Followers

Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

Monday, June 29, 2020

காளையார் கோயில் அரிய புகைப்படம்.

காளையார் கோயில் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது. 
நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணியின் போது 1800கள் இறுதியில் எடுக்கப்பட்டது.


பாண்டிய நாட்டிலுள்ள தேவாரப் பதிகம் பெற்ற தலங்கள் பதினான்கினுள்  "திருக்கானப்பேர்" எனும் "காளையார்கோயில்" ஒன்று.

அதி அற்புதமான இத்தலத்தில் மூன்று இறைவனும் மூன்று  இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி

சோமேசர் - சவுந்தரவல்லி

சுந்தரேசுவரர் - மீனாட்சி

பலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.

பாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.

இத்தலத்தில் நாம் காணும் சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரவல்லி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை திருப்பணிகள் நடந்துள்ளது.

காளையார் கோவில்- ஆனைமடு


இந்த புகைப்படம் 1900கள் தொடக்கத்தில் குளம் கட்டப்பட்ட புதிதில் எடுக்கப்பட்டது.



காளையார் கோயில் தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி எனும் ஆனைமடு குளம்.

புராண கதைப்படி, "இந்திரனின் வாகனமான ஐராவத யானை மகரிஷி ஒருவர் கொடுத்த சாபம் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும், அப்போது தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகவும், அந்த யானை உண்டாக்கிய பள்ளமே ஆனைமடு என்று சொல்லப்படுகிறது".

இக்குளம் பலநூறு ஆண்டுகட்கு முன் வெட்டப்பட்டது.

1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் "அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார்" அவர்கள் கல் திருப்பணி செய்து, மேலும் அழகு சேர்க்கும் வகையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து இக்குளத்தின் நடுவில் மிக அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை புதிதாக நிறுவியுள்ளார்கள்.

கண்டதேவி ஊருணி



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி ஊருணி. 1900கள் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


இந்த ஊருணி அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தாரால் 1800கள் மத்தியில் கட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் சிறிய கோயிலாக இருந்த கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலை மேற்படி குடும்பத்தார் பெரிய கற்றளி கோயிலாக எழுப்பியுள்ளனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்களுள் கோயில் திருப்பணி செய்தவர்களில் மிக  முக்கியமானவர்கள் வயிநாகரம் குடும்பத்தார்.


Saturday, March 21, 2020

சித்தாட்டிவயல் பிள்ளையார் கோயில்

சிவகங்கை மாவட்டம் 'உஞ்சனை'யை அடுத்துள்ள ஊர் 'சித்தாட்டிவயல்'.

இந்த சித்தாட்டிவயல் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் ஒரு பழமையான பிள்ளையார் கோவில் உள்ளது.
















ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை செட்டியார்/நகரத்தார் சமூகத்தினர் சிலர் வாழ்ந்து வந்துள்ளனர்.

நகரத்தார்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டிய பிள்ளையார் கோவில் இன்று பராமரிப்பின்றி உள்ளது.

கருங்கல்,செம்பராங்கல் மற்றும் சுட்ட செங்கலால் கோவிலை கட்டியுள்ளனர்.
பிள்ளையார் சிலை மற்றும் மூஞ்சுறு சிலை தவிர்த்து மற்ற சிலைகள் திருடு போய்விட்டது.  கல்தூணின் இரண்டு செட்டியார்கள் சிலைகள் உள்ளன. சமீபத்தில் தான் பைரவர் சிலை திருடுபோனதாக கூறுகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பிள்ளையார் சிலையை திருடிய ஒருவன், ஊர் எல்லையை கடக்கும் போது கண் குருடாகி கண்மாயில் விழுந்து இறந்து போனானாம்! பின்னர் ஊர் மக்கள் சிலையை மீட்டு கொண்டுவந்து வைத்துள்ளனர்.

செட்டியார்கள் யாராவது வந்து கோவிலை புணரமைத்து தரவேண்டும் என்பது இவ்வூர் மக்கள் விருப்பம்.

