Followers

Thursday, December 19, 2024

"உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்" - நகரத்தார் திருப்பணி


          றையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் திருச்சி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் குறிப்பிடத்தக்க சிறந்த கற்சிற்பங்கள் பல உள்ளன. சமீபத்தில் அவற்றுள் ஒரு சிற்பம் இணையத்தில் பேசுபொருளானது. அது அம்மன் கருவறை பின்புறச்சுவரில் உள்ள "மிதிவண்டி சிற்பம்" - ஒரு வாலிபர் மிதிவண்டி ஓட்டுவது போல் சிற்பம் அமைந்துள்ளது. "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் மிதிவண்டியை கண்டுபிடித்துவிட்டான்" என்று இணையத்தில் பலர் பரப்பி கொண்டிருந்தனர். சில செய்தி ஊடகங்களும் இதையே பரப்பினர்.


சில யூ டியூப்பர்கள் தங்களை பெரிய சிற்பவியலாளராக கருதிக்கொண்டு "இந்த சிற்பம் நிச்சயமாக சமீபத்தில் செதுக்கப்பட்டிருக்காது ஏனென்றால் இந்த அம்மன் சன்னதி மிகப் பழமையானது இதில் புதிய சிற்பத்தை செதுக்கினால் கோயிலே சிதைந்து இடிந்துவிழும் ஆகையால் இது கோயில் கட்டிய காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட சைக்கிள் சிற்பம்" என்று கூறினர். உண்மை என்னவென்றால் அந்த அம்மன் சன்னதி உட்பட கோயிலின் பெரும் பகுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நகரத்தாரால் கட்டப்பெற்றது தான். அங்குள்ள சிற்பங்களும் அப்போது உருவாக்கப்பட்டது தான்.

இக்கட்டுரையில் உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயிலில் நகரத்தார் செய்த திருப்பணிகளை பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன், பஞ்சவர்ணேசுவரர் கோயில் புராண வரலாற்றை பற்றி பார்ப்போம்.

"ஊரெனப்படுவது உறையூரே" என்று போற்றப்பெரும் உறையூருக்கு நடுவே அமைந்துள்ளது இத்திருக்கோயில். இதற்கு 'திருமூக்கீச்சுரம்' என்ற பெயரும் உண்டு. இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கமாக உள்ளார்.

இது திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும்.

மூலவர் பெயர் 'மூக்கீச்சுரத்தடிகள்' என திருஞானசம்பந்த பெருமான் தாம் பாடிய பதிகத்தில் உள்ள பதினொறு பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார். சேரர்,சோழர்,பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் இணைய நிறுத்தி அவர்களை வாழவைக்கும் மூலப்பேரரசாக மும்முடி மன்னர்களின் மன்னராக விளங்குபவரே 'மூக்கீச்சுரம்' கோயிலில் இருக்கும் 'மூக்கீச்சுரத்தடிகள்' என்று விளக்கம் அமைத்துள்ளார் திருஞானசம்பந்த பெருமான். 

இத்தலத்தில் உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்ததால் 'பஞ்சவர்ணேசுவரர்' என்று சமஸ்கிருதத்திலும் 'ஐவண்ணநாதர்' என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். அம்மையின் பெயர் காந்திமதியம்மை.

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒரு நாள் பட்டத்து யானை மீது உலா வந்தபோது, யானைக்கு மதம் பிடித்தது, அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் தலையின் மீது தன் மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது என்பதால் இத்தலத்திற்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு. பின்னர் அக்கோழியானது ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது, வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அங்கே சோழன் கோயில் எழுப்பினான் என்கிறது தலபுராண நூல்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தவர். இவருக்கு இச்சிவாலயத்தில் தனி சன்னதி உள்ளது.

ஆதியில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது காலப்போக்கில் சிதிலமடைந்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறையூர் வாசிகள் சிதிலமடைந்திருந்த கோயிலை சீரமைக்க முடிவு செய்தனர், அக்காலகட்டத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பாடல் பெற்ற தலங்களை தேடித் தேடித் திருப்பணிகள் செய்துவந்தனர், இதனால் உறையூர் வாசிகள் செட்டிநாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அதிக அளவில் வசிக்கும் ஊரான தேவகோட்டைக்கு சென்று முறையிட்டனர். தேவகோட்டை நகரத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கீழவீட்டைச் சேர்ந்த வீர.இராம.சித.முரு. முருகப்ப செட்டியார் கோவில் கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆலயத் திருப்பணி கி.பி.1910வாக்கில் தொடங்கப்பெற்றது. 

