Followers

Sunday, August 8, 2021

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை.

ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' மாநாடு நடந்தது. அதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கி 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அன்று இரவு காந்தி, பட்டேல், நேரு மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்திய தேசமே கொந்தளித்தது. இதற்கு பிறகே விடுதலை போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியதால் இது 'ஆகஸ்ட் புரட்சி' என்றும் அழைக்கப்பட்டது.

எங்கு நோக்கினும் கடையடைப்பு, ஊர்வலம், கண்டனக் கூட்டம்! "வெள்ளையனே வெளியேறு"  என்ற முழக்கம் இமயம் முதல் குமரி வரை எதிரொலித்தது!

தமிழக மக்களும் இந்த போராட்டத்தில் எந்த தயக்கமும் இன்றி கலந்துகொண்டனர். வரலாற்று புகழ்மிக்க இந்த ஆகஸ்ட் புரட்சியில் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை பகுதி மக்களும் வீரம் கொண்டு முனைந்து நின்றனர். தேச பக்தியின் உறைவிடமாக திகழ்ந்தது தேவகோட்டை.

தேவகோட்டை மற்றும் காரைக்குடி அடங்கிய செட்டிநாட்டு பகுதியில் தேசபக்தர்களான 'தமிழ் கடல்'இராய.சொ., 'சீர்திருத்த செம்மல்' சொ.முருகப்பா., 'கம்பனடிப்பொடி' சா.கணேசன்., காந்தி மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.அருணாசலம்., சின்ன அண்ணாமலை., அமராவதிபுதூர் பிச்சப்பா சுப்பிரமணியம்., பாகனேரி ஆர்.வி.சாமிநாதன்., வேலாயுதம் செட்டியார்., 'இராட்டிண புலவர்'என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்ட ஆசிரியர் முருகன் ஆகியோர் மக்கள் மத்தியில் தேசபக்தியை உரமிட்டு வளர்த்து வந்தனர்.



அன்று ஆகஸ்ட் 9, காலை தேவகோட்டையில் தேசபக்தர்களால் உருவாக்கப்பட்ட 'சரஸ்வதி வாசக சாலை'யில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை நாளிதழ்களில் படித்த இளைஞர்கள் கொந்தளித்தெழுந்தனர். தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவரான எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்காரும் செயலாளரான கே.ஆர்.எஸ்.முத்துவும் கலந்தாலோசித்து சில அவசர முடிவுகளை எடுத்து உடனடியாக செயலில் இறங்கினர். 

சின்ன அண்ணாமலை, பி.ஆர்.இராமசாமி, ஆர்ச் அண்ணாமலை, காந்தி நாராயணன் செட்டியார், டைரி அருணாசலம், தொண்டர் முத்தையா ஆகியோரோடு இளைஞர்கள் பலர் வீதியில் இறங்கி காந்தி, பட்டேல், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்திகளை முழங்கினர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கேட்ட மக்கள் வருந்தினர், கோபம் கொண்டனர். பிரிட்டிஷ் அரசை கண்டித்து சின்ன அண்ணாமலை தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஐம்பது பேருடன் தொடங்கிய ஊர்வலம் சில தெருக்களை கடக்கும் முன் ஐநூறு பேராக உருவெடுத்தது.

மாலை நான்கு மணிக்கு தேவகோட்டை ஆர்ச் பகுதியில் தொடங்கிய மற்றோரு கண்டன ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். மாலை ஆறு மணிக்கு ஜவஹர் மைதானத்தை அடைந்தது ஊர்வலம். அங்கு நடந்த கூட்டத்திற்கு அழ.சுப.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தேவகோட்டையை சேர்ந்தவர்களுள் இவரே நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.

ஆகஸ்ட் ஒன்பதை தொடர்ந்து அடுத்த சில தினங்கள் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சியாக பொது கூட்டங்கள் நடத்தப்பட்டது. அக்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக இருந்த சின்ன அண்ணாமலை மற்றும் கே.ஆர்.எஸ்.முத்து அனல்பறக்க உரையாற்றினர். கே.ஆர்.எஸ்.முத்து ஒரு கால் ஊனமுற்றவர், ஆனால் தம் நாவாற்றலால் மக்கள் மண ஊனத்தை அகற்றி விடுதலை வேட்கையை ஊன்ற செய்தவர்.

