Followers

Sunday, May 31, 2020

அமராவதிபுதூர் மகளிர் கல்லூரி



செட்டிநாட்டின் சீர்திருத்த செம்மல் என்று போற்றப்படும் 'சொ.முருகப்பா' 1893இல் காரைக்குடியில் சொக்கலிங்கம் செட்டியார்-விசாலாட்சி ஆச்சி இணையருக்கு மகனாக பிறந்தார்.

சொ.முருகப்பா 1917இல் காரைக்குடியில் "இந்து மதாபிமான சங்கம்" எனும் அமைப்பை மூத்தோர் சிலருடன் சேர்ந்து தோற்றுவித்தார். இச்சங்கத்திற்கு 1919இல் வருகை தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார், இச்சங்கத்தின் மீது வாழ்த்து பாக்கள் பாடியுள்ளார். பின்னர் இரண்டாவது முறையாக 1920இல் பாரதி இச்சங்கத்திற்கு வருகை தந்த போது சங்கத்தினருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இங்கு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டதாக நமக்கு கிடைக்கும் ஆறு புகைப்படங்களுள் இரண்டு புகைப்படம் 1920இல் இங்கே எடுக்கப்பட்டது.

பின்னர் சொ.முருகப்பா அதே 1920ஆம் ஆண்டு "தனவைசிய ஊழியன்" எனும் பத்திரிகையை உருவாக்கினார். இப்பத்திரிக்கை பின்னர் 'தமிழ்க் கடல்' இராய.சொ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு "ஊழியன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

சொ.முருகப்பா 1923இல் "காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தை" தொடங்கினார் . அதன் சார்பில் அதே ஆண்டு "குமரன்" எனும் இதழை தொடங்கி 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார்.

சீர்திருத்த சிந்தனையாளரான இவர் ஒரு முறை பட்டுக்கோட்டையில் கைம்பெண் மறுமணம் குறித்து ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த 'மரகதவல்லி' என்ற கைம்பெண் "நான் ஒரு விதவை பெண், என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ள தயாரா?" என்று கேட்க,  உடனே இவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவர்கள் திருமணம் 29/06/1923இல் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. அக்காலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வது என்பதே பெரும் புரட்சி. இவர் சாதி மறுப்பு மற்றும் விதவை மறுமணம் செய்துள்ளார். இதை பார்த்தது தமிழ்நாடே வியந்தது.

1937இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரில் முதல் விதவை மறுமணம் நடந்தது, இதை முன்நின்று நடத்தி வைத்தவர் சொ.முருகப்பா.

இப்படியாக அவரை எல்லோரும் "சீர்திருத்த செம்மல்" என்று அழைத்துவந்தனர்.



காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் சொ.முருகப்பாவும் அவர் மனைவி மரகதவல்லி அம்மையாரும் இணைந்து மகளிர் இல்லம் ஒன்றை நிறுவினர். இளம் கைம்பெண்களுக்கு கல்வி கற்பித்து கைத்தொழில்கள் பயிற்றுவித்து மறுமணம் செய்து வைக்கும் நோக்கத்துடன் 10/04/1938இல் பல ஏக்கர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் சார்பில் மரகதவல்லி அம்மையாரை ஆசிரியராக கொண்டு "மாதர் மறுமணம்" எனும் இதழ் வெளிவந்து. பின்னர் இவ்வளாகத்தில் மழலையர் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது.

சொ.முருகப்பா 1956இல் மறைந்தார். சொ.முருகப்பா மறைந்த பின்னரும் மரகதவல்லி அம்மையாரால் மகளிர் இல்லம் நடத்தப்பட்டு வந்தது. அம்மையாரின் மறைவுக்கு பின்னர் பள்ளத்தூர் பழ.லெ.பழனியப்ப செட்டியார் குடும்பத்தினரால் தொடர்ந்து நல்ல முறையில் நடத்தப்பட்டு வந்தது மற்றும் இக்குடும்பத்தினர் பள்ளத்தூரில் நடத்தி வந்த "ஸ்ரீ சாரதா சேவாசிரமம்" என்கிற மகளிர் சேவை நிறுவனம் இவ்வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வளாகத்தினுள் சாரதா தேவி கோவில்( ஸ்ரீ சாரதா தேவி மந்திர்) ஒன்று இவர்களால் பல லட்சம் ரூபாய் செலவில் 1992இல் கட்டப்பட்டது.


இவை அனைத்தும் 1996இல் "ஸ்ரீ சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை " யிடம் இலவசமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை மூலம் 1998இல் சிலர் நன்கொடையில், புதிதாக "ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி" ஒன்று தொடங்கப்பட்டது. சொ.முருகப்பாவும் மரகதவல்லி அம்மையாரும் கண்ட கனவை ஸ்ரீ சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை திறம்பட செய்துவருகின்றனர். அனைத்து சமயப் பெண்களும் இங்கு பயின்று வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்துக்காக இடைவிடாது செயல்பட்டு வருகிறது இந்த அமராவதிபுதூர் மகளிர் கல்லூரி.

- பழ.கைலாஷ் 

Saturday, May 16, 2020

ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்

மேலவளவு என்கின்ற ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்(Emperor George Gate) தேவகோட்டையில் அமைந்துள்ளது.