சிதைந்திருந்த சிவன் சன்னதியை பிரித்து புதிய கருங்கல்லால் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், சண்டிகேசுவரர் சன்னதி ஆகியன கட்டப்பெற்றன. அந்த சமயத்தில் சிவ லிங்கத்தை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு, கருவறை திருப்பணி முடிந்த பின் பிரதிஷ்டை செய்யலாம் என எண்ணி லிங்கத்தை எடுப்பதற்காக சுற்றி பதினான்கு அடி வரை தோண்டியும் அசைக்க முடியவில்லை நிலத்தடி நீர் பெருகி வந்துவிட்டது. சுயம்பு லிங்கத்தை அசைக்க முடியாது என்று உணர்ந்து, லிங்கத்தை எடுக்காமல் அதைச் சுற்றி திருப்பணி வேலைகள் நடைபெற்றுள்ளது. சுயம்பு லிங்கம் என்பதால் கருவறை முகப்பு மேல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பெற்றுள்ளது. 

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை தேவகோட்டங்களில் முறையே நர்த்தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், நான்முகன், துர்க்கை ஆகியன சோழர் கால சிலைகளாகவே அமைந்துள்ளன.  

சிவன் சன்னதியின் இடப்புறம், தெற்கு முகமாக காந்திமதி அம்மைக்கு புதிய சன்னதி - கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கட்டப்பெற்றுள்ளது. அதன் அருகே பள்ளியறையும் இவை அனைத்தையும் இணைக்கும் படி முன் மண்டபமும் கட்டப்பெற்றுள்ளது. 

காந்திமதி அம்மை சன்னதியில் தான் "மிதிவண்டி சிற்பம்" உள்ளது. மேலும் இந்த சன்னதியின் மேல்புறச் சுவரில் உதங்கமுனிவர் சிவபூசைச் சிற்பமும், கீழ்ப்புறச் சுவரில் யானையை அடக்கிய கோழிச் சிற்பமும் கோயில் புராணத்தை பாமர மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது.

முற்காலத்தில் கோயில் நுழைவு வாயில் அருகே காந்திமதி அம்மை சன்னதி இருந்துள்ளது. நகரத்தாரால் சிவன் சன்னதி அருகே புதிய அம்மன் சன்னதி கட்டப்பட்ட பின், காந்திமதி அம்மை சிலை பெயர்த்துவந்து புதிய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் நுழைவு வாயில் அருகே அந்த பழைய அம்மன் சன்னதி உள்ளது, ஆனால் சிலை ஏதும் இல்லை, வழிபாட்டிலும் இல்லை.

சோழர் காலத்தில் கட்டப்பெற்ற கன்னிமூல கணபதி, முருகன், லெட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான சன்னதிகள் நல்ல நிலையில் இருந்ததால் அவற்றை மாற்றாமல், பழுதுபார்த்துள்ளனர். 

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தூண்களை கொண்டு துவஜஸ்தம்ப மண்டபம் புதிதாக பெரிய உற்சவ மண்டபமும் மடப்பள்ளியும் கட்டப்பெற்றுள்ளது.

மேலே கூறிய அனைத்து சன்னதியையும் இணைக்கும்படி, இறைவன் இறைவியை மக்கள் வளம் வந்து வழிபட பெரிய திருச்சுற்று மாளிகை கட்டப்பெற்று அதில் அறுபத்து மூவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன. திருச்சுற்று தூண்களில் உள்ள ஊர்த்துவ தாண்டமூர்த்தி, கரியுரி தாண்டமூர்த்தி, ஏகபாத மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்களும் துவஜஸ்தம்ப மண்டப சிற்பங்களும் நகரத்தார் சிற்பக்கலைக்கு சான்றாக திகழ்கின்றன.
இத்தல தீர்த்தமாக விளங்கும் "சிவதீர்த்தம்" கல்திருப்பணி செய்யப்பெற்றுள்ளது.

வனப்புமிக்க வண்ண சுதைச் சிற்பங்களுடன் மூன்று நிலை புதிய இராஜகோபுரமும் மதில் சுவரும் என கோயிலில் பெரும் பகுதி(90%) நகரத்தார் திருப்பணியே.