அதிர்ந்து போன பிரிட்டிஷ் அரசு சின்ன அண்ணாமலை., எஸ்.இராமநாதன்., டி.ஆர்.அருணாச்சலம்., பி.ஆர்.இராமசாமி., கே.ஆர்.எஸ்.முத்து ஆகிய ஐவரையும் கைது செய்ய ஆகஸ்ட் 15ஆம் தேதி 'கைது வாரண்ட்' பிறப்பித்தது. கைது வாரண்ட் பிறப்பித்ததை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐவரும் காரைக்குடியில் ஒரு வீட்டில் தலைமறைவாகினர்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் தலைமறைவாக இருந்த வீட்டை விட்டு கிளம்பி பக்கத்து தெருவில் உள்ள ஐக்கிய இளைஞர் சங்கத்திற்கு சென்று பத்திரிகை படித்து விட்டு வருவதாக சின்ன அண்ணாமலையும் எஸ்.இராமநாதனும் சென்றனர்.

அவர்கள் இருவரையும் மப்டி-யில் இருந்து கவனித்துக் கொண்டுயிருந்த குருசாமி நாயுடு மற்றும் காந்திமதிநாத பிள்ளை ஆகிய காவலர்கள் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சற்று நேரத்தில் இரண்டு லாரிகளில் பறந்து வந்த போலீஸார் சங்க கட்டிடத்தை சுற்றி வளைத்தனர் சின்ன அண்ணாமலையையும் எஸ்.இராமநாதனையும் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தனர். அன்றிரவே கே.ஆர்.எஸ்.முத்து தலைமையில் நான்கு இளைஞர்கள் தேவகோட்டை சப் கோர்ட் முன் மறியலில் ஈடுபட தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அடுத்த நாள் அதாவது அந்த கொடூர சம்பவம் நடந்தேறிய நாள், ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஒன்பது மணியளவில் அரு.சிற்சபேசன், சித.பெரி.சிதம்பரம், சௌ.சே.இராமநாதன், ஆர்ச் அண்ணாமலை ஆகிய நான்கு இளைஞர்கள் 'சரஸ்வதி வாசக சாலை'யிலிருந்து வீரநடைப்போட்டு, நெற்றியில் வீரத்திலகத்துடன், வந்தே மாதரம்! வந்தே மாதரம்! என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு 'கோர்ட்' நோக்கி நடந்தனர்.

தேவகோட்டை 'ஆர்ச்' அருகே இருந்த 'சப் கோர்ட்' வாசலை அடைந்ததும் "ஆங்கிலேயரின் அநீதியை நிலைநாட்டும் நீதி மன்றங்களை பொதுமக்களும், வழக்கறிஞர்களும் ஊழியர்களும் புறக்கணிக்க வேண்டும்" என்று முழங்கினர்.

சுற்றி கூடி நின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து கோஷம் போட தொடங்கினர். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த குருசாமி நாயுடுவும் காந்திமதிநாத பிள்ளையும் மக்களிடையே மாட்டிக் கொண்டனர். காட்டிக் கொடுத்த இருவரையும் மக்கள் அடித்து நொறுக்கினர். அதிலிருந்து தப்பிச்சென்ற காந்திமதிநாத பிள்ளை கோர்ட் பகுதியிலிருந்து ஒன்றரை மயில் தொலைவிலுள்ள திண்ணஞ் செட்டி ஊருணி தென்கரையில் இருந்த தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சென்று "கோர்ட் முன் பெரிய கலவரம் நடந்து கொண்டு இருப்பதாகவும், குருசாமி நாயுடுவை மக்கள் அடித்து கொன்று விட்டதாகவும்" சொன்னான்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீராச்சாமி ஐயரும் சப் இன்ஸ்பெக்டர் கமருதீனும் மாஜிஸ்திரேட் 'வாக்கர்'-ஐ சந்தித்து நடந்ததை கூறி ஸ்டேஷனில் இருந்த மொத்த பன்னிரெண்டு போலீசாரையும் கூட்டிக் கொண்டு 'ஆர்சு' பகுதிக்கு வந்தனர். உண்மையில் குருசாமி நாயுடு கொல்லப்படவில்லை, போலீஸ்காரர்களை கண்ட மக்கள் மேலும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

தேவகோட்டை தாலுகா மாஜிஸ்திரேட் 'வாக்கர்' என்கிற ஆங்கிலேய கொடூரன், என்ன? ஏது? என்று எதுவும் விசாரிக்காமல் அனைவரையும் சுட உத்தரவிட்டான். அவனின் உத்தரவுப்படி பன்னிரெண்டு போலீசாரும் நிரபராதிகளான மக்களை சுட தொடங்கினர். முதலில் 'வி.தர்மராஜன்' என்பவர் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார், பலர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இச்சமயத்தில் மேலும் கோபம் கொண்ட தேச பக்தர்கள் புதிதாக ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருந்த பளிங்கு மாளிகையான 'தேவகோட்டை சப் கோர்ட்'-ஐ தீயிட்டு எரித்தனர். அரசாங்கம் நடத்திவந்த பேருந்து நிறுவனமான 'சிம்சன் கம்பேனி' பேருந்துகளையும் எரித்தனர்.

