Followers

Tuesday, September 21, 2021

அண்ணல் அரையாடைக்கு வயது நூறு - காரைக்குடியின் தனிச் சிறப்பு.



அண்ணல் காந்தியடிகள் மேலாடையைத் துறந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவாகின்றன. 1921ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் காலை மதுரையில் அரையாடை அணிந்த காந்திஜி, முதன் முறையாக செட்டிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இரவு காரைக்குடியில் தங்கினார். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை இக்கட்டுரையில் காண்போம். 

மதுரை வருகை
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், நாடெங்கிலும் ஒத்துழையாமை குறித்து மக்களிடம் பரப்புரை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1921 செப்டம்பர் 21 அன்று பிற்பகல் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தார். கதர் மற்றும் சுதேசி இயக்கம் மக்களிடம் வலுப்பெறவும், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கவும் அவர் மேற்கொண்ட இந்தியச் சுற்றுப் பயணத்தில் ஒரு பகுதியாக இவ்வருகை அமைந்திருந்தது. 

அன்று மாலை காந்திஜி, மதுரையில் வயல்களில் வேலை செய்யும் ஏழை விவசாயிகளையும் ஆடைகளை நெய்யும் ஏழை நெசவாளிகளையும் பார்த்தார். உணவும் உடையும் தருபவர்கள் நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால் அவர்கள் உடுத்துவதற்குப் போதிய உடை இல்லை. கோவணம் அணிந்து வேலை செய்யும் அவர்களின் வறுமையை நினைத்து வருந்தினார். 

அன்று இரவு மதுரையில் தனது ஆதரவாளரும் குஜராத் தொழிலதிபருமான ராம்ஜி கல்யாண்ஜியின் விருந்தினராக, மேலமாசி வீதியில் அவருக்குச் சொந்தமான இல்லத்தில் மாடி அறையில் தங்கினார். மறுநாள் செட்டிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரவு முழுவதும் அன்று பகலில் தாம் கண்ட மக்களையே நினைத்துக் கொண்டிருந்தார். 

அரையாடை பூண்டார்
அடுத்த நாள், செப்டம்பர் 22ஆம் தேதி, அதிகாலை மதுரையில் இருந்து செட்டிநாட்டிற்கு புறப்படும்போது மகாத்மா மேற்கொண்ட முக்கியத்துவமிக்க ஆடை மாற்றம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டையில்லாமல் அரையாடை புனைந்து வெளியில் அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது அன்று தான். 

இளமையில் காந்திக்கு எல்லோரையும் போல் ஆடம்பர உடை உடுப்பதில் ஆர்வம் இருந்தது. இங்கிலாந்திலிருந்தபோது மேற்க்கத்திய உடைகளை அணிந்தார். இதற்காகப் பெரும் பணமும் செலவிட்டார். ஆனால் காலப்போக்கில் அவர் உடையில் மாறுதல் ஏற்பட்டது. ஆடம்பர உடைகளை விட்டொழித்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அங்குள்ள ஏழை இந்தியக் கூலிகளைப் போலவே உடை உடுத்தினார். இந்தியா திரும்பிய பின் கத்தியவார் நாட்டு மக்களைப் போல கதராலான சட்டை, நீளமான தலைப்பாகை, வேட்டி உடுத்தினார். 1921ஆம் ஆண்டு மதுரையில் செப்டெம்பர் 22ஆம் நாள் அரையாடைக்கு மாறினார், அதாவது ஒரு துண்டும், இடையில் முழங்காலளவு ஒரு வேட்டியும் உடுத்தினார். அரையாடைக்கு மாறிய பின் மதுரையில் காந்தியை தனியாக ஒரு புகைப்படம் எடுத்தனர். 

முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக் கொள்வதை ஒரு தற்காலிகமான முடிவாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் பின்னர் அதுவே நிலைத்து விட்டது. அவர் மறையும் வரை இது மாறவே இல்லை. இவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவை காந்திஜி மதுரையம்பதியில் வந்து மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே கூட முன்கூட்டி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது என்று திட்டமிட்டுச் செய்யவில்லை. அவர் உள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம் படிப்படியாக நாளொரு வண்ணமாக, வளர்ந்து மதுரையம்பதியில் முழுமை அடைந்திருக்கிறது. 

ஒரு வியப்பு என்னவென்றால் இந்தப் புரட்சிகரமான செயலை ஒரு செய்தியாக அந்தக் காலத்துப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. 

அரை ஆடை புனைந்த பின் காலை 7மணிக்கு சௌராஷ்டிரீயர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்திலிருந்து நேராக காந்திஜியும் அவர் குழுவினரும் காலை 9மணிக்கு செட்டிநாட்டிற்கு புறப்பட்டனர். 


