Followers

Wednesday, July 16, 2025

தேவகோட்டை வெள்ளையன் ஊரணி குறித்து ஒரு சுவாரசியமான தகவல்.






தேவகோட்டை "வெள்ளையன் ஊரணி" இன்று ஊர் நடுவே மிகப்பெரிய சாக்கடையாக உள்ளது, சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீர் ஊரணியில் கலக்கின்றது.

ஒரு காலத்தில் இந்த வெள்ளையன் ஊரணி தேவகோட்டை மக்கள் தாகத்தை தீர்க்கும் குடிதண்ணீர் ஊரணியாக இருந்துள்ளது. பின்னர் குளிக்கும் குளமாக இருந்துள்ளது, அதன்பின்னர் மலம் ஜலம் கழித்துவிட்டு கைகால் கழுவும் இடமாக இருந்தது, தற்போது அதற்கும் லாயக்கற்று இருக்கிறது.

1911ஆம் ஆண்டு வெள்ளையன் ஊரணி கலங்காதகண்ட விநாயகர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த அன்றைய திருவாடானை கோர்ட் நீதிபதி அவர்கள், ஊரணியில் பல் துலக்கிய பெண்கள் இருவரை கண்டித்து அபராதம் விதித்துள்ளார். அபராதம் என்றால் பணம் எதுவும் கட்ட சொல்லவில்லை, அவர்களை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும்படி செய்துள்ளார். இது அன்றைய வைசியமித்ரன் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

வைசியமித்ரன் செய்தி பின்வருமாறு,

"வெள்ளையனூருணி விபரம்,

திருவாடானை நீதிபதியவர்கள் இவ்வூருக்கு வந்த போது, வெள்ளையனூருணியில் வந்திறங்கிப் பல் விளக்கி ஆபாசஞ் செய்தவர்களிருவருக்கு அபராதம் போடும்படி உத்தரவு செய்தார்களாம், பெண்கள் சிலருக்கும் அபராதமாகக் கோயிலுக்குத் தேங்காயுடைக்க செய்தார்களாம். எல்லோருக்கும் இது எச்சரிக்கையும், படிப்பினையுமாகும். இவ்வூருணியின் தண்ணீர் பானத்திற்கே உபயோகப்படுத்துவதாலும், அதன்கரையில் வசிப்போர்கள் காலையில் காவற்காரன் வருவதற்கு முன்னமேயே, அந்நீரில் ஸ்நானம் பண்ணுவதும், புடவைகளை நனைப்பதும், முதலிய அடாத செய்கைகளை விடியுமுன்பே செய்துவிட்டுப் போய் விடுவதாகக் கேள்வியுண்டாகையாலும், இவைகளை யெல்லாம் நிறுத்துவதற்கு, அவ்வூருணிக்கு இப்போது அமைந்திருக்கும் இரும்பு வேலியோடு இரும்பு கதவுகள் போட்டுவிட்டால் வெகு நலமாகும். அன்றியும், பலகைகளில் "ஆபாசஞ் செய்வோர் அபராதத்திற்குள்ளாவர்" என்று அறிவிப்பு எழுதி தொங்கவிடப்பட வேண்டும். இப்படி செய்தால் எவ்வழியும் அவ்வூருணித் தண்ணீருக்கு கெடுதி நேராது."


ஒரு காலத்தில் பல் துலக்கியதற்கும் புடவைகளை நனைத்ததற்கும் அபராதம் விதித்த ஊரணியின் நிலைமை இன்று படுமோசமாக இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

- பழ.கைலாஷ் 

No comments:

Post a Comment

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...