Followers

Tuesday, November 5, 2019

தேவகோட்டையில் காந்தி

தேவகோட்டையில் காந்தி 

தேவகோட்டை நகர சிவன் கோவில் புகைப்படம்.

1927ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி மாலை தேவகோட்டை நகர சிவன் கோவிலுக்கு மகாத்மா காந்திஜி அவரது மனைவி கஸ்தூரிபாயுடன் வருகைதந்திருந்தார். சிவன் 
கோவில் எதிரே உள்ள ஊரணி கரையில்(தற்போது கந்தசஷ்டி விழா நடக்கும் இடம்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். உடன் காந்தி மெய்யப்பச்செட்டியார் இருந்தார், காந்தியவாதியான இவர் செட்டிநாட்டில் காந்திஜி சென்ற ஊர்களுக்கு காந்திஜியுடனேயே பயணம் செய்தவர்.

பொதுகூட்டத்தில் தேவகோட்டை இளைய ஜமீன்தாரான அள.அரு.இராம.வெ.சோமநாதன் செட்டியார் நகரத்தார் சார்பாக காந்திஜியிடம் ஒரு பணமுடிப்பை அளித்தார். சுவர்ண மூர்த்தி பெண்கள் பள்ளி மாணவிகளின் சார்பாக ஒரு பணமுடிப்பு அளிக்கப்பட்டது. வேந்தன்பட்டி சொக்கலிங்கம் செட்டியார் பஞ்சை எவ்வாறு உயர் ரக நூலாக நூற்க முடியும் என்பதை காட்டும் வகையில் ஒரு பொருட்காட்சி அமைத்திருந்தார் மேலும் அவர் உற்பத்தி செய்திருந்த மெல்லிய அழகான நூலைக்கொண்டு நெய்யப்பெற்ற கதர் துணியை காந்திஜியிடம் வழங்கினார். 

மேடையில் பேசிய காந்திஜி வங்காளத்தில் உள்ள சட்டர்ஜி ஒருவர் தான் கிட்டத்தட்ட இதைபோன்ற மெல்லிய துணியை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யக்கூடியவர் என்று பாராட்டி பேசினார் பின்பு இந்த துணியை 1000 ரூபாய்க்கு மேல் கேட்டால் ஏலத்தில் விற்க போவதாகவும் இல்லையேல் இதை அகில பாரத சர்க்கா சங்கத்தின் பொருட்காட்சியில் வைக்கப்போவதாக கூறினார். துணியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.(இதே துணியை அடுத்த நாள் காரைக்குடி கூட்டத்தில் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்) 
இறுதியாக சீனிவாச ஐயங்கார் தானே நூற்று நெய்த ஒரு துண்டை காந்திஜியிடம் வழங்கினார். 

பொதுக்கூட்டம் முடிந்ததும் காந்திஜி அவரது மனைவியுடன் காரைக்குடி திரும்பினார். 1927ல் செட்டிநாட்டில் காந்திஜி இருந்த நான்கு நாட்களிலும் பயணம் செய்துவிட்டு இரவு காரைக்குடியில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

மகாத்மா காந்திஜி மூன்று முறை தேவகோட்டை வந்துள்ளார்.

முதல் முறையாக 1921ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் வந்திருந்தார்.
இரண்டாவது முறை தன் மனைவியுடன் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்திருந்தார்.
மூன்றாவது முறை 1934ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வந்திருந்தார்.

-Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...