இவை அனைத்தும் நாட்டுக்கோட்டை நகரத்தாருள் மாத்தூர் கோயில் உறையூர் வகுப்பைச் சேர்ந்த தேவகோட்டை கீழவீட்டு வீர.இராம.சித.முரு. முருகப்ப செட்டியாரால் அன்றைய மதிப்பில் நான்கு லட்சம் ரூபாய்(4,00,000) பொருட்செலவில் திருப்பணி செய்யப்பெற்று, துந்துபி வருடம் சித்திரை மாதம் 21-ஆம் நாள்(03/05/1922) திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுள்ளது.

உறையூர் ஐவண்ணநாதர் ஆலயம் அழியாப்பெருமை வாய்ந்த சிற்பங்களின் திருக்கூடமாக இன்று திகழ்வதற்குக் காரணம் நகரத்தார் திருப்பணியே.

-பழ.கைலாஷ்

நமது செட்டிநாடு -  டிசம்பர்2024

Wednesday, April 24, 2024

விலாசம் மூலம் நகரத்தாரை இணைக்கும் பாலம் - "NA Tree"

 

       கரத்தாரிடம் உள்ள தனி சிறப்பம்சங்களுள் இரண்டு "விலாசம்" மற்றும் "புள்ளி".


நம் கடந்த தலைமுறையினரை அறிந்துகொள்ளவும், நாம் யார் என்று நம்மவர்களிடையே அறிமுகப்படுத்துவதும் நம் விலாசமே. நாம் பெயருக்கு முன் பயன்படுத்தும் நீளமான முன்னெழுத்து விலாசம் பிற சமூகத்தினரை பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. அதுபோல் நம் மக்கள் தொகையை அறிந்துகொள்ள பயன்படுவது புள்ளிக்கணக்கு.


பொதுவாக நம் நகரத்தார்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் சொந்தமாக இருப்போம். நம் ஊரில் ஒரு திருமண விழாவில் சந்திக்கும்போது ஒருவரை மற்றொருவரிடம் அறிமுகப்படுத்துகையில் "இவர் எங்க சின்ன ஐயா பேரனின் இரண்டாவது மாப்பிள்ளையின் தம்பி"., "இவர் எங்க மகமுண்டியின் பெரியப்பச்சி பேரன்"., "இவர் எங்க பங்காளி சேவுகன்செட்டியின் சகலை மகன்"., "இவர் எங்க பெரிய ஆயா மகள்வீட்டு பேத்தியின் மகன்" என்று ஒரேவரியில் உறவுமுறையை கூறிவிடுவர். இவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, காரணம் உறவினர்கள் ஒவ்வொருவரும் உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருவதால் பங்காளி வீட்டு விசேஷங்களில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தங்கள் வளவுக்குள் நடக்கும் திருமணங்களிலே மட்டும் கலந்துகொள்கின்றனர். அதிலும் பணி நிமித்தமாக சிலருக்கு கலந்துகொள்ளும் வாய்ப்பு அமைவதில்லை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நவீன காலத்தில் வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு தங்கள் வளவுக்குள் உள்ள உறவினர்களையே சரியாக தெ‌ரிவதில்லை. இனி வரக்கூடிய சந்ததியினரையும் இங்கு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 


உறவுமுறைகள் விட்டுப்போகாமல் மறக்காமல் இருக்க என தான் தீர்வு? நமக்கு ஒரு சந்தேகம் என்றால் வீட்டில் உள்ள பெரியவரிடம் கேட்போம் அவர் விபரமாக யார் யாருக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை எடுத்து கூறுவார். அவர் அதை வம்சாவளி விளக்கப்படமாக வரைந்து வைத்தால் அவர் காலத்திற்கு பிறகும் அந்த விளக்கப்படம் உதவும். இதுபோல் பங்காளிகள் அனைவருக்குமான வம்சாவளி விளக்கப்படத்தை உருவாக்கலாம். ஏற்கெனவே நம்மவர்கள் பலர் தங்கள் "வம்சாவளி விளக்கப்படம்"(Family Tree) வைத்துள்ளனர். சிலர் அதை புத்தகமாக அச்சிட்டு பங்காளிகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று என வழங்கியுள்ளனர். சிலர் தற்போது தான் தங்கள் முன்னெழுத்து விலாசத்தை வைத்து வம்சாவளி விளக்கப்படம் வரைந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பங்காளிகளை தாண்டி மற்ற உறவினர்களை அறிந்துகொள்வது எப்படி.