EMPEROR GEORGE GATE
DEVAKOTTAI 



கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி,1876ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பேரரசியாக பிரிட்டன் ராணி விக்டோரியா முடிசூட்டிக் கொண்டார். அவர் மறைந்த பின் அவரின் மகன் ஏழாம் எட்வர்ட் பிரிட்டன் அரசராகவும் இந்திய சக்கரவர்த்தியாகவும் தொடர்ந்தார். ஏழாம் எட்வர்ட் மறைந்த பின்னர் அவரின் மகன் ஐந்தாம் ஜார்ஜ் பிரிட்டன் அரசரானார். தான் இந்திய சக்கரவர்த்தியாக பதவியேற்றுக் கொள்ளும் விழா இந்தியாவில் வேகு விமர்சையாக நடக்க வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே இந்தியாவில் பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக 40 நாள் பயணமாக ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், அவர் மனைவி ராணி மேரியும் இந்தியா வந்தனர். இந்த விழாவில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய சமஸ்தான அரசர்கள், மாகாண கவர்னர்கள், வணிகர்கள் எனப் பலர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, 1911ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி டெல்லியில் வெகு தடபுடலாக நடைபெற்றது.

அதன் ஞாபகார்த்தமாக தேவகோட்டையில் ஓர் ஆர்ச் கேட் கட்டப்பட்டு தேவகோட்டை தாலுகா பிரசிடெண்ட்டாக இருந்த நாகசுந்தரம் ஐயர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஆங்கிலத்திலும் தமிழிலும் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் கல்வெட்டு வாசகமானது:
" ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்
மாக்ஷிமை தாங்கிய இந்தியாசக்கரவர்த்தி 5வது ஜார்ஜ் அரசர் டில்லியில் முசூட்டியருளிய ஞாபகார்த்தமாக நிற்மாணம் செய்வித்த கேட் 1911௵ டிசம்பர்௴ 12௳ யில் தேவகோட்டைத் தாலூகா போர்டு பிரிசிடெண்டு மகா-ள-ள-ஸ்ரீ நாகசுந்தரமய்யரவர்களால் திறக்கப் பெற்றது"

ஆங்கில கல்வெட்டு வாசகமானது :
" EMPEROR GEORGE GATE
INCOMMEMORATION OF THE CORONATION CELEBRATION
IN DELHI OF HIS IMPERIAL MAJESTY KING GEORGE V
OUR BELOVED EMPEROR OF INDIA ON 12th DECEMBER 1911
OPENNED BY MR. R.NAGASUNDRAMIER, PRESIDENT TALUQ BOARD OF DEVAKOTTA"

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆர்ச் கேட் தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.

Kailash PL

Sunday, May 10, 2020

காந்திப் பசு

காந்திப் பசு

பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
(மகாத்மா காந்தியின் இளம் தோற்றம் )



தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் நலனுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மேன்மையை உணர்ந்த, "இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் பத்திரிகை வாயிலாக காந்தியை வெகுவாகப் பாராட்டி வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க இந்தியர் போராட்டத்துக்காக நிதி வசூல் செய்து, தாமே ஐந்து ரூபாய் போட்டு, பணத்தைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் பாரதி.

1909இல் காந்தி தென் ஆப்பிரிக்க இந்தியர் சார்பில் லண்டனுக்கு தூது சென்று திரும்பிய சமயம் தென் ஆப்பிரிக்க அரசாங்கம் காந்தியை கைது செய்தது.

இதைப் பற்றி பாரதி "இந்தியா" பத்திரிகையில் 1909இல் டிசம்பர் மாதம் ஒரு சித்திரம் மூலமாகவும் சித்திர விளக்கம் மூலமாகவும் தம் கருத்தை தெரிவித்துள்ளார்.

1909ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'இந்தியா' பத்திரிகையில் வந்த கார்ட்டூன்.


அந்த சித்திரத்தின் கீழுள்ள குறிப்பானது "ஸ்ரீ காந்தியென்ற பசுவானது தனது கன்றுக்குட்டியாகிய இதர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய் பேசிவிட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன்மையை அறியாமல் சிறையிலடைத்தார்கள்"

பத்திரிகையின் உள்ளே உள்ள சித்திர விளக்கமானது: "முற்காலத்தில் நடந்ததாக இந்துக்களின் புராணங்களில் சொல்லியிருக்கும் விஷயம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பசுவானது தன்னுடைய கன்றுக் குட்டிக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டபடியால் புலியைப் பார்த்து, 'ஹே பிரபு! இன்று என்னுடைய கடமையைச் செலுத்தாமல் வந்துவிட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்போழுதே போய் பால் கொடுத்துவிட்டுவந்து உமக்கு இரையாகிவிடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது.

'புலி நெடுநேரம் யோசித்து அதனுடைய ஸத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, 'போய் காரியமான உடனே வந்துவிடு' என்று சொல்லி அனுப்பியது.

பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்து, 'என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டுவர உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன், என்னைப் புசியும்' என்றது.

இதை கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீசகதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனைவிட்டது.

இப்பசுவை போல் நடந்துகொண்ட நமது காந்தி பிரபுவைத் தென் ஆப்பிரிக்கா புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா?

ஒன்றும் தெரியாத புலிகூட நம் இந்துஸ்தானத்தில் தாயினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலியை பார்க்கிலும் கொடுமையாக,(தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக் கலிகாலத்தில்தான் காணலாம்".

இந்திய தலைவர்கள் பலர் காந்தியை அறியாதிருந்த காலத்தில்,1909இல் பாரதி இந்த சித்திரத்தையும் விளக்கத்தையும் வெளியிட்டதுதான் ஆச்சரியம்.

பிற்காலத்தில் மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்!... புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்!"(மகாத்மா காந்தி பஞ்சகம்) என்று பாடிப்புகழ்ந்தார் பாரதி.

-Kailash PL


"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...