Followers

Wednesday, July 23, 2025

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33வது ஆண்டு கருத்தரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் வெளியிடப்பட்டது.



சு .இராசகோபால் அவர்கள் தமிழகத்தின் மூத்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவர். தமிழக அரசின் தொல்லியல் துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டுகள் தொடர்பாக பல நூல்கள் படைத்துள்ளார்.


இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவர். தொல்லியல் தொடர்பாகவும் கல்வெட்டுகள் தொடர்பாகவும் யாரேனும் சந்தேகம் கேட்டால் அதை உடனடியாக தீர்த்து வைப்பார். பெரியவர் சிறியவர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. தன் கருத்தே இறுதியானது என்றும் எப்போதும் வற்புறுத்த மாட்டார். அவர் முயற்சியால் வழிகாட்டலால் பல இளம் ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.


பவளவிழா நாயகர் சு.இராசகோபால் ஐயா மற்றும் பவானி ஆச்சியுடன் நான்.



சு.இராசகோபால் அவர்களின் தந்தையார் ஆத்தங்குடி பெ.மு.சுப.சுப்பையா செட்டியார் தீவிர தேசபக்தர், மகாத்மா காந்தி மீது கொண்ட பற்றால் இறுதி காலம் வரை மேற்ச்சட்டை அணியாமல் வாழ்ந்து வந்தார். மூதறிஞர் இராஜாஜியுடன் கொண்ட நட்பால் தன் மகனுக்கு இராசகோபால் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

சு.இராசகோபால் பாலகனாக இருந்தபோது அவர் தந்தையின் நண்பர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் பாலகன் சு.இராசகோபால் மீது பாடிய வாழ்த்துப்பா இது...

"வேலன் முருகன் ஆறுமுகன்

வின்னோர் பெருமான் திருவருளால்

பாலன் ராஜ கோபாலன்

பாரில் என்றும் வாழ்கவே.


அன்னை மதுரை மீனாட்சி

அருளால் ராஜ கோபாலன்

மன்னும் உலகில் நீடூழி

வாழ்க வாழ்க வாழ்கவே.


அன்னை பெரிய நாயகியின்

அருளால் ராஜ கோபாலன்

மன்னும் உலகில் நீடூழி

வாழ்க வாழ்க வாழ்கவே.


அந்தி வண்ணன் பிறைசூடி

ஆடும் பெருமாள் திருவருளால்

மைந்தன் ராஜ கோபாலன்

வாழ்க வாழ்க வாழ்கவே."


பவள விழா நாயகர் ஐயா சு.இராசகோபால் அவர்கள் அடுத்தடுத்து அமுதவிழா, கனகவிழா காண வாழ்த்தி வணங்குகின்றேன்.


- பழ.கைலாஷ்

Friday, July 18, 2025

அழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் காமராஜர்

       ழகப்பா மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கல்லூரி நிறுவனர் வள்ளல் அழகப்ப செட்டியார், முருகப்பா குரூப்ஸ் அ.மு.மு.முருகப்ப செட்டியார், கானாடுகாத்தான் C.V.CT.வெங்கடாசலம் செட்டியார் இருக்கும் புகைப்படம்.



கோட்டையூரில் தாம் கட்டிய வீட்டை(ஸ்ரீநிவாஸ்) 1954-ஆம் ஆண்டு மகளிர் கல்லூரியாக மாற்றினார் வள்ளல் அழகப்பர். ஆகையால் "குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்" என்று போற்றப்படுகிறார்.

-பழ.கைலாஷ் 

காரைக்குடி இராமவிலாஸ் பங்களா குருப் புகைப்படம்

        


              காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் அருகேயுள்ள "இராமவிலாஸ்" பங்களாவின் முகப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம். 1930களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.

வலமிருந்து இடது அமர்ந்திருப்பவர்கள் - இராமநாதன், கம்பனடிப்பொடி சா.கணேசன், இராஜாஜி , ஆறு.சொக்கலிங்கம் செட்டியார்(இராமவிலாஸ் வீட்டு உரிமையாளர்), காமராஜர், கிருஷ்ணசாமி நாயுடு.

