திருந்த பழைய முதல்பிரகாரம் முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிதாக பெரிய முன்மண்டபத்துடன் முதல்பிரகாரம் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது, பர்வதவர்த்தினி அம்மன் பழைய சன்னிதி முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய கருவறை அர்த்தமண்டபம் மஹாமண்டபத்துடன் பிரகாரம் கட்டப்பட்டுள்ளது, கோயிலின் இரண்டாம்பிரகாரத்தின் பெரும்பகுதி கட்டப்பட்டுள்ளது, சேது மாதவர் சன்னிதி உள்ளிட்ட சில சன்னிதிகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளன, கோயிலின் பல பகுதிகளில் தலவரிசைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

ஜமீன்தார் திருப்பணிக்கு முன் சுவாமி சன்னதி முதல் பிரகாரம்


மேலும் கோயிலின் கிழக்கு கோபுரம் முழுமையாக கட்டப்படாமல் இருந்துள்ளது. இந்த கோபுரம் கி.பி.1630களில் தளவாய் சேதுபதி மன்னரால் கட்டத் தொடங்கப்பட்டது. ஆனால் அது தடைப்பட்டது. பின்னர் வந்த சேதுபதி மன்னர்கள் பலர் கோயிலை விரிவுபடுத்தி வரும் சமயம் இந்த கோபுரத்தை எழுப்பும் பணியையும் மேற்கொண்டனர். ஆயினும் இது முடிவடையவில்லை. சுமார் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கிழக்கு கோபுரம் முழுமையாக ஒன்பதுநிலை கோபுரமாக கட்டிமுடிக்கப்பட்டது

கிழக்கு கோபுரம் முழுமையடைந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம்


கோயில் திருப்பணிக்கு வேண்டியகற்கள் அம்பாசமுத்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இரயில் வசதி இல்லாத அக்காலத்தில் மண்டபம் பகுதி இஸ்லாமியர் உதவியுடன் "இராமநாதர்" மற்றும் "பர்வதவர்த்தினி" என்ற பெயருடைய இரண்டு படகுகள் மூலம் கற்களைக் கொண்டு வந்து இராமேஸ்வரத்தில் சேர்த்துள்ளனர்.


தேவகோட்டை ஜமீந்தார் இராமேஸ்வரம் கோயில் திருப்பணிகள் செய்து வந்த காலத்தில், கோயில் நிர்வாகம் தொடர்பாக பாஸ்கர சேதுபதி மன்னருக்கும் பண்டாரத்திற்கும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது 1901ஆம் ஆண்டு நீதிமன்றம் ஜமீந்தார் அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியாரை கோயில் மேலாளராக நியமித்தது. பின்னர் 1912ஆம் ஆண்டு அரசாங்க போட்ட ஸ்கீம் படி கோயில் நிர்வாகத்தை இராமநாதபுர சேதுபதி மன்னருடன் தேவகோட்டை ஜமீன்தாரும் இணைந்து பார்த்து வந்துள்ளனர்.


இராமேஸ்வரம் கோயிலுக்காக தேவகோட்டை ஜமீன்தார் பற்பல நகைகளும் வாகணங்களும் செய்து கொடுத்துள்ளனர்.


கி.பி 1901 மற்றும் கி.பி 1947ஆம் ஆண்டுகளில் சேதுபதி மன்னர்கள் தலைமையில் தேவகோட்டை ஜமீந்தாரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுள்ளது.


×-×-×



Sunday, September 21, 2025

மெட்ராஸ் மேயர் மூவர்.

 ஒரு பழைய புகைப்படம்.



மெட்ராஸ் கவர்னர் லார்ட் ஜார்ஜ் கோஷெனுடன் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது மூன்று மகன்கள் உள்ளனர்.


மூன்று மகன்கள்:-

1. ராஜா சர் முத்தையா செட்டியார்

2. மேயர் இராமநாதன் செட்டியார் 

3. M.A.சிதம்பரம் செட்டியார்

இவர்கள் மூவருமே மெட்ராஸ் மேயராக இருந்தவர்கள். மெட்ராஸின் முதல் மேயர் முத்தையா செட்டியார். உலகிலேயே உடன்பிறந்த சகோதரர்கள் அனைவருமே(மூவர்) ஒரு நகரத்தின் மேயராக இருந்தவர்கள் இவர்கள் மட்டுமே!.  

ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சகோதரரும் இந்தியன் வங்கி நிறுவனருமான திவான் பகதூர் இராமசாமி செட்டியாருக்கு ஆன் வாரிசு இல்லாததால், அண்ணாமலை செட்டியார் தனது இரண்டாவது மகன் இராமநாதனை தனது சகோதரருக்கு சுவீகாரம் கொடுத்துவிட்டார்(தத்துக் கொடுத்துவிட்டார்).

