Followers

Wednesday, September 17, 2025

"மணிமகுடத்தில் ஒரு மாணிக்கம்!" காசி - இராமேஸ்வரம் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

- பழ.கைலாஷ் -


முதல்வர் திரிவேணித்தீர்த்தத்தை வழங்கும் காட்சி
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுடன் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள், C.RM.அருணாச்சலம் செட்டியார், விஸ்வ பூஷன் மிஸ்ரா.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பாரத தேசத்தில் வடக்கே காசி முதல் தெற்கே சேது வரை பற்பல புண்ணிய தலங்களில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. நகரத்தார் செய்த மற்றும் செய்து வரும் திருப்பணிகளுள் மணிமகுடமாய் திகழ்வது காசி திருத்தலத்தில் காசிவிஸ்வநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை செய்து வரும் பூஜையே! இது சுமார் 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவி பாடுவார் முத்தப்பர்,

"காசியிலும் சேதுவிலும் கனகத் தருமமிட்டு

வாசமுள்ள ஈசர் பதம் மனம் பணிந்தார்"

என்று அன்றே நகரத்தார் வாரணாசியிலும் இராமேஸ்வரத்திலும் செய்த திருப்பணிகளை குறிப்பிட்டு பாடியுள்ளார்.


இன்று நகரத்தார்(ஏஎல்.ஏஆர் கட்டளை) சார்பில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள புனிதநீர் பரிமாற்றம், மணி மகுடத்தில் ஒரு மாணிக்கமாக திகழ்கின்றது.


காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் கோடித்தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கையில் நீராடி மணலை கரைத்து, காசி விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பிரயாகையில் திரிவேணி தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவுசெய்வார்கள்.


விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை(AL.AR Trust) சார்பில் இராமேஸ்வரத்தில் இராமநாதருக்கு தினம்தோறும் மாலை திரிவேணித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தற்போது இதன் புதிய முகமாக காசியில் காசிவிஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யும் மரபு ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளையுடன் ஏஎல்.ஏஆர் கட்டளை இணைந்து திரிவேணி மற்றும் கோடித்தீர்த்தத்தை பரிமாறிக்கொள்ளும் ஆன்மீக வழிபாட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 28ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாண்புமிகு யோகி ஆதித்யநாத் அவர்களால் திரிவேணித்தீர்த்தம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள் முன்னிலையில் ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் அவர்களிடம் வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் 9ஆம் தேதி காசி விஸ்வநாதருக்கு இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோடித்தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வில், இதற்கு மிகமுக்கிய காரணகர்த்தராக திகழ்ந்த கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா, ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார், வாரணாசி ஆட்சியாளர் இராஜலிங்கம் இ.ஆ.ப மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோடித்தீர்த்தத்தை காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்கும் காட்சி..

கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் காட்சி.


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணிகள் ஏராளம்.


19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமிச் செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, பழுதடைந்திருந்த இராமநாத சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி ஆகியன முற்றிலுமாக பிரித்து புதிய கருங்கற்களால் கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.


தற்போது தேவகோட்டை ஜமீந்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசியில் தொடங்கியிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஏப்ரல் மாதம் கோவிலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த காசி விஸ்வநாதர் கோயில் சி.ஈ.ஓ விஸ்வ பூஷன் மிஸ்ரா, கோவிலூர் சுவாமிகளுடன் இராமேஸ்வரம் வந்து நம் நகரவிடுதியில் தங்கியிருந்த போது, கோவிலூர் சுவாமிகள் என்னை மிஸ்ரா அவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். நான் எங்கள் குடும்பத்தார் இராமநாதசுவாமி கோவிலில் செய்திருக்கும் திருப்பணிகளையும், எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை பற்றியும் திரிவேணித்தீர்த்தத்தால் நாங்கள் அபிஷேகம் செய்துவருவது குறித்தும் கோடித்தீர்த்தம் குறித்தும் எடுத்து கூறினேன். பின்னர் நான் கோடித்தீர்த்தத்தையும் விபுதி பிரசாதத்தையும் மிஸ்ரா அவர்களிடம் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக்கொண்ட அவர் காசி சென்றதும், காசி விஸ்வநாதருக்கு அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அதன் வீடியோ காட்சியை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதலங்களில் பகிர்ந்து செய்திக்குறிப்பில் கோடித்தீர்த்தத்தின் விஷேசம் குறித்தும், விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபு முன்பு இருந்தது குறித்தும் எழுதியிருந்தார். அவரின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. இராமேஸ்வரத்தில் நாம் செய்வது போல் காசியிலும் புதிதாய் தொடங்கலாமே என சிந்தித்து கோவிலூர் சுவாமிகள் மூலமாக மிஸ்ரா அவர்களை அணுகினேன். எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசி விஸ்வநாதருக்கு தினம்தோறும் ஒருவேளை கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய அனுமதி வேண்டி மிஸ்ரா அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். உடனே அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்து அவர்கள் எங்களுக்கு திரிவேணி தீர்த்தத்தை அனுப்புவதாகவும் நாங்கள் அவர்களுக்கு கோடித்தீர்த்தத்தை அனுப்ப வேண்டியும் விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபை மீண்டும் தொடங்குவோம் என ஒப்புதல் கடிதம் அனுப்பினார்கள்." என்றார்


மேலும் அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஜூலை 28ஆம் தேதி காசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கோவிலூர் சுவாமிகளுடன் நான் எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் திரிவேணித்தீர்த்தத்தை பெற்றுக்கொண்டேன். பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் கோடித்தீர்த்தத்தை வைத்து பூஜை செய்து, கோவிலூர் சுவாமிகள் உதவியுடன் காசிக்கு அனுப்பினோம். காசியில் கோவிலூர் சுவாமிகள் நடத்தி வரும் அன்னஷேத்திரத்தில் தீர்த்தத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி தீர்த்தத்தை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்து கோவிலூர் சுவாமிகளுடன் நான், விஸ்வ பூஷன் மிஸ்ரா, வாரணாசி கலெக்டரான தமிழர் இராஜலிங்கம் ஆகியோர் கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தோம்." என்றார்.




நமது செட்டிநாடு இதழ் - Aug 2025



No comments:

Post a Comment

THE DEVAKOTTAI ZAMINDAR

- Kailash PL -            T he Devakottai Zamindar family is considered one of the most notable among the Nattukottai Nagarathars. AL.AR. Ra...