Followers

Friday, February 26, 2021

பிள்ளையார்பட்டி

அரிய புகைப்படம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை!
- கவியரசு கண்ணதாசன்

புகைப்பட உதவி: மதுரைக்காரன் கார்த்திகேயன்

இராமர் பட்டாபிஷேக சிற்பம்

செட்டிநாட்டு தச்சர்களின் நுணுக்கமான வேளை பாடுகளுடனுள்ள இராமர் பட்டாபிஷேக மரச்சிற்பம் .

இடம்: விரையாச்சிலை, புதுக்கோட்டை மாவட்டம்.

தமிழ்த்தாய் கோயில்

தமிழ்த்தாய் கோயில், காரைக்குடி.

[இன்று உலகத்தாய் மொழி தினம் (பிப்ரவரி 21)]


"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"

என பாரதி பாடிய மூவரின் சிலையும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவிலிலுள்ளது. 


உலகிலேயே மொழியைத் தெய்வமாக்கிக் கோயில் கட்ட வேண்டும் என்ற இலட்சியம் ஒரு தமிழரின் சிந்தனையின்தான் முதன் முதலில் தோன்றியது என்றால் அது மிகையாகாது, அவர் காரைக்குடியை சேர்ந்த கம்பன் அடிப்பொடி சா.கணேசன்.  முதன் முதலில் கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு விழா எடுத்து கம்பன் கழகத்தை தோற்றுவித்தவரும் அவரே.

இன்று உலகம் முழுவதும் பல கம்பன் கழகங்கள் கம்பன் புகழ் பாடி வருகின்றன, அவை அனைத்தும் காரைக்குடி கம்பன் கழகத்தையே தங்கள் தாய்க்கழகமாக மதித்துப் போற்றுகின்றன.


தமிழ்த்தாய் கோயிலானது கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்கள் சிந்தனையில் உருவாகி, கம்பன் அறநிலையாலும் தமிழக அரசாலும் செயல்வடிவம் பெற்று, காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தினுள் கட்டப்பட்டுள்ளது. 

தமிழ்த்தாய் கோயிலுக்கு 1975இல் கால்கோள் நாட்டிய அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழக அரசின் சார்பில் கோயில் திருப்பணிகளுக்காக ரூபாய் ஐந்து லட்சம் வழங்கியுள்ளார்.

ஆறுபட்டை, ஆறுநிலை, ஆறுவிமானங்கள் கொண்ட கோயிலாக இது கம்பன் மணிமண்டபத்திற்கு வலப்புறம் அமைந்துள்ளது. இதன் நடுவிமானத்தின் கீழ் தமிழ்த்தாய் வடக்கு நோக்கி மணிமண்டபத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறாள். வலப்புறம் அகத்தியரும் இடதுபுறம் தொல்காப்பியரும் இடம்பெற்றுள்ளனர். சுற்றுக் கோயில்களாக வடகீழ்க்கோடியில் வள்ளுவர், தென்கோடியில் இளங்கோ, வடமேற்கோடியில் கம்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். மேல் வலது கையில் சுடரும் இடது கையில் யாழும் உள்ளன. கீழ் வலது கையில் உருத்திராட்ச மாலையும், இடது கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பெற்றுள்ளன. தமிழ்த்தாய் வலது கால் கீழே தொங்கியவாறும், இடது கால் மடித்த நிலையிலும் வீற்றிருக்கிறாள். கால்களில் சிலம்பும், தண்டையும் அணிந்திருக்கிறாள்.




தமிழ்த்தாய் கோயிலைக் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் மற்றும் சிற்ப கலாசாரம் ம.வைத்தியநாத ஸ்தபதி ஆகிய இருவரும் இணைந்து வடிவமைத்துள்ளனர். கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி சிற்பத்தின் வடிவத்தை முன்மாதிரியாக கொண்டே இங்குள்ள தமிழ்த்தாய் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


சிற்ப கலாசாரம் ம.வைத்தியநாத ஸ்தபதியால் தொடங்கப்பெற்ற கோயில் கட்டுமானப் பணியானது, அவர் மகனும் மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியால் நிறைவு செய்யப்பெற்று. இக்கோயிலுக்கு கால்கோள் நாட்டிய கலைஞர் மு.கருணாநிதியால் 16/04/1993இல் திறந்து வைக்கப் பெற்றுள்ளது.

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

அன்பன்
பழ.கைலாஷ்
21/02/2021

Sunday, February 14, 2021

வனப்பு மிக்க மரச்சிற்பம்


கொட்டாணிப்பட்டி, 
மதுரை மாவட்டம்.

18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு செட்டிநாட்டு வீட்டின் முகப்பு நிலையில் உள்ள வனப்பு மிக்க மரச்சிற்பம்.

ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து அருகில் உள்ள சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் தற்போது ஒரே ஒரு வீடு மட்டும் எஞ்சியுள்ளது.

கவியரசரின் பெற்றோர்!

கவியரசு கண்ணதாசனின் தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பச் செட்டியார் - சிறுகூடல்பட்டி

காலக்கணிதம்

கவியரசு கண்ணதாசன் 'காலக்கணிதம்' என்ற தலைப்பில் எழுதிய கவிதை.

"கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்;
இல்லாயின் எமர் இல்லம்  தட்டுவேன்!

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!"
- கவியரசு கண்ணதாசன் 

படம்: கவியரசர் சிலை, சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்.

Thursday, February 11, 2021

சோமலெ நூற்றாண்டு


தமிழ்கூறும் நல்லுலகால் 'சோமலெ' என்று மதிப்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் சோம.இலக்குமணன், சிவகங்கை மாவட்டம் 'நெற்குப்பை'யில் பெரி.சோமசுந்தரம் செட்டியார் - நாச்சம்மை ஆச்சி இணையருக்கு ஆறாவது குழந்தையாக 11.02.1921இல் பிறந்தார்.



சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1941ஆம் ஆண்டு பி.ஏ., பட்டம் பெற்றார். பின்னர் பம்பாயில் உள்ள ஹாரிமன் இதழியல் கல்லூரியில் படித்து 1947ஆம் ஆண்டு இதழியல் துறையில் நிறைசான்றிதழ் பெற்றார். தமது பதினாறாவது வயதில் ஆ.தெக்கூரை சேர்ந்த நாச்சம்மையை வாழ்க்கை துணையாக ஏற்றார்.



தம் குடும்பத்தினர் நடத்திவந்த ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்தின் காரணமாக 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ஆறு மாத காலம்  வெளிநாடுகளில் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரிட்டன், சுவீடன், ஜெர்மன், பிரான்ஸ், அயர்லாந்து, அமெரிக்கா, ஹவாய்த் தீவுகள், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய பல நாடுகளில் 65,000 கிலோமீட்டருக்கும் மேலாக பயணம் மேற்கொண்டார். இந்த உலகச் சுற்றுப் பயணம் இவருக்குள் இருந்த எழுத்தாற்றலை வெளிக் கொணர்ந்தது என்றால் அது மிகையாகாது. "வணிகனாகச் சென்றேன், எழுத்தாளனாகத் திரும்பி வந்தேன்" என அவரே குறிப்பிடுவது போல, இந்த உலகச் சுற்றுப் பயணம் இவருள் இருந்த தகவல் சேகரிக்கும் ஆற்றல், அவற்றை வகைப்படுத்தி, முறை படுத்தி நூலாக்கும் ஆய்வுத்திறன் ஆகியவற்றை வெளிக் கொணர்ந்தது.

தொடக்கத்தில் சோம.இலக்குமணன் என்ற பெயரில் சில கட்டுரைகளையும், சில நூல்களையும் எழுதிவந்தார் நாளடைவில் சோமலெ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார், இப்பெயரே இலக்கிய உலகில் நிலைத்து நின்றது. " 'சோமலெ என்றால் தெரியலே' என்று தமிழ்நாட்டில் யாரும் சொல்ல மாட்டார்கள்" என்று 'ஆனந்த விகடன்' இவருக்கு அணி சூட்டியது.

'அமெரிக்காவைப் பார்' என்பது இவர் எழுதிய முதல் பயண இலக்கிய நூல். தொடர்ந்து 'நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்', 'ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்', 'என் பிரயாண நினைவுகள்', 'இமயம் முதல் குமரி வரை', 'நமது தலைநகரம்' என அவரது பயண நூல்கள் பல வெளிவந்தன. பயண இலக்கியத்தைச் சுவையுடனும் பிறருக்கு பயன்படும் செய்திக் களஞ்சியமாகவும் எழுதுவதில் 'சோமலெ'வுக்கு இணை வேறு யாரும் இல்லை.

"சோமலெயின் பயண நூல்களைப் படித்த பின்னர் தான் எனக்கு அமெரிக்க போக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது" என எம்.எஸ். உதயமூர்த்தி குறிப்பிடுவது சோமலெயில் பயண இலக்கியத்திற்கு ஒரு நற்சான்றிதழ் ஆகும்.



சோமலெ மிக எளிமையானவர், தன் வாழ்நாள் முழுவதும் தனது வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகளை தானே துவைத்து உடுத்தும் வழக்கம் கொண்டிருந்தார். புன்னகையை தவிர வேறு எந்த நகையையும் அணிந்து கொள்வதில்லை. எங்கு சென்றாலும் கையில் ஒரு துணிப்பையுடன் செல்வார், அதில் சிறிய குறிப்பு நோட்டு, பேனா, தனது முகவரி,தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை வைத்திருப்பார். இவரது நற்குணங்களைக் கண்ட பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் "நெற்குப்பை பெற்றுத் தந்த நிறைகுடம் சோமலெ" எனப் புகழாரம் சூட்டுகிறார்.