ஆறு.சொக்கலிங்கம் செட்டியார் காரைக்குடியின் முதல் சட்டமன்ற உறுப்பினர். 

- பழ.கைலாஷ் 


Wednesday, July 16, 2025

தேவகோட்டை வெள்ளையன் ஊரணி குறித்து ஒரு சுவாரசியமான தகவல்.






தேவகோட்டை "வெள்ளையன் ஊரணி" இன்று ஊர் நடுவே மிகப்பெரிய சாக்கடையாக உள்ளது, சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீர் ஊரணியில் கலக்கின்றது.

ஒரு காலத்தில் இந்த வெள்ளையன் ஊரணி தேவகோட்டை மக்கள் தாகத்தை தீர்க்கும் குடிதண்ணீர் ஊரணியாக இருந்துள்ளது. பின்னர் குளிக்கும் குளமாக இருந்துள்ளது, அதன்பின்னர் மலம் ஜலம் கழித்துவிட்டு கைகால் கழுவும் இடமாக இருந்தது, தற்போது அதற்கும் லாயக்கற்று இருக்கிறது.

1911ஆம் ஆண்டு வெள்ளையன் ஊரணி கலங்காதகண்ட விநாயகர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த அன்றைய திருவாடானை கோர்ட் நீதிபதி அவர்கள், ஊரணியில் பல் துலக்கிய பெண்கள் இருவரை கண்டித்து அபராதம் விதித்துள்ளார். அபராதம் என்றால் பணம் எதுவும் கட்ட சொல்லவில்லை, அவர்களை பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும்படி செய்துள்ளார். இது அன்றைய வைசியமித்ரன் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

வைசியமித்ரன் செய்தி பின்வருமாறு,

"வெள்ளையனூருணி விபரம்,

திருவாடானை நீதிபதியவர்கள் இவ்வூருக்கு வந்த போது, வெள்ளையனூருணியில் வந்திறங்கிப் பல் விளக்கி ஆபாசஞ் செய்தவர்களிருவருக்கு அபராதம் போடும்படி உத்தரவு செய்தார்களாம், பெண்கள் சிலருக்கும் அபராதமாகக் கோயிலுக்குத் தேங்காயுடைக்க செய்தார்களாம். எல்லோருக்கும் இது எச்சரிக்கையும், படிப்பினையுமாகும். இவ்வூருணியின் தண்ணீர் பானத்திற்கே உபயோகப்படுத்துவதாலும், அதன்கரையில் வசிப்போர்கள் காலையில் காவற்காரன் வருவதற்கு முன்னமேயே, அந்நீரில் ஸ்நானம் பண்ணுவதும், புடவைகளை நனைப்பதும், முதலிய அடாத செய்கைகளை விடியுமுன்பே செய்துவிட்டுப் போய் விடுவதாகக் கேள்வியுண்டாகையாலும், இவைகளை யெல்லாம் நிறுத்துவதற்கு, அவ்வூருணிக்கு இப்போது அமைந்திருக்கும் இரும்பு வேலியோடு இரும்பு கதவுகள் போட்டுவிட்டால் வெகு நலமாகும். அன்றியும், பலகைகளில் "ஆபாசஞ் செய்வோர் அபராதத்திற்குள்ளாவர்" என்று அறிவிப்பு எழுதி தொங்கவிடப்பட வேண்டும். இப்படி செய்தால் எவ்வழியும் அவ்வூருணித் தண்ணீருக்கு கெடுதி நேராது."


ஒரு காலத்தில் பல் துலக்கியதற்கும் புடவைகளை நனைத்ததற்கும் அபராதம் விதித்த ஊரணியின் நிலைமை இன்று படுமோசமாக இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

- பழ.கைலாஷ் 

Friday, July 11, 2025

நகரத்தார் கல்வெட்டு

 ன்றைய(11/07/2025) தினத்தந்தி நாளிதழில் நகரத்தார் தொடர்பான 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வந்துள்ளது.


