Followers

Sunday, April 20, 2025

உத்தரகோசமங்கை - நகரத்தார் திருப்பணி

 

- பழ.கைலாஷ் -


"சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்

கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தாளிணை பாடிப்

போரார் வேற்கண்மடவீர் பொன்னூசலாடாமோ"


தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இரவு பள்ளியறை பூஜையில் பாடப்படுவது திருவாசகத்தின் திருப்பொன்னூசல் பதிகம். இது மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் வசிக்கும் காலத்தில் உத்தரகோசமங்கையை நினைத்து பாடியது.


சுவாமியையும் அம்பாளையும் இரவு பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செய்து திருப்பொன்னூசல் பதிகத்தை தாலாட்டாக பாடி பூஜிப்பது தொன்றுதொட்டு வரும் சைவசமய மரபு. நாள் முழுவதும் எத்தனை பூஜைகளை பார்த்தாலும், இரவு பள்ளியறை பூஜையை கண்டு வழிபடுவது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகின்றது.


எத்தனை சிவாலயங்களில் பள்ளியறை பூஜைகள் பார்த்தாலும் அத்தனையும் விட புண்ணியமாக கருதப்படுவது திருப்பொன்னூசல் பதிகத்தில் குறிப்பிடப்படும் உத்தரகோசமங்கை பள்ளியறை பூஜையே! 


இவ்வளவு சிறப்புவாய்ந்த உத்தரகோசமங்கை பள்ளியறை கல்திருப்பணி செய்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.


பாண்டிய நாட்டில் உள்ள சிவதலங்களுள் மிகப்பழமையான தலமாக சைவர்களால் நம்பப்படுவது உத்தரகோசமங்கை. "மண் முந்தியோ மங்கை முந்தியோ" என்பது இத்தலம் குறித்து தொன்று தொட்டு வழங்கிவரும் பழஞ்சொல்.


"மீண்டு வாரா வழியருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி யாகவும்

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

உத்தரகோசமங்கை ஊராகவும்"


எனத் கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இதன் பொருள், பக்தி செய்கின்ற அடியவர்களுக்கு சிவன் முக்தியைக் கொடுக்கிறான். அத்தகையவன் பாண்டிய நாட்டை தன்னுடைய உறைவிடமாகவும் உத்தரகோசமங்கையை தனது ஊராகக் கொண்டிருக்கிறான்.




இத்தலம் திருவாசகத்தில் 38 இடங்களில் பாடப்பட்டுள்ளது. இது மாணிக்கவாசகர் மனதிற்கு நெருங்கிய தலம். மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்சியளித்து உபதேசித்த சிவபெருமான் மீண்டும் இத்தலத்தில் காட்சியளித்துள்ளார். 


உத்தரகோசமங்கை = உத்தரம்+கோசம்+மங்கை. உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம்.


இத்திருத்தலத்தில் இறைவனும் இறைவியும் மங்களநாதர் - மங்களேசுவரி என்ற திருப்பெயர்களால் அருள்பாலிக்கின்றனர்.


இங்கு ஐந்தரை அடி உயர மரகதத்திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் அருள்பாலிக்கின்றார். மார்கழித் திருவாதிரையில் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலம் சிதம்பரத்துக்கு இணையாக போற்றப்படுகிறது. ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகின்றது.


உத்தரகோசமங்கை கோயில் ஆதியில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்றது. பின்னர் நாயக்க மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப்பெற்றுள்ளது. இது சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்.


சுமார் 130ஆண்டுகளுக்கு முன்,  உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி நகரத்தாரிடம் கொடுத்துள்ளார்.


தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு. அருணாச்சலம் செட்டியார் 1901-ஆம் ஆண்டு முதல் சில காலம் உத்தரகோசமங்கை கோயிலின் நிர்வாக மேலாளராக இருந்துள்ளார்.¹


தேவகோட்டை அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் தம் பொருட்செலவிலும் மேலும் சில தேவகோட்டை நகரத்தார் பொருட்செலவிலும் சிதிலமடைந்திருந்த உத்தரகோசமங்கை அம்பாள் கோயிலை முழுமையாக பிரித்து, புதிய கருங்கற்களை கொண்டு மங்களேசுவரி அம்பிகைக்கு கருவறை, அர்த்த மண்டபம், அழகிய வேலைப்பாடுடைய பன்னிரண்டு தூண்களுடன் முன்மண்டபம், பன்னிரண்டு தூண்களுடன் திருச்சுற்று மண்டபம், வெள்ளி ஊஞ்சலுடன் சிறப்புமிக்க பள்ளியறை மற்றும் இரண்டுநிலைகள் கொண்ட கோபுரம் கட்டியுள்ளார். முன்மண்டபம் மற்றும் திருச்சுற்றில் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்களும் வெளிநாட்டு மின்விளக்குகளும் நிறைந்திருக்கின்றன.