நீங்களும் வள்ளல் அழகப்ப செட்டியாரும் உறவினரான இருப்பீர்கள். நீங்களும் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும் உறவினரான இருப்பீர்கள். நிச்சயம் இருப்பீர்கள். நான் முன்னரே குறிப்பிட்ட படி நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் சொந்தமாகத்தான் இருப்போம். காரணம் நாம் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சமூகம். அதே நேரத்தில் ஒன்பது நகரக்கோவில் பிரிவுகள், அதில் உட்பிரிவுகள், புள்ளிகள், விலாசங்கள் என ஒரு நேர்த்தியான கட்டமைப்பை கொண்ட சமூகம். இந்த நேர்த்தியான கட்டமைப்பை வைத்து இருவருக்குமான உறவுமுறையை கண்டுபிடித்து விடலாம். இதை எளிதில் கண்டுபிடிக்க உதவும் புதிய கருவியாக இருக்கிறது www.natree.org என்னும் இணையதளம்.


"என் ஏ ட்ரீ" (NA Tree) என்னும் "நகரத்தார் வம்சாவளி"(Nagarathar Ancestral Tree) அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு. இதை நிறுவியவர்கள் விசுவநாதன் அருணாச்சலம், சுப்பையா சுந்தரம் மற்றும் இளங்கோ இராமநாதன். இவர்கள் மூவரும் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். 

விசுவநாதன் அருணாசலம்

இளங்கோ இராமநாதன் 

சுப்பையா சுந்தரம் 


விசுவநாதன் அருணாச்சலம், தேவகோட்டை பிலிகுளத்தார் வீட்டைச்சேர்ந்தர். அமெரிக்காவில் பட்டயக் கணக்காளராக உள்ளார். "என் ஏ ட்ரீ" இணையதலம் பற்றி கூறுகையில் 

" www.natree.org என்னும் இணையதளம் முழுவதும் இலவசமானது, இலாப நோக்கமற்றது. தற்போது இது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது, வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தும் எண்ணமும் எங்களுக்கு உள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக "என் ஏ ட்ரீ" உருவாக்கத்தில் நாங்கள் மூவரும், மேலும் சிலர் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறோம். விலாசம் மூலம் நகரத்தார் அனைவரையும் இணைப்பதே எங்கள் நோக்கம். இந்த இணையதளத்தின் உள் சென்று நீங்கள் முதலில் "காண்டாக்ட் அஸ்"-ல்(Contact us) உங்கள் பெயர், விலாசம், ஊர், கோவில் பிரிவு ஆகியவற்றோடு உங்கள் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல்(e-mail) முகவரியை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். பின்னர் நாங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அழைப்பானை இணைப்பு(Invite link) அனுப்புவோம். அதன் மூலம் நீங்கள் புகுபதிகை(Login) செய்து கடவுச்சொல்லை(Password) வைத்துக்கொள்ளலாம். பின்னர் அதனுள்ளே வம்சாவளி வரைபடத்திற்கான இடத்தில் உங்கள் ஆத்தா-அப்பச்சி, ஐயா-அப்பத்தா, பாட்டையா-பாட்டி, அவர்களுக்கு மூதாதையர் மற்றும் உங்கள் குழந்தைகள் பெயர்களை பதிவு செய்யவேண்டும். தந்தை வழி மட்டுமல்லாது தாய் வழி முன்னோர்களையும் இங்கு பதிவு செய்ய முடியும் என்பது மற்றொரு சிறப்பு. இதுகுறித்தான விரிவான விளக்கக் காணொளி எங்கள் "NA Tree" யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். அதைப் பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்".


இளங்கோ இராமநாதன், சொந்த ஊர் மதகுபட்டி. அமெரிக்காவில் NASA நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நகரத்தார் விலாசங்களை சேகரித்து வருகிறார் என் ஏ ட்ரீ இணையதளம் பற்றி கூறுகையில்

"இந்த இணையதளம் நகரத்தார்களுக்கு நான்கு வகையில் பயன் அளிக்கக்கூடியது...

