கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் வாழ்கை வரலாறு.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாரா கோப்பா என்ற பெண்மணி தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக தமிழகம் வந்து அவர்களுடன் தங்கியிருந்து இத்தாலிய மொழியில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். பின்னர் அந்த புத்தகத்தை அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஹச்.ஆல்பர்ட் "தி கலர் ஆஃப் ஃப்ரீடம்"(The colour of freedom)என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (18.10.2019)அன்று "தன்னறம் நூல்வெளி" இந்த புத்தகத்தை தமிழில் "
சுதந்திரத்தின் நிறம்" என்ற பெயரில் வெளியிட்டனர். B.R.மகாதேவன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
மதுரை மாவட்டம் அய்யன்கோட்டையில் ஒரு ஹரிஜன குடும்பத்தில் பன்னிரண்டு குழந்தைகளுள் ஒருவராக 1926ல் பிறந்தார் கிருஷ்ணம்மாள். அப்பா குடிகாரர் அம்மா கூலிதொழிலாளி. தினசரி குடித்துவிட்டு தன் அம்மாவை அப்பா அடிப்பதை பார்த்த கிருஷ்ணம்மாள் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தீர்மானம் எடுக்கிறார். பள்ளி படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று தமிழ் நாட்டின் முதல் ஹரிஜன பட்டதாரியாகிறார். பின்பு T.V.சுந்தரம் ஐயங்காரின் மூத்த மகள் டாக்டர்.சௌவுந்தரம்மாள் கைவிடப்பட்ட விதவைப் பெண்களுக்காக நடத்திய ஆசிரமத்தில் ஆசிரியராக சேர்ந்து பணிபுரிகிறார். இந்த கால கட்டத்தில் காந்தி மீது பற்றுக் கொண்டு காந்தியை சந்திக்க ஆசை படுகிறார் "மகாத்மா காந்தி தமிழகம் வருகிறார் அவருடம் மருத்துவ உதவிக்காக ஒரு டாக்டர் இருக்கிறார் டாக்டருக்கு உதவியாளராக ஒரு பெண் தேவை நீ செல்கிறாயா" என்றார் சௌந்தரம்மாள்.உடனே கிருஷ்ணம்மாள் காந்தியின் டாக்டரின் உதவியாளராக சேர்ந்தார். அப்போது காந்தியவாதியான ஜெகந்நாதனை சந்திக்கிறார்.
ஜெகந்நாதன் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள செங்கற்பட்டையில் செழிப்பான குடும்பத்தில் சங்கரலிங்கம் பிள்ளை என்பவருக்கு மகனாக 1914ல் பிறந்தார். மதுரையில் கல்லூரில் படிக்கும் பொழுது காந்தியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது காந்தியை சந்தித்த பின் காந்தியவாதியாகிறார் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு "தீன சர்வ சேவா" சங்கத்தில் சேர்ந்து தன் குடும்பத்தை விட்டு சன்னியாசியாக இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களுக்காக தொண்டாற்றுகிறார். சுதந்திரத்திற்காக காந்தியுடன் சேர்ந்து அகிம்சை போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்கிறார். ஒரு நாள் கிருஷ்ணம்மாளை டாக்டர் சௌவுந்தரம்மாள் ஆசிரமத்தில் சந்திக்கிறார் ஆனால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின்பே திருமணம் என்று தீர்க்கமான முடிவெடுக்கிறார். இவர் பெங்களூர் சிறையில் இருக்கையில் நாட்டுக்கு சுதந்திரம் கிடைகிறது.
1950ல் காந்தியவாதிகளான ஜெகந்நாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு தம்பதியரானர்.
1951ல்
வினோபா பாவே பூதான(பூமி தானம்) இயக்கத்தை தொங்குகிறார்.
பூதான இயக்கம் என்றால் பெரு நிலமுடையவர்கள் தானாக முன் வந்து நிலமில்லாதோர்களுக்கு வழங்கவேண்டும். இதை அகிம்சை முறையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வழிநடத்தியவர் வினோபா பாவே அவருடன் கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இந்தியா முழுவதும் கால்நடையாக பயணம் செய்தனர். பூதான இயக்கம் நிலமில்லாதோர்க்கு பதிமூன்று ஆண்டுகளில் 40,00,000 ஏக்கர் நிலத்தை பிரித்து வழங்கியது. தமிழகத்தில் கிருஷ்ணம்மாள் மட்டும் சுமார் 13500 ஏக்கர் நிலத்தை பெரு நிலமுடையவர்களிடம் பெற்று அதை பிரித்து நிலமில்லாதோர்க்கு வழங்கினார்.
டிசம்பர் 25 1968ல் கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட 18 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் ஒரு குடிசையில் சிலரால் தீயிடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்து. அடுத்த நாள் இதை நாளிதழ்களில் அறிந்த கொண்ட கிருஷ்ணம்மாள் தன் கணவர் ஜெகந்நாதன் மற்றும் குன்றக்குடி அடிகளாருடன் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். 1974ல் கீழ்வெண்மணியை சேர்ந்த 74 குடும்பங்களுக்கு தலா 1ஏக்கர் என 74ஏக்கர் நிலங்களை பெற்று 74 குடும்பங்களுக்கும் பிரித்து வழங்கினார் மற்றும் நல்ல வீடு, தண்ணீர் ,மின்சார வசதிகள் செய்து கொடுத்துள்ளார். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom -LAFTI) திட்டத்தை 1981ல் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தொடங்கினர்.
கிருஷ்ணம்மாளுக்கு இந்திய அரசு 1989ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
2008ல் நோபல் பரிசுக்கு இணையான Right Livelihood Award கிருஷ்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கி இருந்த ஜெகந்நாதன் பிப்ரவரி12 2013ல் காலமானார்.
தம் கணவர் மறைந்த பின்னரும் 94 வயதில் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். 2014ல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
-Kailash PL
21/10/2019
சுதந்திரத்தின் நிறம் புத்தகம் வாங்க
தன்னறம் நூல்வெளி
அழைபேசி:9843870059