11/07/2025 தினத்தந்தி

இந்த கல்வெட்டு கண்டறியப்பட்ட "துவார்" என்னும் ஊரில் ஒரு காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வசித்துவந்தனர் என்று பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் இங்கு வாழ்ந்த நகரத்தார்கள் வேறு சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். இவ்வூர் நகரத்தார் வாழ்ந்த பழைய ஊர்கள் பட்டியலில் உள்ளது. இன்றும் இவ்வூரில் உள்ள வள்ளிலிங்கம் ஐயனாரை நகரத்தார் பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்குள் அடைக்கம்மை ஆச்சி என்பவர் அடைக்கலம் ஆகியுள்ளார் அவருக்கு தனி சன்னதி உள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மூலமாக தெரிய வருவது என்னவென்றால் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வாழ்ந்து வந்த நகரத்தார் ஒருவர் வள்ளிக்கண்மாய் அருகே ஒரு ஊருணியை ஏற்படுத்தி உள்ளார். அதில் கல்வெட்டில், அவர் பெயரை பதிவு செய்துள்ளார். கல்வெட்டின் படி அவர் இளையாத்தங்குடி கோவில் கழனிவாசல் பிரிவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் சிவந்தகாலழகியார் என்றும் தெரியவருகிறது.

- பழ.கைலாஷ்

Sunday, April 20, 2025

உத்தரகோசமங்கை - நகரத்தார் திருப்பணி

 

- பழ.கைலாஷ் -


"சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்

கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தாளிணை பாடிப்

போரார் வேற்கண்மடவீர் பொன்னூசலாடாமோ"


தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இரவு பள்ளியறை பூஜையில் பாடப்படுவது திருவாசகத்தின் திருப்பொன்னூசல் பதிகம். இது மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் வசிக்கும் காலத்தில் உத்தரகோசமங்கையை நினைத்து பாடியது.


சுவாமியையும் அம்பாளையும் இரவு பள்ளியறையில் ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செய்து திருப்பொன்னூசல் பதிகத்தை தாலாட்டாக பாடி பூஜிப்பது தொன்றுதொட்டு வரும் சைவசமய மரபு. நாள் முழுவதும் எத்தனை பூஜைகளை பார்த்தாலும், இரவு பள்ளியறை பூஜையை கண்டு வழிபடுவது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகின்றது.


எத்தனை சிவாலயங்களில் பள்ளியறை பூஜைகள் பார்த்தாலும் அத்தனையும் விட புண்ணியமாக கருதப்படுவது திருப்பொன்னூசல் பதிகத்தில் குறிப்பிடப்படும் உத்தரகோசமங்கை பள்ளியறை பூஜையே! 


இவ்வளவு சிறப்புவாய்ந்த உத்தரகோசமங்கை பள்ளியறை கல்திருப்பணி செய்தவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.


பாண்டிய நாட்டில் உள்ள சிவதலங்களுள் மிகப்பழமையான தலமாக சைவர்களால் நம்பப்படுவது உத்தரகோசமங்கை. "மண் முந்தியோ மங்கை முந்தியோ" என்பது இத்தலம் குறித்து தொன்று தொட்டு வழங்கிவரும் பழஞ்சொல்.


"மீண்டு வாரா வழியருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி யாகவும்

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

உத்தரகோசமங்கை ஊராகவும்"


எனத் கீர்த்தித் திருஅகவலில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

இதன் பொருள், பக்தி செய்கின்ற அடியவர்களுக்கு சிவன் முக்தியைக் கொடுக்கிறான். அத்தகையவன் பாண்டிய நாட்டை தன்னுடைய உறைவிடமாகவும் உத்தரகோசமங்கையை தனது ஊராகக் கொண்டிருக்கிறான்.




இத்தலம் திருவாசகத்தில் 38 இடங்களில் பாடப்பட்டுள்ளது. இது மாணிக்கவாசகர் மனதிற்கு நெருங்கிய தலம். மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்சியளித்து உபதேசித்த சிவபெருமான் மீண்டும் இத்தலத்தில் காட்சியளித்துள்ளார். 


உத்தரகோசமங்கை = உத்தரம்+கோசம்+மங்கை. உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம்.


இத்திருத்தலத்தில் இறைவனும் இறைவியும் மங்களநாதர் - மங்களேசுவரி என்ற திருப்பெயர்களால் அருள்பாலிக்கின்றனர்.