ஒன்று : 'வம்சாவளி வரைபடம்'(Family Tree) இதில் நாம் அனைவரும் நமது குடும்பத்தினர் மற்றும் மூதாதையர் பெயர்களை பதிவு செய்வது மூலம் நம் வருங்கால சந்ததியினர் பயன் பெறுவர். இங்கேயுள்ள Find Relation பகுதியில் ஒரு நகரத்தாருக்கும் மற்றொரு நகரத்தாருக்கும் உள்ள உறவுமுறையை எளிமையாக கண்டு பிடிக்கலாம். இதன் இணைநிறுவனர்களான நாங்கள் மூவரும் எங்கள் குடும்ப விலாசத்தின் மூலம் வம்சாவளி வரைபடத்தை உருவாக்கியுள்ளோம். இதன் பின்னர் தான் நாங்கள் மூவரும் எந்த வகையில் உறவினர்கள் என்பது அறிந்துகொண்டோம். சமீபத்தில் நான், இதிலுள்ள Find Relation பகுதிக்கு சென்று எனது பேத்திக்கும் சுப்பையா சுந்தரம் மகளுக்குமான உறவை விளக்கப்படமாக எடுத்து பேத்தியிடம் காட்டினேன் அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனாள். இது போல் நம் அனைவரின் விலாசமும் இங்கு இணையும் போது யார் யாருக்கு எந்த வகையில் சொந்தம் என்பதை அறிந்துவிடலாம். 

இரண்டு : இதை நீங்கள் முகநூல் போலவும் பயன் படுத்தலாம். நம் நகரத்தார் தொடர்பான அரிய புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம்.

மூன்று : NADU(Nagarathar Data Unification) என்னும் 'நகரத்தார் ஒருங்கிணைந்த தகவல் மையம்' இதில் நம் நகரத்தார் புள்ளிகள் விபரம் ஊர் வாரியாக கோவில் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரத்தார் புள்ளிகள் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இது 2020-ஆம் ஆண்டு கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் நல்லாசியுடன் தொடங்கப்பெற்றது. "நகரத்தார் நலன்" அமைப்பினரின் உதவியுடன் இதுவரை 31 ஊர் நகரத்தார் புள்ளிகள் விபரங்களை பதிவு செய்துள்ளோம் விரைவில் மீதமுள்ள ஊர் புள்ளிகளையும் பதிவு செய்வோம். மேற்படி மூன்றையும் காண ஒருவர் நிச்சயம் புகுபதிகை(login) செய்ய வேண்டும். நகரத்தார் மட்டுமே புகுபதிகை செய்யமுடியும். இங்கு உள்ள அனைத்து தகவல்களும் மிகவும் பாதுகாப்பானது.

நான்கு : 'நகரத்தார் திருப்பணிகள்' 1953-ஆம் ஆண்டு வந்த 'நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு' புத்தகத்தில் உள்ள திருப்பணி தகவல்களை இங்கு டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதை மட்டும் புகுபதிகை செய்யாமல் அனைவரும் பார்க்க முடியும். நகரத்தாரால் திருப்பணி செய்யப்பெற்ற கோவில்கள், சமய மற்றும் கல்வி நிறுவனங்கள் அதன் இருப்பிடம்(Google Map Location), திருப்பணி செய்யப்பெற்ற ஆண்டு, திருப்பணி செய்தோர் பெயர், ஊர், விலாசம் என அனைத்தும் தெள்ளத் தெளிவாக இங்கே காணலாம். மிகுந்த சவாலான இதை பதிவேற்ற தேவகோட்டையை சேர்ந்த பழ.கைலாஷ் எங்களுக்கு உதவிகரமாக இருந்தார்."


மேலும் "என் ஏ ட்ரீ" உடனான தனது பயணத்தை திரு.இளங்கோ கூறுகையில் 

 "பொதுவாக நம்மவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் கோவில் திருப்பணி, கல்வி அறப்பணி என்று தங்களை ஈடுபடுத்திக்கொள்வது வழக்கம். அதையே நான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு 'என் ஏ ட்ரீ'-இல் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றேன். இதுவும் ஒரு திருப்பணி தான். அந்த காலத்தில் கோவில்கள் கட்டியது அவரவர் வணங்குவதற்காக மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய மக்கள் வழிபடுவதற்காகவும் தான். அதுபோல தான் இந்தப் பணியும்"


சுப்பையா சுந்தரம் தேவகோட்டை நா.லெ.வீர(N.L.VR) வீட்டைச்சேர்ந்தர். அமெரிக்காவில் HYCU Inc. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். என் ஏ ட்ரீ உருவான விதம் பற்றி கூறுகையி்ல் 

" சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலை நானும் விஸ்வநாதன் அருணாச்சலமும் நம் நகரத்தார் விலாசங்கள் பற்றி பேசிக்கோட்டிருந்தோம் அன்று உதித்தது தான் இந்த "என்