செட்டிநாடு நோக்கி
செட்டிநாடு நல்ல செல்வச் செழிப்புடன் இருந்த காலம் அது. காந்திஜியின் வருகையை முன்னிட்டு செட்டிநாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கு சில இடங்களில் காந்திஜியின் காரைச் சில விநாடிகள் நிறுத்தி அவர் மீது மலர்களைச் சொரிந்து அதன் மூலம் தங்கள் அன்பையும் சொரிந்து வழி அனுப்பி வைத்தனர் மக்கள். செட்டி நாடே எழுச்சி பெற்றதன் அறிகுறி இவையெல்லாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். 

கானாடுகாத்தான்
செட்டிநாட்டில் காந்தி காலடி பட்ட முதல் ஊர் பலவான்குடி. பலவான்குடியில் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு, நல்ல நடு மதிய நேரத்தில் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார். அங்கு உணவு அருந்தி விட்டு, ஓர் அழகான பந்தலின் கீழ் ஐயாயிரம் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்ததைக் கண்டு ஆனந்தத்துடன் உரையாற்றினார். பல சங்கங்களின் சார்பாக ஏராளமாக வரவேற்புக்களும் பணமுடிப்புக்களும் வழங்கப் பெற்றன. "வெளிநாட்டுச் சாமான்களையெல்லாம் விலக்க வேண்டும்" என்று அங்கு அறிவுரை கூறிவிட்டு, பள்ளத்தூர், வேலங்குடி வழியாகக் கோட்டையூருக்குப் சென்றார். அங்கும், ஒரு விசாலமான பந்தலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

காரைக்குடி
இவைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, காரைக்குடிக்கு காந்திஜி வந்து சேர்ந்தபோது இரவு 7 மணி, அந்நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தும் தலைவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நிலக்கிழார்கள் ஆகியோர் அவருக்கு வரவேற்பளிப்பதற்காக அங்கு வந்திருந்தனர்.

புதுக்கோட்டையே காரைக்குடியில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களின் சார்பாக அண்ணலிடம் வரவேற்புரைகளும் பணமுடிப்புகளும் அளிக்கப்பெற்றன. 

காரைக்குடிக்கு காந்திஜி வந்திருந்தபோது திருக்குறளைப் பற்றிய பேச்சு இடையே வந்தது, அப்போது காந்திஜி, "திருக்குறளைப் பற்றி எனக்குத் தெரியும். திருவள்ளுவர் மிகப் பெரிய ஆசிரியர்" என்று கூறியது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

காரைக்குடியில் காந்திஜி வரவேற்பு ஏற்பாடுகளில் பெரும் பங்கு கொண்டவர் காந்தி மெய்யப்பச் செட்டியார். இவர் காந்திஜி மீது மிகுந்த பக்தி கொண்டவராதலால், இவரை காந்தி மெய்யப்பர் என்று எல்லோரும் அழைத்தார்கள். 

காரைக்குடியைச் சேர்ந்த பெண்கள் பலர் அண்ணலைச் சந்தித்து வரவேற்புரையும் பணமுடிப்பும் அளித்தார்கள். இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவரால் மேடைக்குச் செல்ல முடியவில்லை. ஆகையால்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட அப்பெருங்கூட்டத்தில் ஒரு ஓரத்தில் தம் காரில் இருந்து கொண்டே பேசினார். இந்து மதாபிமான சங்கம் ஒரு வரவேற்பு பத்திரம் வாசித்தளித்தது. காரைக்குடியைச் சேர்ந்த எட்டு அமைப்புக்களின் சார்பாகப் பண முடிப்புக்களும் எட்டு வரவேற்புரைகளும் அளிக்கப்பெற்றன. பின்னர் இரவு 8மணிக்கு காந்திஜி, தேவகோட்டைக்கு புறப்பட்டார். 

தேவகோட்டை
தேவகோட்டை செல்லும் வழியில் அமராவதிபுதூரில் சில நிமிடங்கள் காரை நிறுத்தி வரவேற்புரையைப் பெற்றுக் கொண்டு சென்றார். இன்று இரவு எ‌வ்வளவு நேரமானாலும் காந்திஜியை கண்டுவிட வேண்டும் என பலர் தேவகோட்டையில் காத்திருந்தனர். தேவகோட்டை சென்றவுடன் நேரடியாகப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.  தனவைசிய சபையினர் சார்பாகவும் சுவாமி விவேகானந்தர் சங்கத்தின் சார்பாகவும் வரவேற்புரைகள் அளிக்கப்பெற்றன. இதில் ஒரு வரவேற்புரை தங்கத் தட்டிலேயே பொரிக்கப் பெற்றிருந்தது.  மேலும் காந்திஜியிடம் ஏராளமான பண முடிப்புகள் அளிக்கப்பட்டது. 