இத்திருப்பணி வேலைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கின்றன.


அம்மன் கோயில் திருப்பணி நிறைவடைந்ததும், சிவன் கோயில் முன்மண்டபத்தை பிரித்துவிட்டு புதிய முன் மண்டபம், பெரிய திருச்சுற்று மண்டபம் மற்றும் மதில்சுவர் கட்டும் திருப்பணிகளை தொடங்கியுள்ளார் இராமசாமி செட்டியார். அப்போது முதலாம் உலகப்போர் ஆரம்பித்து விலைவாசிகள் ஒன்றுக்கு பத்தாக உயர்ந்துள்ளது. விலைவாசிகள் குறைந்து, பழைய நிலைக்கு வந்த பிறகு திருப்பணியை தொடரலாம் என்று காத்திருந்துள்ளார். அந்த சமயம் வயது மூப்பின் காரணமாக 1919-ல் அவர் இறந்துவிட திருப்பணிகள் பாதியில் நின்றுவிட்டன.


அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 


அக்காலத்தில் நகரத்தார் பொதுவாக திருப்பணி செய்த கோயில்களில் கல்வெட்டுகள் வைப்பதில்லை. அதுபோல் உத்தரகோசமங்கையிலும்  இராமசாமி செட்டியார் செய்த திருப்பணி தொடர்பான கல்வெட்டுகள் ஏதும் இல்லை. அம்மன் கோயில் பெரிய மணியில் மட்டும் "தேவகோட்டை நகரத்தார்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.


இராமசாமி செட்டியார் முன்னின்று திருப்பணிகளை செய்திருந்தாலும் திருப்பணி செலவுகளை அவருடன் தேவகோட்டை நகரத்தார் சிலர் பகிர்ந்துள்ளனர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 1953-ல் எழுதிய "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற நூலில்² அழ.சித.லெ.இராமசாமி செட்டியாருடன் திருப்பணி செலவுகளை பகிர்ந்துகொண்ட தேவகோட்டை நகரத்தார் நால்வர் விலாசம் உள்ளது, அது பின்வருமாறு,

1.அரு.அரு.சோம (சத்திரம் சோம)

2.அரு.அரு.இராம (இரட்டை அரு)

3.அழ.அரு (ஜமீந்தார்)

4.அழ.சுப.சு


பாண்டிய மன்னரால் கட்டப்பெற்ற மங்களநாதர் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் நல்ல கருங்கற்களால் ஆனது. பின்னர் கட்டப்பெற்ற மண்டபங்கள் மற்றும் அம்பாள் கோயில் உள்ளிட்டவை கடற்பாறை கற்களால் ஆனது. கடற்பாறை என்பது கட‌ற்கரை பகுதியில் கிடைக்கக்கூடியது. அது எளிதில் சிதையும் தன்மை கொண்டது. ஆகையால் தான் கடற்பாறைகளால் கட்டப்பெற்று சிதிலமடைந்திருந்த பகுதிகளை நகரத்தார் கருங்கற்களால் மறுகட்டுமாணம் செய்துள்ளனர். இந்த உத்தரகோசமங்கை திருப்பணிக்காக அம்பாசமுத்திரம் அருகேயிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.


இராமசாமி செட்டியார் திருப்பணி வேலைகளை உத்தரகோசமங்கையிலேயே தங்கியிருந்து பார்த்துவந்துள்ளார். அதற்காக தெற்கு ரத வீதியில் ஒரு பங்களா கட்டியுள்ளார், அது திருப்பணி பங்களா என்று அழைக்கப்படுகின்றது. 


மேலும் இராமசாமி செட்டியாரால் மேற்கு ரத வீதியில் ஒரு பசுமடமும், பெரிய நந்தவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தவனத்தின் உள்ளே பூக்கட்டும் மடமும் அருகே இரண்டு பிள்ளையார் கோயில்களும் கட்டப்பெற்றுள்ளன.