ஏ ட்ரீ" யோசனை. நூறு ஆண்டுகளுக்கு முன் விலாசம் மூலமே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். விலாசம் மூலமே வியாபாரம் செய்துவந்தனர். அன்றைவிட இன்று நம்மவர்கள் நன்றாக படித்துள்ளனர், உலகில் பல்வேறு இடங்களில் உள்ளனர் ஆனால் விலாசம் பற்றி பலரும் அறியாமல் உள்ளனர். வளரும் இளம் தலைமுறையினர் நிச்சயமாக தங்கள் விலாசங்களை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானது தான் 'என் ஏ ட்ரீ'. இதில் பின்னர் எங்கள் இருவருடன் இளங்கோ அவர்களும் இணைந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'என் ஏ ட்ரீ' இணையதளத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் "என் ஏ ட்ரீ 2.0"(NA Tree 2.0)-வை சில திருத்தங்களுடன் வெளியிட்டோம். என்.ஏ ட்ரீ உருவானதில் பலருக்கு பங்கு உள்ளது, முன்னர் என் ஏ ட்ரீ-யில் வழிகாட்டியாக இருந்த மறைந்த ஆய்வாளர் எஸ்.முத்தையா அவர்கள்., தற்போது வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர் முத்துக்கருப்பன் அவர்கள்., இந்த மென்பொருளை உருவாக்கித்தந்த காரைக்குடி WBCமென்பொருள் ஆய்வகம் பழனியப்பன் இராமையா மற்றும் நகரத்தார் நலன் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகள்".



தற்போது நாம் என்ன செய்ய வேண்டும்? www.natree.org இணையதலத்திற்கு சென்று நமது பெயர், விலாசம், ஊர், கோவில் பிரிவு ஆகியவற்றோடு நமது தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சலை(e-mail) தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். பின்னர் நம் மின்னஞ்சலுக்கு அழைப்பானை இணைப்பு(Invite link) வரும். அதன் மூலம் நாம் புகுபதிகை(Login) செய்து கடவுச்சொல்லை(Password) வைத்துக்கொள்ளலாம். 

இதற்கு கண்ணி கூட தேவையில்லை ஸ்மாட் அழைபேசி இருந்தால் போதும். கண்ணி மற்றும் அழைபேசி பயன் படுத்த தெரியாதவர்கள் அல்லது வயதானவர்கள் தங்கள் மகன்,மகள் அல்லது பேரன் பேத்திகள் மூலம் இதை செய்யலாம். இதில் நம் வம்சாவளி படத்தை பதிவுசெய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்தான விளக்கக் காணொளி யூடியூப்-ல் உள்ளது. இதில் ஏதேனும் குழப்பம், சந்தேகம் இருந்தால் info@natree.org என்னும் மின்னஞ்சல் வழியாக இவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் நம் விலாசத்தை மட்டும் பதிவேற்றம் செய்து விட்டுவிடாமல் இந்த இணையதளம் குறித்து மற்றவர்களிடமும் பகிறவேண்டிது நம் கடமை.

- பழ.கைலாஷ் 

ஏப்ர‌ல் 2024











Friday, April 19, 2024

இஸ்லாமியர் பாடிய முருகன் பாடல்.

எங்கள் மூதாதையரான தேவகோட்டை தி.இராம.பழனியப்ப செட்டியார், குழந்தை பாக்கியம் வேண்டி பல புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டுவந்துள்ளார், ஒருமுறை மேலக்கொடுமளூர் பற்றி அறிந்து, அங்கு சென்று முருகனை வழிபட்டுள்ளார். அப்போது பதிகம் பாட எண்ணிய பழனியப்ப செட்டியார் சேது சமஸ்தான கவிஞர் ஜவாது புலவரை அனுகியுள்ளார். இஸ்லாமியரான ஜவாது புலவர் அவர்கள், பழனியப்ப செட்டியாரின் விருப்பத்திற்கிணங்க கொடுமளூர் குமரன் பெயரில் "கொடுமளூர் குமரகுருபர முருகன் பதிகம்" எனும் செய்யுளை படைத்துள்ளார். அதனை கொடுமளூர் குமரன் சன்னிதியில் பாடிய பழனியப்ப செட்டியாருக்கு ஆறுமுகன் அருளால் ஆறு ஆண் குழந்தைகள்  பிறந்தனர். அவரின் வம்சாவளியினர் இன்று தேவகோட்டையில் நாங்கள் நானூறுக்கும் அதிகமான புள்ளிகள்(குடும்பங்கள்) வாழ்ந்துவருகிறோம்.

