Followers

Tuesday, November 12, 2019

காரைக்குடியில் பாரதி


பிங்கள ஆண்டு ஆவணித்திங்கள் இருபத்தாறாம் நாளன்று (10.09.1917) செட்டிநாட்டின் சீர்திருத்தத் தந்தை எனப் பாராட்டப் பெறும் சொ.முருகப்பா முன் நிற்க, அவருக்குத் துணையாக 'தமிழ் கடல்'ராய.சொக்கலிங்கனார், கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பலரது துணையுடன் காரைக்குடி திருவாசக மடத்தில் இந்துமதாபிமான சங்கமானது தொடங்கப்பட்டது.

திருவாசக மடம் காரைக்குடி 


திருவாசக மடம் காரைக்குடி 

 நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

'கம்பநாடர்'இதழின் ஆசிரியரான மோ.வே.கோவிந்தராச ஐயங்காரை கொண்டு இளைஞர்களுக்கு திருக்குறள் மற்றும் கம்பராமாயண வகுப்புகளை இச்சங்கத்தினர் நடத்தினர்.

தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் அப்படியே விலை கொடுத்து வாங்கி 1918ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது, அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்துக்குக்கு உ.வே.சா., வ.உ.சி., திரு.வி.க., வ.வே.சு.ஐயர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி ரா.பி.சேதுப்பிள்ளை, எனப்பலர் வந்திருக்கின்றனர். இந்தச் சங்கத்திற்கு வாராத தமிழறிஞரே இல்லை எனலாம்.

இத்தகு பெருமைக்குரிய இந்துமதாபிமான சங்கத்திற்கு 1919ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் நாள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வருகைபுரிந்தார்.

கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்கிறார் இதனை ஏற்று பாரதி கானாடுகாத்தான் வருகிறார் வரும் வழியில் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் கலந்துகொண்டு இச்சங்கத்தினை வாழ்த்தி சில பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல், பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாக, நமக்குக் கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு படங்கள் இங்கு எடுக்கப்பெற்றவையாகும்.


பின் கானாடுகாத்தானில் வை.சு.சண்முகம் செட்டியார் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். 'இன்பமாளிகை' என்று பெயரிடப்பட்ட அந்த வீட்டில் பின்னாளில் மகாத்மா காந்தி கானாடுகாத்தான் வந்திருந்த போது தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியை மனைவி செல்லம்மாள் மற்றும் குழந்தைகளுடன் இன்பமாளிகையிலேயே தங்கிக்கொள்ளுமாரு வேண்டினார் வை.சு.சண்முகம் செட்டியார். இதை பெரும் விருப்பத்துடன் பாரதி ஏற்றுக்கொள்ள, செல்லம்மாள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர கடையதிற்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் செல்லம்மாள் வரவில்லை. ஒருவேளை செல்லம்மாள் கானாடுகாத்தான் வந்திருந்தால் வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

செல்லம்மாள் வராததால் கடையம் திரும்பினார் பாரதி.
கானாடுகாத்தானில் இருந்த போது "செட்டி மக்கள் குலவிளக்கு" என்ற தலைப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தாரை புகழ்ந்து சில பாடல்கள் பாடியுள்ளார்.

பின்னர் பாரதி 1920ல் ஒரு முறை காரைக்குடிக்கும் கானாடுகாத்தானுக்கும் வந்துசென்றுள்ளார்.




இந்து மதாபிமான சங்கம் 1952லிருந்து காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

Kailash PL

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...