பின்னர் 1959-ஆம் ஆண்டு மன்னர் பாஸ்கர சேதுபதியின் பேரர் மன்னர் ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி தலைமையில் தேவகோட்டை இரட்டை அரு குடும்பத்தார் திருப்பணி குழுவினராக இருந்து, இராமசாமி செட்டியாரின் மூத்த மகன் வழிப்பேரர் அழ.சித.லெ.இராம.இராம. லெட்சுமணன் செட்டியார் திருப்பணி செயலாளராக இருந்து மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பெற்றுள்ளது.³ அதற்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு ஒன்று அங்குள்ளது. அப்போது மங்களநாதர் சந்நதி முன் மண்டபம், மதில் சுவர் மற்றும் திருச்சுற்று மாளிகை கட்டும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. லெட்சுமணன் செட்டியார் மறைந்ததும், மீண்டும் திருப்பணி பாதியில் நின்று விட்டது.



அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் பேரர் அரு.இராமசாமி செட்டியார் கூறுகையில்⁴ "எங்கள் ஐயா இராமசாமி செட்டியார் வலையபட்டியில் பிறந்தவர்கள், எங்கள் பாட்டையா லெட்சுமணன் செட்டியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் இராமசாமி செட்டியாரை பிள்ளைகூட்டி கொண்டார்கள். உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி தேவகோட்டை சத்திரம் அருணாசலம் செட்டியாரிடம் கொடுத்தார்கள். அருணாசலம் செட்டியாரின் மகள் உண்ணாமலை ஆச்சியை எங்கள் ஐயா திருமணம் செய்திருந்தார்கள். மேலும் எங்கள் ஐயாவுக்கு இராமநாதபுரத்தில் தொழில் இருந்தது கடைகள் இருந்தன. ஆகையால் உத்தரகோசமங்கை திருப்பணி பொறுப்பை அருணாசலம் செட்டியார், தனது மாப்பிள்ளையான எங்கள் ஐயாவிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் ஐயாவும் சிறப்புற திருப்பணி செய்தார்கள்."


மற்றொரு பேரர் அரு.சிதம்பரம் செட்டியார் கூறுகையில்⁵ "உத்தரகோசமங்கை திருப்பணிக்காக தேவகோட்டை சத்திரம் சோம குடும்பத்தார் 250ரூபாயும், இரட்டை அரு குடும்பத்தார் 250ரூபாயும், ஜமீந்தார் அழ.அரு குடும்பத்தார் 250 ரூபாயும், அழ.சுப.சு குடும்பத்தார் 125ரூபாயும் எங்கள் ஐயா அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 125ரூபாயும் என மொத்தமாக மாதத்திற்கு 1000ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். வருடத்திற்கு 12,000ரூபாய். 10வருடங்கள் திருப்பணி நடந்துள்ளது. மொத்த திருப்பணிச் செலவு 1,20,000ரூபாய். திருப்பணியை எங்கள் ஐயா முன்னின்று மிகவும் சிக்கனமாக நடத்தியுள்ளார்கள். 


ஒருமுறை தேவகோட்டையில் இருந்து உத்தரகோசமங்கைக்கு மாட்டு வண்டியில் எங்கள் ஐயாவும் அப்பத்தாவும் செல்கையில் ஒரு திருடன் வண்டியை பின் தொடர்ந்து இருக்கிறான். அப்பத்தா 'திருடன் நம்மை தொடர்கிறான்' என்று சொல்ல, ஐயா 'அடி பைத்தியக்காரி அது திருடன் அல்ல மங்களநாதர் நமக்கு துணைக்கு வருகிறார்' என்று சொல்ல, அதைக் கேட்டு திருடனும் ஓடிவிட்டானாம். ஐயா எப்போதும் 'மங்களநாதா! மங்களநாதா!' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உத்தரகோசமங்கை மங்களநாதர் மீது அளவுகடந்த பக்தி உடையவராய் இருந்தார்கள்."


 உத்தரகோசமங்கையில் திருப்பணி செய்ததின் காரணமாக தேவகோட்டையில் அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் வீட்டை உத்திரகோசமங்கை செட்டியார் வீடு என்று அழைக்கின்றனர். 