இங்கு ஐந்தரை அடி உயர மரகதத்திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் அருள்பாலிக்கின்றார். மார்கழித் திருவாதிரையில் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலம் சிதம்பரத்துக்கு இணையாக போற்றப்படுகிறது. ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகின்றது.


உத்தரகோசமங்கை கோயில் ஆதியில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்றது. பின்னர் நாயக்க மன்னர்கள் மற்றும் சேதுபதி மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப்பெற்றுள்ளது. இது சேதுபதி மன்னர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்.


சுமார் 130ஆண்டுகளுக்கு முன்,  உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி நகரத்தாரிடம் கொடுத்துள்ளார்.


தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு. அருணாச்சலம் செட்டியார் 1901-ஆம் ஆண்டு முதல் சில காலம் உத்தரகோசமங்கை கோயிலின் நிர்வாக மேலாளராக இருந்துள்ளார்.¹


தேவகோட்டை அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் தம் பொருட்செலவிலும் மேலும் சில தேவகோட்டை நகரத்தார் பொருட்செலவிலும் சிதிலமடைந்திருந்த உத்தரகோசமங்கை அம்பாள் கோயிலை முழுமையாக பிரித்து, புதிய கருங்கற்களை கொண்டு மங்களேசுவரி அம்பிகைக்கு கருவறை, அர்த்த மண்டபம், அழகிய வேலைப்பாடுடைய பன்னிரண்டு தூண்களுடன் முன்மண்டபம், பன்னிரண்டு தூண்களுடன் திருச்சுற்று மண்டபம், வெள்ளி ஊஞ்சலுடன் சிறப்புமிக்க பள்ளியறை மற்றும் இரண்டுநிலைகள் கொண்ட கோபுரம் கட்டியுள்ளார். முன்மண்டபம் மற்றும் திருச்சுற்றில் கண்ணைக்கவரும் வண்ண ஓவியங்களும் வெளிநாட்டு மின்விளக்குகளும் நிறைந்திருக்கின்றன.



இத்திருப்பணி வேலைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கின்றன.


அம்மன் கோயில் திருப்பணி நிறைவடைந்ததும், சிவன் கோயில் முன்மண்டபத்தை பிரித்துவிட்டு புதிய முன் மண்டபம், பெரிய திருச்சுற்று மண்டபம் மற்றும் மதில்சுவர் கட்டும் திருப்பணிகளை தொடங்கியுள்ளார் இராமசாமி செட்டியார். அப்போது முதலாம் உலகப்போர் ஆரம்பித்து விலைவாசிகள் ஒன்றுக்கு பத்தாக உயர்ந்துள்ளது. விலைவாசிகள் குறைந்து, பழைய நிலைக்கு வந்த பிறகு திருப்பணியை தொடரலாம் என்று காத்திருந்துள்ளார். அந்த சமயம் வயது மூப்பின் காரணமாக 1919-ல் அவர் இறந்துவிட திருப்பணிகள் பாதியில் நின்றுவிட்டன.


அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 


அக்காலத்தில் நகரத்தார் பொதுவாக திருப்பணி செய்த கோயில்களில் கல்வெட்டுகள் வைப்பதில்லை. அதுபோல் உத்தரகோசமங்கையிலும்  இராமசாமி செட்டியார் செய்த திருப்பணி தொடர்பான கல்வெட்டுகள் ஏதும் இல்லை. அம்மன் கோயில் பெரிய மணியில் மட்டும் "தேவகோட்டை நகரத்தார்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.


இராமசாமி செட்டியார் முன்னின்று திருப்பணிகளை செய்திருந்தாலும் திருப்பணி செலவுகளை அவருடன் தேவகோட்டை நகரத்தார் சிலர் பகிர்ந்துள்ளனர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 1953-ல் எழுதிய "நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு" என்ற நூலில்² அழ.சித.லெ.இராமசாமி செட்டியாருடன் திருப்பணி செலவுகளை பகிர்ந்துகொண்ட தேவகோட்டை நகரத்தார் நால்வர் விலாசம் உள்ளது, அது பின்வருமாறு,

1.அரு.அரு.சோம (சத்திரம் சோம)

2.அரு.அரு.இராம (இரட்டை அரு)