Kailash PL

உஞ்சனை மகா கணபதி கோயில்

உஞ்சனை சிவன் கோயில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள 'உஞ்சனை'யில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் முன்புறம் சாத்தன் செட்டியார் மகன் சுப்பிரமணியன் செட்டியாரால் சுமார் 700 ஆண்டுகட்கு முன்பு செம்பூரான் கற்களினால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது.
மகா கணபதி கோயில்



ஸ்ரீ மகா கணபதி 
                 
சுப்பிரமணியன் செட்டியார் 

செட்டியார் சிலை 2


செட்டியார் சிலை 3

செட்டியார் சிலை 4


13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு 

"கல்வாச நாட்டில் 
எலையாத்தங்குடியான 
குல சேகர புரத்தில் 
பெருமரவூர் உடையார் சாத்தன்
செட்டியார் சுப்பிரமணியன்"  என்ற  கல்வெட்டு வாசகம் ஒரு செட்டியார் சிலையின் மேற்புறத்தூணில் வடிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் உஞ்சனையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்/நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

 உஞ்சனையை விட்டு அருகிலிருந்த ஊர்களுக்கு வசிக்கச் சென்ற பின்
13ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற  இக்கோவில் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்தது.

இந்நிலையில் உஞ்சனை நாட்டுப் பெரிய அம்பலகாரர் இராம.இராமசாமி அய்யா அவர்கள், நாட்டார்கள் மற்றும் கிராமத்தார்கள்
அனைவரும்
முனைவர் தேவகோட்டை இராமநாதன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்படி தேவகோட்டை  இராமநாதன் அவர்களின்  பெருமுயற்சியால், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சார்பில் திருஅண்ணாமலை நகரத்தார் உபயதாரர்கள்குழுவின் தலைவர் கோட்டையூர் க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார் அவர்களால்
மிகவும் பழமை வாய்ந்த, தினமும் காலையில் சூரியன் கதிரொளியால் பூசிக்கும்,அதிசயமான உஞ்சனை "மகா கணபதி கோயில்" மிகச்சிறப்பான முறையில் பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டு, இன்று(12.03.2020) குடமுழுக்கு நடத்தப்பெற்றது.

புதிய கல்வெட்டு 
க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார்  குடும்பத்தினர், தேவகோட்டை இராமநாதன் மற்றும் நான்.

Kailash PL

Wednesday, March 4, 2020

கல்லங்குடி கம்பர் கோயில்



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 11கி.மீ தொலைவில் உள்ள கல்லங்குடி கிராமம் அருகே அடர்ந்த காட்டின் நடுவில் பழமையான சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
கோவில் முகப்பு தோற்றம் 










கம்பர் சிலை 
கவிச்சக்கரவர்த்தி கம்பர் முழு உருவ சிலை
ஒன்று இருக்கிறது. கம்பர் சிலகாலம் இங்கு வாழ்ந்ததாகவும் இங்கிருந்து ஏழு மைல் தொலைவிலுள்ள நாட்டரசன்கோட்டையில் சமாதி அடைந்ததாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.


கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்


இக்கோயிலில் எட்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பழமையானது, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216-1238) கல்வெட்டாகும். இக்கல்வெட்டு, இம்மன்னனின் நான்காம் ஆட்சியில் (கி.பி.1220) இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டுகளின் மூலம் இக்கோயில் பிற்காலப் பாண்டிய மன்னர் மரபினர்களால் கி.பி.13-ஆம் நூற்றாண்டில்(சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது எனத் தெரியவருகிறது.
மேற்படி கல்வெட்டு விபரங்கள் தினமணி நாளிதழில் வந்தது.

நந்தி சிலை 



சிதிலமடைந்த
கொடுங்கை 









இங்குள்ள கல்வெட்டுகளையும், கம்பரின் முழு உருவச்சிலையையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து இது கம்பரின் சிலைதானா என்பதைத் உறுதிசெய்ய வேண்டும் என்பதும், இக்கோயிலை தமிழக அரசு புதுப்பித்துத்தர வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.


Kailash PL

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...