உத்தரகோசமங்கையில் இராமசாமி செட்டியாரால் தொடங்கப்பெற்ற சிவன் கோயில் திருப்பணி நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது கோவையை சேர்ந்த இரா.வசந்த குமார் அவர்களால் திருச்சுற்று மாளிகை முழுமையாக கட்டப்பெற்று திருப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரன்பணி அறக்கட்டளை குழுவினரால் கோயிலின் மற்ற பகுதிகள் பழமை குன்றாதவாறு சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இராமநாதபுர சமஸ்தான ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கும்பாபிஷேகத்தன்று சிதம்பரம் நகர விடுதி ட்ரஸ்ட் உடன் உத்திரகோசமங்கை செட்டியார் வீட்டில் "டென்னிஸ்அரு" குடும்பம் இணைந்து அவர்களின் பசுமடத்தில் அன்னதானம் செய்தார்கள்.■



மேற்கோள்கள்:


1. INDIAN STREAMS RESEARCH JOURNAL, Volume-7 Issue-3 - April 2017 - "Tourism Potential in Sculptures Art and Architecture of Uthirakosamangai Temple - A study" - Dr.R.Muthu and Mr.M.Syed Ibrahim


2. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - 1953 - பண்டிதமணி கதிரேசன் செட்டியார் - பக் 252


3. கல்வெட்டு சிவன் சந்நிதி முன்பு உள்ளது.


4. அரு.இராமசாமி செட்டியார் என்கிற சோமன் செட்டியார் 01/02/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.


5.அரு.சிதம்பரம் செட்டியார் 12/01/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.







Tuesday, April 1, 2025

கோட்டையூர் க.வீ.சொ.வீ.அழகப்ப ஐயா

- பழ.கைலாஷ் -


கோட்டையூர், இது கோயில் திருப்பணிகளும் கல்வி அறப்பணிகளும் நிரம்ப செய்த பெருமக்கள் பிறந்த புண்ணிய பூமி. இவ்வூர் மெ.க வகையார் செய்த திருப்பணிகளை இக்கட்டுரையிலோ அல்லது ஒரு புத்தகத்திலோ அடக்கிவிட முடியாது, மெ.க வகையார் திருவண்ணாமலை கோயில் உள்ளிட்ட எண்ணற்ற திருப்பணிகள் செய்த பெருமான்கள்.


இந்த மெ.க வகையில் பிறந்த "வள்ளல் இராம.அழகப்ப செட்டியார்" ஆற்றியிருக்கும் அரும்பணிகள் அனைவரும் அறிந்ததே. காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமைக்குரியவர். கோட்டையூரில் உள்ள தனது இல்லத்தையே 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றியவர், ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.


வள்ளல் க.வீ.அழ.இராம.அழகப்ப செட்டியாருக்கே முன்னுதாரணமாக இருந்தவர் இதே மெ.க வகையில் பிறந்த "க.வீ.சொ.வீ.அழகப்ப செட்டியார்". இவர் தாம் பிறந்த பூர்வீக வீட்டில் உள்ள அனைத்து பங்குகளையும் வாங்கி 1940-ஆம் ஆண்டே "சனாதன தர்ம வித்யாலய" என்ற பெயரில் பள்ளிக்கூடமாக மாற்றியவர்.


இவரைப் பற்றி அறிந்துகொள்ளும் முன் இவரின் முன்னோர்களை பற்றி தெரிந்துகொள்வோம். 


சொக்கப்ப ஐயா.


அழகப்பையாவின் பாட்டனார் பெயர் க.வீ.சொக்கலிங்கம் செட்டியார். இவர் பெரும் தனவணிகர். பல திருப்பணிகள் செய்துள்ளார். கோவிலூர் மடாலயத்தின் இரண்டாவது மடாதிபதியான துறவு ஆண்டவர் என்னும் சீர்வளர்சீர் அருணாச்சல ஞானதேசிக சுவாமிகளிடமும் மூன்றாவது மடாதிபதி சீர்வளர்சீர் சிதம்பர ஞானதேசிக சுவாமிகளிடமும் முதன்மை சீடராக இருந்து, வேதாந்தப் பாடம் பயின்றும், பலருக்கு பயிற்றுவித்தும் வந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தமக்கு வேதாந்தத்தில் சந்தேகம் வருகின்றபோதெல்லாம் இவரிடம் கேட்டுத் தெளிவுபெற்றுள்ளார்.