ஜவாது புலவர் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில்(The Hindu 19/04/24) வந்த கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.

- பழ.கைலாஷ்

Friday, January 5, 2024

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்



                    இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் கிழக்கு கட‌ற்கரை சாலையில் உள்ள ஊர் உப்பூர் சத்திரம் என்னும் உப்பூர். இங்கு இராமநாதபுர சமஸ்தான தேவஸ்தானத்திற்குரிய அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உள்ளது.

அருள்மிகு வெயிலுகந்த விநாயகர்


இராமேசுவரம் புனித யாத்திரை செல்லும் மெய்யன்பர்கள் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி செல்வது நியதி. இதுபோல் காசி யாத்திரை செல்லும் மெய்யன்பர்களும் இங்கிருந்து தான் தொடங்குவார்கள். உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வணங்கி, தேவிப்பட்டிணம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி தரிசித்து பின்னர் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி மண் எடுத்துக் கொண்டு அலகாபாத் திருவேணி சங்கமத்தில் தீர்த்தமாடி காசி அடைவார்கள். 

சீதையை மீட்க வானர சேனைகளுடன் சேதுக்கரை நோக்கி இராமர் செல்கையில் உப்பூர் வன்னிமரத்தடியில் அமைதியான சூழலில் வீற்றிருந்த விநாயகரை வணங்கி சென்றுள்ளார் என்கிறது தலபுராணம்.

மேலும் இக்கோவில் குறித்த பல்வேறு கதைகள் தலபுராணத்தில் உள்ளன அதில் ஒன்று சிவபெருமானால் சாபம் பெற்ற சூரியன், பரிகாரம் தேட முற்பட்டு வன்னி மந்தார வனம்(உப்பூர்) என்ற ஊரில் உள்ள விநாயகரை நோக்கி தவத்தில் ஈடுபட்டார். சூரியனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். வெய்யோன் தவத்தை விநாயகர் உகந்ததால் (ஏற்றுக்கொண்டதால்) "வெயில் உகந்த விநாயகர்" என்ற பெயர் நிலைத்தது. இவ்வாறு பல புராண கதைகள் இருந்தாலும் வரலாற்று படி பார்த்தோமேயானால்.
 
அக்காலத்தில் தென்னிந்திய மக்கள் மட்டுமில்லாது வட இந்திய பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் ஆண்டுதோறும் இராமேசுவரத்திற்கு பாதயாத்திரை மேற்கொண்டு வந்துள்ளனர். மழையிலும் பனியிலும் நனைந்து வெய்யிலிலே உலர்ந்து வருடத்தின் பல மாதங்கள் கால்நடையாகவே நடந்து இராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இதை கண்ட தேவகோட்டை இராம.அழகப்ப செட்டியார் கி.பி1800கள் தொடக்கத்தில் உப்பூரில் ஒரு அன்னதான சத்திரம் நிறுவி, ஊருணி அமைத்து நாள்தோறும் யாத்திரிகர்களுக்கு பருக நீரும், உண்ண உணவும், இளைப்பாறுவதற்கு உறைவிடமும் வழங்கி வந்தார். இதே கால கட்டத்தில் இவரின் உறவினரான வீர.இராமநாதன் செட்டியார் தனுஷ்கோடியில் ஒரு அன்னச்சத்திரம் நிறுவி அன்னம் பாலித்து வந்தார்(1964-ல் தனுஷ்கோடி சத்திரம் புயலில் அழிந்துவிட்டது)

உப்பூர் சத்திரம்
       

உப்பூரில் அழகப்ப செட்டியார் சத்திரம் நிறுவியதாலேயே இவ்வூர் "உப்பூர் சத்திரம்" என்று பொதுவாக யாத்திரிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு மரத்தடியில் இருந்த விநாயகரை பக்தர்கள் வணங்கி சென்றுள்ளனர்.

அழகப்ப செட்டியாருக்கு நான்கு புதல்வர்கள், அதில் மூன்றாம் மற்றும் நான்காம் புதல்வர்களான அழ.அருணாசலம் செட்டியார் மற்றும் அழ.சிதம்பரம் செட்டியார் ஆகிய இருவரும் தொடர்ந்து அன்னச்சத்திரத்தை நிர்வகித்து வந்தனர். 