குண்டடிப்பட்ட ஒருவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுக் கொண்டிருந்தார் இதை பார்த்த பதினெட்டு வயதுகூட நிரம்பாத இளைஞன் கிருஷ்ணன் தண்ணீர் எடுக்க சென்றான்.

தண்ணீர் எடுக்க சென்ற அந்த இளைஞனையும் சுட்டு வீழ்த்தினர் கொடூர குணம் படைத்த போலீசார்.

துப்பாக்கி குண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது, நிலைமை மோசமானதை கவனித்த போலீசின் கையாளான மோட்டர் மெக்கானிக் ஒருவன் குறுக்கு பாதையில் காரைக்குடிக்கு ஓடிச் சென்று காரைக்குடி நகர் காவல் நிலையத்தில் நடந்ததை தெரிவித்தான். உடனே காரைக்குடி போலீசார், அங்கு தயாராக இருந்த மலபார் போலீசார் நாற்பது பேரை இரண்டு லாரிகளில் ஏற்றி தேவகோட்டைக்கு அனுப்பிவைத்தனர்.

கலவரமும் துப்பாக்கிச் சூடும் நடந்த 'ஆர்ச்' பகுதி தேவகோட்டையின் நுழைவில் இருந்ததால், ஊரில் நுழைந்ததும் மலபார் போலீசார் கண்மண் தெரியாமல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தினர். திடீரென்று புதிய போலீஸ் படை வந்ததையும் கண்மண் தெரியாமல் சுடுவதையும் கண்ட பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து, சிதறி ஓடத்தொடங்கினர்.

ஆங்கிலேயரின் இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் அந்த இடத்திலேயே பிணமாயினர்! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கீழே சாய்ந்தனர்.

போலீசார் சாலையில் கிடந்த ஐம்பது பிணங்களில் ஆறை மட்டும் தூக்கி தங்கள் பஸ்சின் மேற்பகுதியில் போட்டனர். மேலும் சுமார் ஐம்பது பேரைக் கைது செய்து லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர்.

தேவகோட்டை நகரம் அன்றிரவு சுடுகாடு போலத் தோன்றியது. ஆர்ச் பகுதியில் எங்கு நோக்கினும் ரத்தமும் பிணங்களும் படுகாயமுற்றோர்களும் கிடந்ததால் போர்க்களம் போல் காட்சியளித்தது.

மலபார் போலீசாரால் சுடப்பட்டு மாண்ட 50 பேரில் உடனடியாக அடையாளம் காணப்பட்டவர்கள்; 1.வி.தருமராஜன், 2.கிருஷ்ணன், 3.மணிவண்ணன், 4.பால்க்கார நடேசன்,  5.சாவல்கட்டு,  6.மணியன்.

மறுநாள், ஆகஸ்ட் 18ஆம் தேதி மேலும் பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தேவகோட்டை வட்டாரத்தில் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தி போராட்டம் நடத்திய தீவிரவாதிகளாக  டி.ஆர்.அருணாச்சலம், ஆர்ச் அண்ணாமலை, அள.சுப.திருநாவுக்கரசு, முகுந்தராஜ ஐயங்கார், கே.எம்.வல்லத்தரசு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேவகோட்டை நகரில் 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்தியது, பொதுக்கூட்டம் நடத்தியது, சப் கோர்ட் முன்னால் மறியல் செய்தது, கலவரம் புரிந்து கோர்ட் நடவடிக்கைகளை தடுத்தது, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோர்ட் கட்டிடத்தையும் அங்கிருந்த கோர்ட் சாமான்களையும் ஆவணங்களையும் எரித்தது, போலீசாரை தாக்கியது ஆட்சிக்கு எதிராக சதி செய்தது முதலிய குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 120 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. 'தேவகோட்டை கலவர வழக்கு' என்று அழைக்கப்பட்ட அதில் 73 பேரு‌க்கு 2 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தேவகோட்டையில் நடந்த இந்த ஆகஸ்ட் புரட்சி அத்தோடு நிற்கவில்லை! திருவாடானை, தொண்டி, திருவேகம்பத்தூர், முப்பையூர் ஆகிய ஊர்களிலும் வெடித்து பரவியது.

இந்த ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டையில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளில் நினைவாக, போராட்டம் நடந்த ஆர்ச் பகுதியில் நாட்டின் விடுதலைக்கு பின் நினைவுத் தூண் நிறுவப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அதற்கு 'தியாகிகள் பூங்கா' என்றும் பூங்கா அமைந்துள்ள சாலைக்கு 'தியாகிகள் சாலை' என்றும் பெயரிடப்பட்டது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூறுவோம். ஜெய் ஹிந்த்! 


அன்பன், 
பழ.கைலாஷ்


நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...