சோமலெ தன் மகன் சோமலெ.சோமசுந்தரத்துக்கு எழுதிய கடிதங்கள், நேரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்திற்கு ஒப்பானது. அக்கடிதங்கள் பொது வாழ்வு, உலக நடப்புகள், தமிழகத்தின் நிலை, உலக அரங்கில் இந்தியாவின் நிலை எனப் பல செய்திகளை உள்ளடக்கியிருக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களைப் பற்றி நூல்கள் எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் சோமலெ மனதில் ஏற்பட, 1961க்கும் 1980க்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுக் காலத்தில் தமிழ்நாட்டு மாவட்டங்களுள் 10 மாவட்டங்களை பற்றி வரிசை நூல்களாக 10 நூல்கள் எழுதியுள்ளார். இந்த நூல்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாவட்டத்தின் கலைக்களஞ்சியமாக திகழ்கின்றது. இந்நூல்கள் இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் சுரங்கங்களாக இருந்து உதவி வருகின்றன.



பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஆகியோர் வாழ்க்கை வரலாற்றை நூல்களாக எழுதியுள்ளார்.


சென்னை பல்கலைகழக வெளியீடான 'தமிழ் இதழ்கள்' என்னும் இவரது நூல் இதழியலில் சோமலெ பெற்றிருந்த ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.


1984ஆம் ஆண்டு சோமலெ 'செட்டிநாடும் செந்தமிழும்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் செட்டிநாட்டின் வரலாறு, செட்டிநாட்டின் அமைப்பு, செட்டிநாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கை, செட்டிநாட்டிலுள்ள கோயிகள், செட்டிநாட்டில் வாழ்ந்து வரும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயில் திருப்பணிகள், கல்விப்பணிகள், அறப்பணிகள், தமிழ்வளர்ச்சிப் பணிகள் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்நூல் சோமலெயின் வாழ்கை சாதனையாகும்.



சோமலெ தம் தந்தையின் நினைவாக, தம் சொந்த செலவில் மதுரை மேலூர் அருகேயுள்ள 'பேப்பனையம்பட்டி'யில் அருள்மிகு சோமசுந்தர விநாயகர் கோயிலை கட்டியுள்ளார். கோயில் கட்டிய விபரம் அனைத்தையும் கல்வெட்டாக பதிவு செய்து வைத்துள்ளார். இது இவரது ஆவணச் சான்று வழங்கும் திறனுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

"கும்பாபிஷேக மலர் வெளியிட வேண்டுமா? கூப்பிடுங்கள் சோமலெயை" என்று சொல்லும் அளவுக்கு, கோயில் குடநீராட்டு விழா மலர் என்றாலே அதனைச் சிறப்பாகப் பதிப்பிக்கும் திறனாளராக இவர் இனம் காணப்பட்டார். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், காசி, இராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஆலயங்களின் கும்பாபிஷேக மலர்களை வெளியிட்டுள்ளார் மற்றும் பிறந்த நாள் விழா மலர், நினைவு நாள் விழா மலர் எனப் பல மலர்களை சிறப்பாக பதிப்பித்து 'மலர் மன்னன்' எனப் பாராட்டப் பெற்றார். 




நெய்வேலி நிலக்கரித் திட்டம் பற்றி தமிழில் முதன் முதலில் நூல் எழுதியவர் இவரே. இவரது நூல்கள் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சோமலெ தம் வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் பறவையாகவே வாழ்ந்தார். எனினும் 1955 முதல் 1958 வரை அண்ணாமலை பல்கலைகழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகவும், 1958 முதல் 1960 வரை அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியின் நிருவாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆய்வாளராகவும், சாகித்திய அக்காதமிக்காக தமிழ் நூல்களின் பட்டியல் தயாரிக்கும் ஆய்வாளராகவும், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும்(1966) பணியாற்றியுள்ளார்.

‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம இலக்கு மணன்வாழ்க’’
என்று 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' சோமலெயை பாராட்டுகிறார். 



சோமலெ இம்மண்ணுலகில் நல்ல வண்ணம் 65ஆண்டுகள் வாழ்ந்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 80க்கும் அதிகமான நூல்களை எழுதி அழியாப் புகழ் பெற்று 03.11.1986இல் அமரரானார்.

வாழிய சோமலெ புகழ்!

அன்பன்
பழ.கைலாஷ்
தேவகோட்டை.
11.02.2021(சோமலெ நூற்றாண்டு நிறைவு நாள்)

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...