3.அழ.அரு (ஜமீந்தார்)

4.அழ.சுப.சு


பாண்டிய மன்னரால் கட்டப்பெற்ற மங்களநாதர் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் நல்ல கருங்கற்களால் ஆனது. பின்னர் கட்டப்பெற்ற மண்டபங்கள் மற்றும் அம்பாள் கோயில் உள்ளிட்டவை கடற்பாறை கற்களால் ஆனது. கடற்பாறை என்பது கட‌ற்கரை பகுதியில் கிடைக்கக்கூடியது. அது எளிதில் சிதையும் தன்மை கொண்டது. ஆகையால் தான் கடற்பாறைகளால் கட்டப்பெற்று சிதிலமடைந்திருந்த பகுதிகளை நகரத்தார் கருங்கற்களால் மறுகட்டுமாணம் செய்துள்ளனர். இந்த உத்தரகோசமங்கை திருப்பணிக்காக அம்பாசமுத்திரம் அருகேயிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.


இராமசாமி செட்டியார் திருப்பணி வேலைகளை உத்தரகோசமங்கையிலேயே தங்கியிருந்து பார்த்துவந்துள்ளார். அதற்காக தெற்கு ரத வீதியில் ஒரு பங்களா கட்டியுள்ளார், அது திருப்பணி பங்களா என்று அழைக்கப்படுகின்றது. 


மேலும் இராமசாமி செட்டியாரால் மேற்கு ரத வீதியில் ஒரு பசுமடமும், பெரிய நந்தவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தவனத்தின் உள்ளே பூக்கட்டும் மடமும் அருகே இரண்டு பிள்ளையார் கோயில்களும் கட்டப்பெற்றுள்ளன.


பின்னர் 1959-ஆம் ஆண்டு மன்னர் பாஸ்கர சேதுபதியின் பேரர் மன்னர் ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி தலைமையில் தேவகோட்டை இரட்டை அரு குடும்பத்தார் திருப்பணி குழுவினராக இருந்து, இராமசாமி செட்டியாரின் மூத்த மகன் வழிப்பேரர் அழ.சித.லெ.இராம.இராம. லெட்சுமணன் செட்டியார் திருப்பணி செயலாளராக இருந்து மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பெற்றுள்ளது.³ அதற்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டு ஒன்று அங்குள்ளது. அப்போது மங்களநாதர் சந்நதி முன் மண்டபம், மதில் சுவர் மற்றும் திருச்சுற்று மாளிகை கட்டும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. லெட்சுமணன் செட்டியார் மறைந்ததும், மீண்டும் திருப்பணி பாதியில் நின்று விட்டது.



அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் பேரர் அரு.இராமசாமி செட்டியார் கூறுகையில்⁴ "எங்கள் ஐயா இராமசாமி செட்டியார் வலையபட்டியில் பிறந்தவர்கள், எங்கள் பாட்டையா லெட்சுமணன் செட்டியாருக்கு ஆண் வாரிசு இல்லாததால் இராமசாமி செட்டியாரை பிள்ளைகூட்டி கொண்டார்கள். உத்தரகோசமங்கை கோயிலை சீரமைக்கும் பொறுப்பை மன்னர் பாஸ்கர சேதுபதி தேவகோட்டை சத்திரம் அருணாசலம் செட்டியாரிடம் கொடுத்தார்கள். அருணாசலம் செட்டியாரின் மகள் உண்ணாமலை ஆச்சியை எங்கள் ஐயா திருமணம் செய்திருந்தார்கள். மேலும் எங்கள் ஐயாவுக்கு இராமநாதபுரத்தில் தொழில் இருந்தது கடைகள் இருந்தன. ஆகையால் உத்தரகோசமங்கை திருப்பணி பொறுப்பை அருணாசலம் செட்டியார், தனது மாப்பிள்ளையான எங்கள் ஐயாவிடம் ஒப்படைத்தார்கள். எங்கள் ஐயாவும் சிறப்புற திருப்பணி செய்தார்கள்."