மூன்றாம் புதல்வரான அருணாசலம் செட்டியார் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு கி.பி1862-ல் கல்குறடு(கல்மேடை) அமைத்து, தினசரி பிராமணர்களை கொண்டு விநாயகருக்கு பூசைகள் நடத்த தொடங்கினார். இச்செய்திகள் கோயிலிலே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அழ.அருணாசலம் செட்டியார் நாட்டுக்கோட்டை நகரத்தார் சிலருடன் சேர்ந்து கோவிலூர் கொற்றவாளீசுவரர் கோவில் மதில் சுவரை எழுப்பியுள்ளார். 

உப்பூர் பிள்ளையார் கோயில் கல்வெட்டு
    

பின்னர் அழ.அருணாசலம் செட்டியாரின் ஒரே புதல்வரான அழ.அரு.இராமசாமி செட்டியார் தற்போது நாம் காணும் கற்கோயிலை எழுப்பினார். பரிவார தெய்வங்களுக்கான சன்னிதிகளையும் அமைத்தார். சேதுபதி மன்னருக்கும் தமது மூதாதையர்களுக்கும் சதா சேவிப்பு சிலைகள் வைத்தார்.


 அழ.அருணாச்சலம் செட்டியார்
   

அழ.சிதம்பரம் செட்டியார்
   

அழ.அரு.இராமசாமி செட்டயார்
    
 
இராமசாமி செட்டியார் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.  இவர் ஒருமுறை பாஸ்கர சேதுபதிக்கு செய்த பேருதவியால் சேதுபதி மன்னர் இவருக்கு 22 1/2 கிராமங்களை கொடுத்து தேவகோட்டை ஜமீந்தாராக ஆக்கினார். ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியார் சிவப்பெருஞ்செல்வராக வாழ்ந்து இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயில், காளையார்கோவில், திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு செம்மையான திருப்பணி செய்தார்.

அழ.அரு.இராமசாமி செட்டியார் கட்டிய உப்பூர் விநாயகர் கோயிலின் உள்ளே வெயில் வருவதற்கான வழி இல்லாமல் முழுவதும் அடைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. சில மாதங்களில் கோயிலில் விநாயகரை சுற்றியுள்ள மேற்கூரை தாமாக இடிந்துவிழுந்தது. இக்காலத்தில் வயது மூப்பு காரணமாக ஜமீந்தார் அழ.அரு.இராமசாமி செட்டியாரும் இறந்துவிட அவரின் மூத்த மகனான அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் கோயில் முழுமையும் புனரமைத்து விநாயகர் மேல் வெயில் படும்படி அமைத்து 10.02.1905-ல் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்தார்.

அதை தொடர்ந்து தமது சகோதரர்களுடன் இணைந்து அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் ஆவணி மாத பத்து நாள் திருவிழாவை தொடங்கிவைத்தார். விநாயகருக்கு வெள்ளியில் பெருச்சாளி, மயில், இடபம், காமதேனு, குதிரை, சிம்மம், யானை,கேடகம், ரதம் ஆகிய வாகனங்களும் உற்சவ மூர்த்திகளும் நகைகளும் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் சொன்ன புராண கதைகள் "லவணபுரம் என்னும் உப்பூர் புராணம்" என்கிற தலபுராண நூலில் உள்ளன. இது தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயரால் கி.பி1918-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஜமீந்தார் அழ.அரு. இராம.அருணாசலம் செட்டியாரால் வெளியிடப்பட்டுள்ளது. சொர்ணநாதபுரம் பழனியப்ப ஐயா "வெயிலுகந்த விநாயகர் பதிகம்" இயற்றியுள்ளார்.

உப்பூர்ப்புராணம்
    

வெயிலுகந்த விநாயகர் பதிகம்
    

இன்றுவரை சுமார் 180 ஆண்டுகளுக்கு மேலாக உப்பூர் சத்திரம் சிறப்பாக இயங்கிவருகிறது. தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு மற்றும் அழ.சித குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகருக்கு தினசரி நான்கு வேளைகள் பூசை நடக்கின்றன. அதில் இரண்டு வேளை இராமநாதபுரம் சமஸ்தானமும் இரண்டு வேளை தேவகோட்டை ஜமீந்தாரும் நடத்தி வருகின்றனர்.

ஆவணி சதுர்த்தி திருவிழாவில் விநாயகர் திருமணம் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரால் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு இராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் முன்னிலையில் கும்பாபிஷேம் செய்யப்பெற்றது.

- பழ.கைலாஷ்

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...