பொது கூட்டத்தில் பேசிய காந்திஜி, "தேவகோட்டையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குதிரை இருப்பது போல, ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இராட்டை இருக்க வேண்டும் மற்றும் என்னைப்போன்று நீங்களும் எளிய கதர் ஆடைகள் அணிந்தால், இந்தியாவில் மட்டுமல்லாமல் இரங்கூனிலும் மற்ற இடங்களிலும் உங்களுடைய தொழில் வெகு சிறப்பாக நடைபெறும். ஆந்திராவில் உள்ளவர்களைப் போன்றே இங்குள்ள ஆண்களும். கல்வைத்த மோதிரங்களும் கடுக்கண்களும் அணிவதில் ஆசையுள்ளவர்களாய் இருப்பதைக் காணுகிறேன், அவைகளைத் சுதந்திர போராட்ட நிதிக்கு கொடுத்து விட்டு நீங்கள் எளிமையாக வாழ்ந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று பேசினார். 

இரவு காரைக்குடியில் உறக்கம்
நள்ளிரவு மீண்டும் காரைக்குடி திரும்பினார். முதன் முதலில் அரையாடை உடுத்திய பின் அண்ணல் காந்தி உறங்கிய ஊர் என்பதால் காரைக்குடி சிறப்புற்றது.

அன்பன்
பழ.கைலாஷ்
22/09/2021

Thursday, September 16, 2021

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்


    பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்

மிழகம் எத்தனையோ அறிஞர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும் ஈன்றெடுத்திருக்கிறது. இந்த வரிசையிலே முதன்மையாக வைத்து எண்ணத்தக்கவர்களுள் ஒருவர் "மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்". 

இப்பெருந்தகையாளரை நாடு நன்கறியும். ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச் சிறப்பு இவருக்கு மட்டுமே உரியது. 

"இவர் பட்டம் பெறப் பிறந்தவரல்லர்; பட்டம் வழங்கப் பிறந்தவர்" என்பார் சோமலெ. 

"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் 'பண்டிதமணி' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்று கூறி மு.கதிரேசச் செட்டியாருக்கு "பண்டிதமணி" என்னும் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர். 

தமிழகத்தில் பொதுவாக "பண்டிதமணி" என்னும் பெயர் இவரையே குறிக்கும்.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்!" என உலக ஒருமைப்பாட்டைப் பாடிய புலவர் பெருந்தகை கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றை நாட்டின் தலைநகராம் மகிபாலன்பட்டியில் கி.பி.1881ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் முத்துக்கருப்பன் செட்டியார் - சிகப்பி ஆச்சியின் மகிமைமிகு பாலனாய் உதித்தார் கதிரேசச் செட்டியார். இவரது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார், அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. 

அக்காலத்தில் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதிலேதான் நாட்டுக்கோட்டை நகரத்தார் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, பட்டப்படிப்பில் நாட்டமில்லை. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது. 

இதைப் பற்றி பண்டிதமணி, "யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. 'ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன!' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது" என்கிறார். 

இதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருக்க, தந்தை இறந்த செய்தி கேட்டு தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். குடும்பப் பொறுப்பை ஏற்கிறார். ஆனால் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மென்மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார். 

ஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். 

தொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணி. சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரஙகளைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான "சொக்கலிங்க ஐயா"வை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார். 

இதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார். 

பண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார். 

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ.பழ.சா.பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை' நிறுவப்பட்டது. 

இவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினர். 

சொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு செய்தல் எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். 

வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி இவர். மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கௌடிலீயம் என்னும் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருள் நூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 

மேலு‌ம் இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார். 

வித்துவான் வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியாரால் தொகுத்து வைக்கப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் திருக்கோயில் திருப்பணிகள் பட்டியல் 1953ஆம் ஆண்டு மேயர் ஆர்.இராமநாதன் செட்டியாரின் உதவியால் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியாரால் சீரிய முறையில் திருத்தி விளக்கி "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. 

திருவாசகம், திருச்சதகம், நீத்தல்விண்ணப்பம், திருவெம்பாவைப் பகுதிகட்கு இவர் எழுதிய திருப்பு 'கதிர்மணி விளக்கம்' உரை நூல்கள் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் இவரின் கொடையாகும். 

சைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட பண்டிதமணி, பலவான்குடியில் மணிவாசகச் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். 

பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு "மகாமகோபாத்தியாய" என்ற பட்டத்தை வழங்கியது. உ.வே.சாமிநாதையருக்கு பிறகு இப்பட்டத்தை பெற்றவர் இவரே. 

மேலும் சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு பட்டங்களை தமிழுலகம் அவருக்கு அளித்து சிறப்பித்தது. 

தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்ட பண்டிதமணி கி.பி 1953ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் அமரரானார். 

மகிபாலன்பட்டியில் நினைவு மண்டபம் அமைத்தும், அவரின் நூல்களை நாட்டுடைமையாக்கியும் தமிழக அரசு அவருக்கு சிறப்புசெய்துள்ளது. 


அன்பன்
பழ.கைலாஷ் 


[உதவிய நூல் "பண்டிதமணி" - சோமலெ, இன்பநிலையம்]

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...