மற்றொரு பேரர் அரு.சிதம்பரம் செட்டியார் கூறுகையில்⁵ "உத்தரகோசமங்கை திருப்பணிக்காக தேவகோட்டை சத்திரம் சோம குடும்பத்தார் 250ரூபாயும், இரட்டை அரு குடும்பத்தார் 250ரூபாயும், ஜமீந்தார் அழ.அரு குடும்பத்தார் 250 ரூபாயும், அழ.சுப.சு குடும்பத்தார் 125ரூபாயும் எங்கள் ஐயா அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் 125ரூபாயும் என மொத்தமாக மாதத்திற்கு 1000ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். வருடத்திற்கு 12,000ரூபாய். 10வருடங்கள் திருப்பணி நடந்துள்ளது. மொத்த திருப்பணிச் செலவு 1,20,000ரூபாய். திருப்பணியை எங்கள் ஐயா முன்னின்று மிகவும் சிக்கனமாக நடத்தியுள்ளார்கள். 


ஒருமுறை தேவகோட்டையில் இருந்து உத்தரகோசமங்கைக்கு மாட்டு வண்டியில் எங்கள் ஐயாவும் அப்பத்தாவும் செல்கையில் ஒரு திருடன் வண்டியை பின் தொடர்ந்து இருக்கிறான். அப்பத்தா 'திருடன் நம்மை தொடர்கிறான்' என்று சொல்ல, ஐயா 'அடி பைத்தியக்காரி அது திருடன் அல்ல மங்களநாதர் நமக்கு துணைக்கு வருகிறார்' என்று சொல்ல, அதைக் கேட்டு திருடனும் ஓடிவிட்டானாம். ஐயா எப்போதும் 'மங்களநாதா! மங்களநாதா!' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உத்தரகோசமங்கை மங்களநாதர் மீது அளவுகடந்த பக்தி உடையவராய் இருந்தார்கள்."


 உத்தரகோசமங்கையில் திருப்பணி செய்ததின் காரணமாக தேவகோட்டையில் அழ.சித.லெ.இராமசாமி செட்டியார் வீட்டை உத்திரகோசமங்கை செட்டியார் வீடு என்று அழைக்கின்றனர். 


உத்தரகோசமங்கையில் இராமசாமி செட்டியாரால் தொடங்கப்பெற்ற சிவன் கோயில் திருப்பணி நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது கோவையை சேர்ந்த இரா.வசந்த குமார் அவர்களால் திருச்சுற்று மாளிகை முழுமையாக கட்டப்பெற்று திருப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரன்பணி அறக்கட்டளை குழுவினரால் கோயிலின் மற்ற பகுதிகள் பழமை குன்றாதவாறு சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இராமநாதபுர சமஸ்தான ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கும்பாபிஷேகத்தன்று சிதம்பரம் நகர விடுதி ட்ரஸ்ட் உடன் உத்திரகோசமங்கை செட்டியார் வீட்டில் "டென்னிஸ்அரு" குடும்பம் இணைந்து அவர்களின் பசுமடத்தில் அன்னதானம் செய்தார்கள்.■



மேற்கோள்கள்:


1. INDIAN STREAMS RESEARCH JOURNAL, Volume-7 Issue-3 - April 2017 - "Tourism Potential in Sculptures Art and Architecture of Uthirakosamangai Temple - A study" - Dr.R.Muthu and Mr.M.Syed Ibrahim


2. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - 1953 - பண்டிதமணி கதிரேசன் செட்டியார் - பக் 252


3. கல்வெட்டு சிவன் சந்நிதி முன்பு உள்ளது.


4. அரு.இராமசாமி செட்டியார் என்கிற சோமன் செட்டியார் 01/02/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.


5.அரு.சிதம்பரம் செட்டியார் 12/01/2025 அன்று இக்கட்டுரை ஆசிரியரிடம் கூறியது.







Friday, February 28, 2025

காரைச் சிவனடியார் திருக்கூட்டம்

சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1923ஆம் ஆண்டு காரைக்குடி பகுதியில் சைவ சமயத்தை வளர்க்கும் நோக்கில் "காரைச் சிவனடியார் திருக்கூடம்" என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் இதன் சார்பில் "குமரன்" என்னும் மாத இதழ் வெளிவந்து. இவ்வமைப்பினால் திரு.வி.க எழுதிய "நாயன்மார் வரலாறு" நூல் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...