கோவிலூர் மடாலயத்தில் வேதாந்தம் கற்று காவி உடையணிந்து துறவு பூண்டவரை "சுவாமிகள்" என்றும், வேதாந்தம் கற்று காவி அணியாமல் வெள்ளை உடையிலேயே இல்லறத்தில் இருந்து வருபவர்களை "ஐயா" என்றும் அக்காலத்தில் அழைத்துள்ளனர். சொக்கலிங்கம் செட்டியார் வேதாந்தம் கற்று இல்லறத்தில் இருந்துவந்ததால் "சொக்கப்பையா" என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றுள்ளார்.


சொக்கப்பையா, துறவு ஆண்டவரின் சீடராக சிதம்பரத்தில் வாழும் காலத்தில் தம் சொந்த செலவில் இளமையாக்கினார் கோயிலில் சில திருப்பணிகள் செய்தும், சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பல சுவாமிகள் மடமும், அருகே துறையூரில் உள்ள மடமும் நிலையாக நடந்திட வழிவகை செய்துள்ளார்.


கோவிலூர் மடாதிபதியின் நேரடி நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார் சொக்கப்பையா. அதற்கு ஒரு உதாரணம் கோவிலூர் மடாலயத்தின் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு சாட்சி கையெழுத்திட்டு வந்துள்ளார்.


கோவிலூர் மடாலயத்திற்கு சொந்தமான "களத்தூர்" என்னும் கிராமத்தில் பர்வதவர்த்தனி உடனமர் இராமநாதசுவாமி கோயிலை தம் சொந்த பொருட் செலவில் புதிதாய் கட்டி சிதம்பர ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்து அதன் அருகே ஒரு மடத்தை நிறுவி பலருக்கும் வேதாந்தம் பயிற்றுவித்து வந்துள்ளார் சொக்கப்பையா. இந்த கோயிலில் நித்திய பூஜைகள் சிறப்பாக நடந்திட செட்டிவயல் என்னும் கிராமத்தை எழுதி வைத்துள்ளார். இதை நமக்கு கீழ்கண்ட பாடல் விளக்குகிறது.


"தலமலிந்த களத்தூரில் பர்வதவர்த்தனி என்னுந்

தாயி னோடு

கலமலிந்த இராமனாதப் பெருமான் பூசையென்றும்

நடத்தற் காக

வலமலிந்த செட்டிவயல் எனும்கிராமம் வாங்கிவைத்து வளமை செய்து

பலமலிந்த பெரியோன்தன் பெரும்புகழை அரும்புலவர்

பகர்வர் மாதோ!"


இப்படியாக பல திருப்பணிகளை செய்து வேதாந்த நூல்களை பயிற்றுவித்து வந்த சொக்கப்பையா கி.பி.1889ஆம் ஆண்டு சித்தியடைந்தார். இவரது சமாதி கோவிலூர் மடாலய நந்தவனத்தில் உள்ளது.



வீரப்ப செட்டியார். 


அழகப்பையாவின் தந்தை க.வீ.சொ.வீரப்ப செட்டியார். இவர் தம் தந்தை சொக்கப்பையாவை பின்பற்றி இளமையாக்கினார் கோயிலை காரைக்குடி பெரி.க குடும்பத்தாருடன் இணைந்து முழுக்கோயிலையும் புதிய கல்திருப்பணி செய்து கி.பி.1900-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


மேலும் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தையும், துறையூர் மடத்தையும் விரிவுபடுத்தி கட்டியுள்ளார்.



அழகப்ப ஐயா(1875-1946).


க.வீ.சொ.வீரப்ப செட்டியாரின் மகனாக கி.பி.1875-ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் பிறந்தார் அழகப்ப செட்டியார். பர்மா, இலங்கை, மலே‌சியா ஆகிய நாடுகளில் பெரும் வணிகம் செய்து வந்தார். தன் பாட்டனாரை பின்பற்றி கோவிலூர் மடாலயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.


கோவிலூர் மடாலய ஐந்தாவது மடாதிபதி சீர்வளர்சீர் வீரசேகர ஞானதேசிக சுவாமிகளிடம் வேதாந்த பாடம் கேட்டு, சுவாமிகளின் அன்புக்குரிய சீடராக இருந்தார்.


தனது பாட்டனார் போல் வேதாந்தம் கற்று இல்லறத்தில் இருந்துவந்ததால் அழகப்ப செட்டியார் "ஐயா" என்ற பட்டம் பெற்று "அழகப்பையா" என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெற்றார்.