M.A.சிதம்பரம் செட்டியார் பிசிசிஐ (BCCI)யின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சியால் உருவான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

- பழ.கைலாஷ்.

Photo Courtesy : Valliappan Ramanathan, Devakottai.

Wednesday, September 17, 2025

THE DEVAKOTTAI ZAMINDAR

- Kailash PL -



          The Devakottai Zamindar family is considered one of the most notable among the Nattukottai Nagarathars. AL.AR. Ramasamy Chettiar was the first Zamindar of Devakottai.


AL.AR.Ramasamy Chettiar 

As a prominent banker AL.AR. Ramasamy Chettiar was a close friend of King Bhaskara Sethupathi of Ramanathapuram. While the Ramanathapuram Zamin was under court administration, Chettiar provided crucial financial assistance to the minor Bhaskara Sethupathi. Around 1870A.D., he had lent the king approximately three and a half lakh rupees.


​When Bhaskara Sethupathi came of age, one of his relatives filed a case in the Madras High Court seeking a stay order, stating, "Bhaskara Sethupathi is a big spender and has borrowed several lakhs from Ramasamy Chettiar of Devakottai. Therefore, the kingdom should not be handed over to him". When Chettiar was examined as a witness in the case, he stated, "It is our duty to host the king. We will always do so. We have not given him any loan". As proof, he showed his account books in court. The amounts given to Bhaskara Sethupathi were not debited in the king's name but were instead listed as expenditures made in Ramasamy Chettiar's own name. The petition was thus dismissed, and the kingdom was handed over to Bhaskara Sethupathi.


​In gratitude for helping him regain his kingdom, King Bhaskara Sethupathi granted AL.AR. Ramasamy Chettiar, Twenty two and a half villages around Devakottai and and bestowed upon him the official status of "Devakottai Zamindar."


The Devakottai Zamindar Family had banking business and spinning mills. They traded in East Asian countries such as Burma, Sri Lanka, Malaysia, Singapore, and Vietnam. Notably, A.M.Murugappa Chettiar, founder of the great Murugappa Group, worked as an agent of Zamindar initially.


The Devakottai Zamindars were renowned patrons of temple renovation, undertaking extensive work in numerous sacred places, including Uppur, Rameswaram, Uthirakosamangai, KalaiyarKovil, ThirupandiKodumudi, AvudaiyarKovil, PeriyaNainar Kovil, Vaigal, Madurai, Thirupparankundram, Devakottai, Karaikudi and Koviloor.


​The family also served as trustees for major temples, including the Madurai Meenakshi Amman Temple, the Rameswaram Ramanathaswamy Temple, and the KalaiyarKovil Kaleeswara Temple.


The Devakottai Zamindars were also pioneers in public service. When Rajaji Hospital in Madurai was first constructed during the British era, the Devakottai Zamindar family funded the construction of its very first building. They went on to establish a veterinary hospital, school, and ponds in Devakottai. Notably, they founded Chettinad's first girls' elementary school at their palace in Devakottai.They also provided a large piece of land to the government for the construction of a TB hospital in Somanathapuram.


The Devakottai Zamin has three mansions in Devakottai. The first is their ancestral home, which is about 250 years old. The second, "Swarnavalli Vilas," was built around 1915A.D., and the third, "Lakshmi Vilas," was built in 1928A.D.


This article gives a short history of the Devakottai Zamindars. There are many more historical facts, but i have summarized only a few here.

"மணிமகுடத்தில் ஒரு மாணிக்கம்!" காசி - இராமேஸ்வரம் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

- பழ.கைலாஷ் -


முதல்வர் திரிவேணித்தீர்த்தத்தை வழங்கும் காட்சி
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுடன் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள், C.RM.அருணாச்சலம் செட்டியார், விஸ்வ பூஷன் மிஸ்ரா.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பாரத தேசத்தில் வடக்கே காசி முதல் தெற்கே சேது வரை பற்பல புண்ணிய தலங்களில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. நகரத்தார் செய்த மற்றும் செய்து வரும் திருப்பணிகளுள் மணிமகுடமாய் திகழ்வது காசி திருத்தலத்தில் காசிவிஸ்வநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை செய்து வரும் பூஜையே! இது சுமார் 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவி பாடுவார் முத்தப்பர்,

"காசியிலும் சேதுவிலும் கனகத் தருமமிட்டு

வாசமுள்ள ஈசர் பதம் மனம் பணிந்தார்"

என்று அன்றே நகரத்தார் வாரணாசியிலும் இராமேஸ்வரத்திலும் செய்த திருப்பணிகளை குறிப்பிட்டு பாடியுள்ளார்.


இன்று நகரத்தார்(ஏஎல்.ஏஆர் கட்டளை) சார்பில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள புனிதநீர் பரிமாற்றம், மணி மகுடத்தில் ஒரு மாணிக்கமாக திகழ்கின்றது.


காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் கோடித்தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கையில் நீராடி மணலை கரைத்து, காசி விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பிரயாகையில் திரிவேணி தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவுசெய்வார்கள்.


விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை(AL.AR Trust) சார்பில் இராமேஸ்வரத்தில் இராமநாதருக்கு தினம்தோறும் மாலை திரிவேணித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தற்போது இதன் புதிய முகமாக காசியில் காசிவிஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யும் மரபு ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளையுடன் ஏஎல்.ஏஆர் கட்டளை இணைந்து திரிவேணி மற்றும் கோடித்தீர்த்தத்தை பரிமாறிக்கொள்ளும் ஆன்மீக வழிபாட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 28ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாண்புமிகு யோகி ஆதித்யநாத் அவர்களால் திரிவேணித்தீர்த்தம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள் முன்னிலையில் ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் அவர்களிடம் வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் 9ஆம் தேதி காசி விஸ்வநாதருக்கு இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோடித்தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வில், இதற்கு மிகமுக்கிய காரணகர்த்தராக திகழ்ந்த கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா, ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார், வாரணாசி ஆட்சியாளர் இராஜலிங்கம் இ.ஆ.ப மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோடித்தீர்த்தத்தை காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்கும் காட்சி..

கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் காட்சி.


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணிகள் ஏராளம்.


19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமிச் செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, பழுதடைந்திருந்த இராமநாத சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி ஆகியன முற்றிலுமாக பிரித்து புதிய கருங்கற்களால் கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.


தற்போது தேவகோட்டை ஜமீந்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசியில் தொடங்கியிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஏப்ரல் மாதம் கோவிலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த காசி விஸ்வநாதர் கோயில் சி.ஈ.ஓ விஸ்வ பூஷன் மிஸ்ரா, கோவிலூர் சுவாமிகளுடன் இராமேஸ்வரம் வந்து நம் நகரவிடுதியில் தங்கியிருந்த போது, கோவிலூர் சுவாமிகள் என்னை மிஸ்ரா அவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். நான் எங்கள் குடும்பத்தார் இராமநாதசுவாமி கோவிலில் செய்திருக்கும் திருப்பணிகளையும், எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை பற்றியும் திரிவேணித்தீர்த்தத்தால் நாங்கள் அபிஷேகம் செய்துவருவது குறித்தும் கோடித்தீர்த்தம் குறித்தும் எடுத்து கூறினேன். பின்னர் நான் கோடித்தீர்த்தத்தையும் விபுதி பிரசாதத்தையும் மிஸ்ரா அவர்களிடம் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக்கொண்ட அவர் காசி சென்றதும், காசி விஸ்வநாதருக்கு அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அதன் வீடியோ காட்சியை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதலங்களில் பகிர்ந்து செய்திக்குறிப்பில் கோடித்தீர்த்தத்தின் விஷேசம் குறித்தும், விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபு முன்பு இருந்தது குறித்தும் எழுதியிருந்தார். அவரின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. இராமேஸ்வரத்தில் நாம் செய்வது போல் காசியிலும் புதிதாய் தொடங்கலாமே என சிந்தித்து கோவிலூர் சுவாமிகள் மூலமாக மிஸ்ரா அவர்களை அணுகினேன். எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசி விஸ்வநாதருக்கு தினம்தோறும் ஒருவேளை கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய அனுமதி வேண்டி மிஸ்ரா அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். உடனே அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்து அவர்கள் எங்களுக்கு திரிவேணி தீர்த்தத்தை அனுப்புவதாகவும் நாங்கள் அவர்களுக்கு கோடித்தீர்த்தத்தை அனுப்ப வேண்டியும் விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபை மீண்டும் தொடங்குவோம் என ஒப்புதல் கடிதம் அனுப்பினார்கள்." என்றார்


மேலும் அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஜூலை 28ஆம் தேதி காசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கோவிலூர் சுவாமிகளுடன் நான் எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் திரிவேணித்தீர்த்தத்தை பெற்றுக்கொண்டேன். பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் கோடித்தீர்த்தத்தை வைத்து பூஜை செய்து, கோவிலூர் சுவாமிகள் உதவியுடன் காசிக்கு அனுப்பினோம். காசியில் கோவிலூர் சுவாமிகள் நடத்தி வரும் அன்னஷேத்திரத்தில் தீர்த்தத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி தீர்த்தத்தை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்து கோவிலூர் சுவாமிகளுடன் நான், விஸ்வ பூஷன் மிஸ்ரா, வாரணாசி கலெக்டரான தமிழர் இராஜலிங்கம் ஆகியோர் கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தோம்." என்றார்.




நமது செட்டிநாடு இதழ் - Aug 2025



செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...