சொக்கப்பையா கட்டிய "களத்தூர்" இராமநாத சுவாமி கோயிலை அழகப்பையா அன்றைய மதிப்பில் 10,000ரூபாய் செலவில் சீர்திருத்தி வீரசேகர சுவாமிகள் தலைமையில் கி.பி.1908-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


கோ.அளகாபுரி அருகேயுள்ள "கல்லாங்குடி" திருப்பாகதீஸ்வரா் கோயிலை 50,000ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டி கி.பி.1922-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


அக்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பாடல்பெற்ற திருத்தலங்களை தேடித் தேடித் திருப்பணி செய்து வந்தார்கள். சிதம்பரம் அருகே திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருநெல்வாயில் என்னும் "சிவபுரி" உச்சிநாதர் கோயில் சிதிலமடைந்திருந்ததை கண்டு வருத்தமடைந்த அழகப்பையா. தன்னுடன் க.வீ.மு.ப.கதிரேசன் செட்டியார் மற்றும் காரைக்குடி முத்து.அரு.மு.அருணாச்சலம் செட்டியார் ஆகியோரை இணைத்து கோயில் திருப்பணிகளை தொடங்கினார். பழைய கோயிலை முற்றிலுமாக பிரித்து, அன்றைய மதிப்பில் 3,27,500ரூபாய் செலவில் புதிய கருங்கற்களால் இராஜகோபுரத்துடன் பெரிய கோயிலாக கட்டி கி.பி.1928-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தார். தொடர்ந்து அழகப்பையாவின் வம்சாவளியினரால் 1957, 1982, 2008 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று, அன்று முதல் இன்று வரை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அழகப்பையாவால் சிவபுரியில் அழகிய திருக்குளம், நந்தவனம், பசுமடம், தண்ணீர்ப்பந்தல், அக்ரஹார வீடுகள் ஆகியன உருவாக்கப் பெற்றுள்ளன.


கும்பகோணம் அருகேயுள்ள பாடல்பெற்ற தலமான "அவளிவநல்லூர்" சாட்சிநாதர் கோயிலும் சிவபுரி போல் சிதிலமடைந்திருந்துள்ளது. அழகப்பையா தன் பெரும்முயர்சியில் காரைக்குடி மெ.மெ.மெய்யப்ப செட்டியார் மற்றும் நேமத்தான்பட்டி மு.பெ.காசி செட்டியார் ஆயியோருடன் இணைந்து பழைய கோயிலை பிரித்து, புதிய கருங்கற்களால் சுமார் 1,00,000ரூபாய் செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


வேதாந்தப்பாடம் மூலம் தம் வாழ்வில் ஒளி ஏற்றிய கோவிலூர் மடத்திற்கு மின்சார ஒளி வசதி ஏற்படுத்தியுள்ளார் அழகப்பையா.


தனது குரு வீரசேகர ஞானதேசிக சுவாமிகளால் கல்திருப்பணி செய்யப்பெற்று கி.பி1911-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற "திருக்களர்" பாரிஜாதவனேசுவரர் கோயிலின் அறங்காவலராக இருந்து பல திருப்பணிகள் செய்து கி.பி1933-ஆம் ஆண்டு மகாதேவ ஞானதேசிக சுவாமிகள் தலைமையில் இரண்டாவது கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


திருவண்ணாமலை அருகே "பழங்கோயில்" எனும் ஊரில் உள்ள பலக்ராதீஸ்வரர் கோயில் சிதிலமடைந்திருந்ததை கண்ட அழகப்பையா அக்கோயிலை 20,000 ரூபாய் செலவில் சீர்திருத்தி விரிவுபடுத்திக் கட்டி கி.பி.1933-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார். மேலும் கோயிலில் தினசரி பூஜைகள் நடந்திட எலத்தூர் என்னும் கிராமத்தை வாங்கி கோயிலுக்கு எழுதிவைத்துள்ளார். நில விபரங்களை சர்வே எண்ணுடன் கோயிலில் கல்வெட்டாக பொறித்துவைத்துள்ளார். இன்றும் அதை நாம் காணலாம்.


"குருநாதர்" என்று அழைக்கப்பெற்ற ஸ்ரீ யோகானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம் இறுதிகாலத்தில் கோட்டையூரில் தங்கியிருந்து சமாதியானார்கள். அவர்களுக்கு அழகப்பையா கோட்டையூர் நகரத்தார் பொருளுதவியுடன் அழகிய அதிஷ்டான ஆலயம் எழுப்பி, அதன் முன்பு தம் சொந்த பொருட்செலவில் அலங்கார மண்டபம் கட்டி, கி.பி.1937-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார். அலங்கார மண்டப கல்தூண்களில் அழகப்பஐயாவும் அவர்தம் மனைவி அலமேலு ஆச்சியும் சதாசேவிப்பு சிற்பமாக காட்சியளிக்கின்றனர். இந்த ஆலயம் அழகப்பையாவின் வம்சாவளியினரால் 1994 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் செய்யப்பெற்று சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற திருநாரையூர் சுயம்பிரகாசர் கோயிலில் காரைக்குடி பழ.இராம. லெட்சுமணன் செட்டியாரால் 1930களில் திருப்பணிகள் தொடங்கப்பெற்றது. இக்கோயில் பற்றி தெரிந்துகொண்ட அழகப்பையா, திருப்பணியில் இணைந்துகொண்டார். தம் சொந்த பொருட்செலவில் சுவாமி கோயிலின் திருச்சுற்று திருமாளிகை, தெட்சிணாமூர்த்தி மண்டபம், லெட்சுமி சந்நிதி, உள் இராஜகோபுரம், உள் மதில்சுவர் மற்றும் தீர்த்தப்படித்துறைகள் ஆகியவற்றை கட்டிக்கொடுக்க, கி.பி.1943-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.


தாம் பிறந்த மெ.க வகையாருக்கு விருப்பத்திற்குரிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் கி.பி.1944-ல் நடைபெற்ற போது அக்கோயில் அறங்காவலராக இருந்தார் அழகப்பையா. 


மேலும் தமது குலதெய்வ கோயிலான மூலங்குடி பொய்சொல்லா மெய்யர் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்துள்ளார்.


அழகப்பையா, கோயில்கள் திருப்பணி செய்யும் காலத்தில் அக்கோயில்கள் தொடர்பான புராண நூல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் பல வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க நூல்கள் "சொர்ணபுரீஸ்வரர் சௌந்தரிய நாயகி அந்தாதி-1917", "செல்வவிநாயகர் செம்பொன்மாலை-1917", "சிவபுரி புராணம்-1923", "கோவிலூர் நால்வர் நான்மணிமாலை-1930", "திருநாரையூர்ப்புராணம்-1935", "ஆன்மானான்ம விவேகம்-1938", "திருவண்ணாமலை வரலாறு-1940", "வினாவிடை மணிமாலை-1943".


அழகப்பையா ஆன்மீக பணிகள் மட்டுமல்லாது கல்வி பணிகளும் செய்துள்ளார். மலேசியா கோலப்பிலா-வில் வணிகம் செய்து வந்த போது, மலேசிய பல்கலைக்கழகத்திற்கு கி.பி.1940களில் 200அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளார்.


கோட்டையூரில் தாம் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டில் உள்ள அனைவ‌ரின் பங்குகளையும் விலைக்கு வாங்கி அப்பெரிய வீட்டை 1940ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் "சனாதன தர்ம வித்யாலய" என்ற பெயரில் பள்ளிக்கூடமாக உருவாக்கினார். இன்றும் இவரது வம்சாவளியினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.


அழகப்பையாவின் அறுபது வயது பூர்த்தி மணிவிழா கோவிலூரில் 1935-ஆம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது கோட்டையூர் வித்வான் சுப்பிரமணிய ஐயரால் "கல்யாண சிறப்பு" என்னும் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது. அச்செய்யுள் அழகப்பையாவின் வரலாற்றை கூறுவதாக அமைந்துள்ளது.


பற்பல கோயில் திருப்பணிகள் மற்றும் கல்விப்பணிகள் செய்துவந்த அழகப்பையா தமது 71வது அகவையில் கி.பி.1946ஆம் ஆண்டு சித்தியடைந்தார். இவரது சமாதி கோவிலூர் மடாலய நந்தவனத்தில் உள்ள சொக்கப்பையா சமாதியின் எதிரில் உள்ளது. சொக்கப்பையா லிங்கமாகவும் அழகப்பையா நந்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். வருடம் தோறும் வைகாசி மாதம் சொக்கப்பையாவுக்கும் சித்திரை மாதம் அழகப்பையாவுக்கும் குருபூஜைகள் நடைபெற்று வருகின்றன.

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...